Monday, May 29, 2017

திருவாரூரில் தேர்

"ஆரூர் பாஸ்கர்" எனும் பெயரின் முன்னால் இருக்கும் "ஆரூர்" பற்றி விசாரிக்கும் பெரும்பாலனவர்கள் "ஆருர்" என்பதை அடூர் தவறுதலாக  புரிந்துக்கொண்டு, கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றி என்னிடம் விசாரிப்பார்கள். 

" நானு பச்சைத்தமிழனாக்கும், அது என்றெ ஊர் பேர்" எனப் பெருமையாகச் சொன்னால், " ஓ ! அப்படி ஒரு ஊரைக் கேள்விப்பட்டதில்லையே ? " என்பார்கள். பின் தஞ்சாவூர் பக்கத்திலிருக்கும் திருவாரூர் என்றால் புரிந்துக் கொள்வார்கள்.   

உண்மையில் "திருவாரூர்" என்பது திரு+ஆரூர் என்பதாகும். தேவாரப் பாடல்களில் கூட "ஆரூர்" என்றே பாடியிருக்கிறார்கள்.  
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர் என  திருவாரூர்
பல வரலாற்றுப் பெருமைகள் கொண்டது. நான் இன்று 
சொல்லவந்தது திருவாரூரின் வரலாறு பற்றியல்ல வேறோரு விசயம்.

இன்றும் கூட சமூக ஒற்றுமையை அழுத்திச் சொல்வதென்றால்  "ஊர் கூடி தேர் இழுக்கவேணும்" என்பார்கள்.  நிஜத்தில் இன்று 
(29-மே-2017) திருவாரூரில் மக்கள்  ஒன்றாகக் கூடி தேர் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மதுரைக்கு மல்லி என்பதுபோல திருவாரூர் என்றால் தேர்.  அது
வெறும் தேர் இல்லை. ஆழித் தேர் என்பார்கள். "ஆழி" என்றால் கடல். கடல்போல் தேரா ? என்றால் ஆமாம்.

''அவன் மலை போல் பீடு நடை நடந்தான்'' எனும் பழம் பாடல் போல், இந்தத் தேரைப் பார்த்தால் ''நகரும் குன்றுகள்'' எனக் கண்டிப்பாக சொல்லத் தோன்றும் அளவுக்கு மிகப்பெரிய தேர். 

சுமார் 100 அடி உயரம், ஏறக்குறைய 300 டன் எடை அதன் ராட்ச சக்கரங்களை கட்டுப்படுத்த ஹைட்ராலிக் பிரேக்குகள்,
கண்ணைப் பறிக்கும் அலங்காரம் என மிக கம்பீரமாக இருக்கும்.

சென்னை மாநகரின் மையத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டம்
திருவாரூரின் தேர் வடிவத்தில் அமைந்தது என்பதே அதன் சிறப்பைச் சொல்லும்.

திருவாரூரில் பெரியக்கோயில் என்றால் தியாகராஜர் கோயில்.
கோயிலைச் சுற்றி இருக்கும் நான்கு வீதிகளில் அசைந்து வரும் 
தேரின் அழகைக்காண ஆயிரங்கண்கள் இருந்தாலும் போதாது. அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும்.

தேர் இழுக்கும் போது பக்தர்கள் எழுப்பும் "ஆரூரா, தியாகராஜா!! "எனும் சரணகோசங்கள் விண்ணைப் பிளக்கும் கூடவே அதிர்வேட்டுகள் வேறு.


திருவாரூர் தேர் என்றும் எங்களின் பெருமை சார்ந்த ஒரு விசயம்.
அங்கே தேரோட்டம் என்றுமே மதம் கடந்த ஒரு விசயமாக பார்க்கப்படுகிறது.

எனது "பங்களா கொட்டா" புதினத்தில் (நாவல்) கூட திருவாரூர் 
மற்றும் தேரோட்டம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.

Wednesday, May 24, 2017

கவிஞர்.நா.காமராசன்

நூலாசிரியர் ஒரு பிரபலம்,  ஒரு பிரபல கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என வாசகன் ஒரு புத்தகத்தை  வாங்க, எத்தனையோ பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால்,  பின்னட்டையில் இருந்த ஆசிரியரின் குறிப்பு
என் நெஞ்சம் தொட்டதால் ஒரு புத்தகத்தை வாங்கினேன்.

அந்தக் குறிப்பை எழுதியிருந்தவர் கவிஞர்.நா.காமராசன்.
நான் வாங்கிய அந்தப் புத்தகம்  "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்".

என் மனம் கவர்ந்த அந்தக் குறிப்பு இதுதான்.

"
இது ஒரு ஊரின் கதையல்ல
ஒட்டுமொத்த இந்தியாவின்
தேசிய இலக்கியம்.

தேர்தல் காலங்களில் மட்டும்
விலாசம் எழுதப்படும் வெற்றுத்தாள்களின்
சரித்திரம்.

அடுத்தவேளைச் சாப்பாட்டிற்கு வழியில்லாத
நேரத்திலும் நளமகாராஜாவின்
கதையைக் கேட்டுக் கண்ணீர் விடுகிற
ஏழை இந்தியாவின் எழுத்தோவியம்.

யாரும் என்னைக் கொண்டாட வேண்டும்
என்பதைக் கருதி இதை நான் எழுதவில்லை
அது எனக்குத் தேவையுமில்லை.

பெளர்ணமி நிலவைக் கூட
சோகத்தோடு ரசிக்கிற
அந்த மக்களின் கதையை
இலக்கியத்தில் பதிவுசெய்யவேண்டும்
என்பதே என் ஆசை.
"
"சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்" நல்லதொரு தொகுப்பு. கவிதைகள் அனைத்தும் தீக்குச்சிகள்.

புதுக்கவிதை உலகின் முன்னோடியாக விளங்கிய கவிஞர் நா. காமராசன்,
பல திரைப்படப்பாடல்களும் எழுதிய அவர் நேற்று சென்னையில் காலமானார்.

அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் பேசும் கொரியர்கள்

வழக்கம் போல, 'நீங்க குஜராத்தியா ?'  இந்தமுறை அப்படிக் கேட்டவர் ஒரு தென்கொரிய பெண்மணி. நேற்று பூங்காவில் சந்தித்த அந்தப் பெண்மணிக்கு இந்தியாவின் ஆதி முதல் இந்தி (!) வரை தெளிவாக நான்  விளக்கி முடித்தபோது லேசாக இருளத் தொடங்கியிருந்தது.

பின்புதான், முறையாக அறிமுகம் செய்து கொண்டோம். பெயர் "நடாஷா" என திருவாய் மலர்ந்தார். இந்தியாவில் கேள்விப்பட்ட பெயராயிருக்கிறதே என விசாரித்தால், அது ரஷ்யப் பெயராம். "கிருஸ்மஸ் அன்று பிறந்த குழந்தை" என அர்த்தமாகிறது.

அப்போது 'அம்மா' என்றபடி ஒரு பெண்குழந்தை ஓடிவந்து அவர் கால்களைக் கட்டிக் கொண்டது. எனக்கு ஆச்சர்யம். கொரிய மொழியிலும் அவர்கள் 'அம்மா  (omma) / அப்பா(abba)' என்றே சொல்கிறார்களாம்.


கூகுளை விசாரித்ததில் , தமிழுக்கும் கொரிய மொழிக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. இணைப்பில் உள்ள வீடியோவைப் பாருங்களேன்.

ஒன்று மட்டும் உறுதி. உலகம் முழுக்க பிறக்கும் குழந்தைகளின் முதல் உச்சரிப்பை பெற்றோர்கள் தனதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது  மட்டும் புலனாகிறது.

இனி  நாம் குழந்தைகளுக்கு  'டாடி, மம்மி ' க்கு  பதிலாக,  மறுபடியும்  'அம்மா, அப்பா' எனச் சொல்லிப் பழக்கலாம்.   "எனக்கு கொரியமொழியும் தெரியுமாக்கும்" என அவர்கள் காலரை உயர்த்திவிட்டு சுற்ற வசதியாக இருக்குமே. :)

#தமிழ்_கொரியமொழி

Saturday, May 20, 2017

வனநாயகன் குறித்து-7 ( realistic narration. Looking forward to his next one !!)

எனது "வனநாயகன்-மலேசிய நாட்கள்" குறித்து பெங்களூர் வாசகி சுதா நாகராஜன் அவர்கள் முகநூலில் பகிர்ந்தது.

********************************************************************************

Sudha Nagarajan Read this novel last week. Bought it in chennai book fair. Good plot, realistic narration. Looking forward to his next one !!

********************************************************************************

தொடரந்து வாசித்து உற்சாகப்படுத்தும் வாசகநண்பர்களுக்கு நெஞ்சம் நிரம்பிய நன்றிகள் !!

அமெரிக்காவில் தமிழ்

நண்பர்களுக்கு வணக்கம்.   இந்தத் தகவலை இதற்குமுன்
உங்களுடன் பகிர்ந்துகொண்டதாக நினைவில்லை. அதனால் சொல்லிவிடுகிறேன்.

விசயம் இதுதான். நான் வார இறுதியில்  ஐந்தாறு சிறுவர், சிறுமியர்களுக்கு வீட்டில் முறையாக தமிழ் வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறேன்.

கடந்த ஒருவருடமாகவே நெருக்கமான ஃபிளாரிடா நண்பர்கள்
என்னை வகுப்பெடுக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். நானதான் ஆரம்பத்திலிருந்து எழுத்துப்பணியில் பிசியாக இருப்பதாகச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். அவர்களும் விடுவதாயில்லை. கடைசியில் ஒத்துக் கொண்டேன்.

எனக்கு நேரம் ஒரு காரணமாக இருந்தாலும். உண்மையில்
இதை எடுத்து செய்ய ஆரம்பத்தில் கொஞ்சம் அச்சம் இருந்தது.
காரணம், நம்மை நம்பி வரும் பிள்ளைகளுக்கு முழுமையாக சொல்லித் தரவேண்டுமே எனும் எண்ணம் தான்.

பெற்றோர்களின் தாய்மொழி ஆர்வம் எனக்குப் புரிகிறது. ஆனால்
இதில் பல நடைமுறைச் சிக்கல்கள்.  6 முதல் 10 வயதுள்ள இந்தப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில். வீட்டில் டிவி, பள்ளி, நண்பர்கள் என அவர்கள்  பெரும்பாலும் புழங்கும் மொழி ஆங்கிலம். தமிழில் பேசினால் புரிந்துக் கொள்வார்கள் தான். ஆனால், பதில் சொல்வது ஆங்கிலத்தில்.

இவர்களுக்கு தமிழ் சொல்லித்தருவதில் இருக்கும் சிரமங்களை நன்றாக தெரிந்ததால் ஆரம்பத்தில் யோசித்தேன். சோதனை முயற்சியாக 4 வகுப்புகள்  எடுத்து பார்த்துவிட்டுதான் தைரியமாக பெற்றோர்களுக்கு கமிட் செய்தேன். மனைவியும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்.  பிள்ளைகளை எப்படியாவது தமிழ், எழுத, படிக்க, பேச வைத்துவிட வேண்டும்.  கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. செய்துவிடலாம்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு பாடத்தை   அரிச்சுவடியிலிருந்து தொடங்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் கற்றுத்தருவது கொஞ்சம் கடினம் தான். பல சிக்கல்கள்.  ஆனால், வகுப்பு தொடங்கிய இரண்டு மாதத்தில்   பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் தெரிவதாக பெற்றோர் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.   குறிப்பாக மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு கோயம்புத்தூர் பையன் நிஜமாகவே கலக்குகிறான். இதெல்லாம் எனக்கு இது புதிய அனுபவம். பல சுவையான நிகழ்வுகள். நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

இதை, தமிழ் எழுத்தறிவிக்கிறேன். தமிழ்ச்சேவை செய்கிறேன் என்றேல்லாம் சொல்லி  நாம் பெரிதாக குழப்பிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன்.   எனது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்த  ஒரு சிறுமுயற்சி செய்கிறேன் என்ற அளவில் நான் மனதிருப்தி அடைந்துகொள்கிறேன். அதுவே சரியானதாக இருக்கும்.

இப்போதெல்லாம், ஞாயிற்றுக் கிழமை மாலையில் வீடு "ஜேஜே" என களைக்கட்டி விடுகிறது. "வணக்கம். பாஸ்கர் மாமா !",
"வீட்டுப்பாடம் எழுதிட்டேன்" ,  "நன்றி !" என தமிழ் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நல்ல தொடக்கமான உணர்கிறேன்.

என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி இயக்கிக் கொண்டிருக்கும்
அனைவருக்கும்  நன்றி!  வேறு ஆலோசனைகள், உதவிகள் தேவைப்பட்டால் நண்பர்களிடம் கண்டிப்பாக கேட்கிறேன்.

Tuesday, May 16, 2017

வனநாயகன் குறித்து(6) - கரந்தை ஜெயக்குமார்

நண்பர்களே,

எனது  "வனநாயகன்-மலேசிய நாட்கள்" ஐ நண்பர் கரந்தை ஜெயக்குமார் ஐயா தனது வலைப்பூவில் அறிமுகம் செய்திருக்கிறார்.

கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எனக்கு பதிவுலகில் அறிமுகமானவர். சோழமண்டலத்துக்காரர் (தஞ்சாவூர்).

கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுவிட்ட எண்ணற்ற ஆளுமைகளைப் பற்றி எழுதி மீண்டும் நம் உள்ளங்களில் இடம்பிடிக்கச்செய்யும் முயற்சிகளை இடையறாது செய்துவருபவர். அதுகுறித்து 300க்கும் அதிகமான பதிவுகளை எழுதி பதிவுலகில் தனக்கென பரந்த வாசகர் வட்டத்தை உடையவர்.

அவர் சிறப்பாய் தமிழ் எழுதும் கணித ஆசிரியர் என்ற வகையிலும்
என் மனத்துக்கு நெருக்கமானவர். எனது இந்தியப் பயணத்தில் நேரில் சந்திக்க வேண்டிய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்.

வனநாயகன்-மலேசிய நாட்கள் புதினம் (நாவல்) குறித்த அவருடைய அறிமுகம் இதோ

http://karanthaijayakumar.blogspot.com/2017/04/blog-post_18.html

வனநாயகனுக்கு புதிய வாசகர் வட்டத்தின்  அறிமுகம்
கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி.

தொடக்கம் முதலாக எனது எழுத்தை தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும்  ஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிரம்பிய நன்றிகள்!!.

Wednesday, May 3, 2017

ஆடி (Audi) கார் விவசாயிகள்

விவசாயிகள் ஆடி கார் (Audi) வைத்திருப்பதற்கும், ஆடி கார் வைத்திருப்பவர்கள் விவசாயிகளாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஆமாம், தமிழகத்தின் இன்றையச் சூழலில் ஒருவர் விவசாயம்
மட்டும் செய்து அந்த வருமானத்தில் ஆடி கார் வாங்குகிறார். 'வசதியாக'  வாழ்கிறார் என்பது ஆச்சர்யம் தான். அப்படி ஒருவரால் வசதியாக வாழமுடிந்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நானாகதான் இருப்பேன். ஏனேன்றால் முழுநேர வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி படுதோல்வி அடைந்த குடும்பங்களை நான் மிகநன்றாக அறிவேன்.

இயற்கையை விலக்கிவிட்டு பார்த்தால் தோல்விக்கு முக்கியக் காரணம் அரசாங்கம் என நம்மால் தயங்காமல் கைகாட்ட முடியும். விவசாயிகளையும், விவசாயத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்காமல் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்திய, நடத்தும் மனப்போக்கு என நம்மால் எளிதாகச் சொல்லிவிட முடியும்.

சரி, விசயத்துக்கு வருகிறேன்.   எங்கள் ஊரில் இருக்கும் ஒரு
'வசதியான' ஒரு விவசாயியைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.
அவருக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல கார்கள் உண்டு,  ஏன்,
காலனி வீடுகள், டிராக்டர்கள், ஏக்கர் கணக்கில் ரியல்எஸ்டேட்  என ஏக செழிப்பாயிருக்கிறார்.

இவையெல்லாம் கடந்த 15-20 வருடத்தில் சேர்த்தவைதான்.
வெளிநாட்டிலிருந்து ஒய்வுபெற்றுவந்த அவர் முதலில் கையிலிருந்த காசில் ஒரு தென்னந்தோப்பை விலைக்கு வாங்கினார். அடுத்து விவசாய லோன் போட்டு ஒரு டிராக்டர் வாங்கி பளபள பெயிண்ட் அடித்து "விவசாயத்துக்கு மட்டும்" என எழுதினார்.

அடுத்து அவர்  தோப்பில் பம்புசெட் போட்டு தென்னம்பிள்ளையைக்
கிளப்பியிருந்தால்,  இன்று  கண்டிப்பாக மழைக்காக வானத்தை பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால்,  அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிராக்டர்,மோட்டார், தோப்பை வைத்து செங்கல் பிஸினசில் குதித்தார். 

வெளியூரிலிருந்து ஆட்களை வரவைத்து தோப்பிலேயே தங்கவைத்து இரவு பகல் என விடாமல் லட்சக்கணக்கில் கல் அறுத்து அங்கேயே கொளுத்தினார்.  அவருடைய அதிஷ்டமும் அந்தத் தோப்பின் மண்வாகும் சேர்ந்து செங்கல் வியாபாரம் அவரைத் தூக்கிவிட்டது.  போதாத குறைக்கு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வும் சேர்ந்துக் கொண்டது.  சொந்தமாக லாரி, டிராக்டர் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். கையிலிருந்த காசை வைத்து ஊரிலிருக்கும் பெரும்பான்மையான விவசாயிகளின் நிலத்தை வளைத்துபோட்டார்.  

செங்கல் அறுக்க நிலத்தடி நீரை  நீர்மூழ்கி, ஜெட் பம்பு
என சகலத்தையும் வைத்து  சுற்றியிருந்த  அப்பாவி விவசாயிகளின்
தண்ணீரையும் சேர்த்து  உறிஞ்சித் தள்ளினார். அதுவரை 20-30 அடிகளில் கிடைத்த நிலத்தடி நீர் இவரின் கைவரிசையால்  இன்று 
200-300 அடி என்றானது.  போதாத குறைக்கு தோப்பில் தென்னை மரங்களை முழுதாக வெட்டி சாய்த்து விட்டு  புல்டோசரால்
மண்னை விடாமல்  தோண்டியதால் இன்று நூற்றுக்கணக்கான அடி ராட்ச பள்ளம் வேறு.  அந்தத் தோப்பு இன்று  அணுகுண்டு வைத்து வெடித்தது போல பூமி பிளந்து கிடக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா.

