Thursday, February 19, 2015

கவிஞர் பழநிபாரதியின் கையெழுத்து

கவிஞர் பழநிபாரதி அறிமுகம் தேவையில்லாத  உலக தமிழர்கள்
அனைவரும் அறிந்த  திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர்.

ஆயிரம் திரை பாடல்களைத் தாண்டி கடந்த இருபது வருடங்களாக
தரமான தன் படைப்புகளால் நம் இதயங்களில் குடி கொண்டவர்.
பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

இவரின் " காற்றின் கையெழுத்து "  கட்டுரைத்தொகுப்பை
முழுமையாக இன்றுதான் வாசித்து முடித்தேன்.

இந்த புத்தகம் குங்குமம் இதழில் அவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 52 கட்டுரைகளுடன் விகடன் பிரசுரத்‌தால் வெளிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தைப் பற்றி எழுதும் முன் எனக்கும் நூலாசிராயருக்குமான பரிட்சத்தை சொல்லி விடுவது நல்லது.

பழநிபாரதின்  அறிமுகம் நான் ரசித்த பல  திரைப்பாடல்களின் பாடலசிரியராக மட்டுமே. மற்றபடி இவருடைய பல கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருந்தாலும், நான் வாசிக்கும் அவரின் முதல் நூல் இதுவே.

ஆனால், முதல் அறிமுகத்திலேயே என்னிடத்தில் ஒரு நல்ல எழுத்தாளாராக
தாக்கத்தை ஏற்படுத்‌திவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கொஞ்சம் நேரம் கிடைத்தபோது, இவரைப் பற்றி கூகிலில் தோண்டினேன்.
பல அருமையான தகவல்கள் வந்து கொட்டின.

சந்தேகமின்றி, திரையுலகில் நீண்ட தமிழ் பாரம்பரியமுள்ள வெகு சிலரில் இவரும் ஒருவர். அவர் உணர்ச்சி பொங்க கவிதைகளை வாசிக்கும் அழகைக் கண்டு 'ஐ' என்று வியந்தேன். :)

இப்போ புத்தகத்தை பற்றி பார்ப்போம்.

தனது கட்டுரைகளில் உலகமயமாக்கல், மேற்கத்திய கலாச்சார தாக்கம்,
நடுத்தர வர்க்க நிலைமை , இயற்கை வளக் கொள்ளை என இன்றைய பல பற்றி எரியும் நிகழ்வுகளை கையில் எடுத்திருக்கிறார்.

நாம் சமூக அவலங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் அல்லது
ஒதுங்கி செல்கிறோம். ஆனால் பாரதியின் பெயர் கொண்ட கவிஞர் நெஞ்சம்
பொறுக்காமல் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கி எழுகிறார்.

இவர் எழுத்தின் வீச்சு அபாரம். சமூக அவலங்களை சாடும்போது தயங்காமல் தேவையான  தரவுகளையும் கூடவே தருகிறார்.

உதாரணமாக " இன்றைய தமிழரின் தாய் மொழி ஆங்கிலமா  ? " எனும் கட்டுரையில் திருமதி மிஷல் ஒபாமாவை மேற்கோள் காட்டுகின்றார்.
அதே சமயத்தில் மலையாள மொழி எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளையையும் மேற்கோள் காட்டுகின்றார்.

அதுபோல, கட்டுரைகளுடன் அருமையான கவிதைகளையும் இணைத்துள்ளது அழகு. அந்த கவிதைகளும் கட்டுரையைத் தாண்டி துருத்திக் கொண்டிருக்காமல் உயிரோட்டமாய் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
அனைவரின் மனநிலையையும் சரியாய் இந்த நூல் பிரதிபலிக்கிறது.

நமது சிறு வயதில் பார்த்துப்  பழகிய பக்கத்‌து வீட்டு அல்லது
எதிர் வீட்டு அண்ணன் தோழமையோடு சொல்வது போல இருக்கிறது.
இந்த அந்நியமற்றத்தன்மையே இந்த நூலின் முக்கியமான பலமாக கருதுகிறேன்.

புத்தகத்தை படித்து முடித்தபின் பழனி பாரதியை நம்மில் ஒருவராக,
தோழராக ஏற்றுக்கொள்ள எந்தவித தயக்கமும் இருக்கப்போவதில்லை.

இதில் குறை என்று தனியாக ஏதும் சொல்லத் தோன்றவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படித்து பாருங்களேன், கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள்!.

Wednesday, February 4, 2015

குமரப்பா அல்லது இந்திரா நூயி

உங்களின் முதல் நூலக அனுபவம் அல்லது விஜயம் இன்னும் ஞாபகம் இருக்கிறதா ?

