Friday, November 28, 2014

நன்றி சொல்ல உனக்கு..

Nov-26 வியாழக்கிழமை, அமெரிக்காவில் Thanksgiving day, (நன்றி தெரிவிக்கும்  நாள் ) கொண்டாடப்பட்டது.

இது நம்ம ஊரு தைப்பொங்கல் போல ஒரு பண்டிகைனு தப்பு கணக்கு போடாதீங்க இது அதையும் தாண்டி. .. நாம பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைளை  டீவி சேனல்கள்கிட்ட அடகு வச்சு ரொம்ப நாளச்சு பாஸ்...


சரி விஷயத்துக்கு வருவோம், இது அமெரிக்காவின் முக்கியமான ஆண்டின் நீண்ட வாரஇறுதி அல்லது Long Weekend.   வியாழன் அன்று  தேங்க்ஸ் கிவீங் கொண்டாடிவிட்ட களைப்பு தீராமல் மறு நாளை (Black Friday) ப்ளாக் ப்ரைடே எனப்படும் ஷாப்பிங் வெள்ளியை கொண்டாடி மகிழ்கிறது.

 ப்ளாக் ப்ரைடே அன்று கிருஸ்மஸ் சீசனை வரவேற்பது போல நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்று குவிக்கின்றனர். தங்கம் முதல் தகரம் வரை எல்லாத்‌துக்குமே தள்ளுபடி தான் போங்க. இது நம்ம ஊரு ஆடிக் கழிவையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடியது.

இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பெரிய சில்லறை நிறுவனங்களாகிய வால்மார்ட்,மேஸிஸ்,பெஸ்ட் பை போன்றவை வியாழாக்கிழமை மாலையிலே கடைகளை திறந்து விற்பனையை தொடங்கினர்.

அதனால் எப்போதும் வெள்ளியன்று சூடுபிடிக்கும் ஷாப்பிங் காய்ச்சல் இந்த தடவை வியாழக்கிழமையே தொற்‌றிக்கொண்டது.  இதற்கு அமெரிக்க மக்களிடம் பெருவாரியான ஆதரவு இருக்காது என பரவலாக பேசப்பட்டாலும். வசூல் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டியதாக தெரிகிறது.

ப்ளாக் ப்ரைடே  என்பதை நுகர்வு கலாச்சாரத்‌தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன்.   இந்த ஆண்டில் இருந்து பிரிட்டனிலும் வால்மார்டின் ஆசியிடன் இது தொடங்கியதாக தெரிகிறது.  இந்த அமெரிக்க நுகர்வு கலாச்சார புயல்  சென்னை போன்ற நகரஙகளை தாக்கும் அபாயம் தூரத்தில் இல்லை. சல்லிசான விலையில பொருள் கிடைச்சா மக்கள் வேண்டாமானா சொல்லப்போறாங்க ?. :)

இந்த விடுமுறையின் முதல் பாகமான  நன்றி தெரிவித்தலுக்கு வருவோம்,  தற்போதய அவசர சூழலில் காலையில் அப்பார்ட்மெண்டில் லிப்ட் கதவை திறந்து விடும் செக்கியூரிட்டியில் தொடங்கி   தினமும் இயந்திரத்தனமாக பல தடவை 'Thanks' என்ற வார்த்தையை அவசரகதியிலே உதிர்த்து செல்கிறோம்.

ஒரு வாழ்த்தையோ அல்லது ஒரு நன்றியையோ நம்மில் எத்தனை பேர் உணர்ந்து சொல்கிறோம் என்பது நிஜத்தில் கேள்விக்குரியதே.

தமிழில் நன்றி சொல்ல வார்த்தையின்றி மயங்காமல் மாறுதலுக்கேனும் அடுத்தமுறை  'நன்றி' என  எதிரில் உள்ளவரின் கண்களை பார்த்து மனதறிய சொல்லிப் பாருங்கள்.  பின்பு சொல்லுங்கள்,  உங்கள் மனதில் மின்சாரம் பாய்ந்ததா என்று.  அது உண்மை என்றால்,  இருவருக்கும் அது பொருந்தும்.

Sunday, November 16, 2014

2014 தீபாவளி கலை நிகழ்ச்சி - What A Function!!!

 நேற்று (Nov-15-2014)  தென் புளோரிடா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடந்த தீபாவளி கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. மிக சிறப்பாக நடந்து முடிந்தது அப்படினு எழுதினா ஏதோ தினமணி பேப்பர்ல வரும் நீயூஸ் மாதிரி இருக்கும்.

  சரியா சொல்லனும்னா ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தி இருந்தது. ரஜினி படம்னா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருப்திபடுத்தும் அம்சங்கள் இருக்கும்  இல்லையா அது போல.

  சிறுவர்களும், பெரியவர்களும் சினிமா பாடல், நடனம் என கலக்கினர்.
சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் பல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் தூண்டுதலாய்   இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்.

ஆனா,  நமக்குததான் அவர்கள் தேர்தெடுத்த பெரும்பாலான லேட்டஸ்ட் பாட்டோ டான்ஸோ புரியல அல்லது தெரியல,  உதாரணத்துக்கு "வாட் அ கருவாடு"  பாடல் (What A Karavaad!!) பெரிய வெற்‌றிப் பாடல் என்ற அறிமுகத்துடன் ஆடிக்களித்தனர். (By the way, செத்த மீனுக்குதான கருவாடுன்னு பேரு ? ) :)

எனது மூத்த மகள் கிருஷ்ணனின் "கோபிகா "பாடலுக்கு குழு
நடனமாடி இருந்தாள். அதை தவிர்த்து மருந்துக்காவது  ஒரு பாரதியோ இல்ல நல்ல ஆண்டாள் பாசுரமாவது வருமான்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

அதைத் தவிர்த்து, எனது விருப்பபாடலான AR ரஹ்மானின்  'ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா!!'  என்ற ஸ்டார் படப்பாடலை தேர்தேடுத்து ஆடியது மனத்துக்கு நிறைவு.

மேலும், நிகழ்ச்சியின் மகுடம் என சிலாகித்து  நன்றி உரையில் குறிப்பிடப்பட்டது  சுதாகர் கிருஷ்ணமூர்த்தியின்  பாடல்.  மௌனராகத்தில் இருந்து  "மன்றம் வந்த தென்றலுக்கு" எனும் பாடலை மிகஅசத்தலாகப் பாடி  அனைவரையும் மயங்கச் செய்தார். வாழ்த்துக்கள் அன்பரே!

தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன.
அதுபோல நிகழ்ச்சியும் பாடல், இசை, நடனம், நாடகம் என அனைத்து அம்சங்ககளையும் கொண்டு மூன்று மணி நேர நிகழ்ச்சி கொண்டாட்டமாய்
இருந்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளினி மூன்று மணி நேரமும்  சுவாரஸ்யமான பேச்சால் பார்வையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
வாழ்த்துக்கள்!

மிக அருமையானதொரு நிகழ்வு, நிர்வாகக் குழுவினர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை.



Sunday, November 9, 2014

சதுரங்க ஆட்டத்‌தில்..

என்றைக்கும் இல்லாத மாற்றமாய் வானம் லேசான மேகமூட்டமாய் இருந்தது.  அதிர்ஷ்டமாய் கிடைத்த மர நிழலில் காரை பார்க் செய்து விட்டு நூலகத்திற்குள் நுழைந்தாள் நளினி.

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இங்கே சிறுவர்களுக்கான செஸ் வகுப்புகள் நடக்கின்றன.  இன்று  எட்டு வயது மகள் அம்முவை கூட்டிப்போக வந்திருந்தாள்.

நேராக முதல் தளத்தில் இருந்த அந்த அறைக்குள்  நுழைந்தாள்.  அங்கே வரிசைக்கு நான்கு வீதம் இரண்டு வரிசையாக டேபிள்கள் போடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு டேபிள்களிலும் இரண்டு சிறுவர்களாக அமர்ந்து அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

செஸ் ஒரு யுத்த தந்திர விளையாட்டு, அவர்களுக்கான ஆடுகளத்தில் தங்கள் தந்திரங்களை கையாண்டு கொண்டிருந்தனர். இங்கே யாரும் பெரும்பாலும் அதிர்ந்து பேசியதாக  நினைவில் இல்லை. கடைசி வரிசையில் அம்முவின் தலை தெரிந்தது.

அனைவரையும் கடந்து அருகில் சென்றபோது தான், அவளுக்கு எதிரே ஆடிக்கொண்டிருந்த சிறுமி அழுது கொண்டிருந்ததை கவனித்தாள்.
அதிர்ந்தபடி அம்முவிடம் கேட்டாள்.

"என்ன பண்ணின அவ ஏன் அழறா ?"

"நான் ஒன்னும் பண்ல, ஏன்னு தெரியாது"

சிறுமியோ பதிலேதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் இப்போது அவளின் பிங்க் நிற சட்டையில்
வழிந்தது.

ஆனாலும், அம்மு ஏதோ சொன்னதால் தான் சிறுமி அழுவதாக முடிவு செய்திருந்தேன்.

அந்த சமயத்தில் அங்கிருந்த செஸ் பயிற்சியாளர் பிங்கியும் என்னுடன் சேர்ந்து நின்று கொண்டார்.

"சாரி சொல்லிட்டு கிளம்பு, நீ விளையாண்டது போதும்"

"நான் ஒன்னும் பண்ல, அப்புறம் ஏன்?"  என்றாள்  அம்மு.

அப்போது அங்கு வந்த ஒரு  வயதான பெண்மணி  குனிந்து சிறுமியின் காதோடு சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய பாட்டியாக இருக்கக் கூடும் என நினைத்தேன்.

நிமிர்ந்து எங்களை பார்த்து பேசிய பாட்டி "அவ அம்மாவை நினைச்சு அழறா" என்றாள்.

அழுகையை நிறுத்தி இருந்த சிறுமி

"என்னோட அம்மா என்ன விட்டுட்டு பிலிப்பைன்ஸ் போயிட்டாங்க"  என்றாள்.

பிங்கிக்கு என்ன நினைதாரோ, ஆனால் எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.

"அம்மா என்ன வேலை செய்றாங்க? " என அன்பாக கேட்டார் பிங்கி

"அங்க டாக்டரா, நோயாளிகளுக்கு உதவி பண்றாங்க"

"எப்ப போனாங்க?"

"போன மாசம்"

இப்போது தொண்டயை செருமியபடி பிங்கி,

"  பெரும்பாலும் வாழ்க்கை சதுரங்கத்தில், எதிராளியின் நகர்த்தலை நாமே முடிவுசெய்து, சொந்த எண்ணங்களில்  உறிஞ்சப்படுகிறோம்.

உண்மையில், எதிராளியே இறுதியாக தங்‌கள் நகர்த்தலை தீர்மானிக்கிறார்கள். 

என்று அனைவரும் கேட்கும்படி அழகாய்ச்  சொல்லி முடித்தார். அவர் குரலில் ஓரு உறுதி இருந்தது.

ஓரு முட்டாள்த்தனமாக நகர்வின் குற்ற உணர்வுடன் அம்முவின் கைபிடித்து வாசலை நோக்கி தொடங்கியிருந்தேன்.

வெளியே வரும்போது, வானம் மூட்டமின்றி தெளிவாக இருந்தது.  பாவம் அம்முதான் இப்போது அழத்தொடங்கிருந்தாள்.

Thursday, October 30, 2014

தேவதைகள் வாழும் வீடு

தேவதைகள் பூமியில்  இருக்குமா ?, தெரியவில்லை
இருந்தாலும் ,வீட்டில் வாழுமா ?, தெரியவில்லை
வாழ்ந்தாலும், பாடுமா?, தெரியவில்லை
பாடினாலும், ஆடுமா?,  தெரியவில்லை

என் வீட்டில்  ஒரு தேவதை
வாழ்கிறாள்,
பாடுகிறாள்,
பாடிக்கொண்டே ஆடுகிறாள்!

என குழந்தைகள் இருக்கும் வீடு அத்துணை மகிழ்ச்‌சி நிரம்பியது. அதிலும்,
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

ஏதோ ஒரு தருணத்‌தில், கண்டிப்பாக யாரோ ஓரு குழந்தை உங்களை 'அட' என ஆச்சரியப்பட வைத்திருக்கும். அது உங்கள் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆவது இயல்பு.
அது குழந்தை உங்களை அம்மா, அப்பா என விளித்ததாகவோ அல்லது தவழ்ந்த குழந்தை நடக்க தொடங்கியதோ அல்லது வேறு எதுவாயினும் இருக்கலாம்.

அதே குழந்தைகளிடம் தான் சில சமயங்களில் ஏனோ தானோ என பேசி மாட்டிக் கொண்ட அனுபவங்களும் இருந்திருக்கலாம். அப்படி நான் 'னே' என முழித்த சம்பவத்தை பார்ப்போம்.

நேற்று என்னுடய இரண்டு வயது இளையமகளை தூங்க வைக்கும் முயற்சியில் இருந்தேன் (முயற்சி மட்டுமே), ;) அவளை தூங்க வைக்கிறேன் பேர்வழின்னு நான் மட்டும் சில நாள் தூங்கிய அனுபவங்களும் உண்டு. பாப்பாவை தட்டி கொடுத்துட்டு இருக்கிறப்போ, திடீர்னு வெளியே பிளைன் போற சத்தம் கேட்டது. இது ஏன்டா உள்நாட்டு சதி போல இருக்கேன்னு நினைச்சப்போ, வழக்கம் போல "அது என்ன? " அப்படின்னா.

நான் "ஏரோபிளேன்" அப்படினு சொல்லி விடாம, கூடவே உனக்கு ஒன்னு வாங்கி தரட்டுமான்னு கேட்டேன். என்னுடய ஜாதகத்துல அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவேயீல்லங்க.. ஏங்க, நிலாவ புடிச்சு தரன்னு சொல்றப்ப,  ஏரோபிளேன் வாங்கிதரன்னு சொல்லக்கூடாதங்க !? :)

அவ திரும்ப சொன்ன பதில் இருக்கே.. "ஒன்னு வேணாம் அப்பா, இரண்டா வாங்கலாம்". என வெள்ளந்தியா சொன்னதும் கன்னத்தில் பளார்னு அடிச்சது போல இருந்தது.

வேற என்ன பேச்சு அப்புறம்.  விமானம் கடந்த பின் வெளியே பூரண அமைதி, நான் இரவின் ஒளியில் முகத்தை தலையணையில் புதைத்தேன்.





Sunday, October 5, 2014

நூல் வெளியீட்டு விழா

இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகின்றன அந்த விழா நடந்து.
ஆம், திருவாரூர் படைப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், திருவாரூரில் என் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில்" வெளியீட்டு விழா 21 செப்டம்பர், 2014  ஞாயிற்றுக்கிழமை மாலை இனிதே நடைபெற்றது.

இது என் முதல் நூல் வெளியீட்டு விழா,  எதுலும் முதல் என்பது தனித்துவம்,  தனிச் சிறப்பு உடையது.  அதனால் தான் அது முதல் ;).
முதல் குழந்தையை, முதல் தடவை கையில் சுமப்பது போல அது ஒரு சுகானுபவம். மாமங்கம் பல ஆனாலும் மறக்க இயலாதது.

இளையராஜாவின் இசை வாரிசுகளான மூவரும் மெல்லிசைக் கச்சேரி மூலம்  திருவாரூரில் இருந்துதான் தங்கள்  இசை பயணத்தை தொடங்கினார்கள்.
சங்கீத மூம்மூர்த்திகள் பிறந்த ஊர், முன்னாள் முதல்வரின் ஊர் என திருவாருரின் சிறப்புகள் கணக்கில் அடங்கா.

இது மட்டுமின்றி, பல விதத்தில் இந்த நிகழ்வு சிறப்பு மிகுந்ததாகக் கருதுகிறேன். உதாரணமாக பள்ளி தோழருக்காக, பள்ளி தோழர்களே
தலைமை, வாழ்த்துரை மற்றும் சிறப்புரை செய்த அருமையான நிகழ்வு. மேலும் , பேரனின் முதல் நூல் பிரதியை பாட்டனார் பெற்றுக் கொண்டதும் சிறப்பே.

அழைப்பு இங்கே உங்கள் பார்வைக்கு:



பள்ளி நண்பர்களான திரு. சிவக்குமார், திரு.அன்பரசன் முறையே இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

த.ரெ.தமிழ் மணி என அழைக்கப்படும் எனதன்புத்தோழரும் தமிழ்  ஆசிரியரும் கவிஞருமான  சுப்ரமணி  விழாவிற்க்கு தலைமை தாங்கினார்.
அவரின் தமிழ் ஆர்வமும் வேகமும் வியப்படைய வைக்கின்றன. அன்றாட வாழ்விலும் தூய தமிழிலில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
(படத்தில்- தமிழ் மணி)


ஆரூர் புதியவன்  என அன்போடு அழைக்கப்படும் எனது அருமைதோழரும் சென்னை காய்தே மில்லத் கல்லூரி தமிழ்த் துறை தலைவருமான
ஹாஜா கனி  சிறப்புரை ஆற்றினார்.  புதியதலைமுறைடிவியின்  புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியியின வாயிலாக பேராசிரியரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.

