Saturday, August 1, 2026

பேரவையின் 39-ஆம் ஆண்டு (2026) மலர் - ஒரு பார்வை

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரவை விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால், விழா மலரும் கைவரவில்லை.  ஆனால், அந்த வாய்ப்பு இந்த ஆண்டு நியூஜெர்சியில் கிடைத்தது.

பெட்னா பேரவையின் 39-ஆம் ஆண்டு (2026) மலர் இராசேந்திர சோழன் கடாரம் 1000 வெற்றி ஆண்டு; தனித்தமிழ் இயக்கம்- மறைமலை அடிகள் 150 பிறந்தநாள் எனும் கருப்பொருளோடு வந்திருக்கிறது. ஆண்டு மலர் குறித்த எனது பார்வை. 


இந்த ஆண்டு அட்டைப் படம் தொடங்கி பக்கத்துக்கு பக்கம் செயற்கைத் தொழில்நுட்பத்தின் படங்களால் நிரப்பி புதுமை செய்திருக்கிறார்கள்.  மற்றபடி, ஆழமான சிந்தனையைத் தூண்டும் விதமான கட்டுரைகள் ஒன்றரண்டு மட்டுமே எனது கண்ணல் பட்டன.  பேரவை மலரில் உள்நாட்டினரின் பங்களிப்பு தேவை என்பதை இங்கே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது எந்த அளவுக்குத் தேவை என்பது தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று.  ஏனென்றால், பேரவை மலருக்கும் மற்ற தமிழ்சங்க மலர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அதுதான்.

அதுமட்டுமின்றி, மறைமலை அடிகளாரின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, மலரின் குறிப்புப் பகுதியில் முக்கால் பக்க அளவிலான சுருக்கமான கட்டுரை ஒன்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. விழா நிகழ்விலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட அடிகளார் குறித்த 2-3 நிமிடக் காணொளியைத் தவிர்த்து,  அடிகளாரின்  சிந்தனைகள் குறித்த புதிய பார்வைகளோ அல்லது தீவிரமான ஆய்வுக் கருத்துகளோ முன்னெடுக்கப்படவில்லை என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது. மறைமலை அடிகள் குறித்தும் அவருடைய சிந்தனைகள், செயல்பாடுகள் குறித்தும் தமிழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரிடமோ அல்லது தகைசால் தமிழ் சான்றோர் யாரிடமாவது ஒரு கட்டுரை பெற்று வெளியிட்டிருந்தால்  இன்னமும் செறிவானதாக இருந்திருக்கும். 

இதுபோல,  தமிழின் சிந்தனையாளர்கள், உரத்த சிந்தனையாளர்கள் என பலரிடம்  ஆழமான கட்டுரைகளைத் தேடி பெறவேண்டும் என்ற முயற்சி குறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதே சமயத்தில், எழுத்துப் பிழைகள் பெரும்பான்மையாகக் களையப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, ஆசிரியர் குழுவின் உழைப்பு பாராட்டத்தோன்றுகிறது.

பெரும்பாலான கட்டுரைகள் கல் தோன்றி, முன் தோன்றி வகையராக்கள். 

அறிஞர் அண்ணா 60-ஆண்டுகளுக்கு முன் மதுரை பல்கல்கலைக் கழக உரையில் (1966) பேசியது போல்  "புலிப்பொறித்தான், கயல்பொறித்தான், கடராம் வென்றான் என்றெல்லாம் புல்லரிக்கும் வரலாற்றைப் படிக்கிறோமே .." என்பதன் நீட்சியாகவே இருந்தது.

ஆனால்,  உலகின் அதிநவீன தொழில்நுட்ப முன்னோடி நாடான அமெரிக்காவில் வாழும் தமிழர்களாகிய நாம், அந்த அனுபவத்தையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக இன்னும் எந்த வகையில் சிறப்பான பங்களிப்பாக மாற்ற முடியும் ? என்பது குறித்தெல்லாம் யோசிக்கும் இடத்தில் பேரவை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

மலரில்  விதிவிலக்காக "எந்திரம் பேசும்- தமிழ் கேட்குமா ?" எனும் தலைப்பில்  அன்பர் செந்தில்முருகன் வேலுச்சாமி எழுதியுள்ள கட்டுரை அந்த வகையைச் சார்ந்தது.

இனியேனும், தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் இடத்தை உறுதிப்படுத்த அமெரிக்க தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம் என ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கப்பூர்வமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். பேரவை மாநாடு நடக்கும் இந்த அமெரிக்க மண்ணில் இருந்து செயல்படும் உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்பதை தனியாக நினைவுபடுத்த வேண்டுமா என்ன ?  தமிழ் வளர்ச்சி என்பது பல்கலைக் கழகங்களும், அரசுகளும் மட்டும் செய்யவேண்டிய ஒன்று மட்டுமல்ல என நினைக்கிறேன். 

புலம்பெயர்ந்தோர் மொழியை அகம் சார்ந்து மட்டும் நுகராமல் புறம் சார்ந்து யோசிப்பது நலம். அதாவது, நமது தமிழ்ச் சங்கங்கள் கொண்டாடுகின்ற தமிழர்விழாக்களில் ஏன் அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் இடமிருப்பதில்லை என்பது  யோசிக்க வேண்டிய ஒன்று. ஒரு மொழி வணிக மொழியாக, அதிகார மொழியாக (குறைந்தபட்சம் தமிழகத்தில்) தொடரும் வரை மட்டுமே அதன் மாண்பு தொடர்ச்சி என்பதெல்லாம்.

இங்கே ஃபெட்னா ஆண்டுதோறும்  உலகத் தமிழ்த் தொழில்முனைவோர் இணைப்புக்கு (FiTEN) என தனியாக ஒருநாள் ஒதுக்கித்தருகிறது என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

Tuesday, July 21, 2026

2026-அமெரிக்க பேரவை இதழில் எனது சிறுகதை

2026-அமெரிக்க பேரவை இதழில் என்னுடைய 'கரை வந்தது சிறுகதை தேர்வாகி இருக்கிறது. தேர்வுக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி !!





தலைப்பு-  மேற்கிசை வலசை
வெளியீடு- இலக்கியக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
ஆண்டு- 2026


Friday, July 10, 2026

அமெரிக்காவில் பரவலாகும் தானியங்கி புல்வெட்டும் இயந்திரம்

புல்வெளியை மனித உதவியின்றி தானாகவே வெட்டும் புத்திசாலி இயந்திரம்தான் "லான் மோவர் ரோபோ" (lawn mower robot) எனும் தானியங்கி புல்வெட்டும் இயந்திரம்.

சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால் தடைகளைத் தவிர்த்து, திட்டமிட்ட பாதையில் துல்லியமாக  இது புல்லை வெட்டுகிறது.



நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் இந்த ரோபோக்கள் அமெரிக்க வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டுக்கு வருகின்றன. கடந்த வாரம்
எங்கள் குடியிருப்பில் பார்த்த காட்சி இது.


Tuesday, July 7, 2026

39வது பெட்னா(FETNA) பேரவை விழா - இணை அமர்வு 1

நியூஜெர்சியில் 2026, ஜூலை 2 முதல் 4 வரை பிரம்மாண்டமாக நடைபெற்ற  39-வது பெட்னா(FETNA) பேரவை விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் பெட்னா இலக்கியகுழு இரண்டு இணை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த இணை அமர்வுகளில் கவிஞர் பெருந்தேவி, கவிஞர் சாம்ராஜ், எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் தமிழ்நதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

ஜூலை 3-ம் தேதி வெள்ளி அன்று நடந்த அமர்வு சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும் என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

முதலில் கவிஞர் பெருந்தேவி , "புதுமைப்பித்தன்: நவீன இலக்கியத்தின் முகம்" என்ற தலைப்பில், புதுமைப்பித்தனின் படைப்புகளும் நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களும் குறித்து பேசினார். அடுத்து பேசிய எழுத்தாளர் சரவண கார்த்திகேயன், "நவீனத் தமிழ்ப் புனைவின் பரிணாமம்" என்ற தலைப்பில், நவீனத் தமிழ்ப் புனைவின் வளர்ச்சிப் பாதை, மாற்றங்கள் மற்றும் புதிய போக்குகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். அவர் தன்னுடைய பேச்சில் ஓர் எழுத்தாளராக தனது அவதானிப்புகளாக இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள், வாசகர்கள், பதிப்பகங்கள்,சமூகம், செயற்கைத் தொழில்நுட்பம் என்பது மாதிரியான பத்து விசயங்களைத் தொட்டு பேசியது இரசிக்கும்படி இருந்தது.
அடுத்து பேசிய எழுத்தாளர் தமிழ்நதி, "புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – ஒரு பார்வை" என்ற தலைப்பில், புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம், வளர்ச்சி மற்றும் அதன் சமகாலப் பரிமாணங்கள் குறித்து பேசினார். அது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மேல் வைக்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போலவும் அமைந்தது. இறுதியாக பேசிய எழுத்தாளர் சாம்ராஜ், "தமிழ்ச் சிறுகதைகளும் பகடியும்" என்ற தலைப்பில் தமிழ்ச் சிறுகதைகளில் பகடி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, அதன் இலக்கியப் பங்கு மற்றும் சமூக விமர்சனத் தன்மை குறித்து உரையாற்றினார்.


இவர்களுடைய அனைத்து உரைகளும் சமீபத்தில் நான் கேட்ட உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக செறிவானதாக இருந்தது. குறிப்பாக, புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்தும் அவருடைய காஞ்சனை சிறுகதை குறித்தும் பேசியது தனது நெடுநாள் கனவு என பெருந்தேவி நேர்பேச்சில் குறிப்பிட்டார். இதில் இருந்து அதற்கான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

சாம்ராஜ் தனது உரை நடிகர் கமலுடைய திரைப்பகடி என்பது மலையாள பட தாக்கதில் வந்தது, தமிழ் திரையில் மதுரைத் தமிழை பகடியாக்கி புதியபாதை கண்டவர் வடிவேலு, பொதுவாக சுயபகடி என்பது தமிழி்ல் குறைவு அதனால்தான் பகடி நிறைந்த எழுத்துகள் வருவதில்லை. இலக்கியம் விடுதலைக்கானது, பகடி அதைத் தரவல்லது என்பது போன்ற பல கூர்மையான அவதானிப்புகளால் நிறைந்திருந்ததும் சிறப்பு.

Sunday, June 28, 2026

தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு- 2025

தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி 2025: விண்ணப்பங்கள் வரவேற்பு!




பார்த்தினியம் - தமிழ்நதி

"...என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை பார் என்னைப் பிடிக்கும்... !! "
இது கவிஞர் தாமரை எழுதிய ஒரு திரைப்பாடல்.  இந்தப் பாடலை ஒருமுறை மேற்கோள் காட்டி பேசிய கவிஞர் கபிலன் வைரமுத்து இதுபோன்ற வரிகளை ஒரு பெண் கவிஞரால் மட்டுமே எழுத முடியும் என வியந்திருந்தார். அதுபோல பெண்களின் ஆழ்மன ஓட்டத்தை அவர்களால் மட்டுமே மிகச் சிறப்பாக வெளிக் கொணர முடியும் என்பதை சமீபத்தில் எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தினியம் நாவலை (புதினம்) வாசிக்கும் போது உணர்ந்தேன்.

தமிழில் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் . இங்கே  வாசிப்புக் குறைவு அல்லது அறவே இல்லை எனும் குற்றச்சாட்டு வெகுநாட்களாக முன் வைக்கப்பட்டாலும் தமிழ் எழுத்துலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இலக்கிய நடைகளில் சிறப்பான படைப்புகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வரலாற்றைப் புனைவாக்கி படைக்கப்பட்ட தமிழ்நதியின்  "பார்த்தினியம்" குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிக்கிறது.

1983 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் தான் நேர்முகமாகக் அனுபவித்ததை, கேட்டதை உணர்ந்ததை நாவலாக்கி இருப்பதாக சொல்லும் எழுத்தாளர் தமிழ்நதியின் முன்னுரையுடன் கதை தொடங்குகிறது.

அதாவது ஈழப்போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களில் தொடங்கி இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. கதை மாந்தர்களான பரணி, வானதி போன்ற சாமானிய மனிதர்களின் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படி அவர்களின் வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியது என்பதை நாவல் சித்தரிக்கிறது.  இங்கே படைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசுவதைவிட இந்தப் படைப்பின் அற்புதமான மொழி ஆளுமையையும்  உணர்வுப்பூர்வமான மனவெளிப்பாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நதியில் தடையில்லாத அடர்த்தியான மொழி நடையில் பல தருணங்கள் வாசித்த பல மாதங்களுக்கு பின்பும் நம்மை உள்ளெழுச்சிக் கொள்ள செய்கின்றன.

குறிப்பாக மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு பின்அந்தி நேரத்தில்
நாயகன் பரணி நீண்ட பிரிவுக்கு பிறகு தான் காதலிக்கும் வானதியைச் சந்திக்கும் காட்சி மிக நேர்த்தியானது. நாம் இதுவரைப் பார்த்த திரைப்படங்கள் கூட காட்சிப்படுத்தாத அற்புதமான தருணம் அது.

அதுபோல சங்ககால இலக்கியங்களில் வரும் இயற்கைக்காட்சிகளை
நினைவுபடுத்தும் வகையில் மண் வாசனையோடு மரங்கள், செடி,கொடிகள், பூக்கள் பற்றிய சிறப்பான விவரணைகளுடன் 1980களின் இலங்கை நம்
முன்னே அழகாக விரிகிறது. தெளிவான நீரோட்டமாக செல்லும் இந்த நல்ல கலைபடைப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று இதன்  ஆற்றல் வாய்ந்த கவித்துவமான மொழி ஆசிரியரை நல்ல கவிஞராகவும் அடையாளம் காட்டுகிறது. அதுபோல பார்த்தினியத்தில் தமிழ்சொற்களின் பயன்பாடு என ஆய்வுக்கட்டுரை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்று புழக்கத்தில் இல்லாத பலநூறு தமிழ்சொற்களைக் கையாண்டிருக்கிறார்.  உலங்குவானவூர்தி (ஹெலிகாப்டர்), மிழற்றல், அடவு, நுளம்பு, ஆதுரம், கனகாலம், பகடிவதை, அருந்தல் என அந்தச் சொற்பட்டியல் நீளுகிறது. இதையெல்லாம் வாசிக்கும்போது சிறுவயதில் டிராக்டர்களை உழவியந்திரம் எனச் சொல்லிக் கேட்ட நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.

கதைக்களம் ஈழம் என்பதால் இந்தக் கலைப்படைப்பை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்குவதாக அறிகிறேன். மாறாக
இது உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்பட்ட இளம்காதலர்களின் உணர்ச்சிகரமான காதல் கதை எனும் நோக்கில் வாசித்தாலும் சிறப்பே.

தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450

மேலே உள்ள குறிப்பு 2018-இல் எழுதியது.

Saturday, June 27, 2026

அமெரிக்க மேடையில் பாடகர் மனோ

 பாடகர் மனோ தனது சொந்த பாடலான "மதுர மரிக்கொழுந்து வாசத்தை" (படம்: எங்க ஊரு பாட்டுகாரன்) வளரும் அமெரிக்க இளம் பாடகி பிரார்த்தனா கனகராஜுடன் இணைந்து பாடியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே.



மேடையில் தயக்கமின்றி தெளிவான உச்சரிப்புடன் நுணுக்கமான சங்கதிகளுடன் பாடும் பிராத்தனா விரைவில் தமிழ் படங்களில் ஒரு வலம் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன்.

இங்கே, பிரார்த்தனா 2023-பெட்னா பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்றவர் என்பதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அன்று நடுவரான ஹமீது அவர்களே விழா மேடையில் 'இங்குதான் பிறந்தாயாமா...' என வாஞ்சையுடன் கேட்டு உறுதி செய்துகொண்டது இன்னமும் நினைவிருக்கிறது.
இப்படி சிறுமியாகவும், சிறுவர்களாகவும் பார்த்த நமது நண்பர்களின் பிள்ளைகளை இன்று சடசட என கண்ணெதிரே வளர்ந்து நிற்பதோடு மேடையில் ஏறி பாராட்டு பெறும் போது மனமுவந்து வாழ்த்தத் தோன்றுகிறது.
பல பெரிய உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிராத்தனா !!