இப்படியெல்லாம் விவசாய நிலங்கள் பாழ்படுவதைத் தடுக்க அரசாங்கத்திடம் தகுந்த வரையறை எதுவும்  இருப்பதாகத் தெரியவில்லை. இவரும் அதிகாரத்தின் முன் ஒருவகையில் விவசாயி தான். மண்னை வைத்து பிழைக்கிறாறே ? வேறென்ன சொல்ல.

மணலை ஆற்றிலிருந்தும் அள்ளியும், இயற்கை வளங்களை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொறுப்பை  ஆட்சியிலிருக்கும் பெரிய மீன்கள் செய்கிறார்கள்.  செங்கல்லுக்காக தென்னந்தோப்புகளில் ராட்சதகுழி பறிக்கும் வேலையை இவர்போன்ற சிறிய மீன்கள் மிகச் சரியாக செய்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டிருப்பது சுற்றி விவசாயம் செய்யும்  பரம்பரை விவசாயிகள் எனச் சொல்லதான் வேண்டுமா  என்ன ? அவர்கள் மழை பெய்யும், நதிநீர் இணைக்கப்படும்,  காவிரியில் தண்ணீர் வரும், பயிர்க்கடன்
தள்ளுபடி செய்யப்படும், விவசாயம் ஊக்குவிக்கப்படும் என பகல் கனவு காணும் வேளையில் செங்கல் விவசாயிகள் வெயிலுக்கு ஏசி காரில் கறுப்புக் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

Monday, May 1, 2017

முகநூலில் அடிக்கடிக் கண்ணில்படும் பிழை

நண்பர்களே,

முகநூலில் அடிக்கடி கண்ணில்படும் ஒரு பிழையைப் பற்றி
தெரிந்துக்கொள்ளுங்கள். முகநூலில் எழுதுபவர்கள் இந்த ஒரு பிழைதானா செய்கிறார்கள் ? என என்னிடம் சண்டைபிடிக்காமல், கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்.

பொதுவாக  "பொருத்து, பொறுத்து""பொருப்பு, பொறுப்பு""பொறுமை", ",பொறுத்தல்", போன்ற சொற்களை சரியாக பயன்படுத்துவதில் பலருக்குக் குழப்பமிருக்கிறது.

முதலில் பொருத்து, பொறுத்து இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்துவிடுவோம். " பொருத்து"  எனும் சொல், ஒன்று சேர். இணைப்பு செய் என்ற பொருள் தரும். "சரியான விடையைப் பொருத்துஎன சின்னவயதில் படித்தது ஞாபகம் வருகிறதா ?  அதாவது கட்டளைச் சொல்.

" என்னைப் பொறுத்தவரை   " என எழுதினால் ? -நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு எனப் பொருள்கொள்ள வேண்டும். "என்னைப் பொருத்தவரை என எழுதினால் ?" அது தவறு. என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) என வந்து பொருளின்றி போகும்.

அடுத்து பொருப்பு, பொறுப்பு எனும் சொற்களைப் பார்த்துவிடுவோம். " பொருப்பு"  எனும் சொல்லுக்கு மலை அல்லது பக்கமலை எனும் பொருள் இருக்கிறதாம். " பொறுப்பு"  - அது நாம் எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்று. அதாவது கட்டாயக் கடமை. " பொறுப்பில்லாம சுத்தாத  தம்பி !" " பொறுப்பாசிரியர் "  இதெல்லாம் நாம் கேட்டிருக்கிறோம் தானே. இல்லையென்றால்  'மனோகரா' படத்தில் வரும் புகழ்பெற்ற வசனமான  'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா' வை நினைத்துக் கொள்ளுங்கள்.

" பொறுத்தல்"  ? - பிழையை மன்னித்தல் இல்லை தாங்கிக் கொள்வது,

" அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  
இகழ்வார்ப் பொறுத்தல் தலை "  - குறள் நினைவுக்கு வருகிறதா ?

அப்போ , " பொறுமை"  ? - இதுவரை இதைப் படித்த உங்களுக்கு இருந்தது.

#கவிக்கோ_இலக்கணம்