அவரின் பேச்சாற்றல் தமிழகம்  தாண்டி  கடல் கடந்தும் பரவி இருப்பது உண்மை. சென்னையில் நண்பரை கல்லூரியில் சந்தித்து எனது நூலை வெளியிடவேண்டும் என்ற அன்புக்கட்டளையை தட்டாமல் ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நன்றிகள் பல.

(படம்: இடமிருந்து வலமாக -  நண்பர்கள் சிவக்குமார், அன்பரசு, பாஸ்கர் மற்றும் ஹாஜா கனி)


பள்ளி தோழர்கள் என்று சொல்வதை விட வகுப்பு தோழர்கள்  என்பதே பொருந்தும். நாங்கள் வ.சோ.ஆ.மேநிலைப்பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ரூப் எனச் சொல்லப்படும் கணிதம் ஒன்றாக படித்தோம்.

தோழர்கள் பள்ளிப் பருவஙகளில் நடந்த பல அனுபவங்களையும், நிகழ்வுகளையும் சுவைபட பேசினார்கள், எனக்கே சில நிகழ்வுகள் முதல் முறையாக இருந்தது. விழாவிற்க்கு வந்த அனைவரும் இந்த நிகழ்வுகளை மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தனர்.

அப்பாவின் நண்பர்கள் திரு. V.G. கிருஷ்ணமூர்த்தி மற்றும்
திரு. S.N. தெட்சிணாமூர்த்‌தி அவர்களுக்கும்
மரியாதை செய்யப்பட்டது. படம் கீழே:


பாவலர் கலை பாரதி கவிதை நூலின்  திறனாய்வில் சிறப்பம்சங்கள், பிடித்தவைகள், பிடிக்காதவைகள் ஆகியவற்றை அழகாக மேற்கோளுடன் எடுத்து வழங்கினார். "மழை" என்ற தலைப்பில் முத்தாய்பாக கவியரங்கமும் நடைபெற்றது.

சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது, ஒரு சில குறுகிய நாட்களில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதன் சுவடு தெரியாமல் கூட்டத்தினை நண்பர் த.ரெ.தமிழ் மணி மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

நாங்கள் மேல்நிலைப் பள்ளி முடித்து சரியாக இருபது வருடங்‌கள் முடிவுற்ற போதிலும் தமிழின் மூலம் இந்த  சந்நிதிப்பு நிகழ்ந்தது மிகவும் நெகிழ்ச்‌சி.
அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..

என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook

Please share your feedback.

Sunday, August 17, 2014

துட்டுக்கு பாட்டு - கவிஞர் வாலி

தமிழ் திரைப்பட பாடல்கள் "மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?"
என்பது பலகாலமாக தமிழ் சூழலில் கேட்கப்படும் பழைய கேள்வி.
இதற்கு "துட்டுக்கு பாட்டு " என்றார் கவிஞர் வாலி ஒருமுறை .

தற்போது, இந்த கேள்வியை யாரும் பாடலாசிரிடம் கேட்பது இல்லை.
அப்படியே கேட்டாலும் பதில் என்னவாக இருக்கும் என்பதை முன்பே அறிந்ததால் இருக்கலாம்.

பாடலுக்கு மெட்டு என்பதே மிக அரிதான ஒன்றாயிருக்கிறது.
திரை ஜாம்பவங்களாக பல ஆயிரம் பாடல்களை எழுதிய  வைரமுத்து, வாலி போன்றவர்களின் சில பாடல்கள் மட்டுமே மெட்டமைத்ததாக இருக்கும். இது காலத்தின் கட்டாயமே.

யாரோ சொன்னதுபோல, இந்தியாவில் கம்யூஸ்ட்டுகள் இருக்கிறார்கள், ஆனால் கம்யூனிஸம் இல்லை.  அது போல தமிழ்  பாடல்கள் இருக்கின்றன, தமிழ் இசை இல்லை. மேற்கத்‌திய இசைக்கும், வாத்‌தியங்களுக்கும் நடுவே தமிழ் வரிகள் நிரப்படுகின்றன.

