Sunday, October 1, 2017

இரக்கமில்லா இரவுப்பணி

கடந்த வாரம் வேலைக்காக தொடர்ச்சியாக 12 மணி நேரத்துக்கு மேல் இரவில் விழித்திருக்கவேண்டியதொரு சூழல். இரவு 8 மணியில் இருந்து காலை 8  மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் 24 மணி நேரத்தில்,  12 மணி நேரம் மட்டும் வேலை மிச்ச நேரமெல்லாம் ஓய்வு தானே ? இதிலென்ன பெரிய பிரச்சனை ? என எளிதாகக் கேட்டுவிடுவார்கள்.  ஆனால், உண்மையில் இரவு பணி ஒரு பெரிய இம்சை என்பது அனுபவத்தவர்களுக்கு நன்றாக தெரியும். 

இரவில் கொட்ட கொட்ட  ஆந்தைபோல்
கண் விழித்துவிட்டு பகலில்  வீட்டுக்கு வந்து படுக்கையறையில் 
தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருப்பதைப்போல் கொடுமை வேறில்லை.
அப்படியே  அசதியில் கண்மூடினாலும்  மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது 3 மணி நேரம் தூங்குவது பெரிய விசயமாயிருக்கும்.

நாம் பிறந்ததிலிருந்து நம் உடலை இரவில் தூங்குவதற்கு பழக்கப்படுத்தியிருக்கிறோம்.  இதை ஆங்கிலத்தில் "பையாலஜிகல் கிளாக் (Biological clock)" என்கிறார்கள். அதை ஒரே வாரத்தில் டக்கெண பல்டி அடித்து மாற்றிக்கொள் என்றால் கேட்பதற்கு  அது ஒன்னும் துணை முதல்வர் இல்லையே.  

நமக்கு உடல் ஒரு பிரச்சனை என்றால் வெளியில் இருந்து வரும் பிரச்சனை ஒருபுறம். ஆமாம், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும்  நமக்கு மட்டும்தான் அந்தப் பகலில் ஓய்வு தேவை.   மற்றவர்களுக்கு  சாதாரண பகல் தானே. அவர்கள் டிவி, அரட்டை எனக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். துரதிஷ்டவசமாக எனது வீடுபோல பிள்ளைகள் இருக்கும் வீடாக இருந்தால் வேறு வினையே தேவையில்லை. உலகத்தில் இருக்கும் விளையாட்டையெல்லாம் அப்போதுதான் உற்சாகமாக விளையாடி கடுப்பேற்றுவார்கள்.

அதனால் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதெல்லாம் குட்டி தூக்கம்தான். இதற்கு நடுவில் மதிய உணவுக்கு வேறு எழுந்திரிக்கவேண்டும்.  அதற்கு பின்பு தூக்கமெல்லாம் வெறும் கனவுதான். அப்படியே அடித்துப் பிடித்து தூங்கினாலும் இரவில் நிம்மதியாக தூங்குவதைப் போலோரு உற்சாகத்தை கண்டிப்பாக பெற முடியாது. 

எனது குழுவில் மேத்(Matt) எனும் அமெரிக்கன் இருக்கிறான். பொடியன்.
இந்தவருடம் கல்லூரி முடித்தவனை  வேறு எப்படி சொல்வதெனத் தெரியவில்லை.  ஷிப்டிற்கு  கையில் பேஸ்ட், பிரஸ், சோப்பு சகிதமாக தயாராய் வந்துவிடுவான்.  ஆனால், ஷிப்டின் மூன்றாவது
நாளில் அவன் முகத்தை  நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. முகமெல்லாம் எக்டரா லார்ஜாக வீங்கி பார்க்க சகிக்கவில்லை. பாவம். அடுத்த நாளே அவனை பகல் ஷிப்டில் வரச்சொல்லிவிட்டேன். 

எப்படியோ ஒரு வழியாக இரவெல்லாம் தாக்குபிடித்து  தூக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டாலும் காலை 7 மணிக்கு கண் சொக்கும் பாருங்கள். அப்பப்பா..

என்ன தான் சொன்னாலும் இப்படி தொடர்ச்சியாக இரவில் தூங்காமல் விழித்திருப்பதைப் போலோரு துரோகத்தை நம்மால் உடலுக்கு செய்துவிடமுடியுமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அசதி. கூடவே கண்கள் சிவந்து,  பசியெல்லாம் மறத்துபோய், பூதகணம் போல் சுற்றிக்கொண்டிருப்பது உண்மையில் தண்டனை.

அதனால் இரவு பணி செய்யும் அத்தனைப் பணியாளர்களும் நமது
பாராட்டுக்கும், வாழ்த்துக்குரியவர்கள் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ அலுவலக வேலை இந்தவாரம் முடிந்துவிட்டதால் , குழுவிற்கு இரவு பணியில் இருந்து விடுதலை அளிக்க முடிவெடுத்துவிட்டோம். அப்பாடா..

2 comments:

  1. 38 வருடமாக இப்படித்தான் என் பணி,பகல் ஒரு வாரம் வந்தாலும் நீங்கள் சொல்வதைப் போல் 12 மணி நேர பணி,பணி ஓய்வு பெறப் போகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன் ஜி :)

    ReplyDelete
  2. 38 வருடங்களா ?மலைப்பாக இருக்கிறது. நீங்கள் பாராட்டுக்குறியவர். உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete