தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி 2025: விண்ணப்பங்கள் வரவேற்பு!
கலையும் மௌனம்
எனது எண்ணங்களும் அனுபவங்களும் இங்கே..
Sunday, June 28, 2026
பார்த்தினியம் - தமிழ்நதி
இது கவிஞர் தாமரை எழுதிய ஒரு திரைப்பாடல். இந்தப் பாடலை ஒருமுறை மேற்கோள் காட்டி பேசிய கவிஞர் கபிலன் வைரமுத்து இதுபோன்ற வரிகளை ஒரு பெண் கவிஞரால் மட்டுமே எழுத முடியும் என வியந்திருந்தார். அதுபோல பெண்களின் ஆழ்மன ஓட்டத்தை அவர்களால் மட்டுமே மிகச் சிறப்பாக வெளிக் கொணர முடியும் என்பதை சமீபத்தில் எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தினியம் நாவலை (புதினம்) வாசிக்கும் போது உணர்ந்தேன்.
தமிழில் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் . இங்கே வாசிப்புக் குறைவு அல்லது அறவே இல்லை எனும் குற்றச்சாட்டு வெகுநாட்களாக முன் வைக்கப்பட்டாலும் தமிழ் எழுத்துலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இலக்கிய நடைகளில் சிறப்பான படைப்புகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வரலாற்றைப் புனைவாக்கி படைக்கப்பட்ட தமிழ்நதியின் "பார்த்தினியம்" குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிக்கிறது.1983 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் தான் நேர்முகமாகக் அனுபவித்ததை, கேட்டதை உணர்ந்ததை நாவலாக்கி இருப்பதாக சொல்லும் எழுத்தாளர் தமிழ்நதியின் முன்னுரையுடன் கதை தொடங்குகிறது.
அதாவது ஈழப்போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களில் தொடங்கி இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. கதை மாந்தர்களான பரணி, வானதி போன்ற சாமானிய மனிதர்களின் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படி அவர்களின் வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியது என்பதை நாவல் சித்தரிக்கிறது. இங்கே படைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசுவதைவிட இந்தப் படைப்பின் அற்புதமான மொழி ஆளுமையையும் உணர்வுப்பூர்வமான மனவெளிப்பாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நதியில் தடையில்லாத அடர்த்தியான மொழி நடையில் பல தருணங்கள் வாசித்த பல மாதங்களுக்கு பின்பும் நம்மை உள்ளெழுச்சிக் கொள்ள செய்கின்றன.
குறிப்பாக மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு பின்அந்தி நேரத்தில்
நாயகன் பரணி நீண்ட பிரிவுக்கு பிறகு தான் காதலிக்கும் வானதியைச் சந்திக்கும் காட்சி மிக நேர்த்தியானது. நாம் இதுவரைப் பார்த்த திரைப்படங்கள் கூட காட்சிப்படுத்தாத அற்புதமான தருணம் அது.
அதுபோல சங்ககால இலக்கியங்களில் வரும் இயற்கைக்காட்சிகளை
நினைவுபடுத்தும் வகையில் மண் வாசனையோடு மரங்கள், செடி,கொடிகள், பூக்கள் பற்றிய சிறப்பான விவரணைகளுடன் 1980களின் இலங்கை நம் முன்னே அழகாக விரிகிறது. தெளிவான நீரோட்டமாக செல்லும் இந்த நல்ல கலைபடைப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று இதன் ஆற்றல் வாய்ந்த கவித்துவமான மொழி ஆசிரியரை நல்ல கவிஞராகவும் அடையாளம் காட்டுகிறது. அதுபோல பார்த்தினியத்தில் தமிழ்சொற்களின் பயன்பாடு என ஆய்வுக்கட்டுரை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்று புழக்கத்தில் இல்லாத பலநூறு தமிழ்சொற்களைக் கையாண்டிருக்கிறார். உலங்குவானவூர்தி (ஹெலிகாப்டர்), மிழற்றல், அடவு, நுளம்பு, ஆதுரம், கனகாலம், பகடிவதை, அருந்தல் என அந்தச் சொற்பட்டியல் நீளுகிறது. இதையெல்லாம் வாசிக்கும்போது சிறுவயதில் டிராக்டர்களை உழவியந்திரம் எனச் சொல்லிக் கேட்ட நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.
கதைக்களம் ஈழம் என்பதால் இந்தக் கலைப்படைப்பை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்குவதாக அறிகிறேன். மாறாக
இது உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்பட்ட இளம்காதலர்களின் உணர்ச்சிகரமான காதல் கதை எனும் நோக்கில் வாசித்தாலும் சிறப்பே.
தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450
Saturday, June 27, 2026
அமெரிக்க மேடையில் பாடகர் மனோ
பாடகர் மனோ தனது சொந்த பாடலான "மதுர மரிக்கொழுந்து வாசத்தை" (படம்: எங்க ஊரு பாட்டுகாரன்) வளரும் அமெரிக்க இளம் பாடகி பிரார்த்தனா கனகராஜுடன் இணைந்து பாடியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே.
மேடையில் தயக்கமின்றி தெளிவான உச்சரிப்புடன் நுணுக்கமான சங்கதிகளுடன் பாடும் பிராத்தனா விரைவில் தமிழ் படங்களில் ஒரு வலம் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன்.
Saturday, June 20, 2026
சிறகுகள் 2026 - சீரும் சிறப்பும் !!
சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக 2026-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஜுன் 19-ஆம் தேதி நடந்து முடிந்தது.
அனைவரும் விரும்பும் 100 சதம் தேர்ச்சி எனும் இலக்கை மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எட்டவில்லை என்றாலும், பள்ளி நிர்வாகம் துடிப்போடு செயல்படுகிறது. அடுத்த ஆண்டு அந்த இலக்கை எட்டும் எனும் நோக்கத்தில் மாங்குடி பள்ளி தேர்தெடுக்கப்பட்டது.
அமெரிக்க குடியுரிமை பெற்று குடும்பத்தோடு டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சீனிவாசன் சண்முகம் தனது குடும்பத்தோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் உரையாற்றினார். திருவாரூர் அலிவலத்தை சொந்த ஊராக கொண்ட சீனிவாசனின் மனைவி பிரியா அவர்களுடைய உரை கிராமப்புற மாணவர்களை உற்சாகமூட்டி நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது சிறப்பு.
2012-ல் தொடங்கப்பட்ட சிறகுகள் அமைப்பின் வழியாக ஆண்டுதோறும் பரிசு எனும் நிகழ்ச்சி தொடங்கி 10-ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அந்த விதத்தில் 2026-இல் நடந்த இந்த நிகழ்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று.
விழா குறித்து அங்கு ஆசிரியாக உள்ள நண்பர் விமல், 'அறக்கட்டளையின் குடும்ப விழாவாக நடந்தேறியது மகிழ்ச்சி !!' என வாட்ஸ்-அப் செய்திருந்தார். கூடவே இந்த விழாவானது சீரும் சிறப்பாக நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த உங்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா என்றிருந்தார்.
உண்மையில், பெரிய வாய்ப்புகள் இல்லாத எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர் கல்வியால் தங்கள் வாழ்வில் சீரும் சிறப்பும் பெறவேண்டும் என்பதே எனது பெரு வேட்கை. அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தோளில் தட்டி உற்சாகப்படுத்தும் ஒரு சிறு முன்னெடுப்பே இது என பதில் எழுதினேன்.
பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கும், தேர்வில் வெற்றி பெற்று உயர்நிலைப்பள்ளி நுழையும் அனைவருக்கும் வாழ்த்துகள் !!.
சீர்-சிறப்பு என்றால் என்ன ? என்பர்களுக்காக- சீர் means prosperity, glory, or grace. சிறப்பு means excellence, distinction, or special honor.
Friday, June 19, 2026
ஹைக்கூ நூல்களுக்கான பரிசுப்போட்டி
‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ஹைக்கூ நூல்களுக்கான பரிசுப்போட்டி அறிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டிக்கு ஹைக்கூ கவிஞர்கள் 2025-ஆம் ஆண்டில் வெளியான நூல்களை மட்டும் அனுப்பி வைத்து, சிறப்பித்திடுங்கள். நூல்களை அனுப்பிட கடைசி தேதி: 15 ஜூலை 2026.
Tuesday, June 16, 2026
Wednesday, June 10, 2026
தினமலர் சிறுகதை போட்டி -2026 (மொத்தப் பரிசுத்தொகை 1 இலட்சம்)
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி -2026
உங்கள் கற்பனைக்கும் படைப்பாற்றலுக்கும் சிறகுகள் தரும் சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.




