Friday, December 30, 2016

2016ல் வாசித்தவை - ஒரு பார்வை

நண்பர்களே,

பலரும் தங்களின்  2016 புத்தகப்பட்டியலை பகிர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், வருடக் கடைசி என்றால் அந்த வருடம் வாசித்த எல்லா புத்தகங்களையும்  பட்டியலாக சொல்லியே ஆகவேண்டும் என்பது கட்டாயமோன்றுமில்லை.

ஆனால், வாசித்த புத்தகங்களின் தலைப்புகளையேனும் மேலோட்டமாக ஒரு பருந்து பார்வை பார்ப்பதில் கண்டிப்பாக சின்ன திருப்தி இருக்கிறது. அதைத்தாண்டி முக்கியமாக அந்த வருடத்தில் நாம் எந்த  வகையான (genre) புத்தகங்களைப் படித்திருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்ப்பதும் அவசியமாகிறது. அது நாம்  வாசிப்பில் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்தி தேவைப்பட்டால் நம்மை சரிசெய்து கொள்ள உதவும்.

அதுமட்டுமல்லாமல் புதிதாக வாசிக்க வருவர்களுக்கும் நமது பட்டியல் ஒரு நல்ல அறிமுகமாகவும் இருக்கும்.

எனக்கு கடந்த வருடம் இந்தமாதிரியான புத்தகங்களைதான் வாசிக்கவேண்டும் எனும் பெரிய திட்டங்களோ முன்னேற்பாடுகளோ எதுவுமில்லை.  2016ஐ திரும்பிப் பார்க்கையில் நான் கையில் கிடைத்த புத்தகங்களையும்,  நண்பர்கள் பரிந்துரைத்தவற்றையும் வாசித்திருக்கிறேன்.  2017ல் அதைக் கொஞ்சம்  முறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்.

 2016ல் திட்டமிட்டிருந்த இன்னோரு விசயம் புத்தக   வாசிப்புக்கு பின் முடிந்தவரை  மனத்தில்  தோன்றியதை விமர்சமாக எழுதவேண்டும் என்பது. அதில் கொஞ்சம் வெற்றி  பெற்றிருப்பதாகவே
நினைக்கிறேன்.  எழுதிய விமர்சனங்கள் பல இணையகளிலும், ஏன் அச்சு இதழ்களிலும் வெளியானதும்   மகிழ்ச்சியே.  அந்த உத்வேகத்தோடு 2017ல் காலடி வைக்கிறேன்.

அதிகம் மெனக்கெடாமல் முதலில்  ஆங்கில புத்தகங்களைப் பார்த்துவிடலாம்.

A Wicked History 20th Century, Idi Amin by Steve Dougherty
The MotorCycle Diaries - Che Guevara

தமிழில் வாசித்தவை.

புதினங்கள் (நாவல்கள்)
****
சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
கெடைகாடு - ஏக்நாத்
எங் கதெ - இமையம்
ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்
பருக்கை - வீரபாண்டியன்
சாயாவனம் -சா.கந்தசாமி
சின்னு முதல் சின்னு வரை - வண்ணதாசன்
24 ரூபாய் தீவு - சுஜாதா

சிறுகதைகள்
****
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் -நாஞ்சில் நாடன்
அறம் - ஜெயமோகன்
கனவுப் பட்டறை -மதி
பாக்குத்தோட்டம்-பாவண்ணன்
25 வருடக் கதை - ஸ்டெல்லா புரூஸ்

பொது
***
கற்க கசடற ( விற்க அதற்குத் தக) - பாரதி தம்பி
பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் -கவிக்கோ ஞானச்செல்வன்
தமிழர் நாட்டுப் பாடல்கள்-நா.வானமாமலை
அரசியல் பழகு - சமஸ்
உபசாரம்-சுகா

கவிதைகள்
***
கவிஞர்களும் களங்களும் - கலைபாரதி
துயரங்களின் பின்வாசல் - கவிஞர் உமா மோகன்
ஊழியின் தினங்கள் -மனுஷ்ய புத்திரன்

இந்தப் பட்டியல் முழுமையானதாக இருக்கும் என நம்புகிறேன். ஆனால், வனநாயகனுக்காக வாசித்த மலேசியா தொடர்பான புத்தகங்களையும், கணினியில் வாசித்தவைகளையும், அலுவலகத்துக்கு பயணிக்கையில் கேட்கும் ஆடியோ சிடிக்களையும் இந்தப் பட்டியலில் இருந்து தவிர்த்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை  வாசித்தலே ஒருவனின் இருத்தலை இவ்வுலகுக்குச் சொல்கிறது என  நம்புகிறவன்.  தமிழ், ஆங்கிலம்
அல்லது ஏதோ ஒரு மொழியில் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த 2017 புத்தாண்டு வாழ்த்துகள்!

