Tuesday, July 25, 2017

தீபன் - தமிழ்ப்படம்

எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்து ஜாக்யூஸ் அடியார்ட் எனும் பிரெஞ்ச் இயக்குநர்  இயக்கிய "தீபன்" எனும் தமிழ்ப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன்.  இந்தப்படம் 2015 கேன்ஸ் திரைவிழாவில் சிறந்தப் படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) பரிசு பெற்றது.

முதலில் படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறேன். இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பி கணவன், மனைவி, மகள் எனும் போர்வையில் பிரான்சில் அடைக்கலமாகும் மூன்று அந்நியர்களின் வாழ்க்கைக் கதை.

கதைப்படி கணவனாக நடிப்பவன் ஒரு  முன்னாள் தமிழ்விடுதலைப் போராளி, மனைவியாக, மகளாக நடிப்பவர்கள் போரில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள்.  இவர்கள் மூவரும் வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டும் எனும் ஒற்றைப் புள்ளியில்  சந்திக்கிறார்கள்.

அவர்கள் வெளி உலகத்துக்கு ஒரு குடும்பமாகத் தெரிந்தாலும் அந்நியர்களாக இருப்பவர்கள் மனதளவில் ஒன்றாக இணைய முயற்சிப்பதன் சவால்களை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் ஒரு காட்சியில் பள்ளி செல்லும் இளையாள் எனும் அந்தச் சிறுமி  மற்றவர்களின் பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு
வழி அனுப்புவதை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு 'எனக்கும் மத்தவங்க மாதிரி உம்மா குடும்மா ' எனக் கேட்கும் அந்தக் காட்சி உருக்கம்.

இப்படி அறிமுகமில்லாத தேசத்தில்  முற்றிலும் புதிய மனிதர்கள்
அந்நிய மொழியை அறிந்திருக்கவேண்டியதன் கட்டாயம் என 
அக மற்றும் புறச் சூழலில் புலம்பெயர்பவர்களின் போராட்டம் உணர்வுப் பூர்வமாக நம்கண் முன் விரிகிறது.

பல போராட்டங்களுக்கு பின் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்களா என்பதை தெரிந்துக்கொள்ள படத்தைப் பாருங்கள். படத்தின் இரண்டாவது பாதியை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

மற்றபடி முன்னாள் போராளியாக ஷோபாசக்தி தன்  உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் நம் மனத்தைத் தொடுகிறார். அவரோடு இணைந்து நடித்திருக்கும் காளீஸ்வரி மற்றும் மகளாக வரும் சிறுமி குளோடின் வினாசித்தம்பி நடிப்பும் அபாரம். வாழ்த்துகள்.  தமிழ்ப் படங்களில் இவர்கள் பிரகாசித்தால் மகிழ்வேன்.

இந்தப்படத்தின் டிவிடி உபயம் உள்ளூர்  நூலகம்,  தமிழகத்தில்
வெளியானதா எனத் தெரியவில்லை.  

1 comment: