Wednesday, December 23, 2020

அதை ஜப்பானியர்களால் படிக்க முடியாது

ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான லட்சக்கணக்கான புத்தகங்கள்,
அந்தரங்க கடிதங்கள், நாட்குறிப்புகள் என பல கோடி வரலாற்று ஆவணங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆவணங்களை இன்று வாழும் பெரும்பான்மையான ஜப்பானியர்களால் படிக்க முடியாது, ஏனென்றால் அவை “குசுஷிஜி” (Kuzushiji) எனும் கூட்டெழுத்து வடிவில் (cursive script) எழுதப்பட்டிருக்கின்றன. இதைத் தமிழில் புள்ளி வைக்காமல் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துரு போருலொரு வடிவம் எனப் புரிந்துகொள்கிறேன்.

இந்த குசுஷிஜி ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குசுஷிஜியின் சரளமான வாசகர்கள் மிகக் குறைவு (நவீன ஜப்பானிய பூர்வீக மக்களில் 0.01% மட்டுமே). இதை வாசிக்க போதிய மனிதர்கள் இல்லாததால், இந்த அரிய வரலாற்றுத் தரவுகள்  தானாகவே அழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த எழுத்துருவை அடையாளம் காணவும் அவற்றை நவீன ஜப்பானிய எழுத்துக்களாக மொழிபெயர்க்கவும் இயந்திர கற்றல் (Machine Learning) எனும் தொழில் நுட்பத்தை ஜப்பானியர்கள் நாடி இருக்கிறார்கள்.

இந்தச் சவாலை ஏற்க உலகம் முழுவதிலும் இருந்து இயந்திர கற்றல் நிபுணர்கள் (Machine learning experts) தேவை எனும் அறிவிப்பை ஜப்பானிய இலக்கியத்தின் தேசிய நிறுவனம் (The National Institute of Japanese Literature) வெளியிட்டிருக்கிறது. இதுபோல நம்முடைய  தமிழி எனும் தமிழ்ப் பிராமி எழுத்துகளையும் ஒலைச் சுவடிகளையும்  இயந்திர கற்றல் வழியாக வாசித்து ஆவணப்படுத்தவேண்டிய தருணம் இது.

இப்படி இயந்திர கற்றல் வழியாக மொழிமாற்றம் செய்வது  சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு மட்டுமல்ல.  இது நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் புதிய உண்மைகளுக்கும் திறப்புகளுக்கும் வழிவகுக்கும்.

1 comment: