Thursday, June 20, 2019

முன்மாதிரி அரசுப்பள்ளி

இன்றையச்  சூழலில் ஓர் அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக  மூன்று ஆண்டுகள் 100 சதவீதம் வெற்றி பெறுவதும் மாணவர்களின்
சேர்க்கை  இரட்டை இலக்கத்தில் உயர்வதும்  தற்செயலான நிகழ்வுகள் இல்லை. அந்தச் சாதனையை திருவாரூர், மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி செய்து காட்டியிருக்கிறது.

ஆமாம். இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பல அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் இணைந்து தன்னெழுச்சியாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. "சிறகுகள் கல்வி அறக்கட்டளை" சார்பில் மாங்குடி பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

கடந்தவாரம் நடந்த நிகழ்ச்சியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கினோம். அதுபோல தமிழ் பாடத்தை சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்றவருக்கு பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

நிகழ்ச்சி காணோலியை பள்ளி ஆசிரியர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார்.
பல உள்ளூர் பிரமுகர்கள் பேசியிருக்கிறார்கள். இதுபோல  ஆசிரியர் குழுவுடன் உள்ளூர்காரர்கள் இணைந்து செயல்படுவது நல்லதொரு வழிகாட்டல். உண்மையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளூர் மக்களின் அபிமானத்தையும் நம்பிக்கையும் பெறுவதே இன்றைய உடனடி தேவை. அதை இவர்கள் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

கடந்த ஆண்டு நான் நேரில் சென்றிருந்தபோது 'சிறகுகள் அறக்கட்டளை எங்க பள்ளிக்கு வந்த நேரம் பசங்க ஆர்வமா, உற்சாகத்தோட படிக்க ஆரம்பிச்சுட்டாங்க, நன்றி! ' என பள்ளி நிர்வாகத்தினர் புகழ் மொழி சொன்னாலும்,  இந்த வெற்றி முழுக்க முழுக்க மாணவர்கள், ஆசிரியர்களின் பூரண உழைப்பில் வந்த ஒன்று. அவர்களைப் பாராட்டி கைகுலுக்கி வாழ்த்துவோம்.

#சிறகுகள்2019






1 comment:

  1. போற்றுதலுக்கு உரிய ஆசிரியர்கள்

    ReplyDelete