Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...

Monday, October 19, 2015

புதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக

அக்டோபர் 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை
வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015,  நான்காம் ஆண்டுத் திருவிழா இனிதே முடிந்தது. என்னைப்போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு நேரடி ஓளிபரப்பு வழங்கியது கூடுதல் மகிழ்ச்சி.  வாழ்த்துக்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை எனும் மனக்குறையைப் போக்கும் வகையில், கலந்துக் கொண்ட அனைவரும் சிலாகித்து எழுதிய பல பதிவுகளையும் பார்த்தேன்.

நம்ம வீட்ல ஓரு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிணாலே நாம
ஆடிப் போயிடுறோம். இது போல நிகழ்ச்சியை ஓருங்கிணைக்கப் பல கைகள் வேணும். நா.முத்துநிலவன், வலைச்சித்தர் மற்றும் விழாக் குழுவினர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

நிகழ்ச்சியில் எஸ்.ராவின் சிறப்புரை அருமை.  அவர் பகிர்ந்த எல்லா
தகவல்கள் முற்றிலும் உண்மை.  அவருடைய பல கருத்துகள்
நம் போன்ற பதிவர்களின்  மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

அவர் உரையிலிருந்து சில துளிகள்:


பொதுவாக பதிவர்கள் பெரும்பாலும் சினிமா தகவல்களில்
கவனம் செலுத்துகிறார்கள். ஆனால்  அதைத் தாண்டி
ஆய்வுக்கட்டுரைகள், தமிழர் பண்பாடு, ஓவியம், சிற்பக்கலை, வரலாறு,
கட்டிடக்கலை  போன்ற துறைசார் தகவல்களையும் பகிர வேண்டினார்.
இதுல பிரச்சனை என்னன்னா Readership கம்மி என்பதுதான் உண்மை.

பதிவர்கள் தங்கள் பதிவை தனித்துவமாக எழுதுவதின் சிறப்பை எடுத்துரைத்தார். அதுபோல புதிய சிந்தனையின் முக்கியத்துவத்தை ஓரு சாப்ளின் கதை மூழம் அழகாக  விளக்கினார்.

நமது மரபுசார்  அறிவை புரிந்து பகிர்வதின் முக்கியத்துவத்தையும்
எடுத்துரைத்தார். நம்மில் எத்தனை பதிவுகள் இதை ஓட்டியது எனத்தெரியவில்லை. பதிவர்கள் கையேடு இந்த குறைகளை களையும் என நம்புகிறேன்.

புகழ் பெற்ற  புத்தகங்களுக்கே தமிழில் விமர்சனங்கள்
இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.  இது நிதர்சனம். பதிவர்கள் இதை செய்வது கடினமல்ல என்றே நான் நினைக்கிறேன்.

குழந்தைகள் இலக்கியங்கள் அவர்களுக்கான கதைகள் மற்றும்
அறிவுசார்ந்த தகவல்கள் தமிழில் இல்லை என்ற குறையை
களைய முயற்சிக்க சில வழிமுறைகளையும் பகிர்ந்தார்.பதிவர்கள் இதையும்  கவனிங்க.

அதுபோல தன் பேச்சினுடே அறிவு திருட்டை கண்டித்தார். இதைப் படிக்கும் பதிவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஓன்று.  Courtesy அல்லது நன்றி-ன்னு நிஜ படைப்பாளி பெயர போடுங்கப்பா.

தன் வலைத்தளத்தைச் சுமார் 6 ஆயிரம் பேர் தினமும் வாசிப்பதாகவும், இதுவரை 87 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது எனும் கூடுதல் தகவலையும்  பகிர்ந்தார். வாழ்த்துக்கள் சார்.

இறுதியில் பதிவர்களின் இன்றைய மனநிலையை தெளிவாகச் சொன்னார். நான் ரொம்ப ரசித்தது இது.

1.  தனக்கென வாசகர் வட்டமோ, அங்கீகாரமோ இல்லாதது அல்லது உருவாகாதது.  - இதைப் பதிவர்கள் தனது தனித்துவமாக எழுத்தின் வழியாக வெற்றிகாண இயலும் என்றார். 

2. பொருளாதார ரீதியாக எந்த ஓரு அங்கீகாரமும் இல்லாதது.  இந்த சூழ்நிலை வரும் நாட்களில் மாறும் என நம்பிக்கை அளித்தார்.  - காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.

எனக்குத் தெரிந்தே எத்தனையோ பேர் சில வருடங்களில் அல்லது மாதங்களில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள்.

சுய உந்துதல் மற்றும் ஆர்வம் மட்டுமே ஓருவரை பதிவர் உலகத்தில் தாக்குபிடிக்க  வைக்கும் என்பது நிதர்சனம்.

எனவே எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நம்பிக்'கை' யுடன் தொடர்ந்து எழுதுங்கள் நட்புகளே!.

எஸ்.ரா வின் சிறப்புரை-  https://youtu.be/BSZJx91rFWs (Reference)