Showing posts with label #இளங்கோ. Show all posts
Showing posts with label #இளங்கோ. Show all posts

Saturday, April 4, 2020

மெக்ஸிகோ - இளங்கோ (பிரபஞ்சன் நினைவுப் பரிசு 2019)

மனித வாழ்வு என்பது பல உறவுகளின் சங்கமம்.  அந்த உறவுகள் தரும் அனுபவங்களின் வழியாகவே பெரும்பாலும்  ஒருவன்  இந்த உலகைப் புரிந்துகொள்கிறான். அந்த வகையில், காதலில் தொடர்ந்து தோல்விற்று துவண்டிருக்கும் ஒருவன் அழகிய இளம்பெண் ஒருத்தியின் ஊடாக
தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே எழுத்தாளர் இளங்கோவின் (கனடா) 'மெக்ஸிகோ' நாவலாகி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் குறித்தான தனியான பார்வை என்று ஒன்று இல்லை என்றே சொல்லாம். பொது புத்தியில் பெண்கள் குறித்தான  ஒரு பார்வையே,  ஒரு சராசரி ஆணின் பார்வையாக இருக்கிறது. அந்தப் பார்வையுடன், ஒரு பெண்ணை நெருங்கும் ஒருவன் அவள் குறித்து தான் அதுவரை உருவகப்படுத்தியிருந்த பிம்பம் உடையும் போது உண்மையில் பேரதிர்ச்சி கொள்கிறான். அந்த அதிர்ச்சி சிலருக்கு காதலிக்கையில் வருகிறது. சிலருக்கு, திருமணத்திற்கு பின் வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவன்  மீண்டு எவ்வாறு தன்னை வழி நடத்திக் கொள்கிறான் என்பதில்தான் ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருப்பதாக நினைக்கிறேன்.

அந்த வகையில், தனது உறவுகளை நிலையாக தக்கவைத்துக் கொள்ள இயலாத புலம் பெயர்ந்த ஒருவன் மெக்ஸிக இளம்பெண்ணின் காதலில்
பெரிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாக விழுவதைக் கவித்துவமாக இளங்கோ சொல்லியிருக்கிறார்.

அதற்காக  நான் இளம் இருளில் இருந்தேன். அந்த இளம் பெண்ணைப் பார்த்தவுடன் ஆயிரம் மின்னலைப் பார்த்தது போல் அதிர்ந்தேன் என்றெல்லாம் மிகைப்படுத்தி எழுதாமல்  அன்பு மலர்வதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்.  "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்க்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்". (பக்கம் -50) என்பதைக் கதையோடு வாசிக்கும் போது அந்த அனுபவதை நமக்குக் கடத்துவதில் மிகச் சிறந்த எழுத்தாளராக மிளிர்கிறார். அதுபோல, பல தருணங்கள். ஆசிரியருக்கு வாழ்த்துகள் !

ஆண்களும் பெண்களும் இரு வேறு உலகில் இருந்து வந்தவர்கள். அவர்களுடைய மதிப்பீடுகள் வேவ்வேறாக இருந்தாலும் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியமே எனும் நம்பிக்கையை விதைக்கும் நூலாக இதைப் பார்க்கிறேன். நூலில்,  நாயகனின் மன இறுக்கத்தைச் சற்று குறைத்திருக்கலாமோ எனத் தோன்றும் தருணங்களை எல்லாம் "அவள்" தனது ஆளுமையால் இட்டு நிரப்புகின்றாள். அதுபோல, படைப்பில் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் அழகிய உரையாடல்களால் அழுத்தம் பெறுகின்றன. தொடர்ந்து புலம் பெயர் இலக்கியங்கள் பல எழுதுங்கள் இளங்கோ !

காதலிப்பவர்கள் திருமணத்துக்கு பின் வரும் வாழ்வு குறித்த பெரிய அவதானிப்பு இல்லாமல் அந்தப் பந்தத்தில் நுழைவதும், திருமணபந்தத்தில் இருப்பவர்கள் அதற்கு முன்பான தனது வாழ்வு குறித்து மறந்து போவதுமே (அல்லது தேவையற்றதை நினைவில் வைத்திருப்பதும்) பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.

அந்த வகையில், எழுத்தாளர் இளங்கோவின் இந்தப் படைப்பு  ஆண் பெண் உறவைத்  தன் வழியில் மீட்டுருவாக்கம் செய்திருப்பதால் வாசிக்கவேண்டிய ஒரு படைப்பாகிறது.


நூல் : மெக்ஸிக்கோ
(2019-ல் பிரபஞ்சன் நினைவுப் பரிசு பெற்ற நாவல்)
ஆசிரியர் : இளங்கோ
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : ₹ 200.00

********************