Showing posts with label #irma. Show all posts
Showing posts with label #irma. Show all posts

Thursday, February 17, 2022

இர்மா-அருமையான படைப்பு

எனது இர்மா நாவல் குறித்து முகநூல் நண்பர் சுதா ரவி அவர்கள் சென்னையில் இருந்து எழுதியது. நன்றி சுதா !

//

 இர்மா – ஆரூர் பாஸ்கர்

இயற்கை பேரழிவின் கோர தாண்டவத்தை, அந்த ஆறு நாட்களை அதிலிருந்து அனுபவிப்போரின் மன நிலையிலிருந்து மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆசிரியர் சொல்லும் சம்பவங்களை கதையாக இல்லாமல் நம்மை அங்கிருக்கும் சூழலை உணர வைத்திருக்கிறார். ஒரு பேரிடர் வரும் போது மனித மனங்களில் எழும் அழுத்தமும், பயமும், பல விதமான உணர்வுகளையும் பரணியின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
ப்ளோரிடா மாகாணத்தை அடிக்கடி தாக்கும் சூறாவளியின் தாக்கங்களையும், முன்னேற்பாடுகளையும் மக்களின் மனதில் எழும் பயத்தையும் ஒவ்வொரு சம்பவத்தின் மூலம் காட்டி இருக்கிறார்.
இர்மா கேட்டகரி ஐந்து என்று சொல்லப்பட்டு, பல விதமான செய்திகளை தாங்கிக் கொண்டு ப்ளோரிடாவில் இருக்கும் மக்களை பரபரப்படைய செய்து மெல்ல நகர ஆரம்பிக்கிறது. பரணி தன் குடும்பத்துடன் வாழும் இளைஞன். முதலில் சாதரணமாக எடுத்துக் கொண்டவர்கள் எல்லாம் நேரமாக ஆக இர்மாவின் தீவிரத்தை அறிந்து தங்களது பாதுக்காப்பை நாடி வேறு இடங்களுக்கு இடம் பெயர முடிவெடுக்கிறார்கள்.



பரணியும், தாரிணியும் அங்கேயே இருந்து சமாளித்து விடலாம் என்று அதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். இயற்கை பேரிடர் ஏற்படும் போது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அலைந்து திரியும் நிலையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு பக்கம் இர்மாவை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டும், வீட்டின் பாதுகாப்பை பலப்டுத்திக் கொண்டும் தண்ணீருக்கும், பெட்ரோலிற்கும் அலைகிறான் நாயகன்.
அவன் மனதில் இர்மாவை பற்றிய அழுத்தம் இருந்தாலும், அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய நெருடலும், சொந்த மண்ணைப் பிரிந்த வேதனையும் தென்படுகிறது. இர்மாவிற்கு முன் அந்த ஆறு நாட்களை அவர்களின் மன நிலையிலிருந்து காட்டி இருக்கிறார். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை தாண்டி இர்மா எந்தப் பக்கம் நகருகிறதோ என்று எண்ணும் அளவிற்கு இர்மாவின் தாக்கம் நம்மையும் அழுத்துகிறது.
ஆசிரியர் அமெரிக்க வாழ்க்கையின் சலனங்களை, ஆப்ரிக்க அமெரிக்ககர்களின் வேதனையை, இயற்கை பேரிடரில் கூட மறைந்திருக்கும் இன வெறியை என்று பல்வேறு சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார்.



இர்மா என் நினைவலைகளை மீட்டிச் சென்றுள்ளது. 1977- ஆம் ஆண்டு நாகைப்பட்டினம் நவம்பர் பனிரெண்டு அன்று காலையில் இருந்து ரேடியோவில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. புதிய புயல் சின்னமொன்று நாகையை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அன்று இரவு கரையைக் கடக்க கூடும் என்று.
மதியம் வரை அது சாதாரண புயல் சின்னமாக மட்டுமே இருந்தது. அதனால் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சுமார் மூன்று மணியளவில் மீண்டும் ரேடியோவில் அறிவிப்புகள் கலவரத்துடன் வர ஆரம்பித்தன. புயல் சின்னமாக இருந்தது சூறாவளியாக உருவெடுத்து விட்டது என்றும், தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிவேகமாக பேரிடர் குழுக்கள் முடுக்கிவிடப்பட்டன. அவசரம் அவசரமாக தாழ்வான இடங்களில் இருந்தவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். நாங்கள் இருந்த இடத்திற்குப் பின்னே சுமார் ஒரு மூன்று கிலோமீட்டருக்குள் கடற்கரை. பேரிடர் குழு எங்களை காலி செய்து கொண்டு எங்காவது சென்று விடும்படி கூறியது. அந்த நேரத்திற்கு மேல் எங்கும் செல்ல முடியாது என்று கூறி கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு அங்கேயே தங்கி விட்டோம்.
அவசர தேவைகளுக்கு பக்கத்திலிருந்த கடையில் பால் பவுடர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்கள் வாங்கி வைத்துக் கொண்டோம். ஏழு மணி வரை எந்த மாற்றமும் இல்லை. ஊர் மிக அமைதியாக இருந்தது. மக்களுக்கு சூறாவளியின் தீவிரம் புரியவில்லை. ஆனால் அரசாங்கம் அலறிக் கொண்டு மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது.
சுமார் ஒன்பது மணியளவில் காற்று சுத்தமாக நின்று போய் ஊரே இறக்கமாக மாறியது. லேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. ரேடியோவில் சூறாவளி நாகைக்கு மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது இரவு பனிரெண்டு மணிக்கு கரையை கடக்கும் என்று அறிவித்தது.
ரேடியோவில் பாடல்களும் அறிவிப்புகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பத்து ஐம்பதுக்கு காற்றின் வேகம் லேசாக கூட ஆரம்பித்திருந்தது. மழையின் வேகமும் அதிகரித்தது. அப்போது சூறாவளி கரையை கடக்க தொடங்குகிறது என்றும் அதனால் சற்று நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது.
குயிலே கவிக் குயிலே” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. சடாரென்று மின்சாரம் நின்று போனது.
அப்போது மழை குறைந்து ஒரு ஆட்டோவின் ஹாரன் சத்தத்துடன் காற்று சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. நானும் என் தாயும், தந்தையும் ஒரு ஜன்னலில் நெருக்கமாக அமர்ந்திருந்தோம். காற்றின் வேகத்திற்கு எங்கள் வீட்டின் ஓடுகள் நான்கு புறமும் பறந்து சென்றது.
நமது முடிவு நிச்சயம் என்கிற எண்ணத்தோடு பயந்து கொண்டே அமர்ந்திருந்தோம். காற்றின் அறைகூவல் காதுகளை செவிடாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர பேயாட்டம் முடிந்து ஊரையே தரை மட்டமாக்கியது.
மறுநாள் காலை வீட்டின் வாயிலை திறந்தால் மக்கள் கூன் போட்டுக் கொண்டே நடந்து சென்ற கொண்டிருந்தனர். காற்றின் வேகம் அப்போதுமிருந்தது. எங்கும் மக்கள் பிணங்களை தூக்கி கொண்டு போய் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டு வாயிலின் சுவற்றில் ஒரு முழு ஆட்டை அப்படியே தூக்கி அடித்திருந்தது.
தென்னை மரங்கள் அனைத்தும் தலையை இழந்திருந்தது. கொல்லைபுற கதவை உடைத்துக் கொண்டு கட்டுமரம் ஒன்று பாதி உள்ளே வந்திருந்தது. அன்று எங்களின் அதிர்ஷ்டம் கடல் நீர் ஊருக்குள் நுழையவில்லை. அதே சூறாவளி ஒரு நாள் விட்டு ஆந்திராவை சின்னாபின்னம் ஆக்கியது. சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழப்பு.
இர்மா 1977 நவம்பர் 12 க்கு கூட்டிச் சென்று விட்டது. அருமையான படைப்பு...வாழ்த்துக்கள் சார்.

//

Wednesday, March 24, 2021

சிங்கப்பூர் நூலகங்களில் இர்மா(அந்த ஆறு நாட்கள்)

சிங்கப்பூரில் வசிக்கும் வாசகி ஒருவர்  வழியாக நேற்று ஒரு தகவல் வந்தது.

எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" (நாவல்) சிங்கப்பூரில் 20-க்கும் அதிகமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கிறதாம். சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நண்பர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தக இருப்பை சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் இணையதளத்தின் மூழம் தெரிந்து கொள்ளலாம். முகவரி:

catalogue.nlb.gov.sg

Saturday, September 26, 2020

இர்மா-அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினம்

"இர்மா-அந்த ஆறு நாட்கள் "குறித்து முகநூல் வாசகர்  Senthan Sethirayar  அவர்களுடைய  பதிவை இங்கே பகிர்கிறேன். நன்றி செந்தன் !!

//புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் ஈழ புலம்பெயர் இலக்கிய சூழலையொட்டியே அதிகம் இருக்கும். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிணி தொழில்நுட்ப வேலைகளினால் கடந்த இருபது வருடமாக பெருமளவில் அதிகரித்ததென்றாலும், இயல்பிலேயே வாசிப்பு தன்மை அதிகமில்லாததால், நம் சமூகங்களிலிருந்து பெருமளவிலான படைப்புகள் உருவாவதில்லை. அப்படியான ஒரு சூழலில் எழுத்தாளர்  திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் “இர்மா - அந்த ஆறா(ஆறு) நாட்கள்”  எனும் புதினம் அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை பதிவு என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் புத்தக வாசிப்பு பற்றிய பேஸ்புக் நேரலையை பார்த்தபிறகு அவருடைய “இர்மா - அந்த ஆறா (ஆறு) நாட்கள்” 


நாவலை கிண்டிலில் வாங்கினேன். மனிதர் ஏமாற்றவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக ஃப்ளோரிடா வாசியானதால், இங்கு மக்கள் ஹரிக்கேன் எனும் பெரும்புயலுக்கு எப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியும், அதே சமயம் தெற்கு ஃப்ளோரிடா பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பலரும் அவர்களின் இர்மா புயல் காலத்திய நினைவுகளை பகிர்ந்திருந்தது என கிட்டதட்ட இந்த புனைவு குறிக்கும் காலநிகழ்வுகளில் இயல்பாக பொருத்திக்கொள்ள முடிந்தது.

கதையின் மையம் என்பது வாழ்வின் நிலையில்லாமையை காட்டுகிறது, நிகழ்வுகள் யாவும் பரணி எனும் கதை நாயகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. பரணி வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்தாலும், சொந்த ஊரின், மக்களின் நினைவுகள் பரணியின் மனதில் வரும் போது காட்டும் நிலையில்லாமையிலிருந்து, இர்மா எனும் ராட்சத ஹரிகேனினால் தன் வீட்டை விட்டு பாதுகாப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் போது பரணிக்கு ஏற்படும் மனபோராட்டம் காட்டும் நிலையில்லாமை என்று தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் மிக விரிவாக அமெரிக்க வேலை சூழல், வீட்டு சூழல், குடியுரிமை பிரச்சனைகள், புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் அமெரிக்க மக்கள் பற்றிய அவதானிப்புகள், அமெரிக்காவின் பொது நிர்வாக கட்டமைப்புகள், கருப்பின மக்களின் துயரங்கள் என்று பலவற்றையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் அதுவே சற்று தோய்வாகவும் இருக்கிறது. ஆனால் அமெரிக்க புலம்பெயர் சூழலில் வாழாதவர்க்கும் சேர்த்தே எழுத்தப்பட்டது என்பதால்,இப்படி இருப்பதே புனைவினுள்ளே வாசகனை இழுக்க செய்கிறது. 

ஹரிக்கேன் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ஊரைவிட்டு வேறு பாதுக்காப்பான ஊர்களுக்கு போகலாமா வேண்டாமா என்று நடக்கும் மன போராட்டம் என்பது ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்திராதவற்கு விளங்காத ஒன்று. ஆனால் அப்படியான நாட்களில் பரணியின் எண்ணவோட்டம் என்பது இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் எண்ணவோட்டங்களை  அப்படியே பிரதிபலிக்கிறது. கடந்த   ஹரிக்கேன் சீசனில் வந்த புயலில் ஏறகுறைய இதே நிலைமை தான் எனக்கும். 

அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முதல்தலைமுறை தமிழர்கள் பலரின் நெருக்கடிகளை அப்படியே எழுதியிருக்கிறார். பரணி புயல்கால சமூக பணிகளுக்கு(volunteering) தன் பெயரையும் கொடுக்கட்டுமா என கேட்கும் போது அவன் மனைவி, வீட்டில் பிள்ளை குட்டிகளை வைத்து கொண்டு தங்கள் பாதுக்காப்பே கேள்விக்குறியாக இருக்கும் போது எதற்கு இந்த வேண்டாத வேலை என கடிந்துகொள்வது, என்ன தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வீடு வாங்கி பிள்ளைகளோடு வாழ்ந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது பலருக்கும் புலம்பெயர்ந்த நிலம் அன்னிய நிலமாகவே தம் காலமுழுதும் இருக்கும் என்பதை அழகாக சில சொற்களில் காட்சிபடுத்தியிருக்கிறார்.

