Sunday, April 25, 2021

நேர்த்தியான கதைச்சொல்லி - அட்லாண்டா ஜெயா மாறன்

கழுத்தை நெரிக்கும் அன்றாட லெளதீக இடைஞ்சல்களைத் தாண்டி  கலை, இலக்கியம், எழுத்து எனப் பொதுவெளியில் செயல்படுவது என்பது சவாலான ஒன்று. அதை ஒரு வேலையாக, ஒரு பாரமாக நினைத்துப் புலம்புபவர்களுக்கு மத்தியில் முழுமனதோடும், தன்முனைப்போடும் தொடர்ந்து  செயல்படுபவர்கள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களைப் பாராட்டுவதே சரியாக இருக்கும்.

அந்த வகையில் அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் இருந்து பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் ஜெயா மாறன். முகநூல் வழியாக எனக்கு அறிமுகமான ஜெயாவின் சொந்த ஊர் மதுரை. தொழில் முறையில் ஜார்ஜியா டெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்கிறார்.



பகுதி நேரமாகத் தமிழாசிரியர், மேடைப் பேச்சாளர், கவிஞர், நாடகக் கலைஞர் என தமிழின் பல தளங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் ஜெயாவின் பரந்துபட்ட ஆர்வம் ஆச்சர்யம் தருகிறது. அவருடைய நிகழ்ச்சிகளின் தொகுப்பு JeyaMaran என்னும் YouTube சேனலில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.குறிப்பாக, சிறுவர்களுக்கு  எளிதில் புரியும் வகையில் அவர் உணர்வோட்டத்தோடு கதை சொல்லும் நேர்த்தி அபாரம். உலகத்தரம்.


கையில் எடுத்த ஒன்றுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒருவரால் மட்டுமே இந்த அளவுக்குச் சிறப்பாக செய்யமுடியும்.  அந்த வகையில் ஜெயா மாறன் நம் பாராட்டுதல்களுக்கு உரியவர். வாழ்த்துகள் ஜெயா ! தொடர்ந்து இயங்குங்கள்.

நேரமில்லை.. நேரமில்லை.. எனப் புலம்பாமல் அவர் ஒளவையாரின் மூதுரையை  ஜென் கதையோடு இணைத்து அழகாக சொல்லும் 3 நிமிட காணோலியைக் கீழே  தருகிறேன் பாருங்கள்.

யாருக்கு உதவலாம்? | மூதுரை | ஒளவையார் | Jeya Maran

Sunday, April 11, 2021

ஃபோன்களும் கண்களும்

நாளொன்றுக்கு நான் குறைந்தது 10 மணிநேரமாவது கணினியில்
நேரம் (ஃபோன் நேரம் தனி)  செலவிடுகிறேன்.

என்னைப் போல இங்கே பலரும்  பெரும்பான்மை நேரத்தை தினமும் கணினி, புத்தகம், ஃபோன் என ஏதோ ஒன்றை  கூர்ந்து பார்ப்பதில் இல்லை படிப்பதில் நேரத்தைச்  செலவு செய்வீர்கள்.

இப்படி  நாம் சராசரியாக பார்க்கும், படிக்கும் நேரம் என்பது போன தலைமுறை இதற்காகச்  செலவிட்ட நேரத்தைவிட  அதிகம் என்பதில்  இங்கே கண்டிப்பாக மாற்றுக் கருத்து இருக்காது. 

நடைமுறையில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் செயலிகள் வந்தபின் கூர்ந்து படிப்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.  சமீபத்தில் வெளிவந்த ஒர் ஆய்வின்படி அமெரிக்கர்கள் தினமும் 12 நிமிடங்களுக்கு ஒருமுறை சராசரியாகத் தங்கள் தொலைபேசியைச் சரிபார்க்கிறார்கள் - அதாவது தூங்கும் நேரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் ஒருவர் குறைந்தபட்சம் 80 முறை தங்கள் தலைகளைத் தொலைபேசிகளில்  புதைத்துக் கொள்கிறார்கள்.  இந்த எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை   ஃபோன்,
ஐபேட் போன்ற விசயங்களை மிக எளிதாகக் கையாளுகிறார்கள். அதில் அவர்கள்   பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக நேரம் செலவிடவும் தயங்குவதில்லை. குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு டிவி,கணினியை விட போஃனில்தான் அதிக நாட்டமிருப்பதாக நினைக்கிறேன்.

நேற்றுவரை, ஃபோன்கள் பேசுவதற்காக மட்டும் என்றிருந்த நிலை மாறி, இன்று ஸ்மார்ட் ஃபோன் வரவுக்குப் பின் நேரப்போக்கிற்காக,  இணையம், அலுவலக இமெயில், செயலிகள் (Apps) எனத்  தவிற்கமுடியாத
ஒன்றாகிவிட்டது. அதனால் இன்று 'ஃபோன் இல்லாவிட்டால் கையும் ஓடல காலும் ஓடல' எனப் புலம்பும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பல நல்ல விஷயங்களுக்கு நாம் தினமும்  ஃபோனைப் பயன்படுத்தினாலும்  அதில் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக அவைக் குறைந்த அளவிலான கதிர்வீச்சை (RF) வெளியிடுகின்றன என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் துண்டிக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் வாழ்வது, மனஅழுத்தம் போன்ற பல உளச்சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

உடல் ரீதியாகப் பார்க்கையில் தலையைக் குனிந்தபடித் தொடர்ச்சியாக
நாம் போஃனைப் பயன்படுத்துவது, பயணத்தில் படிப்பது,  படுத்தபடியே மணிக்கணக்கில் படம் பார்ப்பது, பல மணிநேரங்கள் எந்த இடைவேளையு
மின்றிப் பேசுவது, இதெல்லாம் நம் உடலுக்கு எந்த அளவு ஆரோக்கியமானது ?   கழுத்து வலி, தோள்பட்டை வலி,  முதுகு வலி வர வாய்ப்பிருக்கிறதே. இது  நமது கண்களுக்கு எந்த அளவுப் பிரச்சனைகளைத் தரும் ? எப்படித் தப்பிப்பது ?  இதையெல்லாம் குறித்து நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் யோசியுங்கள்.