Saturday, July 21, 2018

தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம் - மலையாளம்

நான் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதில்லை. அதற்குத்
தமிழில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நான் படம் பார்ப்பதும்  மிக மிகக் குறைவு. இந்தமுறை விமானப் பயணத்தில் இரண்டு படங்களைப் பார்த்தேன். அவை இரண்டுமே மலையாளப் படங்கள்.

முதல்படம்  "தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம்",
(Thondimuthalum Driksakshiyum) இரண்டாவது   "வர்ணத்திள் ஆஷ்ன்கா" (Varnyathil Aashanka). மூழுநீள நகைச்சுவை திரைப்படம். அதைப் பார்க்கலாம்.  மற்றபடி படத்தில் சிறப்பாக ஒன்றுமில்லை.

ஆனால் "தொண்டிமுத்துல டிரிக்ஷாக்ஷியம்" (தமிழில்- "திருட்டுப்பொருளும் சாட்சியும்") படத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல நினைத்தேன். பிறகு இணையத்தில் அந்தப்படத்தைப் பற்றி துழாவியபோதும் அது பல விருதுகளைப் பெற்றிருப்பதாக தெரிகிறது. ஆச்சர்யப்படவில்லை.

கதை இதுதான்.  புதிதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி பஸ்சில் பயணிக்கிறது.  பஸ்சில் எதிர்பாராதவிதமாக அந்த இளம்பெண்ணின்  தங்கச்சங்கிலி  திருடுபோகிறது. அவள் கத்தி கூப்பாடு போடுகிறாள்.  உடனே திருடனை மடக்கிப் பிடித்த பயணிகள்  பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விடுகிறார்கள்.  இப்படி சங்கிலியைப் பறிகொடுத்த ஜோடி போலீஸ் உதவியுடன் அதை  மீட்டார்களா ? என்பதே படத்தின் கதை.

இந்த மிக எளிய கதையை எந்தவித சினிமாத்தனங்களும் இல்லாமல்
மலையாளப் படங்களுக்கே உரிய மிக இயல்பான திரைக்கதையில்
அருமையாக சொல்லியிருக்கிறார்கள். நடிகர்களின் தேர்வும் அற்புதமாக வந்திருக்கிறது. கூடவே கேரளாவின் செழிப்பையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் சூரஜ் வெஞ்சஞ்சமுடு
மற்றும்  ஃபஹத் பாசிலுக்கும் (இயக்குநர் பாசிலின் மகன்) மிகச்சிறப்பான
எதிர்காலம் இருப்பதாக கணிக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

#தொண்டிமுத்துலம்_டிரிக்ஷாக்ஷியம்

Sunday, July 15, 2018

SSS - கோவையில் ஓர் அதிசயம்

இந்த முறை கோயம்புத்தூரில் இருக்கும் "சாந்தி சமூக சேவைகள்" (SSS) எனும் அறக்கட்டளை பற்றி தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சிங்காநல்லூரில் அவர்கள் இயங்கும் இடம் நான் தங்கியிருந்த உறவினர் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் தான். ஒரு நாள் மாலை அவருடன் போயிருந்தேன்.

மிகப்பெரிய வளாகம். அங்கேயே  மருத்துவமனை, 24 மணி நேர மருந்துக்கடை (வெளி விலையை விட 20%  குறைவாக)அதனுடன் குருதி வங்கி, மருத்துவ லேப்கள், கண் சிகிச்சை மையம் போன்ற பல மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில்  இருக்கின்றன. அத்தனையும் அனைவருக்கும்  லாப நோக்கின்றி மிக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அங்கே முழு உடல் பரிசோதனையை
1500 ரூபாய்க்கு முடித்துவிடலாம் என உறவினர் சொன்னதாக நினைவு.

அங்கேயே மருத்துவ சேவையோடு உணவு விடுதி (கேண்டீன்) வசதியும் இருக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 9;30 வரை இயங்கும் அந்தக் கேண்டினில் உணவு தரமானதாக, சகாயமான விலையில் கிடைக்கிறது. ஒருவருக்கான முழுச் சாப்பாடு 25 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதே உணவு வெளியே  120 ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கும்.

அதனால் எப்போழுதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இப்படி தினமும்   பல ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறினாலும்
கேண்டினின் பராமரிப்பு அபாரம். மற்ற வணிக நிறுவனங்களை விட
மிக சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள். சர்வதேச தரம்
என தயங்காமல் சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் வளாகத்துக்குள் பெட்ரோல் பங்குடன், பிள்ளைகள் விளையாட காற்றோட்டமான ஒரு  பூங்காவையும் அமைத்திருக்கிறார்கள்.

கோவை போன்ற பெருநகரத்தில் அதுவும் ஒரு முக்கிய இடத்தில் இதுபோலோரு சேவை அனைவருக்கும் கிடைப்பது அதிசயம் மிக அபூர்வம்.

உண்மையில்  இதெல்லாம் அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஒரு அறக்கட்டளை முன்மாதிரியாக  இங்கே செய்து காட்டிக் கொண்டிருக்கிறது.

கோயில்களிலேயே கொள்ளை அடிக்கும் இந்தக் காலத்தில்  "மனிதகுலத்திற்கான சேவை கடவுளுக்கு சேவை " என்ற குறிக்கோளுடன் செயல்படும் இந்த SSS அமைப்பின் நிறுவனருக்கு எனது  வாழ்த்துகளும் மனப்பூர்வமான நன்றிகளும்.

அடுத்த முறை கோவை போகும் போது வாய்ப்பிருந்தால் ஒருமுறை போய் வாருங்கள். தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

அவர்களுடைய இணையமுகவரி -  http://www.shanthisocialservices.org/
படங்கள்- நன்றி இணையம்.

Sunday, July 8, 2018

தமிழ் - நமது அதிகாரம், நமது உரிமை, நமது பெருமை

நண்பர்களுக்கு,

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை-யின் (பெட்னா, Federation of Tamil Sangams of North America) 31வது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலத்தின் ப்ரிஸ்க்கோ நகரில் ‘மரபு, மகளிர், மழலை’  (ஜூன்-29, 30, ஜூலை 1) எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

தமிழ் விழா மலரில்  "தமிழ் - நமது அதிகாரம், உரிமை, பெருமை" எனும் தலைப்பில் வெளியான எனது 
கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன்.  நன்றி!!

-ஆரூர் பாஸ்கர்.
ஜூலை, 8 , 2018

1.

2.
3.

5.

Tuesday, July 3, 2018

தமிழ்நாடு - ஒன்னுக்கும் உதவாத ஊரா ?

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ...

****
கிடைத்த 20 நாள் விடுமுறையில் தமிழ்நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக பயணித்துவிட்டு ஃபிளாரிடா திரும்பியிருக்கிறேன்.

குடும்பத்தோடு இரயில், கார், பஸ் என முற்றிலுமாக  தரைவழி பயணம்.
முக்கியமாக  ஊர் சுற்றிப்பார்ப்பது அப்படியே வழியில் முடிந்தால்
உறவினர்களையும்,  நண்பர்களையும் சந்திப்பது முக்கிய நோக்கமாக இருந்தது.

பயணம் மொத்தமாக  எட்டு நாள்கள். சராசரியாக ஒவ்வொரு ஊரிலும்  ஒர் இரவு தங்கியிருக்கிறோம்.

முதலில் சென்னையிலிருந்து கிளம்பி தென்கோடியான கன்னியாக்குமரியைத் தொட்டு அங்கிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி, தென்காசி வழியாக உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூரைச் சுற்றிவிட்டு  பிறகு கடைசியாக சொந்த ஊரான திருவாரூர் போய் சேர்ந்தோம்.

தனிப்பட்ட முறையில் இந்தப் பயணம் தமிழ்நாட்டின் மாறுபட்ட நில அமைப்புகளையும் மனிதர்களையும், சூழலையும் ஒரு பருந்து பார்வையில் அறிந்துகொள்ள எனக்கு நல்லதொரு இருந்தது.

நாங்கள் போயிருந்தது ஜூன் மாதத்தின் தொடக்கம் என்பதால் தென் மேற்கு பருவமழை தொடங்கியிருந்த அருமையான நேரம். நாஞ்சில் நாடு -

எப்போதும் பொழியத் தயாராக மழை நீரைச் சுமந்தபடித்  திரிந்து கொண்டிருக்கும் மேகங்களுடன் ரம்யமாக இருந்தது.   குற்றாலம் -
மனதைக் குளிர வைக்கும் தென்றல் காற்றுடன் சாரல் மழை பொழிந்து
திகைப்பூட்டியது.                              கொங்கு நாடு - குளிர்ச்சியான மலைகள்,  தென்னந்தோப்புகள் என இயற்கை எழில் கொஞ்சியதால்  தமிழகத்தை ஒரு செழிப்பான மாநிலமாக உணர்ந்தேன்.

அந்த வகையில்  இது  முன்பு எப்போதும் இல்லாத இல்லாத ஒரு மாறுபட்ட பயணமாக இருந்தது. தமிழ்நாட்டின் எனது  சமீபத்திய பயணங்களில்  இதை முக்கியமாக நினைக்கிறேன். உண்மையில் "என்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?" எனும் திரைப்பாடலை ஆழமாக மனப்பூர்வமாக உணர்ந்தத் தருணங்கள் அவை.
நான் ஒரு செழுமையான தேசத்தின் பிரதிநிதி என்றும் பெருமை கொண்ட நாட்கள் அவை.

அதே சமயத்தில் காவிரி பாயும் டெல்டா பகுதி பாலைவனமாக வறண்டு கிடைக்கிறது. அதைப் பற்றியும் தமிழகத்தில் இன்றையக் கல்வி  வேலைவாய்ப்பு போன்ற மற்ற சில விசயங்களையும் நாம் தனியாகப் பேசவேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு விசயம், 'சுத்த வேஸ்ட்,  ஒன்னுக்கும் உதவாத ஊரு ' என்றெல்லாம் தமிழ்நாட்டைச் சபிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறையேனும் மாநிலத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு பேசுட்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.

#தமிழ்நாடு2018