தமிழ் பாடலாசிரியர்கள் இந்த சவால்களை தாண்டி நல்ல கருத்தையும், கவித்துவமான விடயங்களையும் தர முயற்சிக்கிறார்கள். பாராட்டுக்கள்!.

வட்டத்திற்குள் வண்ணம் தீட்டுவது போல,  பாடலாசிரியரின் வேலை அவ்வளவு எளிதானது அன்று.

மேலும், திரை பாடல் என்பது ஒரு கூட்டு முயற்‌சி. இசையமையப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சேர்ந்தே
ஒரு பாடலுக்கு உயிர் தருகின்றனர். மேலும் இந்த அணிக்கு வணிகரீதியான அழுத்தங்கள் வேறு.

இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் பாடலை கேட்டு நாம் "மொக்கை" என நொடியில் தீர்மானித்து விடுகிறோம்.

"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
"பெண் பார்த்தாய்" எனும் தலைப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியை நண்பர் ரவி இசை அமைத்து பாடலாக்க முயற்ச்சித்துள்ளார்.

" பெண் பார்த்தாய்,
நீ பெண் பார்த்தாய்,
பெண்ணையே பார்க்குமுன்
ஜாதகம் பார்த்தாய்,
பயோடேட்டா பார்த்தாய்,
நியூமராலஜியும் சேர்த்தே பார்த்தாய்! " 
......


இங்கே ஓலி வடிவில் பாடலை
கேட்டு மகிழுங்கள்:




இங்கே முழு கவிதையை  ஓலி வடிவில்
கேட்டு மகிழுங்கள்:




என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook


Please share your feedback.




















Saturday, August 2, 2014

நீங்கள் பேச்சிலரா (Bachelor) ?

வணக்கம், நீங்கள் ஒரு Bachelorரா?

ஆமாம் எனில் வாழ்த்துக்கள்!!.  இல்லை எனில் நீங்கள்  ஒன்றும் பெரிதாக
இழந்து விடவில்லை. ஏனெனில் நீங்களும் அங்கிருந்துதான் (பேச்சிலராக) வந்திருப்பீர்கள்.

நீங்கள் ஒரு பேச்சிலராக இருந்தாலும் ரொம்பவும் மகிழத்  தேவை இல்லை.
ஏனெனில் நீங்களும்  ஒரு நாள் மணம் புரியப் போகிறவர்தான். :)

"எது இன்று உன்னுடையதோ  அது நாளை மற்றொருவருடையதாகிறது"
-கீதாசாரம் போல ரொம்ப குழப்பமா இருக்கா?  சரி விடுங்க..

ஒரு தகவல் இந்தியாவின் மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதிற்க்கு உட்பட்டவர்களாம்.  பேச்சிலர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்தியா ஒரு மகிழ்ச்சியான
நாடே. அதையும் விடுங்க.

சமீபத்தில் படித்த கீழ்க்கண்ட வாசகமே, இந்த கட்டுரையின் தொடக்கம்.

"இளைஞர்களே, உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிடுங்க.  அதுக்கப்புறம் உங்களால டிவி சானலை கூட மாத்த முடியாது"

இதை படித்ததும், பேச்சிலர் பற்றிய என்னுடைய இந்த கவிதை ஞாபகம் வந்தது.

தலைப்பு: பேச்சிலர் (பேச்சு இலர்), "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.

Bachelor ஆன நான் பேச்சிலர் ஆகிறேன்,
உன் அழகு முகம் பார்க்கையில்!

மூளை இருந்தும் முட்டாள் ஆகிறேன்,
உன் கயல் விழி பேசும் மொழி புரியாமல்!

மொழி ஆய்வாளர்களே,
உலக மொழிகளின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் பேசும்
விழி மொழியையும் சேர்த்து!

ஆராய்ச்சியாளர்களே,
உலகப் புரியாத புதிர்களின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் காட்டும்
கடைக்கண் பார்வையையும் சேர்த்து!

இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்:



முடிவா பேச்சிலர்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் இருக்கிறதில்லை,
கல்யாணமான எல்லாரும் சோகமாவும் இருக்கிறதில்லை.
மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்னு சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் மாதிரி முடிச்சுடுவோம்.

**
என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook