Sunday, June 2, 2019

தண்ணீர் - எழுத்தாளர் அசோகமித்திரன்

அந்த நாட்களில் நகர்ப்புறங்களில் தனி வீட்டில் தங்க வாய்ப்பில்லாதவர்கள்
ஒண்டுக் குடுத்தனம் அல்லது குடிக்குள் குடி எனும் முறையில் குடித்தனம்
இருக்கும் வழக்கம் இருந்தது.  அப்போது ஒரு சாதாரண ஓட்டுவீட்டில் கூட ஆறு, ஏழு குடும்பங்களை மிகச் சகஜமாக பார்த்துவிட முடியும்.

அதுபோலொரு ஒண்டுக்குடுத்தன வீட்டுச் சூழலை அசோகமித்திரன் தனது தண்ணீர் நாவலில்  கூர்மையான உரையாடல்கள் மூழமாக மிகக் குறைந்த பக்கங்களில் மிக நேர்த்தியாக கண்முன் கொண்டுவந்திருக்கிறார்.

கதையின் மைய நீரோட்டமாக நகரின் தண்ணீர் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனோடு சேர்ந்து பயணிக்கும் பெண்களின் வாழ்க்கை. குறிப்பாக இரு பெண்கள். ஒருவர் டீச்சரம்மா. திருமண பந்தத்தில் வஞ்சிக்கப்பட்ட பெண். இன்னோருவர் ஜமுனா  சினிமாவில் நடிக்க ஆசை காட்டி  வஞ்சிக்கப்பட்ட பெண். ரத்தமும் சதையுமாக படைக்கப்பட்டிருக்கும் இந்தக் பாத்திரங்கள் மூழமாக வாழ்வின் எதார்த்தத்தை மிகை உணர்ச்சியின்றி அதன் போக்கில் தனது நுணுக்கமான எழுத்தில் எழுதிச் செல்கிறார்.

அவர்களின் வழியாக அமி கட்டமைக்கும் பெண்களின்
உலகம் பல ஆச்சர்யங்கள் நிறைந்தது. "இந்த அழுகையெல்லாம் பாத்து பாத்தே அழுகையே வராம போயிடுத்து.." என உறுதியான மனோதிடத்துடன் பேசும் டீச்சரம்மா ஒருபுறம் என்றால் மறுபுறம் குற்றவுணர்வோடு, தாழ்வு மனப்பான்மையோடு நடைபிணமாக வாழும் ஜமுனா. அவளுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் டீச்சரம்மா என கதாபாத்திரங்கள் கச்சிதமாக நாயகத்தன்மை இல்லாமல் வெகு இயல்பாக மனதுக்கு நெருக்கமாக வருகிறார்கள். அசோகமித்திரனின் எழுத்தை விரும்பும்
வாசகர்கள் தவறவிடக்கூடாத படைப்பு தண்ணீர்.


நூல்: தண்ணீர்
ஆசிரியர்: அசோகமித்திரன்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்
விலை:र90.00

No comments:

Post a Comment