Sunday, November 10, 2019

அடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே ? (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-10)

சிகாகோவில் (2019 ஜுலை) நடைபெற்ற "10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு" தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் இதுவரைப் பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி. நாம் அதன் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கிறோம்.


நான் முன்பே சொன்னதுபோல அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து இந்தஆண்டு முப்பெரும் விழாவாக  வெற்றிகரமாக நடத்தி முடிந்திருக்கிறார்கள். 

வழக்கமான பேரவை விழாவுடன் இந்த முறை ஆராய்ச்சி மாநாடு  இணைந்த்தால் தமிழுடன், கலையும் சேர்ந்துகொண்டது. 

அதனால் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், தென் அமெரிக்கா, கனடா, இலங்கை, நார்வே, இங்கிலாந்து எனப் பற்பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை பல நூறு தன்னார்வத் தொண்டர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு பகலாக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்.

பேரவை விழா பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் "வழக்கம் போல மெல்லிசை, இன்னிசை, பட்டிமன்றம், கவியரங்கம் தாண்டி வேறென்ன புதுசா ?" எனக் கேட்டிருந்தார். இன்னொருவர் "இந்த வருசமும் புடவை, மளிகை கடைகள் உண்டா ? " என நக்கலடித்திருந்தார். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் திருவிழா. வயது வித்தியாசமின்றி அனைவரும் தமிழர்கள் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். திருவிழா என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தானே.


பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பலர் மரபுக்கலைகளை மறவாமல் தாங்கள் கற்பதோடு மட்டுமில்லாமல் அடுத்தத் தலைமுறையினருக்கும் பயிற்றுவித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒயிலாட்டம், கரகம், சிலம்பம், தப்பாட்டம்,நாதசுவரம் என தமிழகத்தில் வழக்கொழியும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழக நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துவந்து இங்கே மேடை ஏற்றியிருந்தார்கள். 300 இசைக்கலைஞர்கள் இணைந்து "முரசு-சேர்ந்திசை" எனும் தலைப்பில் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு இசையூட்டிய நிகழ்ச்சி உலகத் தரம்.


நிறைவாக ஒன்று, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வரலாற்றில் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து முடிந்த விழா இதுவாக இருக்கும் என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

வழக்கமாக தமிழ்ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில் அடுத்த மாநாட்டு நிகழ்வை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி சிறப்பாக  அரசியல் இலாபமின்றி தமிழுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நிகழ வாழ்த்துவோம்.

குறிப்பு- இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையை இங்கிருந்து வாசிக்கத்தொடங்கலாம்.