அதே போல, தன் சக பணியாளர்கள் புயலுக்கு பிறகான மறுசீரமைப்பு வேலைகளில் கடுமையாக வேலை செய்யும் போது, தான் மட்டும் அட்லான்டாவில் பாதுக்காப்பாக இருப்பதில் பரணிக்கு ஏற்படும் குற்றயுணர்ச்சியை காட்டும் இடங்கள் அருமை.  

அமெரிக்க வாழ்க்கை பற்றி பரணியின் எண்ணங்களாக வரும் வார்த்தைகள் எல்லா புலம்பெயர் தமிழர்களின் எண்ணங்களே, இவ்வாழ்க்கையில் பல சமயங்களில் பெறுவதை விட இழப்பது அதிகமென்றே தோன்றும். இங்கே புதிதாக தமிழர்களை சந்திக்க நேர்ந்தால், பேச்சு அமெரிக்கா வந்ததினால் ஏற்படும் இழப்புகளை பற்றி பேசாமல் முடியாது. 

அதே சமயம், சில சமயங்களில் பரணியின் மனவோட்டங்களாக எழுத்தாளரின் எண்ணங்கள் வலிந்து திணிக்கப்பட்டது போன்று தோன்றவதையும் சொல்லியாக வேண்டும் , குறிப்பாக புயலை நினைத்து வருத்தப்படும் போது வாழ்கையை பற்றிய அவதானிப்புகள் ஏற்கனவே பல புதினங்களில் படித்தது போலவே இருப்பது, அட்லான்டா நோக்கி பயணப்படும் போது வரும் புலம்பெயர்தல் பற்றிய வர்ணனைகள், என்று, சில இடங்களில் சற்று ஆசுவாசபடுத்துகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும் கருப்பர் இன சம்பந்தமான பதிவுகளும், புனைவும் தேவையில்லாமல் கருப்பர்கள் பற்றிய கருத்தை பதிவிட எழுதப்பட்ட இடைச்சொருகளாக தோன்றியதை தவிர்க்கமுடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மனவோட்டங்களையும் அதனுள்ளே இழையோடும் நிலையில்லாமையையும் இவ்வளவு விரிவாக வேறு யாரேனும் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதற்காகவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினங்களில் ஒன்று.

ஒரே வருத்தம், பதிப்பித்த நூலில், மேலும் சில பின் இணைப்புகளை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன், அவற்றை வாசிக்கமுடியாமல் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வாசிக்க வேண்டும். 

கிண்டிலில் வாங்க - https://www.amazon.com/அந்த-நாட்கள்-Tamil-ஆரூர்-பாஸ்கர்-ebook/dp/B07NBDM78S/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=இர்மா&qid=1592258584&sr=8-1

//

புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

Tuesday, May 19, 2020

இர்மா- அந்த ஆறு நாட்கள் (அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின்...)

"இர்மா- (அந்த ஆறு நாட்கள்)நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்களும் வாசக அனுபவங்களும் தொடர்கின்றன.
சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் நண்பர் சீனிவாஸ் பாலகிருஷ்ணன் இர்மா குறித்து முகநூலில்  எழுதியது. நன்றி   சீனிவாஸ் !!

************
...இர்மாவின் பொழுது ப்ளோரிடா மாகாண சுற்றுப்பயணத்தில் இருந்த என்னாலேயே இது குறித்து மிகப்பெரிய கதைகளை எழுத முடியும் என்றால் அங்கேயே பலவருடங்களாக வசித்துவரும் ஆரூர் பாஸ்கரைப் பற்றிக் கேட்கவா வேண்டும். மேலும் அங்கு வாழ்ந்துவரும் அத்தனை மக்களையும் இர்மா கரையைக் கடக்கும் முன்னரே மனதளவில் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆரூர் பாஸ்கர் குறிப்பிடும் இந்தத் தகவலின் மூலம் இர்மாவின் வலுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதைக் கூறுவதன் காரணம் –சூறாவளி என்பது அந்த நிலத்தில் அவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதைப் போல. பழகிய ஒன்றைக் கண்டு யாரேனும் மிரள்வார்களா? ஒருவேளை பழகிய ஒன்று முன்னெப்போதையும் விட வெறிபிடித்துப் பேய்வேகத்தில் வந்தால்?
இந்த நாவலை அவர் மிகச் சிறப்பாக எழுதுவதற்கான மற்றுமொரு காரணம் அவர் சார்ந்த பணிச்சூழல். ஒட்டுமொத்த ப்ளோரிடா மாகாணத்தின் மின்பகிர்மான நிறுவனத்தில் பணிபுரியும் அவர், தன் நாவலின் ஒரு பகுதியாக மனிதனின் மிக அத்தியாவசியத் தேவையான மின்கட்டுமானம் – இது போன்ற இடர் காலங்களில் எவ்வாறு மறுசீரமைக்கப்படுகிறது என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

அந்த ஆறா நாட்கள் என்று குறிப்பிடுவது, தன் வாழ்வில் மிக நேரடியாக நுழைந்து மனதளவில் மிகவும் நிலைகுலையச் செய்த இர்மா என்ற பெரும் சூறாவளியையும் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்ற நம்பிக்கைக் கதையையும்தான்.
தமிழ் எழுத்தாளர் எழுதிய அமெரிக்கக் கதை என்றளவிலும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் இந்த வகைமையில் நான் வாசிக்கும் இரண்டாவது நாவல் இது. அ.மி எழுதிய ஒற்றன் வாசித்திருக்கிறேன் அதில் தன்னை ஒரு பயணியாகப் பொறுத்தியிருப்பார் அ.மி. இதில் ஆரூர் பாஸ்கர் தன்னை ஒரு பேரழிவின் நேரடி சாட்சியாகப் பொருத்தி இருக்கிறார்.
பரணி என்கிற மைய கதாபாத்திரம் தன் மனைவியிடம் ஹரிகேன் இர்மா குறித்து பேசுவதைப் போல் ஒரு பகுதி வரும் “பொண்ணுங்க பேர் வச்சா ஹரிகேன் இன்னும் பயங்கரமா நாசம் செய்யுமாம்”. மனிதர்களிடம் சிக்கிக்கொண்ட இந்த ஹரிகேனை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

நாவலின் ஊடாக அமெரிக்க வாழ்க்கையும் பதிவு செய்துகொண்டே வருகிறார் ஆரூர் பாஸ்கர். அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசி இருக்கலாமோ என்று தோன்றினாலும், ஒருவேளை நான் அமெரிக்கா வராமல் இருந்திருந்தால் அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
நாவலின் இடையே அவர் சந்தித்த மற்றுமொரு ஹரிஹேன் பற்றிக் குறிப்பிடும் இடம் அட்டகாசமாக அமைந்துள்ளது. நாவலின் பெருங்குறை முன்பாதி என்றால் பெரும்பலம் பின்பாதி. நாவலைக் கட்டமைக்கும் ஆரம்ப இடங்களில் சொதப்பிவிட்டாற்போல் தோன்றுகிறது. அதற்குக் காரணம் வாக்கியக் கட்டமைப்பு. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்திலும் சூறாவளி குறித்த முன்குறிப்புகளை சேர்த்தது நல்ல யுக்தி. மேலும் எத்தியோப்பிய உணவகம் ஒன்றில் அவர் சந்திக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் உடனான உரையாடலும், அந்த மனிதர் கூறும் கறுப்பர்கள் கதையும் அமெரிக்க வரலாற்றின் துன்பப் பக்கங்களை நினைவு கூற்பவை.
எழுத்து பிரச்சுரத்தின் புத்தக வடிவமைப்பு அட்டகாசமாக இருக்கிறது. லைட் வெயிட். கையில் காற்றைச் சுமப்பதைப் போல் இருக்கிறது. பாண்ட் சைஸ் சிறியதாக இருப்பது ஒரு குறை என்றாலும் அதுவும் வாசிக்க வாசிக்கப் பழகிவிட்டது.
அந்த ஆறா நாட்கள் – அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின் வேறொரு பக்கத்தினை நம்மோடு உரையாடுகிறது. நம்முடைய மொழியில்.



புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

https://zerodegreepublishing.com/product-category/authors/aroor-bhaskar/

Wednesday, December 25, 2019

இர்மா- அந்த ஆறு நாட்கள்

நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! .  கடந்த ஆண்டு எனது  'அந்த ஆறு நாட்கள்'  (புதினம்/நாவல்)  அமெசான் கிண்டிலில்   வெளியானது  
உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு  எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது.  தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம். 

பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம்.  அதுபோல,  நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில்  வாசகர்களின்  ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள்  (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம்.  இது எனக்கு நான்காவது நூல். 

நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய  ‘எழுத்து பிரசுரம் பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.  

அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா... இனி உங்கள் கைகளில்.