Wednesday, December 25, 2019

இர்மா- அந்த ஆறு நாட்கள்

நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! .  கடந்த ஆண்டு எனது  'அந்த ஆறு நாட்கள்'  (புதினம்/நாவல்)  அமெசான் கிண்டிலில்   வெளியானது  
உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு  எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது.  தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம். 

பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம்.  அதுபோல,  நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில்  வாசகர்களின்  ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள்  (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம்.  இது எனக்கு நான்காவது நூல். 

நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய  ‘எழுத்து பிரசுரம் பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.  

அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா... இனி உங்கள் கைகளில்.



Monday, December 9, 2019

அமெசான் - லாஸ் வேகாஸில் நடத்திய மாபெரும் மாநாடு!

அமெசானின் துணை நிறுவனம் லாஸ் வேகாஸில் நடத்திய மாநாடு ( AWS-re:Invent)  முடிந்து வீடு திரும்பிவிட்டேன்.  மொத்தமாக ஐந்து நாட்கள் நடந்த   இந்த மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், அயர்லாந்து என எண்ணிலடங்காத நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். நல்ல கூட்டம்.  கலந்து கொண்டவர்களின்  எண்ணிக்கை  60 ஆயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தக் கூட்டத்தால் லாஸ் வேகாஸ் குலுங்கியது என்றேல்லாம் சொல்லிவிட முடியாது. ஏனேன்றால் அந்த நகரில் இதுபோல பல மாநாடுகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடந்தபடியிருக்கின்றன.  அதனால், நகர் எப்போதும் விழாக்கோலத்துடன் ஒருவித கொண்டாட்ட மனோநிலையிலேயே இருக்கிறது.  அடுத்து ரோடியோ எனும்  குதிரைச் சவாரி செய்பவர்களுக்கான விழா தொடங்கிவிட்டதால் நகர் முழுவதும்  'கொவ் பாய்' தொப்பியில் ஆண்களையும், பெண்களையும் பார்க்க முடிந்தது.

ஏடபுள்யூஎஸ் (AWS) விழாவில் கலந்துகொண்டவர்கள் தும்மல் வந்தால் "ஹச்.. ஹச்" எனத் தும்மாமல் "அமெசான்... அமெசான்" எனத் தும்மிவிடுவார்களோ எனச் அச்சப்படும் அளவுக்கு ஐந்து நாட்களும் AWS பற்றி பேசித் தீர்த்துவிட்டார்கள்.

உண்மையில் இணையவர்த்தகத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த அமெசான் தனது சொந்த உள்கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கியதே அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) எனும் தொழில்நுட்பம். ஆனால், அது  இன்று மேகக்கணினி எனும் Cloud Computing துறையில்  உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

 2006-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட AWS சேவை இன்று அமேசானின் மொத்த காலாண்டு விற்பனையில் சுமார் 10 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது.

பொதுவாக மாநாட்டில் கணிசமான அளவு இந்தியர்களைப் பார்க்க முடிந்தது.  அதில் பல நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அடக்கம்.  கடைசி நாளில் நெதர்லாந்தில் இருந்து வந்த பேராசியர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தபோது பேச்சுனூடாக "இந்திய மக்கள் தொகை சுமார் 1.3 பில்லியன்.  அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்திலும் வல்லவராக இருக்கும் இந்தியர்கள் ஏன் இதுபோல் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை இதுவரைத்  தொடங்கவில்லை ? " என்றார்.  நான் பதிலாக  "ஆமாம், இதுவரைத் தொடங்கவில்லை" என்றேன். அதைவிடுத்து அவரிடம்  நமது கல்விச் சூழல்
குறித்தெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியுமா என்ன ?


Sunday, November 10, 2019

அடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே ? (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-10)

சிகாகோவில் (2019 ஜுலை) நடைபெற்ற "10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு" தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் இதுவரைப் பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி. நாம் அதன் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கிறோம்.


நான் முன்பே சொன்னதுபோல அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து இந்தஆண்டு முப்பெரும் விழாவாக  வெற்றிகரமாக நடத்தி முடிந்திருக்கிறார்கள். 

வழக்கமான பேரவை விழாவுடன் இந்த முறை ஆராய்ச்சி மாநாடு  இணைந்த்தால் தமிழுடன், கலையும் சேர்ந்துகொண்டது. 

அதனால் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், தென் அமெரிக்கா, கனடா, இலங்கை, நார்வே, இங்கிலாந்து எனப் பற்பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை பல நூறு தன்னார்வத் தொண்டர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு பகலாக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்.

பேரவை விழா பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் "வழக்கம் போல மெல்லிசை, இன்னிசை, பட்டிமன்றம், கவியரங்கம் தாண்டி வேறென்ன புதுசா ?" எனக் கேட்டிருந்தார். இன்னொருவர் "இந்த வருசமும் புடவை, மளிகை கடைகள் உண்டா ? " என நக்கலடித்திருந்தார். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் திருவிழா. வயது வித்தியாசமின்றி அனைவரும் தமிழர்கள் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். திருவிழா என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தானே.


பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பலர் மரபுக்கலைகளை மறவாமல் தாங்கள் கற்பதோடு மட்டுமில்லாமல் அடுத்தத் தலைமுறையினருக்கும் பயிற்றுவித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒயிலாட்டம், கரகம், சிலம்பம், தப்பாட்டம்,நாதசுவரம் என தமிழகத்தில் வழக்கொழியும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழக நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துவந்து இங்கே மேடை ஏற்றியிருந்தார்கள். 300 இசைக்கலைஞர்கள் இணைந்து "முரசு-சேர்ந்திசை" எனும் தலைப்பில் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு இசையூட்டிய நிகழ்ச்சி உலகத் தரம்.


நிறைவாக ஒன்று, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வரலாற்றில் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து முடிந்த விழா இதுவாக இருக்கும் என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

வழக்கமாக தமிழ்ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில் அடுத்த மாநாட்டு நிகழ்வை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி சிறப்பாக  அரசியல் இலாபமின்றி தமிழுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நிகழ வாழ்த்துவோம்.

குறிப்பு- இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையை இங்கிருந்து வாசிக்கத்தொடங்கலாம். 

Wednesday, October 30, 2019

படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்கள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-9)

இந்தத் தொடரின் முந்தையக் கட்டுரையை (8) இங்கே வாசிக்கலாம்.

வழக்கமாக பேரவை விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு  விழா மலர் அன்பளிப்பாக வழங்குவது மரபு. அந்தப் பேரவைவிழா மலரின் ஆசிரியர் குழுவில்  இந்தஆண்டு  உறுப்பினராக இருந்தேன்.  பேரவை மலருடன் பல ஆண்டுகள் தொடர்பிருந்தாலும் உறுப்பினராக மலர்க் குழுவுடன் இணைந்தது இதுவே முதல்முறை.

அதனால் பல மாதங்களாகவே விழா குழுவினருடன் தொடர்பில் இருந்தேன். சரியாக சொல்வதென்றால் இந்த ஆண்டு (2019) பிப்ரவரியில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. உலகின் பல நாடுகளில் இருந்து   விழாவின் கருப்பொருளுக்கு ஏற்றவகையில் படைப்புகளை வரவேற்பது, தேர்வு செய்வது, பிழை திருத்துவது, நெறிமுறைகளைச் சரிபார்ப்பது என பல வேலைகள் இருந்தன.

இவற்றைச் செய்து முடிக்க உறுப்பினர்கள் அனைவரும்  வாரம் ஒருமுறை தொலைபேசி பல்வழி இணைப்பில் சந்தித்தோம். பிறகு நாட்கள் நெருங்க நெருங்க அது வாரம் இருமுறை என்றுகூட ஆனது. குழு உறுப்பினர் எனும் வகையில் நான்  இணைந்து செயல்பட்ட பல பணிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு. ஒன்று சமூக வலைதளங்களில் பகிர மார்கெட்டிங் அணியுடன் இணைந்து ஃபிளையர்கள் தயார் செய்து பகிர்ந்தது. அடுத்தது தமிழில் சிறந்த 100 நூறு புத்தகங்கள் எனும் பட்டியல் தயாரிப்பை ஒருங்கிணைத்தது.

