Sunday, April 21, 2019

ஓத்தெல்லோ

நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவனில்லை. அதனால்  வில்லியம் சேக்ஸ்பியரின் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும் வாய்ப்பு
இதுவரைக் கிடைக்கவில்லை.

இன்று அப்படி ஆர்வத்தோடு அவர்படைப்புகளை வாசிக்க நினைப்பவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல் மொழி என்றே நினைக்கிறேன். ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் பழைமையான அந்தப்  படைப்புகளை நேரடியாக அவருடைய மொழியில் வாசித்து புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமமே.  சமயங்களில் பேராசிரியர்களின் துணைகூட தேவைப்படலாம்.  ஆனாலும், இன்றுவரை ஆங்கிலத்தின் மிகப் பெரும் மொழி ஆளுமையாகவும் ஆதர்சனமாக சேக்ஸ்பியர்  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவருடைய சானட் எனும் பல செய்யுள்களும் ரோமியோ ஜூலியட், மக்பெத், ஜூலியஸ் சீசர் போன்ற புகழ்பெற்ற பல நாடகங்களும் இன்றும் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகின்றன.

சமீபத்தில் அவருடைய ஒத்தெல்லோ நாடகத்தை இன்றைய பொழிப்புரையோடு சேர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  முன்னிலை பாத்திரங்களாக கறுப்பின மூர் படைத் தளபதி ஒத்தெல்லோவும் அவனது
அழகான இளம் மனைவியாக டெஸ்டிமோனாவும் வருகிறார்கள்.
மேலோட்டமாக பார்த்தால் இனச்சண்டை, நிறச்சண்டைகள் நிறைந்த ஒரு காதல்கதை.  அதில் பொறாமையும் பெண் பித்தும்  ஒருவனை எவ்வாறு அழித்து, மற்றவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கும்  என்பதை இயாகோ
எனும் ஒரு சிக்கலான பாத்திரப் படைப்பின் மூலம் மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார்.  அதுபோல அழகான குடும்பவாழ்வில் மூன்றாம் மனிதனால் கிளம்பப்படும் சந்தேகப்புயல் எப்படி ஒருவனுடைய வாழ்வை  சிதைத்து சின்னாபின்னப்படுத்துகிறது என்பதையும் ஆழமாக சொல்லியிருக்கிறார்.

நாயகி டெஸ்டிமோனாவின் வழியாக கணவனால் வெறுத்து ஒதுக்கப்படும் பெண்களின் மன ஓட்டத்தையும் உணர்வுப்பூர்வமாக கடத்தியிருக்கிறார்.
மற்றபடி அந்த நூற்றாண்டுக்கே உரித்தான பெண்ண்டிமைத் தனமான கண்ணோட்டத்துடன் கூடிய வசனங்களைக் கடந்து பார்த்தால் பல மேற்கோள்கள் சிந்திக்கத் தூண்டுபவை. என்னைக் கவர்ந்த சில

"Unkindness is powerful. His unkindness may kill me, but it will never destroy my love " 

"என்னுடைய நன்மதிப்பை  நீ  திருடினால் செல்வந்தன் ஆவதில்லை,
உண்மையில்  அதனால்  உனக்கு எதுவுமே கிடைக்கப்போவது இல்லை.
ஆனால், அது என்னைப் பரம ஏழை ஆக்குகிறது."

"Guilty speak volumes even when they are silent."

"The winner's always got the last laugh, hasn't he ?."

குடும்பப் பெண்களை விலைமகளாக சித்திரிக்கும் இயாகோக்குளும் அதைக் கேட்டு மனைவியைக் கொலைசெய்யத் துணியும் ஒத்தெல்லோக்களும்  இருக்கும் வரை சேக்ஸ்பியரின்
"ஒத்தெல்லோ" பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

படங்கள்- நன்றி, இணையம்


Title - No Fear SHAKESPEARE (OTHELLO)
Publisher - A Barnes & Noble Publication

Tuesday, April 16, 2019

நாடாளுமன்ற தேர்தல் - 1989 vs 2019

எங்கள் தொகுதி திருவாரூர். நாகை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும்.  நினைவு தெரிந்தவரை அது மாறி மாறி வலது இடது என தொடர்ச்சியாக கம்யூனிஸ்டு கட்சிகளின் கோட்டையாகவே இருந்து வந்தது.  அதனால் தேர்தலின் பேதெல்லாம் ஓட்டு "அருவா சுத்திக்கா ?, கதிர் அறுவாளுக்கா ?" என்பதே  பிரதான பேச்சாக இருக்கும். தேர்தல் வருகிறதென்றாலே ஊர் அமர்களப்பட்டுவிடும்.  திருவிழா போல கட்சிக்காரர்கள்  கோலாகலமாக கொண்டாடத் தயாராகிவிடுவார்கள். தேர்தலுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே போட்டிபோட்டு எல்லா தெருச் சுவர்களையும் வளைத்து பிடித்து வெள்ளையடித்து முன்பதிவு செய்வது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஜரூராக களத்தில் இறங்கிவிடுவார்கள். அப்போது சுவர் விளம்பங்களில்  "நாகை நாடாளுமன்ற தொகுதி (தனி)" என்றெல்லாம் எழுதுவார்கள்.  தனித் தொகுதி என்றால்  என்ன எனும் புரிதல் கூட இல்லாத நாட்கள் அவை.

அன்று மக்களிடம் பிரச்சனையைக் கொண்டு செல்ல இன்றுபோல டீவிக்களோ, செல்போன்களோ இல்லாத கால கட்டம். டிவி என்றால்
அரசாங்கத்தின் தூர்தசன் தவிர வேறில்லை. கட்சிகள் பொதுக்கூட்டங்கள், நாளேடுகள், ரேடியோக்கள், சுவர் விளம்பரங்கள், பிட் நோட்டிசுகள், தெருமுனை பிரச்சாரங்களின் வழியாகவே மக்களை நேரடியாக சந்தித்தனர்.

அது தொடர்பான ஒரு சம்பவம் (இதில் அரசியல் எதுவும் இல்லை).  அது 1989 நாடாளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அப்போது தேசிய அளவில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், விடுதலைப் புலிகள்-அமைதி படை என மக்கள் அதிருப்தி அடைந்து தேர்தல்களம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்த காலகட்டம்.  அப்போது போபர்ஸ் ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல எதிர்கட்சிகள் ஒரு நூதன யுத்தியைக் கையாண்டனர்.

அவர்கள் செய்தது இதுதான். ஒரு சிறிய பனைமரத்தை வெட்டி பக்கவாட்டில் சற்று சாய்வாக நிறுத்தி இரண்டு புறத்திலும் கார் டயரை சக்கரம் போல வைத்து பக்காவாக பீரங்கியைப் போல செய்துவிட்டார்கள். அங்கே
அட்டகாசமாக ராஜூவின் போபர்ஸ் பீரங்கி தயார்.  அதை நகரின் முக்கிய வீதிகளிலும் தெரு முனைகளிலும் மக்கள் கண்களில் நன்றாக படும் வகையில் கொஞ்சம் உயரமாக பரண் அமைத்து நிறுத்தி வைத்துவிட்டார்கள். அப்படி விரைத்தபடி நின்றிருந்த அந்த பீரங்கிக் குழலின் முனையில் துணி சுற்றி எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் படி கொளுத்தியும் விட்டிருந்தார்கள்.  நாள் முழுக்க மக்கள் கண்களை உறுத்தும்படி தெருமுனையில் அன்று போபர்ஸ் பீரங்கி ஊழல் புகைந்துகொண்டிருந்தது.

அன்று  இப்படி தான் தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் 
தேர்தல் களத்தில் மக்களை அப்படித்தான் சந்தித்து சிந்திக்க வைக்க வேண்டியிருந்தது. இன்று காட்கள் மாறிவிட்டன.

இணையம், சமூக வலைதளங்கள், காணோலிகள், பல நூறு டிவிகள் என இன்றைய தொழி நுட்ப வளர்ச்சியால் ஒற்றைச் சொடுக்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை எளிதாக சென்று சேர்ந்துவிட முடிகிறது. அதனால்  இன்று எதிர்கட்சிகளும் ஊடகங்களும்  மத்திய, மாநில பிரச்சனைகளை, ஊழல் விவகாரங்களை மக்களுக்கு தொடர்ந்து எளிதாக கொண்டு சொல்ல முடிகிறது. மக்கள் மறந்தாலும் அவர்களால் பல பிரச்சனைகளைத் தொடர் விளம்பரங்கள் செய்து நினைவூட்டமுடிகிறது.

இன்று எப்படிதான்  அரசியல் கட்சிகள் எந்தமாதிரியான நூதன யுத்திகளைக் கையாண்டாலும் இறுதியில் ஓட்டு என்பதும் அதன் மூழம் வெற்றி,
ஆட்சியமைப்பது என்பதும் மக்கள் கையில் இல்லை விரலில்தான் இருக்கிறது.  மக்கள் மெளன புன்னகையோடு அரசியல் கட்சிகளின் இந்தக் கலாட்டாக்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த மெளனப் புன்னகையின் உண்மையான அர்த்தத்தை தேர்தல் முடிவு வந்தபின்பே நம்மால் சொல்ல முடியும். காத்திருப்போம்.

Tuesday, April 9, 2019

வனநாயகன் குறித்து-11

வாசகர் திருமதி. ரமணி பிரசாத் (Ramani Prasad) அவர்கள் 
முகநூலில் "வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து எழுதிய கதை விமர்சனம். 
நன்றி ரமணி பிரசாத் !!

/////

"வனநாயகன்" நான் நேற்று படித்து பரவசித்த புதினம்.இதனை எழுதியவர் என் முகநூல் நண்பர் திரு ஆரூர் பாஸ்கர்.திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்.தற்பொழுது அமெரிக்காவில் ஃபுளாரிடா மாநிலத்தில் சாஃப்ட் வேர் என்சிஜினியராக பணிபுரிகிறார்.நல்ல எழுத்தாளர்,கவிஞர்.தன்தாய்நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக்காதல் கொண்டவர்."சிறகுகள் கல்வி அறக்கட்டளை" என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்திவரும் பன்முகத்திறன் கொண்டவர்.


புதினத்தின் பெயரே வசீகரம். கதைக்களமும் அப்படியே.மலேசியா..அங்கு வேலைக்குப் போன திறமையுள்ள ஒரு சாஃப்ட் வேர் என்ஜினியர்...
கண்ணுக்குத்தெரியாத மனிதர்களால் தன்னைச் சுற்றி ஒரு வலை பின்னப்படு வதையும் ,தன்னை அந்த நாட்டைவிட்டுத்துரத்த நடக்கும் சதிகளையும் அறிந்து அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.பயங்கர திரில்லிங்..புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடிவதில்லை. நன்றி பாஸ்கர் சார்.இப்படிப்பட்ட எழுத்தாளர் என் நண்பர் என்பதில் பெருமையடைகிறேன்

///////

புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க:


Monday, April 8, 2019

அப்பெல்லாம் எப்படி தெரியுமா?

அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்..,  அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து  பெரியவர்கள்  தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.

அப்படி வாய்பேச்சில் கதைகதையாக சொல்பவர்களில்  சொற்பமானவர்களே அதை எழுதி ஆவணப்படுத்துவார்கள். அந்தவகையில் ஒரு புத்தகம் எனது கைக்கு வந்திருக்கிறது. 1960 களில் வளர்ந்த அவர்
தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் சுயசரிதை போல் எழுதியிருக்கிறார். பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
கல்யாணமாம் கல்யாணம் எனும் தலைப்பில் அந்த நாளையத் திருமண ஏற்பாடுகள், கலாட்டாக்கள், சடங்குகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.  அதில் ஆச்சர்யப்படும் பல  விசயங்கள் இருக்கின்றன. புத்தகத்தில் இருந்து...