அந்த அனுபவம் சிறுவயதில் நடந்திருந்து, அது இன்னமும் நினைவில் நின்றால் நீங்கள் அதிஷ்டசாலிதான்.

சொல்லப்போனால் கல்லூரி செல்லும்  வரை எனக்கு பரவலான புத்தக பரிட்சயம் இல்லை என்பதே உண்மை.

எவ்வளவுதான் நான் யோசித்தாலும்,  எனது முதல் நூலக அனுபவம்
பூண்டி புஷ்பம் கல்லூரியில் தான்.  மலைக்கவைக்கக்கூடிய ஆயிரக்கணங்கான புத்தகங்கள்.  கல்கி முதல் ஸிட்னி ஷெல்டன் வரை அறிமுகமும் அங்குதான்.

அந்த நூலகம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு ஒரு
போதிமரம். எத்தனையோ புத்தக பறவைகளின் வேடந்தாங்கல் எனவும் சொல்லலாம்.

சிறுவயதில் மிஞ்சி போனால் சிறுவர் மலர், தினமணிக் கதிர். பிறகு பதின்மவயதில் குமுதம், மாலைமதி, கல்கண்டு, ஜுவி, பாக்யா போன்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகளைத் தாண்டி பெரியதாய் எதுவும் அறிமுகமில்லை.

ஆனால், ஆரம்பகாலத்‌தில்  கவிதைகளும் சிறுகதைகளும் குறுநாவல்களும்
அறிமுகம்  செய்தவை அவை. வைரமுத்து, சுஜாதா, லேனா தமிழ்வாணன் போன்ற  ஆளுமைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதும் இவற்றின் மூலமே.

அதை தாண்டி இலக்கிய செறிவான நூல்களுக்கோ அல்லது
சுய ஊக்குவிப்பு புத்தகங்களுக்கோ வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.

சுயபுராணத்தை விடுங்க,  சொல்லவந்த விசயத்துக்கு வருவோம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த நிலை இல்லை என்றே சொல்லலாம்.

சிறகுகள் அறக்கட்டளை மூலமாக இந்த பள்ளிக்கு நூலக விரிவாக்கம் செய்து தந்துள்ளோம். ஒரு புத்தக அலமாரியும்,  புத்தகங்களும் இதில் அடங்கும்.

இவை கடந்த வாரம் பள்ளியில் நடந்த குடியரசுதின விழாவில் பள்ளி தலைமையாசிரியரிடம் அவை வழங்கப்பட்டன.

சுமார் எண்ணூறு பேர் பயிலும்  இந்த இருபாலர் பள்ளி  திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நல்ல தேர்ச்சி விகிதம், மாவட்ட அளவில் கவிதைப் போட்டியில் முதலிடம் என கலக்குகிறார்கள். அரசுப் பள்ளியாயினும் மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய பள்ளி. இதற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதுபோல இருந்தது இந்த நூலக விருவாக்கம்.

பள்ளி தலைமையாசிரியர் உட்பட இங்கு பணிபுரியும்
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கிராமப்புரத்தில் செயல்படும் இந்த மாதிரியான பள்ளிகளுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறோம்?

சிறகுகள் சார்பில் என்னைத்தவிர அனைத்து உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, மனிதவள நிர்வாக அலுவலராக பணிபுரியும் திரு கேசவன் சென்னையில் இருந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கிடையே உரையாற்றினார்.

கண்ணாடி வைத்த புத்தக அலமாரி தேவைபட்டதால் ஆர்டர் கொடுத்து கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  மற்றபடி பெரிய சிரமமில்லை. எல்லாம் நினைத்ததுபடி நன்றாக நடந்து முடிந்தது.

இந்த முயற்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தா.ரெ. தமிழ்மணி அவர்கள். அதே பள்ளியில் தமிழாசிரியரியராக பணிபுரியும் இவர் என்னுடைய பள்ளி தோழர்,கவிஞர்  மற்றும் நல்ல நண்பர்.  நமது உதவி சரியான இடத்தை சென்று சேர்கிறது என்ற  உறுதியை வழங்கியவர். அவருக்கு முதல் நன்றி!

எனது கவிதை நூலான "என் ஜன்னல் வழிப் பார்வை" யினை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் விற்பனை செய்த தொகையில் இருந்து இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி!, எனது கவிதைத் தொகுதியில் ஐம்பது பிரதிகளை வாங்கி தன் நண்பர்களுக்கு பரிசளித்த சிங்கப்பூரில் வசிக்கும் எனது முன்னாள் மேலாளர் (Manager), நண்பருமான திரு. சண்முகத்திற்க்கும் நன்றிகள் பல!

