Wednesday, October 23, 2019

ஓஷோ எனும் ஆளுமை

சமயங்களில் சில புதிய மனிதர்களைச் சந்திக்கும் போது இவரை எப்படி  இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்தோம்  (நல்ல விதத்தில்)  என நினைக்கத் தோன்றும் . அப்படி சமீபத்தில் வாசிக்கும்போது தோன்றிய புத்தகம் "Osho's Emotional Wellness" (Transforming Fear, Anger, and Jealousy Into Creative Energy)  தமிழில் நேரடியாக  "உணர்ச்சி ஆரோக்கியம்" (எப்படி பயம், கோபம், பொறாமையைப்  படைப்பு ஆற்றலாக மாற்றுவது)  எனச் சொல்லலாம்.

நமது தினசரி பிடுங்கல்களில் இருந்து கொஞ்சம் விலகி நின்று வாழ்வைச் சற்று உள்ளார்ந்த பார்வை பார்க்க வைக்கும் புத்தகம்.

நம் அன்றாட வாழ்வின் மிகப்பெரிய சிக்கலே வாழ்க்கையை வாழ்வதுதான்.
உண்மையில் உள்ளே என்ன  நினைக்கிறோம். எதை வெளியே சொல்கிறோம்.  அதை எப்படிச் சொல்கிறோம்.  என நொடிக்கு நொடி நமக்குள் பல கேள்விகள் பல அடக்குமுறைகள்.  சமயங்களில் நம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், நெருக்கமானவர்களைக் காயப்படுத்திவிடுகிறோம்.  இல்லை சொன்னால் அவர்களிடமிருந்து அந்நியப்படுவோம் என அஞ்சி சிலதைச் சொல்லாமல் மறைக்கிறோம். அந்தவகையில் எது சரி, எது தவறு. அதை யார் சொல்வது எனும் பல குழப்பங்களுக்கு விடை காண முயலும் ஒரு புத்தகம் இது என்றும் சொல்லாம்.

குறிப்பாக மானுட வாழ்வின் கசடுகளைப் பற்றி ஓஷோ எனும் ரஜனீஷ் பல புத்தகங்களை எழுதியிருப்பதாக அறிகிறேன். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் மானுடத்தை உடல், புத்தி, இதயம் (body,mind,heart) என மூன்றாகப் பிரித்து அதன் போக்கையும் அழகாகச் சொல்கிறார். அதனூடாக ஆண், பெண் உறவுச் சிக்கலையும் அவர் சொல்லத் தவறவில்லை. அதுபோல மனிதர்கள் ஒவ்வொரும் தனித்துவமானவர்கள். அதனால், நம்மை நாமே தினம் தினம் சக மனிதர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டு பொறாமை பிடித்து வாழ்வது முட்டாள் தனமான செயல் எனவும் சாடுகிறார்.

பொறாமை குறித்து ஓரிடத்தில் "நல்லவேளை நீ மரங்களுடன்   உன்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை.  அப்படி செய்திருந்தால் நீ மிகுந்த  பொறாமை பட்டிருப்பாய். நான்  மட்டும் ஏன்  பச்சையாக இல்லை. எனக்கு மட்டும் ஏன் பூக்களைத் தாங்கும் சக்தி இல்லை என்றெல்லாம் கூட பலவாறு நீ வருத்தப்பட்டிருப்பாய். 

அதுபோல நல்லவேளையாக பறவைகளோடும், ஆறுகளோடும், மலைகளோடெல்லாம்  நீ  உன்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படிச் செய்திருந்தாலும் நீ  இன்னமும் மிகுந்த வேதனை பட்டிருப்பாய்.

நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய். இல்லையென்றால் நீ தினம் தினம்  உன்னை ஆடும் மயிலோடும், பேசும் கிளியோடும் ஒப்பிட்டு ஒப்பிட்டு பொறாமையால் வெந்திருப்பாய்.  ஒருகட்டத்தில் அந்தப் பொறாமையின் கனம் தாங்காமல்  நீ செத்து ஒழிந்திருப்பாய்".

என பல தத்துவ விசாரணைகளைத் தூண்டும் புத்தகம். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.   முக்கியமாக நான் ஓஷோவின் எல்லா புத்தகங்களையும்
படித்து அவரை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்றோ இல்லை அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், இதை வாசித்தபின் ஓஷோ 20ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவர் எனச் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment