Wednesday, May 12, 2021

அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த கல்லூரி பேராசிரியர்

வெளியூர் பேருந்துகள் அப்போது  திருவள்ளுவர் என்ற பெயரில்  ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பேருந்துகளில் ஒட்டுநர் இருக்கைக்குப் பின்புறம் கம்பி போட்ட அடைப்பு ஒன்று இருக்கும். பெரும்பாலும்   அங்கு நிறுத்தித் தான் பிள்ளைகளுடைய உயரத்திற்கு ஏற்றாற் போல அரை டிக்கெட் எடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். ஏனென்றால், நம்மூர் ஆட்களிடம் வயதைக் கேட்டாலோ இல்லை படிக்கும் வகுப்பைக் கேட்டாலோ ஒன்றிற்கு இரண்டு குறைத்தே சொல்வார்கள் என்ற நம்பிக்கை தான். :)

இதை ஓட்டி சமீபத்தில் படித்த ஒரு சம்பவம். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது. அவர் ஒரு கல்லூரி பேராசிரியர். அரசாங்க விதிகளை மிகக் கடுமையாகப் பின்பற்றும் பழக்கம் உள்ளவர். அவர் ஒருமுறை தனது மகளுடன் இரயிலில் பயணப்பட்டார். அன்று இரவு அவருடைய மகளுக்கு 12 வயது முடிந்து 13 வயது ஆரம்பித்தது. ஆனால், அவரோ 12 வயதைக் கணக்கில் கொண்டு மகளுக்கு அரை டிக்கெட் மட்டும் எடுத்திருந்தார். இப்போதோ வயது 13. விதிமுறைப்படி அந்த வயதில் பயணிப்பவர்கள் முழு டிக்கெட் எடுத்திருக்க வேண்டும்.

அதனால், இரயிலில் டிக்கெட் பரிசோதகரைத் தேடி இருக்கிறார். எவ்வளவு தேடியும் ஆள் சிக்கவில்லை. ஆனால், தான் விதிமுறை மீறல் செய்வதாக உணர்ந்த அவர் உடனே இரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். இரயில் நின்றது. வந்த அதிகாரிகளிடம் தான் இரயிலை நிறுத்த நேரிட்டதை விவரித்தார்.

அதிகாரிகள் அவருக்கு மீதி பயணத்துக்கு முழு டிக்கெட்டு வழங்கினார்கள். கூடவே,  உரிய காரணமின்றி இரயிலை நிறுத்தியதற்குத் தண்டனையாக ரூபாய் ஐம்பது விதித்தார்கள். அவர் அதையும் சேர்த்தே கட்டினார். செலுத்தியபின் சொன்னாராம், 'இனி என் மனசாட்சி உறுத்தாது, மீதி பயணத்தை நான் நிம்மதியாகத் தொடர்வேன்' என்றராராம் அந்த "ரூல்ஸ்" இராமானுஜம்.

2 comments: