Wednesday, December 25, 2019

இர்மா- அந்த ஆறு நாட்கள்

நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! .  கடந்த ஆண்டு எனது  'அந்த ஆறு நாட்கள்'  (புதினம்/நாவல்)  அமெசான் கிண்டிலில்   வெளியானது  
உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு  எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது.  தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம். 

பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம்.  அதுபோல,  நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில்  வாசகர்களின்  ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள்  (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம்.  இது எனக்கு நான்காவது நூல். 

நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய  ‘எழுத்து பிரசுரம் பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.  

அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா... இனி உங்கள் கைகளில்.



Monday, December 9, 2019

அமெசான் - லாஸ் வேகாஸில் நடத்திய மாபெரும் மாநாடு!

அமெசானின் துணை நிறுவனம் லாஸ் வேகாஸில் நடத்திய மாநாடு ( AWS-re:Invent)  முடிந்து வீடு திரும்பிவிட்டேன்.  மொத்தமாக ஐந்து நாட்கள் நடந்த   இந்த மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், அயர்லாந்து என எண்ணிலடங்காத நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். நல்ல கூட்டம்.  கலந்து கொண்டவர்களின்  எண்ணிக்கை  60 ஆயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தக் கூட்டத்தால் லாஸ் வேகாஸ் குலுங்கியது என்றேல்லாம் சொல்லிவிட முடியாது. ஏனேன்றால் அந்த நகரில் இதுபோல பல மாநாடுகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடந்தபடியிருக்கின்றன.  அதனால், நகர் எப்போதும் விழாக்கோலத்துடன் ஒருவித கொண்டாட்ட மனோநிலையிலேயே இருக்கிறது.  அடுத்து ரோடியோ எனும்  குதிரைச் சவாரி செய்பவர்களுக்கான விழா தொடங்கிவிட்டதால் நகர் முழுவதும்  'கொவ் பாய்' தொப்பியில் ஆண்களையும், பெண்களையும் பார்க்க முடிந்தது.

ஏடபுள்யூஎஸ் (AWS) விழாவில் கலந்துகொண்டவர்கள் தும்மல் வந்தால் "ஹச்.. ஹச்" எனத் தும்மாமல் "அமெசான்... அமெசான்" எனத் தும்மிவிடுவார்களோ எனச் அச்சப்படும் அளவுக்கு ஐந்து நாட்களும் AWS பற்றி பேசித் தீர்த்துவிட்டார்கள்.

உண்மையில் இணையவர்த்தகத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த அமெசான் தனது சொந்த உள்கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கியதே அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) எனும் தொழில்நுட்பம். ஆனால், அது  இன்று மேகக்கணினி எனும் Cloud Computing துறையில்  உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

 2006-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட AWS சேவை இன்று அமேசானின் மொத்த காலாண்டு விற்பனையில் சுமார் 10 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது.

பொதுவாக மாநாட்டில் கணிசமான அளவு இந்தியர்களைப் பார்க்க முடிந்தது.  அதில் பல நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அடக்கம்.  கடைசி நாளில் நெதர்லாந்தில் இருந்து வந்த பேராசியர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தபோது பேச்சுனூடாக "இந்திய மக்கள் தொகை சுமார் 1.3 பில்லியன்.  அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்திலும் வல்லவராக இருக்கும் இந்தியர்கள் ஏன் இதுபோல் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை இதுவரைத்  தொடங்கவில்லை ? " என்றார்.  நான் பதிலாக  "ஆமாம், இதுவரைத் தொடங்கவில்லை" என்றேன். அதைவிடுத்து அவரிடம்  நமது கல்விச் சூழல்
குறித்தெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியுமா என்ன ?