Monday, September 18, 2017

தமிழ்ப்பள்ளி - மைல்கல்

அமெரிக்கவாழ் பிள்ளைகளுக்கான வார இறுதி தமிழ்வகுப்பு எனும் 
பயணத்தில் நாங்கள்  ஒரு முக்கிய  மைல்கல்லைத் தொட்டிருக்கிறோம் என்பதை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று  6-7 பிள்ளைகளுக்கு
வீட்டில்  1 மணி நேரம் என முடிவு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன் அகரத்திலிருந்து தொடங்கினோம். பின் மெய் எழுத்துகள் அதைத் தொடர்ந்து உயிர்மெய் எழுத்துகள் என முழுவதையும் அறிமுகம் செய்துவிட்டோம்.

அறிமுகம் என்பதைத் தாண்டி அவர்களால்  இனி எழுத்துகளை அடையாளம் கண்டு, வாசிக்க இயலும். சொன்னால் புரிந்துக் கொண்டு எழுதிக் காட்ட முடியும்.  கொஞ்சம் முயற்சி செய்து அவர்களால்  சிறிய வார்த்தைகளை வாசிக்கவும், பார்க்காமல் எழுதவும் இயலும்.

இதையே ஒரு வெற்றியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை. 
இது அவர்களுடைய நீண்ட தமிழ்ப் பயணத்தின் ஒரு தொடக்கம் என்பதை நான் நன்றாக அறிவேன்.  உண்மையில் Light At the end of the tunnel என ஆங்கிலத்தில் சொல்வதைப்  போலோரு உணர்வு. 
ஆரம்பத்தில் வாரத்துக்கு வெறும் ஒரு மணிநேரத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா ? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது கண்டிப்பாக நம்பிக்கை வந்திருக்கிறது. உள்பெட்டியிலும், இமெயிலிலும் தொடர்பு கொண்டு
உற்சாகமளித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்னிடம் வரும்  பெற்றோர்களிடம் நான்  தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பொறுமை.  இதுவரை தமிழே பேசாத ஒரிரு பிள்ளைகளை வீட்டில்  உடைந்த தமிழ் பேசத்தொடங்கியிருப்பதே நல்ல தொடக்கமாக பார்கிறேன். மொழியைப் பொறுத்தவரை அடிப்படை மிக முக்கியம். அதை சரியாக வென்றேடுத்தால் நாம்  இலக்கை எட்டிவிடலாம். 

இலக்கை எட்ட பல பாதகமான விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.   எங்களிடம் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிப்பவர்கள்.  அவர்களின் அன்றாட தமிழின் பயன்பாடு என்பது மிகக் குறைவு. ஒரு பையனின் வீட்டில் பெற்றோர்களே தமிழில் பேசுவதில்லை.  ஒருவனுடைய பெற்றோர்களுக்கு தமிழ் பேசத் தெரிகிறது. ஆனால், எழுதுவதில் சிரமம் இருக்கிறது. கேட்டால் மூன்றாவது மொழியாகதான்  எங்களுக்கு தமிழ் இருந்தது என்கிறார்கள்

'எம்பொண்ணு எப்படி பண்றா? இல்லை எப்படி படிக்கிறான் ? எனக் கேட்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்லும் இன்னோரு விசயம்
பயிற்சி.  முதலில் அவர்களிடம் தமிழில்  பேசுங்கள்.  ஆரம்பத்தில் 
ஆங்கிலத்தில் பதில் சொன்னாலும்,  அதைத் தொடர்ந்து செய்யுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே?. அதுபோல ஆங்கில வார்த்தைகளை சொல்லி அதற்கு ஈடான தமிழ் வார்த்தையைக் கேளுங்கள். விளையாட்டு போக்காக தமிழ் கண்டிப்பாக போய் சேரும்.

இரண்டெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து என தொடர்ச்சியாக
வாசிக்க, எழுத பயிற்சி கொடுத்துகொண்டிருக்கிறேன்.  பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்க திட்டமிட்டிருக்கிறேன். 

இந்த பிள்ளைகள் தயக்கமின்றி தமிழில்  உரையாட எந்தவிதமான பயிற்சி சரியானதாக இருக்கும் ?  நண்பர்கள் பரிந்துரைகளை எதிர்பார்கிறேன். நன்றி!!

Wednesday, September 13, 2017

மெர்குரிப்பூக்கள் - பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மெர்குரிப்பூக்கள் நெடுங்கதை சுருக்கமாக - தொழிற்சாலை ஒன்றில் நடக்கும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் சாமானியர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் வேறு வேறு விதமான தாக்கங்களைச் சொல்லும் கதை.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் எதிர்பாராமல் மரணமடையும்
தொழிலாளி கணேசன், அவனுடைய மனைவி சாவித்திரி. அந்தக் கணேசனின் மரணத்துக்கு குற்றம்சாட்டப்பட்ட தொழில்சங்கத் தலைவன் கோபாலன். அந்தத்  தொழிற்சாலையின் முதலாளி ரங்கசாமி. அங்கே மற்றோரு தொழிலாளியாக சங்கரன் அவனுடைய கள்ளக்காதலியான சியாமளி என பின்னிப்பிணைந்த பல பாத்திரப் படைப்புகள் ரத்தமும் சதையுமாக .

இந்த  ஒவ்வோரு பாத்திரத்திற்கும்  நுணுக்கமான பின்புலத்தை நிறுவி அவர்களின் மனஓட்டத்தை மிகச் சரியாக பிரதிபலிப்பதில் மனிதர் பின்னுகிறார்.  தன் எழுத்தால் எல்லா பாத்திரங்களையும் நம் கண்முன் மனிதர்களாக நடமாட வைத்திருப்பதிலும் ஜெயித்திருக்கிறார் .

இந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு மற்றும் அதில் சொல்லப்பட்ட அரசியல் சூழல்களைப் பார்க்கும் போது மத்தியில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் கம்யூனிசத் தத்துவங்கள் வலுபெற்றிருந்தன என்பது தெரிய வருகிறது.

இந்த நாவல் வெளி வந்த காலகட்டத்தில் கதையின் உள்ளடக்கத்திற்காகவும், அதில் சொல்லபட்ட சர்ச்சைக்குறிய விசயங்களுக்காகவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

Friday, September 8, 2017

கற்க கசடற விற்க அதற்குத் தக -பாரதி தம்பி

மருத்துவக் கனவு நொறுங்கியதால் தற்கொலை செய்துகொண்ட
அனிதாவின் மரணம் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இன்றைய தமிழக கல்விச் சூழல் பற்றிய
உண்மையான, முழுமையான புரிதல் எல்லோருக்கும்
கண்டிப்பாக அவசியமாகிறது.


அது குறித்தான களநிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல் ஊடகவியலாளர் பாரதி தம்பி எழுதிய  "கற்க கசடற விற்க அதற்குத் தக" (விகடன் வெளியீடு).

இன்றைய கல்விச் சூழல் குறித்து முழுமையாக எழுதப்பட்ட ஆகச்சிறந்த நூல்
இது எனத் தயங்காமல் கை காட்டமுடியும்.

ஏழ்மையைப் போராடி  வெல்ல கல்வி போன்றதொரு கூர்மையான ஆயுதம் வேறில்லை என உறுதியாக நம்பும் எனக்கு இந்த நூலை உயர்த்திப் பிடிப்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.

அரசு, தனியார், பொதுமக்கள், ஆசிரியர்கள்  எனும்
பாகுபாடு இன்றி   சமரசம் எதுவும் செய்து கொள்ளாமல்
பொறுப்புணர்ச்சியுடன் பாரதி இதை எழுதியிருக்கிறார்

ஆங்கிலத்தில் 360 கோணம் எனச் சொல்லப்படும் முழுமையான
பார்வையில்  இன்றைய கல்விச் சூழல் பற்றி அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்திருக்கிறார். அபாரம்.  

நலிவடைந்து வரும் அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, 
இது குறித்து மத்திய,மாநில அரசுகளின் தொடர்ந்த கள்ள மெளனம். தமிழக மாணவர்களின் பின்புலம், ஆசிரியர்களின் மனநிலை, இன்றைய பாடத்திட்டம், தாய்மொழி வழிக்கல்வி, தனியார் மயம், அரசுத் துறையின் மெத்தனப்போக்கு ,அரசுப் பள்ளிகள் எதிர் கொள்ளும் சவால்கள் என எல்லா விசயங்களையும் குறுக்கு வெட்டாக அதே நேரத்தில் சுவாரசியமாக விசயத்தை எடுத்து வைக்கிறார்.

தமிழில் தகுந்த தரவுகளைச் சேகரித்து, களப்பணி செய்து ஆங்கிலத்தில் எழுதுவது போல் ஈடுபாட்டுடன் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் இந்த நூலை வாசித்துவிட்டு பேசலாம்.

மத்திய, மாநில ஏன் உலக அளவில் கல்வி குறித்தான பல
புள்ளிவிவரங்கள், தரவுகளை முன்னிறுத்தி கட்டுரைகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக,  சென்னை போன்ற மாநகரங்களின் இதயப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுவருவதற்கும் அதன் பின்புலத்திலான தனியார் ரியல் எஸ்டேட் எனும் வியாபாரத்தை உடைத்திருக்கிறார்.