உங்களுடைய சிறு உதவி , எங்கேயோ யாருடைய வாழ்க்கையேனும் கண்டிப்பாக மாற்ற உதவக்கூடும் என உறுதியாக நம்புகிறேன்.

நல்ல நூல்கள் ..
வாழ்க்கைச் சாலையின்
கைகாட்டி மரங்கள்

அவை காட்டும் வழி 
என்றும் நல்வழியே!!

நன்கொடை வழங்கிய புத்தகங்களில் அப்துல்கலாமின் 'அக்னிச்சிறகு'களும் ஒன்று. யாருக்கு தெரியும் ?  இராமேஸ்வரத்தில் இருந்து அப்துல்கலாம் போல,
குளிக்கரையில் இருந்து குமரப்பாவோ அல்லது  இந்திரா நூயிவோ வர மாட்டார்கள் என்று.

Sunday, February 1, 2015

சென்னைவாசிகளே உஷார்!

உங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன்
என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ?

ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நான் பிறப்புச் சான்றிதலை ( Birth Certificate) தருகிறேன்  என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஆம், நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் உங்கள் பிறப்புச் சான்றிதல்   அல்லது Birth Certificateடை எவரும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அதற்காக நீங்கள் எதுவும் பெரிதாய் பிரயத்தனம் செய்ய தேவையில்லை
சென்னை மாநகராட்சியின் இந்த லிங்கை பார்க்க.

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=show

பிரச்னையே, யாரும் யாருடைய சான்றிதழையும் எந்தவித தடையுமின்றி பெறலாம் என்பதே.

உலகத்தின் எங்கோ மூலையில் இருக்கும் ஒருவரால் சென்னையில் எந்த வீட்டில் குழந்தை பிறக்கிறது.  அது ஆணா,பெண்ணா? அதன் தாய், தந்தை பெயர்கள்,  பிறந்த நாள்,  பிறந்த இடம், முகவரி போன்றவற்றை ஒரு க்ளிக்கில் தெரிந்து கொள்ள இயலும்.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு முக்கியம்?

அதை வைத்து எளிதாக இலக்கு மார்க்கெட்டிங் (Target Marketing) செய்ய இயலும். உதாரணமாக  'கடந்த வாரம் பிறந்த உங்கள் பெண் குழந்தைக்கு  தங்கநகை திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்லி எவரேனும் தங்களின் பிரதிநிதியை உங்கள் வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது கடிதம் எழுதலாம்'.  கொஞ்சம் அதிகமாக, அருகில் இருக்கும் மருத்துவமனை அல்லது மழலையர் பள்ளி உங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பல..

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சின்ன விசயமாகக்கூட படலாம்.
கல்லூரி, பள்ளி மாணவன் தான் சைட் அடிக்கும் பக்கத்‌து வீட்டு பெண்ணின் விவரங்களை பெறலாம்  எனத் தோன்றுவது கூட இயற்கை.

மாறாக,  இந்த சான்றிதல் மற்றும் விவரங்கள் மூலம் யாரேனும் உங்கள் பெயரில் வங்கி கடன் வாங்கினால்? செல்போன் இணைப்பு வாங்கினால் ? அல்லது இந்த விவரங்கள் மூலம் உஙகள்  ஆன்லைன் வங்கிக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால்.  இப்படி பல கில்லாடிதனங்கள் செய்தால் கடைசியில் பாதிக்கப்படுவது நீங்கள் தான்.

நம்முடைய அதிகாரத்துவ வங்கிகள் அவ்வளவு எளிதில் ஏமாற மாட்டார்கள் என நம்புவோம்.

இது போன்ற தனி மனித தகவல்கள் பொதுப்படையாக  தருவது
அடையாள திருட்டு (Identity Theft) மற்றும் அடையாள மோசடி (Identity Fraud)
க்கு வழிவகுக்கும் என்பது அடிப்படை அறிவு அல்லவா. பல அடுக்குகளைக் கொண்ட கணினி குற்றதின்(Cyber Crime)ன் ஒரு வடிவம்தான் இது.

இது போல உங்களுக்கு  தெரியாமல் உங்களை பற்றிய தகவல்கள் இணையத்தில் எங்கெல்லாம் தாராளமாய் சுண்டல் போல கிடைக்கிறதோ? அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.! :)

இந்தியாவில் மேன்மேலும் இணைய பயன்பாடு அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் சமூக எதிரிகளின் அடுத்த குறி இதுவாகவே இருக்கும்.

பொதுவாக, "Better Safe than Sorry" என ஆங்கிலத்தில் ஒரு தொடர்மொழி உண்டு.
எளிதாக சொல்வதென்றால் மக்களே... பாத்து சூதனமா நடந்துகோங்க....