Thursday, February 17, 2022

இர்மா-அருமையான படைப்பு

எனது இர்மா நாவல் குறித்து முகநூல் நண்பர் சுதா ரவி அவர்கள் சென்னையில் இருந்து எழுதியது. நன்றி சுதா !

//

 இர்மா – ஆரூர் பாஸ்கர்

இயற்கை பேரழிவின் கோர தாண்டவத்தை, அந்த ஆறு நாட்களை அதிலிருந்து அனுபவிப்போரின் மன நிலையிலிருந்து மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆசிரியர் சொல்லும் சம்பவங்களை கதையாக இல்லாமல் நம்மை அங்கிருக்கும் சூழலை உணர வைத்திருக்கிறார். ஒரு பேரிடர் வரும் போது மனித மனங்களில் எழும் அழுத்தமும், பயமும், பல விதமான உணர்வுகளையும் பரணியின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
ப்ளோரிடா மாகாணத்தை அடிக்கடி தாக்கும் சூறாவளியின் தாக்கங்களையும், முன்னேற்பாடுகளையும் மக்களின் மனதில் எழும் பயத்தையும் ஒவ்வொரு சம்பவத்தின் மூலம் காட்டி இருக்கிறார்.
இர்மா கேட்டகரி ஐந்து என்று சொல்லப்பட்டு, பல விதமான செய்திகளை தாங்கிக் கொண்டு ப்ளோரிடாவில் இருக்கும் மக்களை பரபரப்படைய செய்து மெல்ல நகர ஆரம்பிக்கிறது. பரணி தன் குடும்பத்துடன் வாழும் இளைஞன். முதலில் சாதரணமாக எடுத்துக் கொண்டவர்கள் எல்லாம் நேரமாக ஆக இர்மாவின் தீவிரத்தை அறிந்து தங்களது பாதுக்காப்பை நாடி வேறு இடங்களுக்கு இடம் பெயர முடிவெடுக்கிறார்கள்.



பரணியும், தாரிணியும் அங்கேயே இருந்து சமாளித்து விடலாம் என்று அதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். இயற்கை பேரிடர் ஏற்படும் போது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அலைந்து திரியும் நிலையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு பக்கம் இர்மாவை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டும், வீட்டின் பாதுகாப்பை பலப்டுத்திக் கொண்டும் தண்ணீருக்கும், பெட்ரோலிற்கும் அலைகிறான் நாயகன்.
அவன் மனதில் இர்மாவை பற்றிய அழுத்தம் இருந்தாலும், அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய நெருடலும், சொந்த மண்ணைப் பிரிந்த வேதனையும் தென்படுகிறது. இர்மாவிற்கு முன் அந்த ஆறு நாட்களை அவர்களின் மன நிலையிலிருந்து காட்டி இருக்கிறார். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை தாண்டி இர்மா எந்தப் பக்கம் நகருகிறதோ என்று எண்ணும் அளவிற்கு இர்மாவின் தாக்கம் நம்மையும் அழுத்துகிறது.
ஆசிரியர் அமெரிக்க வாழ்க்கையின் சலனங்களை, ஆப்ரிக்க அமெரிக்ககர்களின் வேதனையை, இயற்கை பேரிடரில் கூட மறைந்திருக்கும் இன வெறியை என்று பல்வேறு சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார்.