இந்தியாவில் இருந்து கிராபிக் வல்லுனர்கள் வடிவமைத்த பல ஃபிளையர்களில் சிறந்த இரண்டைத் தேர்ந்தேடுப்பது என்பது பாலுமகேந்திராவின் படங்களில் சிறந்த ஒளிப்பதிவைத் தேர்தெடுப்பது போல கடினமான வேலை இல்லை என்பதால், வந்த ஃபிளையர்களில் சிறந்த இரண்டை மட்டும் குழுவினரின் பார்வைக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதலைப் பெற்று வெளிச்சுற்றுக்கு அனுப்பினோம்.

அடுத்தது படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத்  தயார் செய்யவேண்டும் என்ற போதே மலர்க்குழுவில் இருந்த
நாங்கள் அனைவரும் மலைத்தோம். தயாரிக்கும்போதும் கண்டிப்பாக அதன் கனத்தை அனைவரும் உணர்ந்தோம். விண்மீன்களில் சிறந்த நூறைத் தேர்தெடுப்பதுபோல  அது சவாலான ஒன்றாகத்தான் இருந்தது.

முக்கியமாக தமிழில் சிறந்த நூறு புத்தகங்கள் எனும் போது திருக்குறள், சிலப்பதிகாரம் என்றில்லாமல் நவீன எழுத்துகளை அடையாளப்படுத்த நினைத்தோம். அதனால், கடந்த 100-120 ஆண்டுகள் எனும் வரையறையில் சிறப்பான படைப்புகளைத் தேர்ந்தேடுக்க முடிவுசெய்தோம். அதைப் புதினம் (50), கவிதை (25), புதினம் இல்லாதவை (25) என மூன்றாக பிரித்துக்கொண்டோம்.  இந்த வேலையில் எனது புனைவிலக்கிய பரிச்சயம் கண்டிப்பாக கைகொடுத்தது.  சிறந்த கவிதைத் தொகுப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் மரியாதைக்குரிய நண்பர் கவிஞர் ஜெயதேவனும் உதவி செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

புத்தகப் பட்டியல் -விழா மலரில் இருந்து...






முக்கியமாக இது தரவரிசைபட்டியல் இல்லை.  மலர்க்குழுவின் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் .
இந்தப் பட்டியல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறோம். இந்தப் பட்டியலில் விடுபடல்கள்  இருக்க வாய்ப்பு உண்டு.

புதின (நாவல்) வரிசை எழுத்துரு வடிவில் கீழே


#  புத்தகம் ஆசிரியர்
1 புயலிலே ஒரு தோணி ப சிங்காரம்
2 ஒரு புளிய மரத்தின் கதை சுந்தர ராமசாமி
3 கரைந்த நிழல்கள் அசோகமித்திரன்
4 மோகமுள் தி ஜானகிராமன்
5 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
6 கோபல்ல கிராமம் கி ராஜநாராயணன்
7 சாயாவனம் சா கந்தசாமி
8 பொன்னியின் செல்வன் கல்கி
9 உப்பு நாய்கள் லக்ஷ்மி சரவணக்குமார்
10 ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ்
11 வாடிவாசல் சி சு செல்லப்பா
12 உப பாண்டவம் எஸ் ராமகிருஷ்ணன்
13 விஷ்ணுபுரம் ஜெயமோகன்
14 கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன்
15 இரும்பு குதிரைகள் பாலகுமாரன்
16 கோவேறு கழுதைகள் இமையம்
17 ஸீரோ டிகிரி சாரு நிவேதிதா
18 கடல்புரத்தில் வண்ணநிலவன்
19 நாளை மற்றோரு நாளே ஜி நாகராஜன்
20 வெக்கை பூமணி
21 கிருஷ்ணபருந்து ஆ மாதவன்
22 வானம் வசப்படும் பிரபஞ்சன்
23 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி
24 சோளகர் தொட்டி ச பாலமுருகன்
25 காவல் கோட்டம் சு வெங்கடேசன்
26 எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சில் நாடன்
27 பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
28 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான்
29 தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதி
30 கூளமாதாரி பெருமாள் முருகன்
31 ஒருநாள் க நா சுப்ரமணியம்
32 தலைமுறைகள் நீல பத்மநாபன்
33 நாகம்மாள் ஆர் ஷண்முகசுந்தரம்
34 அஞ்சலை கண்மணி குணசேகரன்
35 புத்தம் வீடு ஹெப்சிபா ஜேசுதாசன்
36 வாசவேஸ்வரம் கிருத்திகா
37 ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் தமிழவன்
38 வேள்வித்தீ எம் வி வெங்கட் ராம்
39 சித்திரப் பாவை அகிலன்
40 புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன்  
41 கமலாம்பாள் சரித்திரம் ராஜம் அய்யர்
42 அகல் விளக்கு மு.வ.
43 நைலான் கயிறு சுஜாதா 
44 அபிதா லா சா ராமாமிர்தம்
45 நல்ல நிலம் பாவை சந்திரன்
46 ரத்த உறவு யூமா வாசுகி
47 மலரும் சருகும் டி செல்வராஜ்
48 பிரதாப முதலியார் சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
49 கூகை சோ தர்மன்
50 கருக்கு பாமா


அடுத்தப் பதிவு 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய இறுதிப் பதிவாக இருக்கும்.

Wednesday, October 23, 2019

ஓஷோ எனும் ஆளுமை

சமயங்களில் சில புதிய மனிதர்களைச் சந்திக்கும் போது இவரை எப்படி  இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்தோம்  (நல்ல விதத்தில்)  என நினைக்கத் தோன்றும் . அப்படி சமீபத்தில் வாசிக்கும்போது தோன்றிய புத்தகம் "Osho's Emotional Wellness" (Transforming Fear, Anger, and Jealousy Into Creative Energy)  தமிழில் நேரடியாக  "உணர்ச்சி ஆரோக்கியம்" (எப்படி பயம், கோபம், பொறாமையைப்  படைப்பு ஆற்றலாக மாற்றுவது)  எனச் சொல்லலாம்.

நமது தினசரி பிடுங்கல்களில் இருந்து கொஞ்சம் விலகி நின்று வாழ்வைச் சற்று உள்ளார்ந்த பார்வை பார்க்க வைக்கும் புத்தகம்.

நம் அன்றாட வாழ்வின் மிகப்பெரிய சிக்கலே வாழ்க்கையை வாழ்வதுதான்.
உண்மையில் உள்ளே என்ன  நினைக்கிறோம். எதை வெளியே சொல்கிறோம்.  அதை எப்படிச் சொல்கிறோம்.  என நொடிக்கு நொடி நமக்குள் பல கேள்விகள் பல அடக்குமுறைகள்.  சமயங்களில் நம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், நெருக்கமானவர்களைக் காயப்படுத்திவிடுகிறோம்.  இல்லை சொன்னால் அவர்களிடமிருந்து அந்நியப்படுவோம் என அஞ்சி சிலதைச் சொல்லாமல் மறைக்கிறோம். அந்தவகையில் எது சரி, எது தவறு. அதை யார் சொல்வது எனும் பல குழப்பங்களுக்கு விடை காண முயலும் ஒரு புத்தகம் இது என்றும் சொல்லாம்.

குறிப்பாக மானுட வாழ்வின் கசடுகளைப் பற்றி ஓஷோ எனும் ரஜனீஷ் பல புத்தகங்களை எழுதியிருப்பதாக அறிகிறேன். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் மானுடத்தை உடல், புத்தி, இதயம் (body,mind,heart) என மூன்றாகப் பிரித்து அதன் போக்கையும் அழகாகச் சொல்கிறார். அதனூடாக ஆண், பெண் உறவுச் சிக்கலையும் அவர் சொல்லத் தவறவில்லை. அதுபோல மனிதர்கள் ஒவ்வொரும் தனித்துவமானவர்கள். அதனால், நம்மை நாமே தினம் தினம் சக மனிதர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டு பொறாமை பிடித்து வாழ்வது முட்டாள் தனமான செயல் எனவும் சாடுகிறார்.

பொறாமை குறித்து ஓரிடத்தில் "நல்லவேளை நீ மரங்களுடன்   உன்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை.  அப்படி செய்திருந்தால் நீ மிகுந்த  பொறாமை பட்டிருப்பாய். நான்  மட்டும் ஏன்  பச்சையாக இல்லை. எனக்கு மட்டும் ஏன் பூக்களைத் தாங்கும் சக்தி இல்லை என்றெல்லாம் கூட பலவாறு நீ வருத்தப்பட்டிருப்பாய். 

அதுபோல நல்லவேளையாக பறவைகளோடும், ஆறுகளோடும், மலைகளோடெல்லாம்  நீ  உன்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படிச் செய்திருந்தாலும் நீ  இன்னமும் மிகுந்த வேதனை பட்டிருப்பாய்.

நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய். இல்லையென்றால் நீ தினம் தினம்  உன்னை ஆடும் மயிலோடும், பேசும் கிளியோடும் ஒப்பிட்டு ஒப்பிட்டு பொறாமையால் வெந்திருப்பாய்.  ஒருகட்டத்தில் அந்தப் பொறாமையின் கனம் தாங்காமல்  நீ செத்து ஒழிந்திருப்பாய்".

என பல தத்துவ விசாரணைகளைத் தூண்டும் புத்தகம். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.   முக்கியமாக நான் ஓஷோவின் எல்லா புத்தகங்களையும்
படித்து அவரை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்றோ இல்லை அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், இதை வாசித்தபின் ஓஷோ 20ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவர் எனச் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது என்றே தோன்றுகிறது.

Tuesday, October 8, 2019

காந்தி குறித்த முதல் ஆவணப்படம்

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் - காந்தி குறித்து முதன் முதலில் ஓர் ஆவணப்படம் (டாக்குமெண்டரி) வெளியான ஆண்டு 1940. அதைத் தயாரித்து வெளியிட்டவர் ஒரு தமிழர். அவர் "உலகம் சுற்றும் தமிழன்" என அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார்.  ஏ.கே. செட்டியார் என்ற பெயரில் அறியப்பட்ட அவர் 1930களிலேயே ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுமையும் சுற்றி திரிந்து தமிழில்  பல பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் குறித்த ஒரு புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருக்கிறேன்.

அவருக்கு காந்தி மேல் இருந்த அன்பாலும், பக்தியாலும்  காந்தி குறித்த
ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் எனும் யோசனை வந்திருக்கிறது. ஆனால்,  அந்த யோசனைக்கு அப்போது இந்தியாவில்   அவர் நினைத்தது போல பெரிய ஆதரவு எதுவும் கிடைத்துவிடவில்லை. ஏன் சென்னையில் இருந்த பட தயாரிப்பு நிறுவனங்களே அவருக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. இது வெளிநாட்டில் படித்த  ஒரு இளைஞனின் கனவு என அவருடைய யோசனையைப் புறந்தள்ளின. அதுமட்டுமல்லாமல்  அது உலக அரங்கில் ஆங்கிலேயர்களின் கை ஓய்கி இருந்த சமயம். காந்தியைப் பற்றிய படம் என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. ஆனால் காந்தி மேல் இருந்த அபரிதமான அன்பால் அந்த முழு நீளப்படத்தைத் தானே தனியாக பொருட்செலவு செய்து தயாரிப்பது என  உறுதியானதொரு முடிவை செட்டியார் எடுத்தார். ஏற்கனவே புகைப்படக்கலையில்  ஆர்வம் கொண்டிருந்த அவர் காந்திக்கு நெருக்கமான பல  நண்பர்களை, கட்சிக்காரர்களை ஆர்வமுடன் சந்தித்தார். பிறகு காந்தி குறித்த பழைய செய்திக் குறிப்புகளையும், படத்தொகுப்புகளையும் தேடி கல்கத்தா, பம்பாய், புனே என ஊர் ஊராக பல ஸ்டியோக்களை ஏறி இறங்கத் தொடங்கினார்.

அதுபோல காந்தி குறித்த வெளிநாட்டுப் படக்காட்சிகளைத் தேடி தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் எனப் பல நாடுகளைச் சுற்றி திரிந்து சேகரித்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் காந்தி குறித்து சுமார் 200 புத்தகங்களை வாசித்து பல அரிய தகவல்களையும் திரட்டியிருக்கிறார்.

1937இல் தொடங்கிய இந்தவேலை சுமார் 3 ஆண்டுகள்  கழித்து நிறைவடைந்திருக்கிறது. மொத்தமாக சுமார் 50,000 அடி நீளமுள்ள 
ஓளிபடங்களில் இருந்து 12,000 அடி நீளமுள்ள அந்த ஆவணப்படத்தைத் தயாரித்தார். மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கிடையிலும் அந்தப்  படத்திற்க்கு  அவர் பலரைத் தேடிப்பிடித்து பின்னணி இசை, பாடல்கள், விளக்க உரை
எல்லாம் சேர்த்திருக்கிறார்.

படத்திற்காக நான்கு கண்டங்களில் சுமார் 1 இலட்சம் மைல் பயணம் செய்திருக்கிறார். உலகம் முழுமையிலும் 30 ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான கேமாரக்களில் எடுக்கப்பட்டிருந்த காந்தி குறித்த படங்களைச் சேகரித்திருக்கிறார்.  அந்தப் படமே ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை அவரது வாழ்வியல் சம்பவங்கள் மூழமாக சித்திரிக்கும்  ஒரு முழு நீளமுள்ள முதல் சரித்திரத் திரைப்படம் எனும் பெயர் பெற்றது.

இந்தியாவில் திரைப்படத்துறையே முழுமையாக வளர்ச்சி அடைந்திராத,
தகவல் தொடர்புகள் பெரிதும் வளராத அந்த நாட்களில் ஒரு தனிமனிதராக இத்தனையும் ஏ.கே செட்டியார் செய்து முடித்திருக்கிறார் என்பதை அறியும் போது இன்று நமக்கு பெரிய மலைப்பாக இருக்கிறது.

இப்படிப் பல சிரமங்களுக்கிடையே அந்த ஆவணப்படம்
தயாரிக்கப்பட்டதோ நெருக்கடியான யுத்த காலம் . காங்கிரஸ் ஆங்கிலேயர்களை எதிர்த்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் யுத்த எதிர்ப்பில் வேறு இருந்தார்கள். அதனால் அந்த சமயத்தில் ஆங்கிலேயர்கள் காந்தி குறித்த இந்தப்படம் வெளியாகுவதை விரும்பவில்லை.  அப்போதைய அரசு அந்தப்படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்ப பரிந்துரைத்தது.

ஆனால், ஆங்கிலேயர்களின் விருப்பத்துக்கு மாறாக அப்போது தணிக்கைக் குழுவில் இருந்தவர்கள் படத்தில் எந்ததொரு வெட்டும் இல்லாமல்
வெளியிட அனுமதித்தனர். அதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் அனுமதித்த இரண்டு உறுப்பினர்களையும் பதவியில் இருந்து தூக்கியடித்தனர். அப்படிப் பதவி இழந்த இரண்டு உறுப்பினர்கள் பிரபல மருத்துவர் ஏ. கிருஷ்ணா ராவ் மற்றோருவர் இந்து பத்திரிக்கை ஆசிரியர் கஸ்தூரி சினிவாசன்.

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தில்  காந்தி நேரடியாக தோன்றி பேசுவதுபோல ஒரு காட்சிகூட இல்லை. பலர் பார்த்து பாராட்டிய அந்தப் படத்தை காந்தி கடைசி வரை பார்க்கவேயில்லை.  தயாரிப்பு வேலைகள் முடிந்த பின் அதை வெளியிட முதலில் அரங்க உரிமையாளர்கள் முன்வர வில்லை என பல சுவையான  நிகழ்வுகள் நடந்தேரி இருக்கின்றன.

மகாத்மா குறித்து எடுக்கப்பட்ட அந்த ஆவணப்பபடம் இன்று இந்திய அரசின் உடமையாக இருக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கும் தங்கத்தால் ஆன தமிழ் ஓலைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-8)


ஜெர்மனியைச் சேர்ந்த நண்பரும் முனைவருமான சு.சுபாஷிணி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாள் அன்று "ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச்சுவடிகள்" எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை  வழங்கினார்.


இங்கே சுபாஷிணி பற்றி ஒரு சிறிய அறிமுகம்.  மலேசியாவில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசிக்கும் சுபாஷிணி தொழில் முறையில் ஒரு கணிப்பொறியாளர். ஆனால், தமிழ் தொன்மை மீதுள்ள தீராத ஆர்வத்தால்  தமிழ் மரபு அறக்கட்டளை எனும்  அமைப்பை நிறுவி அதன் வழியாக பண்டைய தமிழ்மரபு சார் விடயங்களை (எ.கா. கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள்..) மின்னாக்கம் செய்து பலருக்கும் உதவும் வகையில் பொதுவில் வைக்கிறார். (http://thfcms.tamilheritage.org/palmleaves/) இதை  உலகம் முழுவதிலும் உள்ள பல தன்னார்வ தொண்டர்களின் உதவியோடு,
களப்பணி செய்து செயல்படுத்தும் அவருடைய முயற்சி  வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய ஒன்று.

நிகழ்வில் சுபா ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் பல அரிய தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றிய தனது தேடல் குறித்து பேசினார் (நிகழ்வில் இருந்து சில படங்கள் இங்கே).

ஆய்வின் நோக்கம்

தமிழர் தம் தொன்மையை அறியவும், தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளவும், தமிழ் மக்களின் சமூக நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளவும் தமிழ் நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கிய, சமய சிந்தனைகளை அறியவும் ஆதாரமாக அமைபவைகளில் ஓலைச்சுவடிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகள் முழுமையாக
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

****
தற்போது இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகம், பாரீஸ் நகரிலுள்ள பிரான்சு தேசிய நூலகம், கோப்பன்ஹாகனிலுள்ள அரச நூலகம் போன்ற ஆவணக்காப்பங்களில் பாதுகாக்கப்படும் இந்த ஆவணங்கள்
ஐரோப்பியர்கள் தமிழகம் வந்தபோது இருந்த சமூகசூழல் குறித்துப் பேசுகிறன.
மேலும் தங்கம், வெள்ளி, பனை,
காகிதங்களால் ஆன இந்த ஆவணங்களில் தமிழ் எழுத்து வடிவில் மட்டுமன்றி  சில ஐரோப்பியர்கள் தங்கள் கைப்பட உருவாக்கிய  ஓவியங்களுடன்  இருப்பது சிறப்பு என்றும் குறிப்பிட்டார்.

அதுபோல அவர்களால் (ஐரோப்பியர்களால்) 17 நூற்றாண்டு வாக்கில் பல தமிழ் இலக்கிய நூல்கள் ஐரோப்பிய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர் திருக்குறள்
லத்தின்,ஜெர்மன், டோய்ச், ஆங்கிலம்,  சுவீடிஷ், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டதையும் மேற்கோள் காட்டினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக நிலப்பரப்பில் ஐரோப்பியர்களின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதனால், அவர்களுடைய தமிழக வருகை நம்மில் ஏற்படுத்திய சமூக,சமய, வாழ்வியல் சார்ந்த மாற்றங்கள் ஆய்வு நோக்கில் உற்றுநோக்கப்பட வேண்டும் எனும் கருத்தை இறுதியாக வலியுறுத்தினார்.

தமிழ் மரபு அறக்கட்டளையில் இணையதள முகவரி - http://www.tamilheritage.org/

Monday, September 30, 2019

மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -7)

மதிய நிகழ்வில் மலேசிய முனைவர் சபாபதி அவர்களுடைய
மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தான ஆய்வரங்கில் கலந்து கொண்டேன்.

அவருடைய ஆய்வின் தலைப்பு - "மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள்" - Dr. V. Sabapathy

நோக்கம்-    மலேசிய நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றம் அதன் பின்னணி ஊடாக மலேசிய மண்ணின் மணம், மக்கள் வாழ்வியலைப் பேசுவது.

நமது சமூகத்தில் பிறப்பில் இருந்து இறப்பு வரை  பாடல்களுக்கு குறிப்பிடத்தகுந்த இடம் இருந்திருக்கிறது.  குறிப்பாக  பாட்டாளிகள் எனும்
உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களோடு இவைப் பின்னிப் பிணைந்தவை. அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் இருந்து  மலேசியக் காடுகளுக்கு கூலிகளாகச் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க நேர்ந்தபோது தோன்றியப் பாடல்கள் மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

முனைவர் சபாபதி அந்தப் பாடல்களை ஆய்வு நோக்கில் பல கூறுகளில்  மிகச் சிறப்பாக அணுகினார். குறிப்பாக மலேசிய நாட்டுப்புற இலக்கியத்தை ஆய்வு நோக்கில் அணுகி பதிவு செய்ததில் விரிவுரையாளரும் முனைவருமான இரா.தண்டாயுதம் அவர்களுக்கு முக்கிய இடம் இருப்பதைப் பதிவு செய்தார். மலேசிய நாட்டுப்பாடல்களின் தந்தை என்று அழைக்கப்படும் இரா.தண்டாயுதம்  தமிழகத்தில் இருந்து சென்றவர். அவர்  மலேசியப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த காலகட்டத்தில் இடைவிடாது கள ஆய்வுகள் செய்து, தொகுத்து நாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்திருக்கிறார். அவர் 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய "மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள்" எனும் தொகுப்பு நூல் இந்தத் துறையில் ஓர் ஆவணம் எனக் குறிப்பிட்ட  நண்பர் சபாபதி தான் அவருடைய மாணவர்  என்பதிலும் பெருமிதம் கொண்டார்.

அதுபோல பல நாட்டுப் பாடல்களையும் அவை உருவான சூழல்களையும் விளக்கினார்.
மலேசியச் சூழலில் தனித்துவமாக உருவான இந்தப் பாடல்கள் அந்த எளிய மக்களின் அன்றைய பண்பாட்டு நிலைகள், பழக்கவழக்கங்கள்,
நம்பிக்கைகள், வாழ்வியல் தத்துவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறன.

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பாடல்கள் மலேசிய மண்ணில் வறுமையின் பிடியில் சிக்கி இரவும் பகலும் அல்லலுற்ற அப்பாவி மக்களின் வாழ்வியலில் எழுந்தவை. அவை மலேசியத் தொழிலாளர்களின்
அல்லல்களைத் துயரங்களை அடுத்துவரும் தலைமுறைக்குச் சொல்லும் சோக சாட்சியங்களாக எழுந்து
நிற்கின்றன என்பதே உண்மை.

எனக்கு

நாட்டுப் பாடல்கள் எனும் வாய்மொழி இலக்கியம் மேல் என்றும் ஆர்வம் உண்டு.  அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் வாழ்ந்தவன் என்ற முறையில் மலேசிய தமிழர்கள் குறித்தும் அவர்களுடைய வாழ்வியல் குறித்தும் நிறைய தெரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறேன். அந்தவகையில் இந்த நிகழ்வு நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்தது.

மாநாட்டில் அறிமுகமான மலேசிய நண்பர் சபாபதி அவர்களைத்  தனியாக சந்தித்து உரையாடும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது. தமிழக இலக்கியச் சூழல்,
மலேசியத் தமிழர்கள் குறித்த பல விசயங்களைப் பேசினோம். என்னுடைய வனநாயகன் நாவலைப் பெற்றுக்கொண்டவர் கிடைத்த மிகக்  குறுகிய இடைவெளியில் வாசிக்கத் தொடங்கி பாராட்டினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த அன்பும், நன்றியும்.



Saturday, September 21, 2019

பெண்களின் "ஐம்பால்" குறித்து (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -6)

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முந்தைய பதிவு (5) இங்கே

ஞாயிறு அன்று நடந்த காலை நிகழ்ச்சிகளில்  இது கடைசி அமர்வாக இருந்தது.

ஆய்வின் தலைப்பு - "தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை" - சரஸ்வதி விஜயகுமார்

இன்று உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒப்பனைக் கலை ஆயகலைகள் அறுபத்து நான்கில் ஒன்று. அதற்கான தடங்களைத் தமிழ் இலக்கியங்களில் தேடுவதே இந்த ஆய்வின் நோக்கம்.

குறிப்பாக மேக்கப் எனும் ஒப்பனை, உடை, நகை அலங்காரக் குறிப்புகளை மேற்கோள் காட்டி பேசிய ஆசிரியர் தொழில் முறையில் ஓர் ஒப்பனைக் கலைஞர்.
நகைகளைப் பற்றி பேசிய அவர் கழுத்தணி,  கையணி, விரலணி,  தோளணி,மார்பணி, இடையணி, காலணி என அன்று புழக்கத்தில் இருந்த பல அணிகலன்களைச் சுட்டிக்காட்டினார். சங்ககால இலக்கியத்தில் குறிப்புகள் இன்றி இன்றைய பயன்பாட்டில் இருக்கும் அணிகலன்கள் குறித்த கேள்விக்கு மங்கலநாண் எனும் தாலி , மூக்குத்தி என்று பதில் சொன்னார்.

அதுபோல தமிழகத்தில் உதட்டில் நகையணிந்து அலங்கரிக்கும் பழக்கம் குறித்த கேள்விக்கு 'இல்லை' என பதில் அளித்தவர், அது சீனர்களின் பழக்கமாக இருக்கலாம் என்றார்.








கூடவே  முகம், கண், நுதல், உதடு, விரல் நகங்கள், உள்ளங்கை (மருதாணி),
கூந்தல் போன்ற ஒப்பனைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்வில்  "ஐம்பால்" எனும் புதிய சொல் எனக்கு அறிமுகமானது. நாம் பள்ளியில் ஆண்பால், பெண்பால், பலர் பால்,ஒன்றன்பால், பலவின் பால் எனப் பால் இலக்கணம் படித்திருக்கலாம். அதற்கும் பெண்களின் கூந்தலுக்கும் என்ன தொடர்பு எனும் தேடுதலில் இறங்கிய போது  "ஐம்பால்"  என்பது ஐந்துவகையான சிகை அலங்காரம்  என்றும். சிலர் "ஐம்பால்" என்பது கூந்தலின் ஐந்து பண்புகளைச் சொல்கிறது என்றும் வாதிடுவது தெரியவந்தது.

உண்மையில் "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை.." என கலைமகளை வேண்டி உருகினாலும் நமது சமூகத்தில் அனைத்து கலைகளுக்கும்  சம அந்தஸ்து இல்லை என்பதே உண்மை.  குறிப்பாக முடி திருத்துவது, ஒப்பனை போன்ற கலைகளுக்கு. இத்தனைக்கும் கூந்தல் எனும் முடி பற்றி  புராணங்களிலும் இலக்கியங்களிலும்  நம்மிடம் பல குறிப்புகள் குவிந்துகிடக்கின்றன.

அன்று பெண்களின் அழகில் கூந்தலுக்கு மிக முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. மயில் தோகை, கருமேகம், அருவி... என்றெல்லாம்
கூந்தல் புலவர்களால் நறுமணம் மிகுந்த மயக்கம் தரும் ஒன்றாக ஆராதிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவு ஏன் கடந்த சில தலைமுறை வரைக் கூட ஆண்கள் கொண்டயிடுவது (குடுமி) நம்மிடம் மிகச் சாதாரணமாக இருந்தது.  அந்த காலத்தில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரைப் பார்த்து  "பாகவதர் மாதிரி முடிவெட்டணும்.." என பலர் திரிந்தது நமக்குத்
தெரிந்த ஒன்றுதான்.

அதுபோல ​பெண்களின் கூந்தலுக்கு இயற்​கையில் மணம் உண்டா? இல்​லையா? எனும் சந்தேகம் பாண்டிய மன்ன்னுக்கு வந்ததாகவும் அதைத் தீர்க்கும் வகையில் சிவனே வந்து கவிதை எழுதி தீர்த்ததாக திருவிளையாடல் படத்தில் ஒரு கதைப் பின்னப்பட்டிருக்கும். அதுபோல மகாபாரதத்தில்
அவமானப்படுத்தப்பட்ட பஞ்சாலி அதற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார் என பல குறிப்புகள் நம்மிடம் இருக்கின்றன.

இந்த ஐம்பால் எனும் சொல்லில் பெண் கூந்தலின்  ஐந்து பண்புகள் அடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அவை 1. கருமை, 2. நெடுமை, 3.மொய்ம்மை (அடர்த்தி), 4.மென்மை, 5.அறன்மை (வெள்ளம் வற்றிய ஆற்று மணலில்  செறிவு படிந்திருப்பது போன்ற தோற்றம்) .

சிலர் , ‘ஐ’ வியப்பு ஆகும் என்பது தொல்காப்பியம் தரும் சூத்திரம். அதனால் ஐம்பால் வியப்புக்குரிய கூந்தல் ஒப்பனை என்றும் சிலர் எடுத்துக்கொள்கிறார்கள்.  இப்படி என்றும்  பெண்களில் கூந்தல் என்றாலே ஐயம் தான் போலிருக்கிறது.

மாதொருபாகன் - One Part Woman

தமிழ் வாசகர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் செய்ய தேவையில்லாத புத்தகம் பெருமாள் முருகனின் மாதொருபாகன்.  இதற்குக் கிடைத்த எதிர்மறை விளம்பரமே  இன்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உதவியிருக்கிறது. 

மாதொருபாகனை பிளாக் கேட் எனும் நியூயார்க் நிறுவனம் One Part Woman (ஒன்பார்ட் உமன்) எனும் பெயரில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறது. 2018 அக்டோபரில் வெளியான இந்தப் புத்தகம் உள்ளூர் அமெரிக்க நூலகம் வழியாக சென்ற வாரம்  கைகளுக்கு கிடைத்தது.  அனிருத்தன் வாசுதேவன் எனும் அன்பர் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

கதையைப் பற்றி தேவைக்கு அதிகமாகவே
பலர் பேசிவிட்டதால் அதற்குள் போகத்தேவையில்லை. ஆனால், மொழிபெயர்ப்பு குறித்து கொஞ்சம் பேசலாம். 

நம்மிடம் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை அது தமிழின் மிகப்பெரிய சாபக்கேடு எனும் கருத்தை எழுத்தாளர் சாருநிவேதிதா பலமுறை தனது கட்டுரைகளில் புலம்பியிருக்கிறார். அதில் ஒரளவு உண்மை இல்லாமலும் இல்லை.

தமிழில் சிந்திப்பவர்கள் ஆங்கிலத்தில் (மற்ற மொழியில்) நேரடியாக எழுதினாலும் அது பெரும்பாலும் ஆங்கில வாசகர்களின் வரவேற்ப்பைப் பெற்றுவிடுவதில்லை. காரணம் மொழிவளம். குறிப்பாக மேற்குலக வாசகர்களைக் கவர அவர்களுக்கு அணுக்கமான மொழிநடையுடன் சரியான சொற்பிரயோகங்களையும் கடைபிடிக்கவேண்டியிருக்கிறது.
(இந்தியாவில் ஆங்கில வாசிப்பு பற்றி தனியாக பேசவேண்டும்)

அந்நிய படைப்புகள் அப்படியே ஒரளவு சரியாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டாலும் கிழக்காசிய எழுத்தாளர்களின் மொழி நடை என்பது வேறாகவே இருக்கிறது.  உண்மையில் அந்த நடையே அவர்களை அசல் படைப்பில் இருந்து வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.  அது
மட்டுமல்லாமல் கிழக்காசிய எழுத்தாளர்கள் மேற்குலக வாசர்களைக் கவர அவர்களுக்கு நல்ல எழுத்துநடை தேவை என்பதைத் தாண்டி கலாச்சாரம், கதைக்களம், சிந்தனை என பல தளங்களில் அவர் தங்களது தனித்துவத்தை நிறுவ வேண்டியிருக்கிறது.

அதனாலேயே உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி மேற்கத்திய வாசகர்களைக் கவரவே எழுதுகிறார் எனும் வகையில் அவருடைய எழுத்து too ‘Western’ எனும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பில் வட்டார வழக்கை கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்று. (பக்கம்-146) 'Mapillai, now we can go out for a while, can't we? ' என்ற வரி  'மாப்ள.. நாம போயிட்டு மெதுவா வரலாமில்ல, உனக்கொன்னும் அவசரமில்லயே' என்பதன் மொழிபெயர்ப்பு. இதில் மாப்ள என்பது வாசகர்களின் ஊகத்திற்கு விடப்படும்.  அதுபோல 'ஆனால், அன்றைக்குபோல மோசமான உறவு என்றும் நடந்ததில்லை'.  என்பது ஆங்கிலத்தில் 'The sex they had that night was the worst they had ever' என்றிருக்கிறது.  இது மேலோட்டமாக சரி எனத் தோன்றினாலும் அமெரிக்க வாசகர்களுக்கு இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.

இப்படி மாதொருபாகனின் மொழிபெயர்ப்பு நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போல இல்லாவிட்டாலும் உறுத்தாத எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.


தலைப்பு:One Part Woman
ஆசிரியர்:Perumal Murugan
பக்கங்கள்: 288
வெளியீடு: Grove Press, Black Cat (October 9, 2018)
ISBN: 0802128807
விலை:$10.87

Friday, September 6, 2019

தொல்காப்பியர் காலத்தில் இருந்த அடிமைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -5)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை 7, ஞாயிற்றுக் கிழமை காலையில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வு

2. ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும் - Dr. Mrs.S.Sridas

ஆய்வின் நோக்கம்-  மேலே குறிப்பிடப்பட்டுள்ள அகழாய்வில் இருந்து பண்டைய தமிழர் நாகரிகத்தை  பொருளாதாரம், சமூகம், அரசியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தல்

தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகம் குறித்து அறிய உதவும் மூன்று
முக்கிய தொல்லியல் களங்கள் குறித்து பேசினார்கள்.

1. ஆதிச்சநல்லூர்- இது தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது.

2. பொருந்தல்-  இது கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள சிறிய ஊர்.

3. கீழடி - மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர்கலாச்சாரத்தை வெளிக்கொணர்கிறது. சிகாகோவில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் மையக்கருத்தே
” கீழடி நம் தாய் மடி”  என்பதாகும்.

விழா அரங்கில் கீழடி தொன்மைக்கு வலு சேர்க்கும் வகையில் பல படிங்களையும், ஆவணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். சில புகைப்படங்கள் இங்கே.

அமர்வில் பகிரப்பட்ட சில தகவல்கள் :

வாணிபத்தை உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் எனப் பிரித்து கி.மு 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.


அப்போதைய முக்கியமான துறைமுகங்கள்- முசிறி, கொற்கை,  பட்டினம் (மாமல்லபுரம்), காவிரிப்பூம்பட்டினம். அவற்றுக்கும் மேலை நாடுகளுக்கும் கடல் வழி இருந்த தொடர்புகள்.

பண்டைய புகழ்பெற்ற வணிக நகரங்கள் - காஞ்சி, கடல்மல்லை, அரிக்கமேடு, தகடூர், செங்கம், கொடுமணல்,மதுரை, அழகன்குளம்.




தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் அடிமைகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது கேள்விப்படாத புதிய தகவலாக இருந்தது. அதற்குச் சங்ககால இலக்கியத்தரவுகளும் இருக்கிறதாம்.

இதற்கு ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவரின் மண்டைஓடு வலுசேர்க்கும் என நினைக்கிறேன்.

அதுபோல  ஆதிச்சநல்லூர், பொருந்தல்
அகழ் ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட மக்கிய நெல்
ஆதாரம் இப்போது இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுபோல மண்பாண்டங்களில் உள்ள பிராமி எழுத்துகள் தமிழின் தொன்மையைக் காட்டுகிறது.







மக்கள் வாழ்விடம் பற்றிய புரிதல்கள்









பொருந்தல் குறித்து..








"தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை " - அடுத்த பதிவில் (6)

ஹரிக்கேன் டோரியன்

ஹரிக்கேன் டோரியனுக்கு பிறகு முகநூல் உள்பெட்டிக்கு வந்து அன்போடு நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நாங்கள் குடும்பத்தோடு நலமாக இருக்கிறோம்.  ஆமாம், இந்த ஆண்டு ஃபிளாரிடா தப்பித்தது.

ஆனால், ஹரிக்கேன் டோரியன் (Dorian) அசுரபலத்தோடு அட்லாண்டிக்கின் பஹாமாஸ் தீவைத் தாக்கி இருக்கிறது. கேட்டகிரி- ஐந்து ( >250 கி.மீ)
வேகத்தோடு கரையைக் கடந்த பேய் காற்று  பலத்த உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலாவை நம்பி இருக்கும் அந்தத் தீவிற்க்கு இது பேரிடியாக இருக்கும். மக்கள் உணவு,குடிநீர் போதிய மருத்துவ வசதி இன்றி தவிக்கிறார்களாம்.

அதிஷ்டவசமாக அங்கிருந்து  ஃபிளாரிடாவுக்குள் நுழையாமல் டோரியன்
கடல்வழியாகவே அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையோர மாநிலங்களை நோக்கி  இப்போது நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஹரிக்கேன் நேரடியாக  ஃபிளாரிடாவுக்குள் சூராவளியாக நுழையா விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை  இருந்தது.
கடற்கரையோரங்களில் புயல்காற்றின் வேகத்தையும் எங்களால் உணர

முடிந்தது.  முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்ததால் பெரிய குழப்பமில்லாமல் இருந்தது.

மழையில் நனைந்தபடியே திங்கள் கிழமை குடும்பத்தோடு கடற்கரைக்கு போய் பார்த்தோம்.  இதுவரைப் பார்த்திராத ஆக்ரோசமான சீற்றத்தோடு கடல் அலைகள் பொங்கி உயர்ந்து எழுந்தன.  வெள்ளை வெளேரேன உயர்ந்த அந்த அலைகளின் உயரம் பதினைந்து இருபது அடிக்கு குறைவில்லாமல் இருக்கும்.

புயலால் மின்சாரம் இழந்த 1 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிக்கு கடந்த  இரண்டு நாட்களாக
தொழில்நுட்ப உதவி செய்துகொண்டிருந்தேன். அடுத்த  ஹரிக்கேன் சீசன் வரும் வரை நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறேன். இங்கு ஹரிக்கேன் சீசன் ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை.

படங்கள்- நன்றி இணையம்

Friday, August 30, 2019

திருநெல்வேலி திருடர்கள்

திருநெல்வேலி அருகே முதியவர்கள் இருவர் திருடர்களை  விரட்டயடிக்கும் வீடியோவை பல நண்பர்கள் பகிர்ந்திருந்தனர்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வீரத்தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன என்பதையும் கேள்விப்பட்டேன்.

இப்படி ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தீரத்தோடு போராடி ஜெயித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால், உணர்ச்சி வேகத்தில் அவர்களைப் பாராட்டும் அதே வேளையில் இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால்  இருக்கும் ஆபத்து பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் நிதாமாக பேசுவோம். உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள்  எதிர்பாராமல்  எந்தவொரு அவகாசமும் இல்லாமல் நடப்பவை.  யோசிக்க
போதிய நேரம் கிடையாது. அதனால் பெரும்பான்மையானவர்களுக்கு அந்த பதற்றத்தில் என்ன செய்வது, எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பிடிபடாது. அந்தப் பதற்றத்தையும் குழப்பத்தையும் பயன்படுத்தியே  முன் அனுபவம் உள்ள திருடர்கள்  நினைத்ததை முடித்துக்கொள்வார்கள். அந்தச் சமயங்களில் உடமையாளர்கள் ஒத்துழைக்காமல் தாக்க முற்பட்டாலோ இல்லை பிடிக்க முற்பட்டாலோ அவர்கள்  கொலை கூட செய்யக் தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இப்படி கொஞ்சம் மாற்றி யோசித்து பார்க்கலாமே.  திருட வந்தவர்களுக்கும் உடமையாளர்களுக்கும் நடந்த சண்டையை ஒருமுறை அதில்  ஒருவர்  முதியவரின் பின்னால் வந்து  கழுத்தை பலங்கொண்ட மட்டும் இறுக்குகிறார். மற்றோருவர் பெண்மணியிடம்  ஆக்ரோசமாக அருவாளை வீசுகிறார். இந்தப்போராட்டத்தில் யாரேனும் ஒருவர் படுகாயமடைந்திருந்தால் இல்லை நடக்கக்கூடாதது நடந்திருந்தால் என்ன சொல்லி இருப்போம் ? "எதுக்கு இந்த வேண்டாத வேலை, போனா போகுது காசு தானே, போனா சம்பாரிச்சுகலாமே" என்றுதானே ?. இல்லை திருடனே கொல்லப்பட்டிருந்தால். இன்றைய சூழலே சுத்தமாக மாறி இருந்திருக்குமே ? அந்த வீடியோவை சகஜமாக வெளியாக அனுமதித்திருப்பார்களா ?  இல்லை தற்காப்புக்காக செய்தோம் என உடமையாளர்கள் நிம்மதியாக  வீட்டில் இருந்துவிட முடியுமா  என்ன ? அந்த அளவுக்கு குடிமக்களுக்கு அனுசரணையான சட்டதிட்டங்கள் நம்மிடம் இன்று இருக்கின்றனவா என்ன ?

அதனால், உடமைகள் முக்கியம்தான் அதைவிட பாதுகாப்பு அதிமுக்கியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தற்காப்பு  எனும் பெயரில் யாரும்   சாகச செயலில் இறங்காமல் இருப்பதே நல்லது.

அரசு வீரத்தம்பதியினருக்கு விருது வழங்கும் அதே வேகத்தை ஏன் அதைவிட கூடுதல் வேகத்தை இதுபோன்ற சமூகவிரோதிகளைப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதில் காட்டவேண்டும்.  இதுபோல நேற்று சென்னையில் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைத் 
பறித்து சென்றவனைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். காரணம் கேட்டால் "காதலியின் பரிட்சைக்கு பணம் காட்ட காசில்லை" என்றானாம்.
அது எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை.  ஆனால், பெருகிவரும் வழிப்பறி,  திருட்டு கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுக்கு குடி, போதை, சமூக ஏற்றத் தாழ்வு, வேலைவாய்ப்பின்மை என பலகாரணங்களைச் சொல்கிறார்கள் . உண்மை காரணங்களைக் கண்டுபிடித்து சீர் செய்யவேண்டியது அரசின் கடமை.

உதாரணமாக தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சமூகவிரோத வழக்குகள் எத்தனை. அது முந்தைய பத்தாண்டுகளைவிட எத்தனை மடங்கு அதிகம் போன்ற உண்மை  தரவுகளை வெளிப்படையாக
தவறில்லாமல் வெளியிடவேண்டும். அதை நீண்டகால நோக்கில்  களைய என்ன வழி என்பதையும் யோசிக்கவேண்டும். அதை விடுத்து வெகுஜன மக்களைத் கையில் தடி எடுக்கச் சொன்னால் அது காலப் போக்கில் பல புதிய பிரச்சனைகளுக்கு  வழிவகுத்துவிடும். அது  அனுமனின் வாலில் வைத்த தீ போல மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

Wednesday, August 21, 2019

மதுரையில் ஓடிய கடல் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -4)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை-7 ஞாயிற்றுக் கிழமை 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்
இறுதி நாளாக இருந்தாலும். ஒரு விதத்தில் பிரகாசமான நாளாக இருந்தது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அமெரிக்கப் பேரவை விழா, சிகாகோ தமிழ்ச்சங்க பொன்விழா, தொழிற் முனைவோர் கூட்டமைப்பு
என கோலகலமாக அரங்கங்களில் களைகட்டியிருந்த மக்கள் கூட்டம்
அன்று குறைந்து தமிழ் அறிஞர்களுக்கு பூரணமாக வழிவிட்டிருந்தது.

அதுபோல மற்ற நாட்களைப் போல உணவுக்காக நீண்ட வரிசையில்
காத்திருக்க வேண்டிய நெருக்கடியும் அன்று இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக காலை உணவு நேரம்
தமிழகத்தில் இருந்து வந்த பல விருந்தினர்களுடன் நெருக்கடி இன்றி
உரையாட வாய்ப்பாக இருந்தது. பேராசிரியர் ஞானசம்பந்தம், மருத்தவர் சிவராமன், எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான லேனா தமிழ்வாணன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் சல்மா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரன் பலரைச் சந்தித்து உரையாட முடிந்தது.

காலை அமர்வுகள் 8:30 மணி முதல் 11:45 மணி வரை ஏற்பாடாகி இருந்தன. அந்த அமர்வுகளில் மொத்தமாக 17 ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.  இணை அமர்வு எனும் நேர நெருக்கடி இருந்ததால் முன்பே திட்டமிட்டு விருப்பமான சில  ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஆய்வரங்குகள் அடுத்தடுத்து இருந்ததால் பார்வையாளர்கள் தயக்கமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளுக்குச் சென்று விருப்பமானவற்றைத் தேர்தேடுத்தார்கள். காலையில் நான் கலந்து கொண்ட ஆய்வரங்கங்கள் புகைப்படங்களுடன்..

1. "Unfurling the mysteries behind ancient port city Poompuhar and understanding the socio-cultural evolution of the Tamils" -  Dr. SM. Ramasamy / Dr. Saravanvel

ஆய்வின் நோக்கம்-  பண்டைய துறைமுக நகரமான பூம்பூகாருக்குப் பின் உள்ள மர்மங்களை அவிழ்த்து, தமிழர்களின் சமூக-கலாச்சார பரிணாமத்தைப் புரிந்துகொள்வது.

முதலில் கடல்கோள் (கடல் நீர்மட்ட உயர்வு) நிகழ்வால் இன்றுவரை  பூம்புகாரின் உண்மையான வயதைக் கணக்கிடுவது மர்மமாகவே தொடர்வதாக சொன்னவர்கள்.
பிறகு பழைய புகார் இன்றைய பூம்புகாரில் இருந்து  தள்ளி 30 கீ.மீ தூரத்தில்
கடலுக்குள் இருப்பதாக பல தரவுகளை முன்வைத்தனர். பிறகு பூம்புகார் குறித்த இலக்கியச் சான்றுகளைத் தாண்டி அறிவியல் பூர்வமான
சான்றுகளைத் தேடி கடலுக்கடியில் திட்டமிடப்பட்டுள்ள, நடைபெறும்  ஆராய்ச்சி பற்றியும் விளக்கினார்கள். அதுபோல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்டைய மதுரையில் கடல் ஓடியது. ஒரு காலத்தில் காவேரி சென்னை வரைப் பாய்ந்தது என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிட்டார்கள்.

முக்கியமாக பூம்பூகாரைக் கண்டடைவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பூகோள மாற்றங்களை மிகச் சரியாக கணிப்பது அவசியம் எனும் கருத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் தமிழர்களின் அடையாளம் சிலப்பதிகாரம், பத்தினி தெய்வம் கண்ணகி என்றெல்லாம் பெருமை கொள்ளும் நாம் இதுவரை ஏனோ முறையான அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளை (for physical evidence) மேற்கொள்ளாமல் இருப்பதை நினைத்து நாம் ஆதங்கப்படுவதைத் தவிர வேறுவழி இல்லை.







ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சாற்றுகள் குறித்து அடுத்த பதிவில்...