"..அப்போதெல்லாம் கல்யாணத்துக்கு போகிறோம் என நினைத்தாலே வடை,பாயசம், அப்பளம் கூடிய சாப்பாடுதான் நினைவுக்கு வரும். அப்போது மாப்பிளைக்கு பெண் கிடைப்பது அரிது. அப்படியே பெண் கிடைத்தாலும் ஜாதக பொருத்தம் பார்த்து, பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்குவதற்கு
நடையாய் நடந்து காலும் வீங்கியது , செருப்பும் தேய்ந்தது என்பார்கள்.
பெண் வீட்டார் எப்போதும் முறுக்கோடு இருப்பார்கள்.ஏட்டிக்குப் போட்டியாகவே பேசுவார்கள். மாப்பிளை வீட்டார் பெண்ணுக்கு என்ன நகைபோடுவார்கள் என பேச்சுவார்த்தை நடக்கும். எவ்வளவு பணம் கொடுப்பர் எனக் கேட்பதும் உண்டு.  பேசிப்பேசி பெண் வீட்டாரின் சம்மதம் வாங்குவது பெரும்பாடாக இருக்கும்..."

திருமணத்திற்கு பெண்கள் தேடும் விசயத்தில் நடுவில் கொஞ்சநாள் நிலைமை மாறி இப்போது திரும்பவும் 1960களுக்கு திரும்புகிறோம் என நினைக்கிறேன்.

Tuesday, April 2, 2019

கீழடி நம் தாய் மடி

நண்பர்களுக்கு முன்பே சொன்னதுபோல அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த ஆண்டு ஜூலை 3,4,5,6 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.  இந்த மாநாட்டின் மையக் கருத்து “கீழடி நம் தாய் மடி” என்பதாகும்.

மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.




Monday, April 1, 2019

வனநாயகன் குறித்து-12

"வனநாயகன் உங்கள் உண்மை சம்பவமா? நாவலை  முழுவதும் வாசிச்சேன் பக்கங்கள் போனதே தெரியவில்லை" என உள்பெட்டியில் நேற்று ஒரு வாசக நண்பர் கேட்டிருந்தார்.  கூடவே வனநாயகன் தாக்கம் தனக்கு ஞாயிறு முழுவதும் இருந்தது,  கதை அமைப்பு மற்றும் எழுத்து சேர்ப்பு வாசிக்க
அருமையாக  இருந்தது என சிலாகித்தார்.

எனது "வனநாயகன்- மலேசிய நாட்கள்" 2016 டிசம்பரில்   கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது.  வெளியான கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக பல  கடிதங்கள், முகநூல் பதிவுகள்
வழியாக  வனநாயனுக்கு வாசகக நண்பர்கள் அளிக்கும் வரவேற்பு
உற்சாகமளிக்கிறது.  இப்படி என்னை எழுத்தால் அடையாளம் கண்டு பாசத்தோடு நெருங்கி கை குலுக்கும் எல்லா அன்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாசகன் ஒரு படைப்பை வாசிக்கும் போதும் வாசித்த பின்பும் ஏதோ ஒரு புள்ளியிலேனும் தன்னை படைப்பில் அடையாளம் காணும் போது அந்தப் படைப்பு வெற்றி பெற்றதாக சொல்வார்கள்.  அந்த வகையில் வனநாயகன் வாசகர்களின் நெஞ்சைக் கவர்ந்த வெற்றிப் படைப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து உற்சாகமளித்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !!


புத்தகத்தை இணையத்தில்- கிழக்கு பதிப்பகம் வழியாக: