நேரத்தைக் காரணம் சொல்லி கவிதைகளையோ, கவிதை நூல்களையோ வாசிக்க மாட்டேன் என்றெல்லாம் கங்கணம் கட்டி திரியவில்லை.
கவிதைகளைத் தேடித் தேடி படிப்பதில்லையே தவிர சிறப்பான கவிதைகள் கண்ணில் பட்டால்.. படித்து, பாராட்ட தவறுவதில்லை.
அப்படிச் சமீபத்தில் பட்ட கவிதை ஒன்று அமெரிக்காவில் இருந்து எழுதும் கவிஞர் பிரதீபா பிரேம் எழுதியது
"விரித்த கைகளோடு
விசும்பினை நோக்கி
இயற்கையிடம்
முறையிட்டுக் கொண்டிருக்கும்
மரக் கூட்டங்களை..."
எனும் அந்தக் கவிதை 'மரங்கள்' குறித்து கவிக்கோ அப்துல் ரகுமான் "நேயர் விருப்பம்" தொகுப்பில் எழுதிய கவிதையை நினைவுபடுத்தியது. அந்தக் கவிதை
"மரங்களே! பூமியின்
வரங்களே!
விதை வாமனனின்
விசுவ ரூபங்களே!
நீங்கள்
ஓவியமாகவே
உருவெடுத்தத் தூரிகைகள்.."
இப்படி ஒரு கவிதையோ அல்லது ஒரு கவிதையின் வரி கூட ஏதோ ஒன்றை நமக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. அப்படி வரும் நினைவு என்பது கூட தனித்திருப்பதல்ல. அது வேறொன்றை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது.