Tuesday, August 13, 2019

அமெரிக்கத் தமிழ் பண்பலையில் நேர்காணல்

அமெரிக்கத் தமிழ் பண்பலையின் (US Tamil FM ) வானோலிக்கு தந்த நேர்காணல் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பேசுவது இன்னொரு கலை.   இரண்டுக்கும் முறையாக பயிற்சி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எழுத்தும் பேச்சும் இரண்டும் இரு வேறு உலகங்களாக இருக்கின்றன.
எழுத்தில், சிந்தித்து பல மணிநேரங்கள் மெனக்கெட்டு மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிய கட்டுரையைப் பேச்சில் எளிதாக 5 நிமிடங்களில் கேட்பவர்களுக்கு கடத்திவிட முடிகிறது.   எழுத்தில் சொற்களின் தேர்வு, நடை என்றால் பேச்சில் குரலும், போதிய இடைவெளி விடுவதும் சேர்ந்து கொள்கிறது. ஆனால், எழுத்தில் இருக்கும் கட்டட்ற சுதந்திரம் பேச்சில் இல்லை. குறிப்பாக பதற்றம். சொல்லவந்த விசயம் சரியாக சொல்லப்பட்டதா கேட்பவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்பட்டதா என எழும் அந்த சந்தேகம் இயல்பானதே.

பேச்சில் இருந்துதான் எழுத்து தோன்றியிருக்க வாய்ப்பிருந்தாலும் எழுத்தில் கேலோச்சிய ஒரு சில எழுத்தாளர்களே மேடைப் பேச்சிலும்  பரிமளித்திருக்கிறார்கள். ஜெயகாந்தன், சுஜாதா பேசிக் கேட்டவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அதற்கு மொழி கூட ஒருவித தடையாக இருந்திருக்கலாம். கொஞ்சம்  இதில் உள்ளே நுழைந்து பார்த்தால் எழுதுவதும் பேசுவதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருவதாக சொல்கிறார்கள். ஒரு ஆய்வில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட சிலரிடம் ஒருவன் ஓடும் படத்தைக் காட்டியபோது "அவன் ஓடுகிறான்" எனச் சரியாக சொன்னவர்கள் எழுதும் போது "அவன் ஓடுகிறது" என தவறாக எழுதினார்களாம்.

நாம் விசயத்துக்கு  வருவோம். வானொலி நிகழ்ச்சி கேள்வி பதில் என்பதனால்  மேடைப் பேச்சு போல் பெரிய முன் தயாரிப்புகள் எதும் தேவைப்படவில்லை. பதில் இயல்பாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் யோசித்து வைத்திருந்தேன். மற்றபடி எதிர்முனையில் இருந்த தொகுப்பாளர் மனோ எஃப்எம் பாணியில் சரளமாக பேசினார். நான் சிக்கலில்லாத எளிய பதிலை யோசித்து பேசியதாகவே நினைக்கிறேன். நீங்களே கேளுங்கள்.

நேர்காணல் ஒலிப்பதிவின் இணைப்பு:


(https://youtu.be/ZLSp0mR9OBA)
நன்றி  R.J.மனோ

Saturday, August 10, 2019

தமிழில் மெய்யியல் கொள்கைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -3)

முந்தைய பதிவு.

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளைப் பார்ப்பதற்கு முன்பு சில தகவல்கள்.

மாநாட்டிற்கென உலகம் முழுவதிலும் இருந்து பல
பல்கலைக்கழகங்கள், தமிழ்ஆர்வலர்கள் என பலநூறு ஆய்வுக்கட்டுரைகள் வந்ததாக சொன்னார்கள்.

அதன்படி, "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்." எனும் கருப்பொருளில் "ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்" (ABSTRACT), "ஆராய்ச்சி விரிவுக் கட்டுரைகளையும்" (RESEARCH PAPER)
கேட்டிருந்தார்கள். அப்படி வந்த பலநூறு கட்டுரைகளில் தேர்தேடுக்கப்பட்ட சில கட்டுரை ஆசிரியர்களுக்கு மட்டுமே சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாம். அதுபோல தேர்தேடுக்கப்பட்ட சில கட்டுரைகளை "ஆய்வுக்கட்டுரைகள்-வரைவு " எனும் தலைப்பில் ஆய்வரங்க கையேட்டில்
வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி அந்தக் கட்டுரைகளைத் தேர்வுசெய்தார்கள் ?, எதன் அடிப்படையில்? அதன் வெளிப்படைத் தன்மை என்ன? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.  மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் மன்றத்தை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

இங்கே சூலை 6,7-ம் தேதிகளுக்கான நிகழ்ச்சி நிரலின் இணையதளமுகவரியைத் தருகிறேன். https://www.icsts10.org/wp-content/uploads/2019/06/World_Tamil_Conference_Schedule.pdf

கூடவே சூலை-6, சனிக்கிழமை அன்று மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட கட்டுரைகளை இங்கே  படங்களாகவும் இணைத்திருக்கிறேன். (ஆய்வரங்க கையேட்டில் இருந்து)



அன்று நான் ஆர்வமாக கலந்து கொள்ள நினைத்த பல நிகழ்வுகள் இணை அமர்வாக இருந்ததால்  1. "Evolution of the Tamil Script : An Archaeological Perspective"2. " ஆசீவகம் என்னும் அறிவியல்" என இரண்டு அமர்வுகளில் மட்டுமே பங்கேற்க முடிந்தது.


ஆய்வரங்கில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் சில:

ஒவ்வொரு  அமர்விலும் ஆய்வாளருக்கு குறிப்பிட்ட காலகெடு வழங்கப்படுகிறது.  அந்த காலகெடுவுக்குள் அவர் தனது ஆய்வை
முன்வைத்து பேசியபின்,  அமர்வின் தலைவர் அதில் திருத்தங்கள் இருந்தால் சொல்கிறார்.
சமயங்களில் அதுதொடர்பான சில கேள்விகளையும் எழுப்புகிறார். இறுதியாக பார்வையாளர்களும் தங்கள் கேள்விகளை  ஆய்வாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பி விளக்கம் பெறலாம்.

உண்மையில் அவசரகதியில் என்னால் மேலே சொன்ன இரண்டு நிகழ்வுகளையும் கூட ஆழமாக கருத்தூன்றி முழுமையாக கவனிக்க இயலவில்லை. மேலோட்டமாக எடுத்த எனது  குறிப்பில் இருந்து சில தகவல்கள்:


திருக்குறளைத் தொடக்கத்தில் "முப்பால்" என்றே அழைத்தார்கள். குறள் குறித்து எழுதப்பட்ட  "திருவள்ளுவ மாலை " எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு (50 பாடல்கள்) ஆகும்.  இப்படி ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ  எல்லாப் புலவர்களும் முதலில் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.

மொழிக்கலப்பு- சங்க இலக்கியத்தில் வட சொற்கள் 2% மும்,  திருவாசகத்தில் 8% மும்  கலந்திருக்கின்றன.  அவை தமிழில் இருந்து அங்கே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறதாம்.

ஆசீவகம் என்பது ஒரு தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கத்தையும் குறிக்கிறது. அதைப் பின்பற்றுபவர்களை ஆசீவகர்கள் என்கிறார்கள். தமிழ் மெய்யியல் கோட்பாடு- கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ கோட்பாடு அதன் பகுப்பாய்வு போன்ற தரவுகளும் பேசப்பட்டன.




மேலே உள்ள நிகழ்ச்சி நிரல்படி சனிக் கிழமை அன்று மட்டும் மொத்தமாக  32(15+17) கட்டுரைகள் அறிமுகமாகி இருக்கின்றன.  அன்று பல அமர்வுகளில் திருக்குறள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டாலும், இணை அமர்வு எனும் தொல்லையால் என்னால் ஓர் அமர்வில் கூட முழுமையாகக் கலந்துகொள்ள இயலவில்லை எனும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தமிழ்மன்றம் இந்த நிகழ்வுகளை காணோளி மூலமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அவை  அனைவருக்கும் பயன்படும் வகையில்  கூடிய விரைவில் பொதுவில் பகிர்வார்கள் என நம்புவோம்.