Tuesday, December 27, 2016

எம்.ஜி.ஆர் - ஜெ-2

கடந்த பதிவில் தலைவரின் இறுதிஊர்வலம் தொடர்பான எனது எண்ணங்களைப் பகிர்ந்துக் கொண்டேன். அந்தப் பதிவு இங்கே.


புரட்சித் தலைவரின் இறுதிஊர்வலம்  நடந்தது 1987, இப்போது 2016. ஏறக்குறைய 30 வருட இடைவெளி. 33 வருடங்களை ஒரு தலைமுறைக்கான இடைவெளி என்பதை நீங்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இந்த 30 வருடங்களில் எவ்வளோவோ விசயங்கள் மாறிவிட்டன. அரசியல்,பொருளாதார, தனிமனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் சற்று மாறி இருப்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அப்போழுதெல்லாம்  சத்துணவு,சீருடை,காலணி போன்ற அரசின் இலவசங்கள்  கொஞ்சம் இருந்தன.  ஆனால், ஒட்டுச் சாவடிக்கு வர எவரும் காசு வாங்கவில்லை. அன்று  மூன்றுவேளை அரிசி சாப்பாடு  என்பது என்பது பலருக்கு சாத்தியமில்லைதான். ஆனால் மக்கள் இன்றைவிட ஆரோக்கியமாக இருந்தார்கள்.

அன்று  சமூகத்தில் மனிதமாண்பு  இருந்தது.  உறவுகள் கொண்டாடப்பட்டன. உங்களுக்கு வெளியே ஒரு பிரச்சனை என்றால் தைரியமாக ஏன் என்று தட்டி கேட்டு உதவிட ஆட்கள் ஒடிவந்தார்கள்.   கொஞ்சம் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் இன்று அடுத்த அப்பார்மெண்டில்  ஒரு மரணம் சம்பவித்தால் கூட என்ன ஏதென்று பார்க்காத மனிதநேய சமூகத்தில் தான் வாழ்கிறோம்.  பெத்த தாய் இறந்தால் கூட வாய்விட்டு அழாத நாகரீக சமூகத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.

இந்த  மாறிவிட்டச்சமூகச் சூழலிலும் மறைந்த முதல்வருக்கு இறுதி மரியாதை செய்ய கட்சிவேறுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடியது.   அதற்குக் காரணம் அவர் மேல் தமிழக மக்களுக்கு இருந்த மாறாத அன்பு என்பேன். அவரின் மறைவை தங்களின் குடும்பத்தின் இழப்பாக நினைத்தார்கள்.  இனிவரும் எந்தத் தலைவருக்கும் மக்களோடு இதுபோன்றதோரு பிணைப்பை ஏற்படுத்த இயலாது என்பது உண்மை.

அன்று இதுபோன்ற இறுதிஊர்வல நிகழ்வுகளை நியூஸ் ரீலில்தான்
பார்க்கமுடிந்தது, ஆனால், இன்று  மறைந்த முதல்வரின் இறுதி ஊர்வலத்தையொட்டிய நிகழ்வுகளை நிறைய சேனல்கள் இணையத்தில் நேரடி ஒளிபரபரப்பு செய்தார்கள்.

அதுவும் இலவசமாக விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பு
செய்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள். அவர்கள் வாழ்க எனச் சொல்லும் அதே நேரத்தில், மனதில் தோன்றிய ஒரு விசயத்தைச் சொல்லிவிடுகிறேன். அது அந்த நேரடி நிகழ்வின் வர்ணனையாளர்களைப் பற்றியது.

ஒரு மாநில முதல்வரின் இறுதி ஊர்வலத்தை கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நேரடியாக வழங்குகிறோம் என்ற உணர்வு அந்த
வர்ணனையாளர்கள் பலருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பறவைகள் பலவிதம் என்பது போல் ஒவ்வோரு சேனலும் ஒருவிதமான இம்சை. 

ஒருவர் கன்னிப்பொங்கலன்று குதிரை வண்டி ரேக்ளா ரேசுக்கு வர்ணனை தரும் தொனியில் தமிங்கிலத்தில் படபடத்துக் கொண்டிருந்தார். அது பொறுமையாக, துக்கத்திலிருப்பவர்களின் இறுக்கமான மனநிலையை புரிந்து தன்மையாக, தெளிவாகப் பேசவேண்டிய நேரமாயிற்றே. ஏன் அந்த அவசரமோ ?.

ஒருவர் தொலைபேசியில் அனுதாபச் செய்தி வாங்குகிறேன் பேர்வழி என 75-80 வயது பிரபலங்களை  கூட மொட்டையாக பெயர்சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார். ' சொல்லுங்க வெண்ணிற ஆடை நிர்மலா ' எனத் தொடங்கியவர், கடைசியில் பட்டென 'நன்றி வெண்ணிற ஆடை நிர்மலா' என முடித்தார். சரி 'திருமதி' எனும் அடைமொழி வேண்டாம், பேச்சில் தன்மை வேண்டாமா ? உங்களுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி பேசும் பிரபலங்களை துளிகூட மரியாதை தொனி இல்லாமல் பேசும் நாகரீகம் எங்கிருந்து வந்தது?

எம்ஜிஆரின் இறுதி யாத்திரை தொலைக்காட்சி வர்ணனையில் வலம்புரி ஜானின் முத்தாய்ப்பாக "பூமியை வெட்டி தங்கத்தை எடுப்பார்கள். ஐயோ இங்கே பூமியை வெட்டி தங்கத்தைப் புதைக்கிறார்களே". என்றார்.  அவருடை சொற்களுடன் தொனியும் சேர்ந்து கண்டவர் கண்களைக் குளமாக்கியது.  முப்பது வருடங்களுக்குபின்பும் கூட இந்த நிகழ்வை நண்பர் இணையத்தில் சிலாகிக்கிறார் என்றால் அதன் தாக்கத்தை நாம் உணரலாம்.


இந்தி ஒழிப்பு போராட்டாத்தில் தமிழுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மிச்சங்கள்  இன்னமும்  திராவிடக் கழகங்களில் இருக்கிறது தானே?.

இன்னோரு விசயம், அவர்களின் வர்ணணை பெரும்பாலும் பேச்சுத்தமிழாகவே இருந்தது. அதிலும் வார்த்தை தடுமாற்றங்கள், அனுபவமின்மையால் பேச்சுனுடே நிறைய இடைவெளி. நடுவில் ' ஹம்' எனும் சத்தம் வேறு. என்ன திட்டமிடலோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதுபோல, பெரும்பாலானவர்கள் சரியான தமிழ் வார்த்தை தெரியாமல் தடுமாறி ஆங்கிலத்துக்குத் தாவினர். ஜெவை புகழ்கிறேன் பேர்வழி எனத் தொடங்கிய ஒருவர் 'தலைமைத்துவ பண்புகள்' எனும் தமிழ் வார்த்தை கிடைக்காமல் சில நொடிகள்
தடுமாறி் கடைசியில் 'லீடர்சிப் குவாலிட்டிஸ்' என பல்டி அடித்தார். இதுபோல பல தருணங்கள்.

இந்த வர்ணனையாளர்களை எவ்வாறு தேர்வுசெய்கிறார்கள் எனப் புரியவில்லை. தெளிவான உச்சரிப்புடன் பேசும் ரவி பெர்ணாட், வீர பாண்டியன் போன்றவர்கள் இப்போது களத்தில் இருக்கிறார்களா ?

திராவிட அரசியல் தெரிந்து, இறந்தவரைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலுடன் காத்தாரமான ஒரு வர்ணனையை யாரும் தந்தது போலத் தெரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன் பார்த்த எம்ஜிஆரின் இறுதிஊர்வல நினைவுகளை சுமந்து கொண்டு சொல்கிறேன். கடந்த வாரம் இவர்கள் தந்தது வெற்றுக் கூச்சலைத் தாண்டி வேறில்லை. பின்ணணியில் அந்த மெலிதான சோக இசை மட்டும் இல்லையெல்லால் இவர்கள் பாடு வெகுத் திண்டாடமாயிக்கும் .

கடைசியாக ஒரு விசயம், தமிழ்நாட்டைத் தாண்டி உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்த ஒரு முக்கிய நிகழ்வில் நல்லத் தமிழில் நிகழ்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமையிலிருந்து காட்சி ஊடகங்கள் தவறிவிட்டன என்பது எனது கருத்து.

இறுதியாக,  அவரை இழந்து தவிக்கும் கோடான கோடி நல்ல உள்ளங்களுக்கு எனது ஆறுதல்கள். மறைந்த முதல்வரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

எம்.ஜி.ஆர் - ஜெ எனும் இந்த சிறிய கட்டுரைத்தொகுப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன். உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

Wednesday, December 14, 2016

சினிமா டைரி-3

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது. 

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக. இரண்டாவது பகுதிக்கு இங்கே சொடுக்குக.

சிறந்த திரைக்கதை ஆசிரியரும் நடிகருமான பாக்யராஜின்
மிகப் பெரிய வெற்றிப்படம் "அந்த ஏழு நாட்கள்".
அவர் நடிகை அம்பிகாவுடன், அப்பாவி பாலக்காட்டு மாதவனாக தன் நகைச்சுவை நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த படம். சரி நாம் படத்தலைப்புக்கு வருவோம்.

குறிப்பாக நாட்கள் பற்றி. நாள்+கள் = நாட்கள். இதில்  
நாட்கள் பிழையன்று. ஆனால் பொருள் திரிபுக்கு (நாள்பட்ட கள்) இடம்தருதலால்  நாள்கள் என இயல்புற எழுதலாம்.

அது மட்டுமல்லாமல்,  தமிழில் அலகுகளைக் குறிப்பிடுகையில் பன்மை அவசியமில்லை. 'இரண்டு நாள் கவியரங்கம்', 'மூன்று மாதத் திருவிழா' என்றால் 'நாள்', 'மாதம்' ஆகியவை தானே பன்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடும்.

***
"அபியும் நானும் " நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த படம். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்ட இப்படம் வந்த புதிதில் பெரிதும் பேசப்பட்டது.

சரி தலைப்புக்கு வருவோம். இந்தத் தலைப்பில் "அபியும் நானும்" என்பதில் வரும் "உம்" என்பது இணைப்பை உண்டாக்கும் ஒர் இடைச்சொல். நாம் "உம்" மை நாளாவட்டத்தில் கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
அதை எளிதான சில  வாக்கியங்களின் மூல
ம் பார்த்துவிடலாம்.

"நீங்கள் சொத்துகளை வாங்கவும், விற்கவும் இனி பான் நம்பர் அவசியம்".


இதில் வாங்கவும் விற்கவும்-வாங்குவதற்கும் விற்பதற்கும் என்று பொருள்தரும் இணைப்புச்சொல்லாகவே பயன்பட்டுள்ளது.வரவும்,போகவும் வசதியாக-இதில்பிழையில்லை.

"இந்த இணைப்பைச் சொடுக்கவும் "

என்பது பிழை. இதுபோல நீங்கள் உடனே வரவும்,கடிதம் போடவும்,அனுப்பிவைக்கவும் என்பதுபோல் கட்டளைப்பொருளில் பயன்படுத்துதல் பிழை.


***

சின்னத்திரையில் முடிசூடா மன்னனாக
வலம் வந்துக் கொண்டிருக்கும்
‘மெட்டி ஒலி‘ புகழ் திருமுருகன் இயக்குநராக
அறிமுகமான திரைப்படம் "எம்டன் மகன்". 

அந்தத் தலைப்பில் இருக்கும் "எம்டன்" என்பதை கில்லாடி அல்லது தந்திரக்காரன்
எனும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். "எம்டன்" என்பது தமிழ் வார்த்தையில்லை. அதற்கான பெயர் காரணம் தெரியாதவர்களுக்காக, ‘எம்டன்’ என்பது ஜெர்மனியின் யுத்தக் கப்பல் ஒன்றின் பெயர்.

1914ல் அன்றையச் சென்னையை யாரும் எதிர்பாராத

சமயத்தில் அது குண்டு வீசி தாக்கியது. சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த தாக்குதலில் மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. அதன் தொடர்ச்சியாக நாம் கில்லாடி ஆட்களை எம்டன் எனச் சொல்வது பேச்சுவழக்கானது.

Friday, December 9, 2016

எம்.ஜி.ஆர் - ஜெ-1

'எம்ஜிஆரின்  இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன்  ' என இப்போது சொன்னால்  சிலருக்கு  அது சிரிப்பாக இருக்கலாம்.  ஆனால் அது உண்மை.  உங்களில் எத்தனைப் பேருக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இறுதிப் பயணம்  நினைவிருக்கும் எனத்
தெரியவில்லை.  அது நடந்தது 1987ல்.   நான் பத்து வயது சிறுவன்.
அப்போதெல்லாம் டிவி என்றால் தூர்தர்ஸன் தான். அவர்கள் வைத்தது தான் சட்டம். மற்றபடி செய்திகளுக்கு பத்திரிக்கைகளை விட்டால் வானோலி மட்டுமே.

அந்த சமயத்தில் வந்த  நடிகர் பாக்கியராஜின் அவசரபோலீஸ் 100 படத்தில் தலைவரின் இறுதிப்பயணத்தை  சிறப்புக் காட்சியாக காண்பித்தார்கள். எம்ஜிஆர் உயிருடன் இருக்கையில் பாக்கியராஜை தனது கலை உலக வாரிசாக அறிவித்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், அப்பா புரட்சித்லைவரின்  தீவிர  ரசிகர். அவரோடு தியேட்டருக்குப் போயிருந்தேன்.  அந்தக் காணோலி 30 நிமிடங்களுக்கு மேல் ஒடியதாக நினைவு. அதில் வரும் ஒர் காட்சி இன்னமும் மனதில் நிற்கிறது. கட்சித்தொண்டர் ஒருவர் சாலையோர கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பார். அப்போது வானோலியில் புரட்சித்தலைவரின் மறைவை  அறிவிப்பார்கள். முதன்முறையாக தலைவரின் மரணத்தைக் கேட்ட அந்தத்தொண்டரின் அதிர்ச்சியை,   முகமாற்றத்தை,உணர்ச்சிப் பூர்வமான அந்த ரியாக்சனை  அப்படியே  பதிவுசெய்திருப்பார்கள்.

கையில் கண்ணாடிக் குவளையுடன் நின்ற பாசாங்கற்ற அந்த சாமானியனின் முகம் இன்னமும் நெஞ்சில் நிற்கிறது.    அதுபோல
இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட லட்சக்கணக்கான மக்களின் முகத்தில்  உண்மையான சோகம் இருந்தது. பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு   கதறி  அழுதனர்.  அந்த அளவுக்கு ஏழை எளிய மக்களின் ஆதர்சன நாயகனாக, ஏன் தெய்வமாக இருந்தார்.


அப்படியானதொரு உணர்ச்சிகரமான காட்சிகளை மறைந்த முதல்வர் ஜெயின் இறுதி ஊர்வலத்திலும் பார்க்கமுடிந்தது. அது பற்றிய எனது எண்ண ஒட்டங்களை வரும் நாட்களில் பதிவு செய்கிறேன்.

Friday, December 2, 2016

சினிமா டைரி-2

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது.

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக.

            ***
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின்
"நிழல் நிஜமாகிறது" படத்தில் வரும் அருமையான பாடல் "கம்பன் ஏமாந்தான்". நடிகர் கமல் உதட்டசைக்க பாடகர் பாலு ரசித்து "பாவமாக" பாடியிருப்பார். "ஏமாந்தான்" எனும் அந்த வார்த்தையைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? "ஏமாற்றுதல்" நாம் அறிந்தது -வஞ்சித்தல் அல்லது நம்பிக்கையை கெடுத்தல். "ஏமாற்றப்படுதல்" என்பதற்கு ? -"ஏமாற்றப்பட்டான்", "ஏமாறினான்" என எழுதலாம். "ஏமாந்தான்" பிழையான சொல். வேண்டுமானால் அதை பேச்சு வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் "ஏமாந்தான்" சரியான சொல் அல்ல. அதனால் இனிமேல் ஏமாறவேண்டாம். ;)

                 ***
மறைந்த இயக்குநர் பாலுமகேந்ராவின்
இயக்கத்தில் வந்த திரைப்படம் "ராமன் அப்துல்லா".
"உன் மதமா ? என் மதமா ? " எனும் நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றிருந்த படம்.
அது மட்டுமில்லாமல் படம் வந்த புதிதில் அந்தத் தலைப்பிற்காகவே பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தலைப்பை "இராமன் அப்துல்லா" என எழுதுவது சரியாக இருக்கும். ஏனென்றால், தமிழில் 
"ல,ள,ர,ற" போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அப்படி என்றால் ராமனையும்,ராகவியை யும் எப்படி எழுதுவதாம் ?. அவற்றை அ,இ,உ சேர்ந்து எழுதவேண்டும். (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்பது சரி.

அது சரி, நீங்கள் பாலுமகேந்ராவுக்கு ரசிகரா ? இரசிகரா ? ;)
             ***


"என் ராசாவின் மனசிலே " ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றித்திரைப்படம். நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமான படமும் கூட. அருமையான பாடல்கள். 

அது இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரை முன்னிறுத்தியே படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாக கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டது.


"என் ராசாவின்.. " எனும் அந்தத் தலைப்பை ஒட்டி ஒரு சிறிய தகவல். எனது சட்டை, எனது ஜன்னல் என உடைமைப்பொருட்களை "எனது" எனலாம்.

ஆனால், உறவுப் பெயர்களை என் மகள், என் மகன், என் நண்பன் என்றே குறிப்பிடவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" நினைவுக்கு வருகிறதா ?

          ***