இர்மா என் நினைவலைகளை மீட்டிச் சென்றுள்ளது. 1977- ஆம் ஆண்டு நாகைப்பட்டினம் நவம்பர் பனிரெண்டு அன்று காலையில் இருந்து ரேடியோவில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. புதிய புயல் சின்னமொன்று நாகையை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அன்று இரவு கரையைக் கடக்க கூடும் என்று.
மதியம் வரை அது சாதாரண புயல் சின்னமாக மட்டுமே இருந்தது. அதனால் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சுமார் மூன்று மணியளவில் மீண்டும் ரேடியோவில் அறிவிப்புகள் கலவரத்துடன் வர ஆரம்பித்தன. புயல் சின்னமாக இருந்தது சூறாவளியாக உருவெடுத்து விட்டது என்றும், தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிவேகமாக பேரிடர் குழுக்கள் முடுக்கிவிடப்பட்டன. அவசரம் அவசரமாக தாழ்வான இடங்களில் இருந்தவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். நாங்கள் இருந்த இடத்திற்குப் பின்னே சுமார் ஒரு மூன்று கிலோமீட்டருக்குள் கடற்கரை. பேரிடர் குழு எங்களை காலி செய்து கொண்டு எங்காவது சென்று விடும்படி கூறியது. அந்த நேரத்திற்கு மேல் எங்கும் செல்ல முடியாது என்று கூறி கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு அங்கேயே தங்கி விட்டோம்.
அவசர தேவைகளுக்கு பக்கத்திலிருந்த கடையில் பால் பவுடர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்கள் வாங்கி வைத்துக் கொண்டோம். ஏழு மணி வரை எந்த மாற்றமும் இல்லை. ஊர் மிக அமைதியாக இருந்தது. மக்களுக்கு சூறாவளியின் தீவிரம் புரியவில்லை. ஆனால் அரசாங்கம் அலறிக் கொண்டு மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது.
சுமார் ஒன்பது மணியளவில் காற்று சுத்தமாக நின்று போய் ஊரே இறக்கமாக மாறியது. லேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. ரேடியோவில் சூறாவளி நாகைக்கு மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது இரவு பனிரெண்டு மணிக்கு கரையை கடக்கும் என்று அறிவித்தது.
ரேடியோவில் பாடல்களும் அறிவிப்புகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பத்து ஐம்பதுக்கு காற்றின் வேகம் லேசாக கூட ஆரம்பித்திருந்தது. மழையின் வேகமும் அதிகரித்தது. அப்போது சூறாவளி கரையை கடக்க தொடங்குகிறது என்றும் அதனால் சற்று நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது.
குயிலே கவிக் குயிலே” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. சடாரென்று மின்சாரம் நின்று போனது.
அப்போது மழை குறைந்து ஒரு ஆட்டோவின் ஹாரன் சத்தத்துடன் காற்று சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. நானும் என் தாயும், தந்தையும் ஒரு ஜன்னலில் நெருக்கமாக அமர்ந்திருந்தோம். காற்றின் வேகத்திற்கு எங்கள் வீட்டின் ஓடுகள் நான்கு புறமும் பறந்து சென்றது.
நமது முடிவு நிச்சயம் என்கிற எண்ணத்தோடு பயந்து கொண்டே அமர்ந்திருந்தோம். காற்றின் அறைகூவல் காதுகளை செவிடாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர பேயாட்டம் முடிந்து ஊரையே தரை மட்டமாக்கியது.
மறுநாள் காலை வீட்டின் வாயிலை திறந்தால் மக்கள் கூன் போட்டுக் கொண்டே நடந்து சென்ற கொண்டிருந்தனர். காற்றின் வேகம் அப்போதுமிருந்தது. எங்கும் மக்கள் பிணங்களை தூக்கி கொண்டு போய் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டு வாயிலின் சுவற்றில் ஒரு முழு ஆட்டை அப்படியே தூக்கி அடித்திருந்தது.
தென்னை மரங்கள் அனைத்தும் தலையை இழந்திருந்தது. கொல்லைபுற கதவை உடைத்துக் கொண்டு கட்டுமரம் ஒன்று பாதி உள்ளே வந்திருந்தது. அன்று எங்களின் அதிர்ஷ்டம் கடல் நீர் ஊருக்குள் நுழையவில்லை. அதே சூறாவளி ஒரு நாள் விட்டு ஆந்திராவை சின்னாபின்னம் ஆக்கியது. சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழப்பு.
இர்மா 1977 நவம்பர் 12 க்கு கூட்டிச் சென்று விட்டது. அருமையான படைப்பு...வாழ்த்துக்கள் சார்.

//

No comments:

Post a Comment