அதே சமயத்தில், மூலைக்கு மூலை தனியார் பள்ளிகள்  என கல்வி
வியாபராமான இன்றைய சூழலில் அரசுப் பொதுப்பள்ளிகள் மட்டுமே நம் கல்வி உரிமையின் அடையாளங்களாக நிற்கின்றன எனச் சொல்லும் ஆசிரியர் மிளிரும் அரசுப் பள்ளிகள் சிலவற்றையும்
அடையாளம் காட்டியிருக்கிறார்.

நமது இன்றைய உடனடித் தேவை-  கல்விக் கொள்கை, பாடத்திட்டம், தேர்வுமுறை, நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்த ஒரு திறந்த உரையாடல் என்பதை  பட்டவர்தனமாகச் சொல்லும் நூல்.
அதை நாம் செய்வோமா ? என்பதே நமக்கு முன்னால் உள்ள கேள்வி.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து தமிழ்ச்சமூகத்தின் அடுத்தத்
தலைமுறை குறித்து கொஞ்சமெனும் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல்.

நூல்-கற்க கசடற விற்க அதற்குத் தக
ஆசிரியர்- பாரதி தம்பி
வெளியீடு- விகடன்
வாங்க- http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%21
விலை- 145
பக்கங்கள்-248

Friday, September 1, 2017

கேலிச் சித்திரங்கள்

நூலகத்தில் கண்ணில் பட்ட " Cartooning for Kids" எனும் புத்தகத்தை
சமீபத்தில் வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

கோடை விடுமுறையில்  இருந்த இரண்டு மகள்களுமே (5,10 வயது) ஆர்வமாக போட்டி போட்டு போதும் போதும் எனும் அளவுக்கு வரைந்துவிட்டார்கள் (படத்தில்).

எனக்கும் சின்ன வயதில்  இந்தக் கார்டூன்களின் எனும் கேலிச்சித்திரங்களின் மீது ஒரு
கிறுக்கு இருந்தது உண்மைதான். செய்தித் தாள்களில் வரும்
படங்களைப் பார்த்து சதா கிறுக்கிக் கொண்டிருப்பேன்.


கார்டூனிஸ்டுகளுக்கு மக்களிடம் பெரும் மதிப்பு இருந்த காலம் அது ( தமிழில் ஆனந்த விகடன்  மதன் பெரிதும் சிலாகிக்கப்பட்டது போல ). அப்போது ஆங்கில  ஹிந்துவின் காட்டூனிஸ்டுகளான சுரேந்ரா, கேசவ் போன்றோரின் பரம ரசிகன் நான். குறிப்பாக சுரேந்ரா. அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வீட்டில்  ஹிந்து வாங்குவோம். வாங்கியவுடன் எனக்கு முதல் வேலை கார்டூன் கார்னர் பக்கத்தைத் திருப்புவதுதான்.

அரசியல் கார்டூன்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில்  அவர் படங்களின் மேல்  எனக்கு ஒரு தீராத காதல் இருந்தது. என்னைப் பொறுத்த வரை அவருடைய கார்டூன்கள் கூர்மையானவை. அதே சமயத்தில் அதில் எப்போதும்  மெலிதான ஒரு நகைச்சுவை இருந்துக் கொண்டேயிருக்கும் (சமீபத்தில் கண்ணில் பட்ட ஒரு கார்டூனை கமெட் பகுதியில் பார்க்கவும்).

பதின்மவயதில் அவருடைய கிறுக்கல் கையெழுத்தைப் பார்த்துதான் எனது கையெழுத்தை வடிவமைத்துக் கொண்டேன் எனச் சொன்னால் அது பொய் இல்லை. உண்மை. இதில் என்னுடையது பெரியக் கிறுக்கல், அவருடையது சின்னக் கிறுக்கல்.
அவ்வளவுதான். பெரிதாக வித்தியாசமில்லை.  கிறுக்கல் கையெழுத்தில் சின்னக் கிறுக்கல், பெரிய கிறுக்கல் என்றெல்லாம் இருக்கிறதா என்ன ? :)

அதெல்லாம் வேறு பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல்
நாளிதழ்களை வரிவரியாக ஒன்று விடாமல் வாசித்த நாட்கள். இன்று,  இணைய செய்திகள், வாட்ஸ் அப் அதில் வரும் வீடியோக்களும், மீம்சுகளும் பிரபலமாயிருக்கும் இந்த அவசரச் சூழலிலும் நிதானித்து கார்டூன்களை கலை நுணுக்கத்துடன் ரசித்து சிலாகிக்கும் ஒரு சிறிய கூட்டம் இன்றும் இருக்கிறதா என்ன?