Showing posts with label #tamilclass. Show all posts
Showing posts with label #tamilclass. Show all posts

Sunday, March 17, 2019

கதைச்சொல்லி

இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் தேடிப்பிடித்து  தமிழ் சிறுவர் கதைப்புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். பெரும்பாலனவை
குழந்தைகள் விரும்பும் வகையில் விலங்குகளைக் கொண்டு சொல்லப்படும் நீதிக்கதைகள், குறும்பான நகைச்சுவை கதைகள்.  தெனாலிராமன், புராண, காப்பியக் கதைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மிடம் ஆங்கிலத்தில் இருப்பது போல வெரைட்டி இல்லை எனும் குறை கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக  இன்று அறிவியல் புனைகதைகளுக்கான தேவை இருக்கிறது.

சொல்வளம் அதிகமில்லாத அமெரிக்க பிள்ளைகளுக்கு  தமிழ்புத்தகங்கள் வாங்குவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. முதன்மையாக கதை நீண்ட வாக்கியங்களில் இல்லாமல் மிகவும் சுருக்கமாக எளிமையான மொழி நடையில் இருக்கவேண்டும். அடுத்தது சொற்களின் பயன்பாடு - பிள்ளைகளுக்கு பரிட்சியமில்லாத அந்நியச் சொற்களை
அறிமுகப்படுத்துவதிலும் சிரமிருக்கிறது. அப்படியே புதிய சொற்களை அறிமுகம் செய்வதாக இருந்தால் அதற்கு துணை செய்வதுபோல ஒவியங்கள் அமைந்திருந்தால் வாசிப்பு எளிமையாகும். உதாரணமாக பாம்பு புற்றில் இருந்து தலை தூக்கியது என கதையில் எழுதினால்,  கூடவே கண்டிப்பாக மண் புற்றின் படத்தைப்  போட்டுவிடுங்கள். புற்றுக்கு நாங்கள் விளக்கம் சொல்ல கூகுளைத் தேடவேண்டியிருக்காது.  அதுபோல அந்தக் கதை ஒரு நீதிக்கதையாக இருந்தாலும் குழந்தைகளின் உளவியலை அறிந்து அவர்களை ஏதோ ஒருவிதத்தில் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் இருப்பதும் நல்லது.  பல தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களையும்
பார்க்கமுடிந்தது. அதுபோல சில புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டும் அடுத்தடுத்தாக சேர்ந்தும் கூட வந்திருப்பதைப் பார்த்தேன்.

இன்னொரு முக்கியமான அம்சம் அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியம்
கவனத்தைக் கவரும் வகையிலும் அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் ஓவியங்களும் கற்பனையைத் தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும்.
ஓவியத்தோடு கதையை வாசிக்கும் பிள்ளைகளுக்கு அவை  மன எழுச்சியை தரவேண்டும்.

இனி இந்தப் புத்தகங்களை வார இறுதியில் தமிழ்வகுப்புகளில் வாசிக்கத் தொடங்க வேண்டும். வழக்கம்போல் ஆசிரியர் கதைகளை வாசித்து காட்டுவதை விடுத்து பிள்ளைகள் தன்னிச்சையாக கதையை வாசிக்கவும், அதை மற்றவர்களிடம் பகிரும் பழக்கத்தையும் ஊக்குவிக்கவும் ஒரு யோசனை செய்திருக்கிறேன்.

அதன்படி இனி வரும் நாட்களில்  ஒவ்வொரு வாரமும் பிள்ளைகளில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்வு
செய்யப்பட்டவரே அடுத்த வாரத்தின்  "கதைச்சொல்லி". அவரிடம் மேற்ச்சொன்ன ஓர் எளிய தமிழ் சிறுவர் சிறுகதைப் புத்தகத்தைக் கொடுத்துவிடலாம்.   அவர் அந்தக் கதையை வீட்டில் வாசித்து முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு வரும் வாரத்தில் மற்ற பிள்ளைகளுடன் பகிரட்டும்.

இப்படிச் செய்வதால் பிள்ளைகளுக்கு தமிழில் சொந்தமாக வாசிக்கும்
பழக்கம் மேம்படுவதுடன் மற்றவர்களுக்கு ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டுவதால் குழுவுடன் புரிந்துணர்வு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக
மற்றவர்களுடைய கைத்தட்டல்களும், பாராட்டுகளும் அவர்களை உற்சாகப்படுத்தி தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.
முயற்சி செய்து பார்ப்போம்.


Tuesday, February 12, 2019

பத்து திருக்குறள்கள்

தமிழ்வகுப்பில் பிள்ளைகளுக்கு வழக்கமான பாடத்தோடு திருக்குறளைப் பயிற்றுவிக்கலாம் என முகநூலில் கடந்த ஆண்டு சில நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருந்தார்கள்.  அதன்படி நாங்களும் சோதனை முயற்சியாக இந்த ஆண்டு பாடத்தோடு பத்து திருக்குறளைக் கற்றுத்தருவது என முடிவு செய்தோம்.

பத்து திருக்குறள் என இலக்கு நிர்ணயித்து விட்டேன தவிர உண்மையில்
உள்ளுக்குள் யோசனையாகத்தான் இருந்தது. கடந்த ஆண்டு தமிழ் அடிப்படையைக் கற்றவர்கள் அதற்குள் திருக்குறளைப் படிக்க தயாராகியிருப்பாரகளா எனும் சந்தேகம் இருந்தது உண்மைதான். ஆனால், எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக பிள்ளைகள் திருக்குறளில் காட்டும் அசுரவேகம் என்னை ஆச்சர்யப்படவைக்கிறது.

பத்துவயதுக்குட்பட்ட இந்த அமெரிக்கப்பிள்ளைகளுக்கு முதலில்
ஒரெழுத்து, ஈரெழுத்து... பிறகு எளிய வாக்கியங்களை முடித்துவிட்டு திருக்குறளையும் அதன் ஆங்கில விளக்கத்தையும் தொடங்கினோம். அடுத்தடுத்து வந்த வகுப்புகளில் அவர்கள் திருக்குறளில் காட்டும் ஆர்வத்தில்
நான் திக்குமுக்காடி போயிருக்கிறேன். ஆண்டிற்கு பத்து எனும் இலக்கை மாதத்திற்கு பத்து என வைத்தாலும் கூட அசராமல் படிப்பார்கள் போல.  அந்த அளவுக்கு இரண்டாயிரம் ஆண்டு தமிழை அவர்கள் எளிதில் கிரகித்துக்கொண்டு அதை மனப்பாடமாகவும் திருத்தமாகவும் ஒப்பிப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

பெற்றோர்கள் தமிழர்களாக இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த இந்தப் பிள்ளைகளின் புழங்குமொழி ஆங்கிலம். இவர்களுக்கு வெளியே தமிழ் பேச வாய்ப்புகள் மிக மிகக்குறைவு. ஆனாலும் திருக்குறளையும்
அதன் பொருளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருகிறார்கள்.

திருக்குறள் ஒருவிதத்தில் அவர்களின் உள்ளே புதைந்துகிடைக்கும் தமிழை  வெளிக்கொணர உதவுவதாக நினைக்கிறேன்.  குறளை மனப்பாடம் செய்து  ஒப்பிப்பது இயந்திரத்தனமானது எனும் ஒரு சிலரின் வாதங்களைத் தாண்டி அதன் பொருளையும் அவர்கள் கற்று தெரிந்துகொள்வது சிறப்பே. எந்தவிதமான அறவழி கோட்பாடுகளையோ சிந்தனைகளையோ பள்ளிகளில் முறையாக பயிற்றுவிக்காத மேற்குநாடுகளில் வாழும் இந்தச் சிறார்களுக்கு திருக்குறள் உண்மையில் ஒரு வரமே.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”
என்பது போன்ற குறள்கள் ஊட்டும் தன்னம்பிக்கையை வேறு எந்த
இலக்கியம் இவர்களுக்கு தந்துவிடமுடியும் சொல்லுங்கள். உண்மையில் எந்தவிதமான குறுகிய எண்ணங்களுக்கும் இடம் தராமல், எவ்வகைச் சார்பும் இன்றி உயர்ந்த நோக்கில் வாழ்வியலைப் பேசும் புரட்சி நூல்
திருக்குறள். மாணவர்களுக்கு இந்த வயதில் மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

தாய் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து பல்லாயிரம் மைல்கள் கடல்கடந்து வாழ்ந்தாலும் புதிய தலைமுறையினரின் சிந்தனையில் ஐயன் வள்ளுவனின் ஈராயிரம் ஆண்டு ஞானத்தைக் கொண்டு சேர்க்கும் சிறு கருவியாக  இருப்பதில் கர்வப்படுகிறேன்.

திருக்குறள் யோசனையைச் சொன்ன அன்பர்களுக்கு நன்றி !

நன்றி- படங்கள் இணையம்.

Friday, October 6, 2017

மா(ற்)றுவார்களா?

தமிழ்நாட்டில் இருந்து வந்த இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வைத்து
இங்கே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்.

பாடத்திட்டம் பற்றி பெரிதாக குறை எதுவும் இல்லை. பாடல்கள், கதைகள், ஏன் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால், கண்களை உறுத்தும் ஒரு
விசயம் புத்தகத்தில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் சில படங்கள். அவை
நம் சூழலுக்கு முற்றிலும் அன்னியமாக படுகிறது.

அந்தப்  புத்தகத்தின் முதல்பாடத்தையே எடுத்துக் கொள்வோமே.
"தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" எனும் பாடலுக்கு கீழே ஒரு பசுவையும் கன்றையும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பசுவும் கன்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டு பசு இனம் அல்ல. அது திமில் இல்லாமல் வெளிநாட்டு வகையாரா போலிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் டெக்சாஸ் வகை பசுபோல பக்கவாட்டில் பெரிய கொம்புகளுடன் இருக்கிறது.

அதுபோல "மீனவர் மீன் பிடிக்கிறார்" எனச் சொல்லிவிட்டு ஒரு தாய்லாந்து
இல்லை சீன மீனவர் தலையில் தொப்பியுடன் இருக்கும் படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி நமது சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத பலவிசயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஒரிடத்தில் யானை எனச் சொல்லி ஆப்பிரிக்க யானை. குரங்கு எனச் சொல்லி பனிக்குரங்கைப் போட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சின்னவிசயம் என என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை.

அதுபோல "குழந்தை சிரிக்கிறது" எனச் சொல்லி ஒரு சைனீஸ் குழந்தையின் படத்தை போடுவதை விட ஒரு அசட்டுத்தனம் இருக்க முடியுமா என்ன ?
சரி, அவை  பாடத்திட்டங்களுக்கு படம் தேர்வு செய்த ஒரு கோமாளி இணையத்தில் திருடிய படங்கள் என்றால் இதையெல்லாம் மேற்பார்வை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?.

பிள்ளைகள் நேரடியாக அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கக்கூடிய,உணரக்கூடிய விசயங்களை கல்வியாளர்கள் பாடத்திட்டங்களின் வழியாக சரியாக கொண்டுசேர்க்கவேண்டாமா ? ஒரு படம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் எனச் சொல்வார்களே. ஆரம்பக் கல்வி வாயிலாக குழந்தைகளுக்கு  நுட்பமான ஒரு விசயத்தை சொல்கிறோம் எனும் பிரக்ஞைகூட அவர்களுக்கு இல்லையா.
இல்லை, "நாய்" எனச் சொல்லி பிள்ளைகளுக்கு லேப்ரடார் (labrador) வகை நாய்களை வளர்க்கச் சொல்லி மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறார்களா ? புரியவில்லை.

இதற்கு வேறு சாயங்கள் பூசாமல் நேரடியாகவே கேட்கிறேன். லண்டனில்
படிக்கும் ஒரு குழந்தையின் பாடத்தில் "காய்" எனச் சொல்லி முருங்கைக் காயின் படத்தை போடுவார்களா ? இல்லை "விளையாட்டு" எனச்
சொல்லி கபடி ஆடும் படத்தைதான் போடுவார்களா என்ன ?  சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா ?

*************
இது புதிய தலைமுறை கல்வி இதழில், "மா(ற்)றுவார்களா?" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை.

#அலட்சியம்

Monday, September 18, 2017

தமிழ்ப்பள்ளி - மைல்கல்

அமெரிக்கவாழ் பிள்ளைகளுக்கான வார இறுதி தமிழ்வகுப்பு எனும் 
பயணத்தில் நாங்கள்  ஒரு முக்கிய  மைல்கல்லைத் தொட்டிருக்கிறோம் என்பதை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று  6-7 பிள்ளைகளுக்கு
வீட்டில்  1 மணி நேரம் என முடிவு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன் அகரத்திலிருந்து தொடங்கினோம். பின் மெய் எழுத்துகள் அதைத் தொடர்ந்து உயிர்மெய் எழுத்துகள் என முழுவதையும் அறிமுகம் செய்துவிட்டோம்.

அறிமுகம் என்பதைத் தாண்டி அவர்களால்  இனி எழுத்துகளை அடையாளம் கண்டு, வாசிக்க இயலும். சொன்னால் புரிந்துக் கொண்டு எழுதிக் காட்ட முடியும்.  கொஞ்சம் முயற்சி செய்து அவர்களால்  சிறிய வார்த்தைகளை வாசிக்கவும், பார்க்காமல் எழுதவும் இயலும்.

இதையே ஒரு வெற்றியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை. 
இது அவர்களுடைய நீண்ட தமிழ்ப் பயணத்தின் ஒரு தொடக்கம் என்பதை நான் நன்றாக அறிவேன்.  உண்மையில் Light At the end of the tunnel என ஆங்கிலத்தில் சொல்வதைப்  போலோரு உணர்வு. 
ஆரம்பத்தில் வாரத்துக்கு வெறும் ஒரு மணிநேரத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா ? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது கண்டிப்பாக நம்பிக்கை வந்திருக்கிறது. உள்பெட்டியிலும், இமெயிலிலும் தொடர்பு கொண்டு
உற்சாகமளித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்னிடம் வரும்  பெற்றோர்களிடம் நான்  தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பொறுமை.  இதுவரை தமிழே பேசாத ஒரிரு பிள்ளைகளை வீட்டில்  உடைந்த தமிழ் பேசத்தொடங்கியிருப்பதே நல்ல தொடக்கமாக பார்கிறேன். மொழியைப் பொறுத்தவரை அடிப்படை மிக முக்கியம். அதை சரியாக வென்றேடுத்தால் நாம்  இலக்கை எட்டிவிடலாம். 

இலக்கை எட்ட பல பாதகமான விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.   எங்களிடம் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிப்பவர்கள்.  அவர்களின் அன்றாட தமிழின் பயன்பாடு என்பது மிகக் குறைவு. ஒரு பையனின் வீட்டில் பெற்றோர்களே தமிழில் பேசுவதில்லை.  ஒருவனுடைய பெற்றோர்களுக்கு தமிழ் பேசத் தெரிகிறது. ஆனால், எழுதுவதில் சிரமம் இருக்கிறது. கேட்டால் மூன்றாவது மொழியாகதான்  எங்களுக்கு தமிழ் இருந்தது என்கிறார்கள்

'எம்பொண்ணு எப்படி பண்றா? இல்லை எப்படி படிக்கிறான் ? எனக் கேட்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்லும் இன்னோரு விசயம்
பயிற்சி.  முதலில் அவர்களிடம் தமிழில்  பேசுங்கள்.  ஆரம்பத்தில் 
ஆங்கிலத்தில் பதில் சொன்னாலும்,  அதைத் தொடர்ந்து செய்யுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே?. அதுபோல ஆங்கில வார்த்தைகளை சொல்லி அதற்கு ஈடான தமிழ் வார்த்தையைக் கேளுங்கள். விளையாட்டு போக்காக தமிழ் கண்டிப்பாக போய் சேரும்.

இரண்டெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து என தொடர்ச்சியாக
வாசிக்க, எழுத பயிற்சி கொடுத்துகொண்டிருக்கிறேன்.  பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்க திட்டமிட்டிருக்கிறேன். 

இந்த பிள்ளைகள் தயக்கமின்றி தமிழில்  உரையாட எந்தவிதமான பயிற்சி சரியானதாக இருக்கும் ?  நண்பர்கள் பரிந்துரைகளை எதிர்பார்கிறேன். நன்றி!!