Sunday, August 17, 2014

துட்டுக்கு பாட்டு - கவிஞர் வாலி

தமிழ் திரைப்பட பாடல்கள் "மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?"
என்பது பலகாலமாக தமிழ் சூழலில் கேட்கப்படும் பழைய கேள்வி.
இதற்கு "துட்டுக்கு பாட்டு " என்றார் கவிஞர் வாலி ஒருமுறை .

தற்போது, இந்த கேள்வியை யாரும் பாடலாசிரிடம் கேட்பது இல்லை.
அப்படியே கேட்டாலும் பதில் என்னவாக இருக்கும் என்பதை முன்பே அறிந்ததால் இருக்கலாம்.

பாடலுக்கு மெட்டு என்பதே மிக அரிதான ஒன்றாயிருக்கிறது.
திரை ஜாம்பவங்களாக பல ஆயிரம் பாடல்களை எழுதிய  வைரமுத்து, வாலி போன்றவர்களின் சில பாடல்கள் மட்டுமே மெட்டமைத்ததாக இருக்கும். இது காலத்தின் கட்டாயமே.

யாரோ சொன்னதுபோல, இந்தியாவில் கம்யூஸ்ட்டுகள் இருக்கிறார்கள், ஆனால் கம்யூனிஸம் இல்லை.  அது போல தமிழ்  பாடல்கள் இருக்கின்றன, தமிழ் இசை இல்லை. மேற்கத்‌திய இசைக்கும், வாத்‌தியங்களுக்கும் நடுவே தமிழ் வரிகள் நிரப்படுகின்றன.

தமிழ் பாடலாசிரியர்கள் இந்த சவால்களை தாண்டி நல்ல கருத்தையும், கவித்துவமான விடயங்களையும் தர முயற்சிக்கிறார்கள். பாராட்டுக்கள்!.

வட்டத்திற்குள் வண்ணம் தீட்டுவது போல,  பாடலாசிரியரின் வேலை அவ்வளவு எளிதானது அன்று.

மேலும், திரை பாடல் என்பது ஒரு கூட்டு முயற்‌சி. இசையமையப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சேர்ந்தே
ஒரு பாடலுக்கு உயிர் தருகின்றனர். மேலும் இந்த அணிக்கு வணிகரீதியான அழுத்தங்கள் வேறு.

இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் பாடலை கேட்டு நாம் "மொக்கை" என நொடியில் தீர்மானித்து விடுகிறோம்.

"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
"பெண் பார்த்தாய்" எனும் தலைப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியை நண்பர் ரவி இசை அமைத்து பாடலாக்க முயற்ச்சித்துள்ளார்.

" பெண் பார்த்தாய்,
நீ பெண் பார்த்தாய்,
பெண்ணையே பார்க்குமுன்
ஜாதகம் பார்த்தாய்,
பயோடேட்டா பார்த்தாய்,
நியூமராலஜியும் சேர்த்தே பார்த்தாய்! " 
......


இங்கே ஓலி வடிவில் பாடலை
கேட்டு மகிழுங்கள்:




இங்கே முழு கவிதையை  ஓலி வடிவில்
கேட்டு மகிழுங்கள்:




என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook


Please share your feedback.




















Saturday, August 2, 2014

நீங்கள் பேச்சிலரா (Bachelor) ?

வணக்கம், நீங்கள் ஒரு Bachelorரா?

ஆமாம் எனில் வாழ்த்துக்கள்!!.  இல்லை எனில் நீங்கள்  ஒன்றும் பெரிதாக
இழந்து விடவில்லை. ஏனெனில் நீங்களும் அங்கிருந்துதான் (பேச்சிலராக) வந்திருப்பீர்கள்.

நீங்கள் ஒரு பேச்சிலராக இருந்தாலும் ரொம்பவும் மகிழத்  தேவை இல்லை.
ஏனெனில் நீங்களும்  ஒரு நாள் மணம் புரியப் போகிறவர்தான். :)

"எது இன்று உன்னுடையதோ  அது நாளை மற்றொருவருடையதாகிறது"
-கீதாசாரம் போல ரொம்ப குழப்பமா இருக்கா?  சரி விடுங்க..

ஒரு தகவல் இந்தியாவின் மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதிற்க்கு உட்பட்டவர்களாம்.  பேச்சிலர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்தியா ஒரு மகிழ்ச்சியான
நாடே. அதையும் விடுங்க.

சமீபத்தில் படித்த கீழ்க்கண்ட வாசகமே, இந்த கட்டுரையின் தொடக்கம்.

"இளைஞர்களே, உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிடுங்க.  அதுக்கப்புறம் உங்களால டிவி சானலை கூட மாத்த முடியாது"

இதை படித்ததும், பேச்சிலர் பற்றிய என்னுடைய இந்த கவிதை ஞாபகம் வந்தது.

தலைப்பு: பேச்சிலர் (பேச்சு இலர்), "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.

Bachelor ஆன நான் பேச்சிலர் ஆகிறேன்,
உன் அழகு முகம் பார்க்கையில்!

மூளை இருந்தும் முட்டாள் ஆகிறேன்,
உன் கயல் விழி பேசும் மொழி புரியாமல்!

மொழி ஆய்வாளர்களே,
உலக மொழிகளின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் பேசும்
விழி மொழியையும் சேர்த்து!

ஆராய்ச்சியாளர்களே,
உலகப் புரியாத புதிர்களின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் காட்டும்
கடைக்கண் பார்வையையும் சேர்த்து!

இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்:



முடிவா பேச்சிலர்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் இருக்கிறதில்லை,
கல்யாணமான எல்லாரும் சோகமாவும் இருக்கிறதில்லை.
மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்னு சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் மாதிரி முடிச்சுடுவோம்.

**
என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook














Sunday, July 13, 2014

கவிஞர் வைரமுத்து - ஒரு சந்திப்பு

இன்று July-13, கவிஞர்  வைரமுத்துவின் 60வது பிறந்த நாள். அவரை பற்றி என்னுடய சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன்.

கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்பு திரைப் பாடல் வரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில், என்னை கவர்ந்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார். பள்ளி பாடங்களை தவிர்த்து அறிமுகமான முதல் தமிழ் கவிஞரும் அவரே.

தமிழ் பாடல்களை சித்தெறும்பு கடித்துக் கொண்டிருந்த நாட்களில் இவர் பாடல்கள் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. இளையராஜா, வைரமுத்து  மோதல் என்பது இந்த உலகறிந்தது. அந்த காலகட்டத்தில் வைரமுத்து- ஏ.ர் ரகுமான் கூட்டணி வெற்‌றி பெற பிரார்தித்த நாட்களும் உண்டு.

தமிழ் நாளேடுகளை தாண்டி வானொலியில் அவருடைய குரலையும் தமிழையும் கேட்டு ரசித்தேன். அவை பெரும்பாலும் திரை சார்ந்ததாகவே இருந்தது.

கல்லூரி நாட்களில் அவருடைய கவிதைகளை அங்கென்றும் இங்கென்றுமாய் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது  மலேசிய சந்திப்பு.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வேலை செய்யும்போது வைரமுத்துவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதுவும் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தேன்.  மேலும் அன்று அவரின் ஆட்டோகிராப் பெறும் பேறு பெற்றேன். அந்த நிகழ்வே  கவிஞரின் கவிதைகளை மேலும் உள்ளார்ந்து படிக்கத் தூண்டியது.

கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல,   அது ஓர் உணர்வு என்பது தெளிந்தது. இப்போது கூட கவிஞரின் மூன்று  பக்கத்துக்கு மிகமான சில கவிதைகளை என்னால் மனப்பாடமாக சொல்லக் கூடும். (கவனிக்க: திரை பாடல்கள் அல்ல)

அவரின் எல்லா வகை படைப்புகளுடன் பயணித்ததில்,  திரைப்பட பாடல்களை தாண்டியது  அவரது ஆளுமை என்பது என் எண்ணம்.  என்னை பாதித்த தமிழின்  சொந்தகாரர் அவர்.  அவரின் பாதிப்பு இல்லாத இளம் கவிஞர்கள் இல்லை எனவே சொல்ல தோன்றுகிறது.

அவரை பற்றிய எளிய ரசிகன்  என்னுடய கவிதை சில துளிகள்,
"என் ஜன்னல் வழிப் பார்வையில்"  கவிதைத் தொகுதியில் இருந்து

**************
"வடுகப்பட்டி தந்த வைரமே,
பொன்மாலைப் பொழுதில்,
ஒரு விடியலைத் தந்தவனே!

முண்டாசு, முரட்டு மீசை: பாரதி,
வெள்ளை ஜிப்பா, கருப்பு மீசை: வைரமுத்து,
தமிழனின் கடைசி அடையாளமாக
உன் மீசை!
...

அழகியலையும் அறிவியலையும்
புதுக் கவிதையில் கோத்து
மணம் வீசச் செய்தீர்!
....
தமிழ்ச் சாகரத்தின்
கலங்கரை விளக்கமே!
...

அரை நூற்றாண்டு கடந்தபின்பும்
தமிழ்ச் சமுதாயத்தில்
முதல் இளைஞனாக நீ,
தமிழின்
கடைசி நம்பிக்கையாகவும் நீயே!
"

என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook

இந்தியாவில் நூல்களை வாங்க:
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam
USAவில் நூல்களை வாங்க (PayPal):

Sunday, July 6, 2014

நடிகர் கமலும் ஜன்னலும்

என்னுடய "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியை
பரிசாக பெற ட்வீட் கவிதைப் போட்டியை முன்னேர் பதிப்பகம்  அறிவித்து இருந்தது.  மேலும் விவரங்கள் இங்கே

http://munnerpathippagam.wordpress.com/2014/06/30/ejvptwpt/

இப் போட்டிக்கான மூன்று வெற்றிக் கவிதைகளை தேர்ந்தேடுக்கும் பொறுப்பை   நண்பர் திரு.சொக்கன் என்னிடம் விட்டு விட்டார்.
எதிர்பார்த்ததை விட அதிக படைப்புகள், கொஞ்சம் சிக்கலான வேலைதான்.
:) போட்டியின் முடிவுகளுக்கு செல்லும்முன் ஜன்னல் பற்‌றி சில வார்த்தைகள்.

"ஜன்னல்"  என்ற சொல்லே வசீகரமானதாகவும் அதில் ஓரு மந்திரம்  இருப்பதாகவும் எண்ணுகிறேன்.

அதில் ஒரு நெடும் கனவு, நிறைவேறாத ஆசை, பொழுதுபோக்கு என சகலமும் சம்பந்தப்படுகிறது. அதனாலயே ஜன்னல் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக ஒரு எண்ணம். கண்டிப்பாக உங்கள் வாழ்விலும் ஜன்னல் பற்றிய ஏதேனும் ஒரு நினைவு இருக்கும். அது வீடு,பள்ளி,கல்லூரி அல்லது
ரயீல், பேருந்து என எதனுடாவது தொடர்புகொண்டு இருக்கும்.

மேலும் மொழி வேறுபாடின்றி  ஜன்னல் பற்‌றி எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். "ஜன்னல்"  பற்றி பல  கவிதைகள் மற்றும் கதைகளையும் கடந்து வந்தாலும் முதலில் மனத்தில் நிழலாடுவது கவிஞர் மு.மேத்தா அவர்களின் இந்த கவிதை.

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.
-
கவிஞர்மு.மேத்தா


இது ஒரு மூச்சில் படித்து விட்டு, நாம் கடந்து செல்ல கூடிய கவிதையல்ல,  ஆயிரம் கதை சொல்லக் கூடியது. மன ஏக்கத்தை மிக அழகாக சொல்கிறது.

என்னை கவர்ந்த இன்னொரு "ஜன்னல்" கவிதை நடிகர் கமல் எழுதியது.
(பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது கனடாவில் அவர் எழுதியதாக,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் குமுதம் நாளிதழில் படித்த
நினைவு)

என் ஜன்னல்வழிப் பார்வை
கலிலியோவின் உலகை சதுரமாக்கியது
-உலக நாயகன் கமல்ஹாசன்


இந்த இருவரிகளும் ஆழ்ந்த கருத்துடையது. இந்த வரிசையில் என்னுடைய "ஜன்னல்" முயற்சியை இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.



இந்தியாவில் நூல்களை வாங்க:
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam
USAவில் நூல்களை வாங்க (PayPal):
Facebook fan page:www.facebook.com/ejvpbook
கவிதை போட்டியின் முடிவுகள் மிக விரைவில். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிகநன்றி, வென்ற மூவருக்கும் என்  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

போட்டி முடிவுகள் இதோ :
http://munnerpathippagam.wordpress.com/2014/07/10/ejreslts/

அன்புடன்,
ஆரூர் பாஸ்கர்.