Sunday, May 30, 2021

திசையெல்லாம் நெருஞ்சி

சுருங்கச் சொல்கிறேன் பேர்வழி எனத் தொடங்கி நான்கு, ஐந்து பக்கங்களாக இருந்த சிறுகதைகள் பிறகு மூன்று, இரண்டு, ஒன்று எனப் படிப்படியாக  இறங்குமுகமாகி பின் தடாலடியாக தூண்டில் கதைகள், சிறுசிறுகதைகள் (சிசிகதைகள்), உடனடிக்கதைகள் (sudden fiction) என வேகமெடுத்து இன்று இரண்டு சொற்களில் வந்து நிற்கிறது.

என்ன இரண்டு சொற்களில் சிறுகதையா ? எனக் கேட்பவர்களுக்காக
சட்டென நினைவில் இருக்கும் ஒரு கதை (தலைப்புடன் சேர்த்து வாசிக்கவும்)

தலைப்பு: 2050இல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா ?

அதுபோல இன்னொன்று
தலைப்பு: ஆபிஸ்ல எத்தனை ஆம்பளைங்க ?
கதை: முதலிரவில் கேள்வி

இதுபோல சொற்சிக்கனத்துடன் எழுதுபவர்களின் திறமைக்கு சவால் விடும் வகையில் அமைந்த பல கதைகளை எழுத்தாளர் சுஜாதா குமுதத்தில் அறிமுகப்படுத்தியதாக நினைவு. 

வாசிப்பு அரிதாகத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே சுஜாதா சுதாரித்து விட்டதாக நினைக்கிறேன்.

இதையெல்லாம் கதைகளா ? தமாஷ்!  எனச் சொல்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், எழுத்தாளர்கள் சமயங்களில் புனைவு எழுதும்போது சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் இடைப்பட்ட ஒரிடத்தில் சிக்கிக் கொள்வார்கள். அதாவது சிறுகதைபோல சில பக்கங்களில் சொல்லவும் முடியாது பலநூறு பக்கங்கள் வரை இழுக்கவும் முடியாது. சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் உள்ள அந்த இடைவெளியை (நெடுங்கதை ?) மிகச் சரியாக எழுத்தாளர் சு.வேணுகோபாலன் பயன்படுத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

அந்தவகையில் அவருடைய "திசையெல்லாம் நெருஞ்சி" தொகுப்பைப் பார்க்கிறேன். மொத்தமாக மூன்று கதைகள். மூன்றும் இன்றைய
எதார்த்தத்தை அழகாக பதிவுசெய்வதால் நூல்  இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து திடீர் நகரவாசியான மணமகனின் மனவோட்டத்தில் நகரும் "உருமால் கட்டு" கதை மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. மற்றோன்று "இரட்சணியம்" - பதின்மவயது  விடலை பையனின் குழப்பங்களைப் பதிவு செய்வதாகவும், "திசையெல்லாம் நெருஞ்சி"-  எங்கும் களையாக மண்டிக்கிடக்கும் சாதியகட்டுமானத்தை உடைத்து காட்டுவதாகவும் இருக்கிறது.

இதில் ஏனோ இரட்சணியம் வாசிக்கையில் மட்டும்  சற்று நெருடலாக உணர்ந்தேன். மற்றபடி வாசர்களை அயற்சியடையச் செய்யாத எளிமையான எதார்த்த நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை. வாய்பிருந்தால் வாசியுங்கள்.

"திசையெல்லாம் நெருஞ்சி" எனும் தலைப்பில்  உள்ள "நெருஞ்சிச் செடி"
ஒரு மூலிகை. நீர்க் கடுப்பைப் போக்கும், ஆண்மை பெருக்கி என்பது மாதிரியான பல நூறு மருத்துவப் பயன்கள் இணையத்தில்
கொட்டிக்கிடக்கின்றன. தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளலாம்.
80களில் முருங்கைக்காய் தமிழ் திரையுலகில் (உபயம்-இயக்குநர் பாக்கியராஜ்) ஒரு வலம் வந்தது
போல இந்த நெருஞ்சி வர வாய்ப்பிருக்கிறதா என்ன? :)

எழுத்தாளர்:சு. வேணுகோபால்
பதிப்பகம்:தமிழினி

1 comment:

  1. நெருஞ்சி ஒரு முள்ளு செடி என நினைக்கிறேன் .
    வாசிக்கவேண்டும் என்று நினைத்தாலும் தேடிப்பிடித்து வாங்கி படிப்பது என்பது சிரமமான காரியம் ஆகி விட்டது ,
    பகிர்வுக்கு நன்றி ...

    கரிகாலன்
    www,karikaalan.blogspot.com

    ReplyDelete