Tuesday, December 23, 2014

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் - ஒரு சாகாப்தம்

 இயக்குனர் சிகரம் பாலசந்தர் காலமான தகவலை நண்பர் "வாட்ஸ் அப்" மூலம் அனுப்பி இருந்தார்.

அந்த தகவலை இணையத்தில் உறுதி செய்தபின்பு இதை எழுதத் தொடங்கினேன். கட்ந்த சில நாட்களாக சில விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.

பாலச்சந்தர் என்று ஒருமுறை மனதுக்குள் சொல்லி பார்த்தபடி அவருடய படங்‌களை ஒருமுறை மனத்திரையில் ஓட விட்டேன்.

பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானது சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி , மனத்தில் உறுதி வேண்டும் போன்ற படங்களின் மூலம் தான்.

அப்போது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், ஆனாலும், அவை என்னுள் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.

அந்த கால கட்டத்தில் அந்த மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துக்களை திரையில் சொல்ல அவருக்கு இருந்த துணிவைக் கண்டு இப்போது வியக்கிறேன்.

பாலசந்தர் என்றால் வித்தியாசம் என்றே மக்கள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் மனத்தில் அழகாய் பதிய செய்வதில் வித்தகர்.

உதாரணமாக மனத்தில் உறுதி  படத்தில் பின்னணியில் பாரதியின் 'மனத்தில்
உறுதி  வேண்டும்' பாடல் ஒலிக்க நாயகி சுஹாசினி குடும்பத்திற்காக உழைப்பது போல காட்சி வரும். அவை ஆண்டுகள் பல கடந்தாலும் மனதில் நீங்காதவை.

அதுபோலவே 'புதுப்புது அர்த்தங்கள்'  படத்தில்  வயதான தம்பதிகளாக வரும்
பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி ஜோடி. பின்பு  பூர்ணம் விஸ்வநாதன் இறந்த பின் வரும் சோக காட்சிகள். அவை கண்ணீரை தழும்ப செய்யக் கூடியவை. இப்படி எத்தனையோ பல.

சமீபத்தில் கூட அவருடைய  'வறுமையின் நிறம் சிகப்பு', 'அவள் ஒரு தொடர்கதை', 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்‌களை தேடி பிடித்து மீண்டும் கொண்டிருந்தேன். 'பார்த்தாலே பரவசம்'  நான் பார்த்த அவருடைய மிக சமீபத்திய படம்.

கதை, வசனம், பாத்திர வடிவமைப்பு என எல்லாவரிலும் தனது தனித்தன்மையை பதித்து விடுவார்.

அவருடைய படத்‌தில் பாடல்களுக்கும் எப்போதும் ஒரு தனி இடமுண்டு.
திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில் பாடல் பெறும் வித்தையை அறிந்தவர்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். தொலைக்காட்சித் தொடர்களில் முதலில் நுழைந்ததது. என பல 'முதல்'களுக்கு சொந்தக்காரர் அவர்.

தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் திரை உலகுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்தவர் எனறால் மிகையில்லை.

உஙகள் மகன் அல்லது மகளுக்கு இன்னும் கால்நூற்றாண்டு தாண்டியும் நீங்கள் துணிவாக இவர் படங்களை பரிந்துரைக்கலாம்.

என்னுடைய தஞ்சை தந்த தங்கம் பாலச்சந்தர் என்பதில் எனக்கு கர்வமே.

தலைமுறைகள் தாண்டி அவருடைய படைப்புகள் தமிழ் திரையுலகின் ஓரு அடையாளமாய் வாழும்.

Saturday, December 20, 2014

இப்பவே கண்ணைக் கட்டுதே!

சென்னையில்வுள்ள நண்பர்  ஓருவரிடம் சில வாரங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் என்றால் என்னைவிட  ஜூனியர் , இருப்பத்தேழு இருக்கலாம்.  சில வருடங்களாகத்தான் பழக்கம் ஆனால் வெளிப்படையாக பேசும் டைப்.  இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஐ.டி. துறையில் இருந்த நல்ல வேலையைவிட்டு  தற்போது இசைத்துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.  கொஞ்சம் வசதியானவர். அப்பா மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருந்தவர்.  தற்போது கார்ப்பரேட் ட்ரைனிங் சென்டர் நடத்துகிறார்.

இவர் படித்ததோ இன்ஜினியரிங், சிறு வயதில் பெரிய இசையும் பயிற்சியும் இல்லை. ஆர்வத்தில் கடந்த ஒரு வருடத்தில் பியானோ வில் ஏதோ ஏழு எட்டு லெவல் படித்து விட்டாராம். இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரின் இசைக் கல்லூரியில் வேறு ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார்.  ஒரு திரைபட இசையமைப்பாளரின் உதவியாளராக
சேர்ந்து பின்பு படிப்படியாக இசையமைப்பாளராவது அவர் கனவு. மேற்க்கத்திய இசையில் ஆர்வம் என சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழிசை எந்த திசையில் இருக்கிறது என நீங்கள் கேட்பது என் காதில்விழுகிறது. :)

சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஆல்பம், படப்பிடிப்பு என இருந்த வேலையும் விட்டுவிட்டு கைக்காசை செலவு செய்து சுத்‌திக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த திரைப்படப் பாடலாசிரியர்களை ஆல்பத்தில் பயன்படுத்துவது  பற்றிக் கூடப் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பின்பு சமீபத்தில் தான் பேசினேன்.  ப்ரைவேட் ஆல்பம் நண்பர்கள் கொடுத்த ஐடியாவாம். அந்த பதினைந்து நிமிட ஆல்பத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக மெனக்கெட்டுருக்கிறார். மெட்டு அமைப்பது, சரியான பாடல் வரிகளை தேர்வு செய்வது அதற்க்கு ஏற்ற இசைக் கோர்வைகள் உருவாக்குவது மேலும் பொருத்தமான வாத்‌தியக் கருவிகளை பயன்படுத்துவது, நல்ல தரமான ஒலிப்பதிவு என வேலை பின்னி எடுத்துத்திருக்கிறது. பாவம் நோகாமல் ஏசி யில் ஐ.டி வேலை  செய்து சம்பளம் வாங்கியவருக்கு  இதெல்லாம் புதிதுதான்.

அது மட்டுமின்றி ரெக்கார்டிங் ஸ்டூடியோ, பாடக, பாடகியர் காஸ்டியூம், வீடீயோ என பணமும்  சில லட்சங்‌கள் வரை காலி.

மேலும் தொழில் நுட்பங்களை புரிந்து கொண்டு தனியாக இயங்க பல  ஆண்டு கடும்உழைப்பு தேவை  என்பதை இந்த ஒரு ஆல்பத்தின் வழியாகவே அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளார். அப்படி நல்ல திறமை உள்ள சிலரும் திரையில் ஜொலிக்க இயலவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறார். இசை பிரியம் என்பது வேறு அதையே ஜீவனமாக்கி கொள்வது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

அடுத்தது என்ன? என்றால்,' ஏதோ தெரிந்தோ தெரியாமலோ இதில் குதித்தாகிவிட்டது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் முயற்சித்து பார்க்கவுள்ளதாக' சொன்னார்.

நினைத்திருத்தால் இவர் வேலையை விடாமல் எப்போதோ திருமணம்,குழந்தை என  செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இவர் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட துணிந்து விட்டார். இப்போது சேர வேண்டிய இலக்கு   கண்ணுக்கு தட்டுப்படவில்லை. ஆனால் கை கால்கள் இப்போதே சோர்வடையத் துவங்கி விட்டது.

இவரைப் போல  படைப்பாளியாக  முயற்சித்து தோற்று அல்லது முழுமையாக  முயற்சிக்காமல் பாதியில் விட்டவர்கள் பலர்.

அவர்கள் எங்கோ மேடைக் கச்சேரிகளில் வெற்‌றி பெற்றவர்களின் பாடல்களை பாடிக் கொண்டோ அல்லது இசை அமைத்துக்  கொண்டோ இசையோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நீஙகள் தரும் மிகப்பெரிய வெகுமதி கைத்தட்டலும், பாராட்டுமன்றி வேறில்லை..

Saturday, December 13, 2014

ரஜினியின் லிங்கா படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் 'லிங்கா' உலகம் முழுவதும்  வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே நான் கண்ணை மூடிக் கொண்டு "வெற்றிகரமாக" என்ற வார்‌த்தையை சேர்க்க எந்த பிரயத்தனமும் செய்ய தேவையில்லை. உலகத்தமிழர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.

ஆனால், இந்தமுறை முன்பு எப்பொழுதும் போலில்லாமல் ரஜினி பற்றியும் அவர் அரசியல் நிலைப்பாடு ,சாதனை, வயது பற்றியும் நிறைய வெளிப்படையான விமர்ச்சனங்கள்  சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டன.

முதல் காட்சிக்கு சென்று ரசிக்கும் ரசிகனாக இல்லாவிடிலும், கடந்த 30 வருடமாக நானும் ரஜினி ரசிகன்தான். பதின்ம வயதுகளில் பார்த்த  எஜமான் படத்தில் ரஜினியின் அறிமுக காட்சிகளில் உற்சாகம்  உடலின் ஒவ்வொரு செல்லிலும் பொங்கியது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.  இதை சொல்லிக் கொள்வதில் எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் நாயகன் அவர்.  ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக நம்மில் ஒருவராய் உலா வருகிறார்.

சந்திரமுகி படத்தில் அவர் வடிவேலுவுடன் செய்யும்  சில நகைசுவைகள்கூட
எனக்கு உடன்பாடு இல்லை தான்.  அதற்காக அவரை முற்றிலும் என்னால் புறக்கணிக்க இயலவில்லை. முன்பு வடிவேலு இப்போது சந்தானம் என ஜெயிக்கும் குதிரையுடன் பயணிக்கிறார்.  காதாநாயகிகள், லொகேஷன் என
மாறினாலும் அவர் படங்கள் பழைய பார்முலாதான். எனவே சினிமா ஓரு வியாபாரம் என்ற நிலையுடன் நிறுத்திக்கொள்வது உத்தமம். அதுபோல அரசியல்  நிலைப்பாடாகட்டும்  அல்லது விளம்பரமாகட்டும் ரஜினி அவருடைய பாதையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.

நாம்தான் தேவையில்லாமல் சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக் கொள்கிறோம். திரையில் அவர் செய்யும் சாகசங்களை நிஜ வாழ்விலும் எதிர்பார்க்கிறோம். நம் இயலாமையில் இருந்து மீட்க ஓரு  ரட்சகரை நோக்கி காத்‌துக்கிடக்கிறோம்.  அது அறிவீனமின்றி வேறென்ன ?.

அவர் மேல் வீசப்படும் மற்றோரு குற்றச்சாட்டு அவரின் பொதுநல தொண்டு பற்றியது. நிஜ வாழ்வில் அணை கட்டுவார், மருத்துவமனை காட்டுவார் என எதிர்பார்க்காமல். அரசுக்கு சரியான வரி கட்டினால் சந்தோசப்படுங்கள். அவர் வழி எப்போதும் தனி வழி என விடுங்களேன். அவர் "மாஸ் எண்ட்டெர்டெயினர்" அதுவன்றி வேறென்ன தேவை?

நாட்டைத் திருத்த 'லிங்கா' க்கள் வர வேண்டியதில்லை. நம்மை
நாமே திருந்திக் கொள்வதுதான் வழி என்ற நிதர்சனத்தை உணர்ந்தால் விசனப்பட வேண்டியதில்லை.

Wednesday, December 3, 2014

அணிலாடும் முன்றில் - பாட்டி

சமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய 'அணிலாடும் முன்றில்' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவிதை புத்தகமோ அல்லது பூதமோ என நீஙகள் பயப்படத்தேவை இல்லை.  இது அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

கூட்டு குடும்பங்கள் சிதைந்து வரும் அல்லது சிதைந்து விட்ட தமிழ் சூழலில்
அம்மா,அப்பா,மனைவி தாண்டி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனும் பல உறவுகளை நினைத்து நேசித்து  எழுதியுள்ள அருமையான நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது ஏதோ ஒரு புள்ளியில் உங்கள் வாழ்க்கையை பொருத்தி பார்க்க தவறமாட்டீர்கள்.

நாம் எளிதாய் கடந்துபோகும் மற்ற கற்பனை கதைகளை விடவும் இந்த அசலான மனிதர்களை வாசிக்கையில் மனது நம் பால்ய நினைவுகளுக்கு சென்று திரும்புகின்றன. அந்த சுகானுபாவமே நம்மை மேலும் பல தூரம் பறத்தலுக்கான சக்தியையும் உத்வேகத்தையும் தரவல்லது. வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

எனது  'அணிலாடும் முன்றில்' இதோ உங்களுக்காக.

மிக அதிகாலையில் வரும் தொலைபேசி  ஏனோ தேவையில்லாமல் ஒரு அவசரத்தை தாங்கிய தந்தியை நினைவுபடுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தாங்கிதாக இருந்தது அந்த அதிகாலை அழைப்பு.  அது என் பாட்டி காலமான செய்தி. வாழ்வில் ஒவ்வோரு உறவுகளும் ஏதோ ஒரு அனுபவத்தை, நினைவுகளை பாடங்களை நம்மில் விட்டுச்செல்ல தவறுவதில்லை.

கொஞ்சம் ப்லாஷ்பேக். பாட்டி பிரிட்டிஷ் காலத்தில் SSLC படித்தவர். அந்த காலத்தில் வந்த போஸ்ட் ஆபீஸ் வேலையை ஏற்றுக் கொள்ள வில்லை என பல சமயங்களில் சொல்ல கேட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்பதாம்  வகுப்பில் இருந்து பள்ளிஇறுதி வரை தினமும்  பாட்டி வீட்டுக்குத்தான் முதல்  விஸிட் பிறகே மற்றவை. நகரத்தின் மையத்தில் இருந்த ஓட்டு வீடு. அது எப்போதும் எங்களுக்கு பாட்டி வீடே தவிர வேறில்லை. அந்த அளவுக்கு நெருக்கம்.

என் பாட்டனார் அரசு வக்கீலாக வேலை நிமித்தமாக பல ஊர்களை சுற்றி
கடைசில் சொந்த ஊரான திருவாரூரில் வந்து செட்டில் ஆனபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

வீட்டை பார்க்கச் சென்ற நாள் ஒரு குடியரசு தினமோ அல்லது சுதந்திர தினமாகவோ இருக்ககூடும்.  என் வீட்டில் இருந்து போகும்போது சாலையோரம் தேசிய கொடி ஏற்‌றி இனிப்பு வழங்‌கி கொண்டிருந்தனர். அப்போது குத்‌திய தேசிய கொடி போல நெஞ்சில் இன்னும் பாட்டி வீட்டு நினைவுகள்.

எனது கிராம வாழ்க்கைக்கும் நகரத்துக்‌குமான இடைவெளியை முதலில் இட்டு நிரப்பியது அந்த வீடு. அது ரேடியோவுக்கும், டிவிக்கும்; சைக்கிளுக்கும்,TVS Champக்கும்;  அம்மிக்கும், மிக்‌ஸிக்குமான இடைவெளியாக இருக்கலாம்.

வங்கி, போஸ்ட்ஆபீஸ், தையல் கடை, காய்கறி மார்க்கெட் என வெளி விசயங்களை அங்குதான் பழகிக் கொண்டேன். ஆசிரியர் வீடுகள், பிரபலமான வக்கீல் வீடுகள், விளிம்பு நிலை மனிதர்கள் என சமூகத்தின் அனைத்து தளத்திலும் அறிமுகம் கிடைத்ததும் அங்கு தான். சாமி, நாள், நட்சத்திரம்,விரதம் என சகலமும் பரிச்சமானது கூட அங்கேதான். அதே நேரத்தில் படிப்பிற்கான முக்கியத்துவத்தை திரும்ப சொல்லி சொல்லி மனத்தில் ஆழப் படிய வைத்தவர்.

பாட்டி,தாத்தா என இருவருமே அங்கு ஒரு ஒழுங்கை கடைபிடித்து வந்தனர்.  எந்த ஒரு குளிரோ,மழையோ புயலோ இருந்ததாலும் அதிகாலை நாலரை மணிக்கே வீடு விழித்துக் கொள்ளும்.  பாட்டி  அதிகாலையில் எழுந்தவுடன் சாமி அறை பெருக்கி சுத்தம் செய்து குளித்து சாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் , பூஜை  முடித்து பின்பு சாமி பாடல்களை உனுறுகிப் பாடுவார். சமைப்பதிலும் சமர்த்தர் அவர். பண்டங்கள், சாப்பாடு என அவரது கை பக்குவம் மிகஅலாதி.  ஒரு ஒப்பீட்டுக்கு கூட யாரையும் துணைக்கழைக்க இயலாத சுவை அது.

கற்றதில் சில:  அசராத உழைப்பு, சிக்கனம், பண மேலாண்மை, பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யாமை எல்லாவற்றை விட உறவுகளுக்கு கொடுத்து  உதவும் மனம்.

தொட்டால் பூ மலருமா தெரியாது, ஆனால் அவர் பீரோவை தொட்டால் நிச்சயம் நோட்டு வரும். கேட்காமலே எங்கேயோ சேர்த்து வைத்த பணத்தை தேவைக்கு எடுத்து பாரபட்சமின்றி தந்து உதவும் உத்தம உள்ளம் கொண்டவர்.

அவரிடம் ஒரு தெய்விகத் தன்மையைத் தரிசிக்க முடிந்தது. அவர் அன்பு பாசாங்கற்றது. மற்ற கதை சொல்லும் பாட்டிகளை போலின்றி அவர் மிகச் சிறந்த ஆளுமையாகவே எனக்குள் பரிமளிக்கிறார். அது மூன்று தலைமுறைகளுக்கு  அறிவுரையும்,ஆலோசனையும் தந்து வழிநடத்திய ஆளுமை.

பல வருடங்களுக்கு முன்பு  அவசர தேவையாக எனது பல் அறுவை சிகிச்சைக்கு சில ஆயிரங்களை ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகளாக  தந்தார். மருத்துவமனை செல்லும் வழி முழுக்க அவர் பணத்தை சுருட்டி தந்த மஞ்சள் பை கனத்துக் கொண்டேயிருந்தது

அங்கே நீ
இறுதியாய்
இருளில் புதைந்து கொள்ள
இங்கே நான்
புதைந்து அழ
இருள் தேடினேன்!
..

இந்த தலைமுறையிலும் என் போன்ற பல பாக்கியசாலி பேரன்களும்,பேத்திகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்..


Friday, November 28, 2014

நன்றி சொல்ல உனக்கு..

Nov-26 வியாழக்கிழமை, அமெரிக்காவில் Thanksgiving day, (நன்றி தெரிவிக்கும்  நாள் ) கொண்டாடப்பட்டது.

இது நம்ம ஊரு தைப்பொங்கல் போல ஒரு பண்டிகைனு தப்பு கணக்கு போடாதீங்க இது அதையும் தாண்டி. .. நாம பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைளை  டீவி சேனல்கள்கிட்ட அடகு வச்சு ரொம்ப நாளச்சு பாஸ்...


சரி விஷயத்துக்கு வருவோம், இது அமெரிக்காவின் முக்கியமான ஆண்டின் நீண்ட வாரஇறுதி அல்லது Long Weekend.   வியாழன் அன்று  தேங்க்ஸ் கிவீங் கொண்டாடிவிட்ட களைப்பு தீராமல் மறு நாளை (Black Friday) ப்ளாக் ப்ரைடே எனப்படும் ஷாப்பிங் வெள்ளியை கொண்டாடி மகிழ்கிறது.

 ப்ளாக் ப்ரைடே அன்று கிருஸ்மஸ் சீசனை வரவேற்பது போல நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்று குவிக்கின்றனர். தங்கம் முதல் தகரம் வரை எல்லாத்‌துக்குமே தள்ளுபடி தான் போங்க. இது நம்ம ஊரு ஆடிக் கழிவையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடியது.

இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பெரிய சில்லறை நிறுவனங்களாகிய வால்மார்ட்,மேஸிஸ்,பெஸ்ட் பை போன்றவை வியாழாக்கிழமை மாலையிலே கடைகளை திறந்து விற்பனையை தொடங்கினர்.

அதனால் எப்போதும் வெள்ளியன்று சூடுபிடிக்கும் ஷாப்பிங் காய்ச்சல் இந்த தடவை வியாழக்கிழமையே தொற்‌றிக்கொண்டது.  இதற்கு அமெரிக்க மக்களிடம் பெருவாரியான ஆதரவு இருக்காது என பரவலாக பேசப்பட்டாலும். வசூல் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டியதாக தெரிகிறது.

ப்ளாக் ப்ரைடே  என்பதை நுகர்வு கலாச்சாரத்‌தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன்.   இந்த ஆண்டில் இருந்து பிரிட்டனிலும் வால்மார்டின் ஆசியிடன் இது தொடங்கியதாக தெரிகிறது.  இந்த அமெரிக்க நுகர்வு கலாச்சார புயல்  சென்னை போன்ற நகரஙகளை தாக்கும் அபாயம் தூரத்தில் இல்லை. சல்லிசான விலையில பொருள் கிடைச்சா மக்கள் வேண்டாமானா சொல்லப்போறாங்க ?. :)

இந்த விடுமுறையின் முதல் பாகமான  நன்றி தெரிவித்தலுக்கு வருவோம்,  தற்போதய அவசர சூழலில் காலையில் அப்பார்ட்மெண்டில் லிப்ட் கதவை திறந்து விடும் செக்கியூரிட்டியில் தொடங்கி   தினமும் இயந்திரத்தனமாக பல தடவை 'Thanks' என்ற வார்த்தையை அவசரகதியிலே உதிர்த்து செல்கிறோம்.

ஒரு வாழ்த்தையோ அல்லது ஒரு நன்றியையோ நம்மில் எத்தனை பேர் உணர்ந்து சொல்கிறோம் என்பது நிஜத்தில் கேள்விக்குரியதே.

தமிழில் நன்றி சொல்ல வார்த்தையின்றி மயங்காமல் மாறுதலுக்கேனும் அடுத்தமுறை  'நன்றி' என  எதிரில் உள்ளவரின் கண்களை பார்த்து மனதறிய சொல்லிப் பாருங்கள்.  பின்பு சொல்லுங்கள்,  உங்கள் மனதில் மின்சாரம் பாய்ந்ததா என்று.  அது உண்மை என்றால்,  இருவருக்கும் அது பொருந்தும்.

Sunday, November 16, 2014

2014 தீபாவளி கலை நிகழ்ச்சி - What A Function!!!

 நேற்று (Nov-15-2014)  தென் புளோரிடா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடந்த தீபாவளி கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. மிக சிறப்பாக நடந்து முடிந்தது அப்படினு எழுதினா ஏதோ தினமணி பேப்பர்ல வரும் நீயூஸ் மாதிரி இருக்கும்.

  சரியா சொல்லனும்னா ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தி இருந்தது. ரஜினி படம்னா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருப்திபடுத்தும் அம்சங்கள் இருக்கும்  இல்லையா அது போல.

  சிறுவர்களும், பெரியவர்களும் சினிமா பாடல், நடனம் என கலக்கினர்.
சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் பல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் தூண்டுதலாய்   இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்.

ஆனா,  நமக்குததான் அவர்கள் தேர்தெடுத்த பெரும்பாலான லேட்டஸ்ட் பாட்டோ டான்ஸோ புரியல அல்லது தெரியல,  உதாரணத்துக்கு "வாட் அ கருவாடு"  பாடல் (What A Karavaad!!) பெரிய வெற்‌றிப் பாடல் என்ற அறிமுகத்துடன் ஆடிக்களித்தனர். (By the way, செத்த மீனுக்குதான கருவாடுன்னு பேரு ? ) :)

எனது மூத்த மகள் கிருஷ்ணனின் "கோபிகா "பாடலுக்கு குழு
நடனமாடி இருந்தாள். அதை தவிர்த்து மருந்துக்காவது  ஒரு பாரதியோ இல்ல நல்ல ஆண்டாள் பாசுரமாவது வருமான்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

அதைத் தவிர்த்து, எனது விருப்பபாடலான AR ரஹ்மானின்  'ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா!!'  என்ற ஸ்டார் படப்பாடலை தேர்தேடுத்து ஆடியது மனத்துக்கு நிறைவு.

மேலும், நிகழ்ச்சியின் மகுடம் என சிலாகித்து  நன்றி உரையில் குறிப்பிடப்பட்டது  சுதாகர் கிருஷ்ணமூர்த்தியின்  பாடல்.  மௌனராகத்தில் இருந்து  "மன்றம் வந்த தென்றலுக்கு" எனும் பாடலை மிகஅசத்தலாகப் பாடி  அனைவரையும் மயங்கச் செய்தார். வாழ்த்துக்கள் அன்பரே!

தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன.
அதுபோல நிகழ்ச்சியும் பாடல், இசை, நடனம், நாடகம் என அனைத்து அம்சங்ககளையும் கொண்டு மூன்று மணி நேர நிகழ்ச்சி கொண்டாட்டமாய்
இருந்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளினி மூன்று மணி நேரமும்  சுவாரஸ்யமான பேச்சால் பார்வையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
வாழ்த்துக்கள்!

மிக அருமையானதொரு நிகழ்வு, நிர்வாகக் குழுவினர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை.



Sunday, November 9, 2014

சதுரங்க ஆட்டத்‌தில்..

என்றைக்கும் இல்லாத மாற்றமாய் வானம் லேசான மேகமூட்டமாய் இருந்தது.  அதிர்ஷ்டமாய் கிடைத்த மர நிழலில் காரை பார்க் செய்து விட்டு நூலகத்திற்குள் நுழைந்தாள் நளினி.

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இங்கே சிறுவர்களுக்கான செஸ் வகுப்புகள் நடக்கின்றன.  இன்று  எட்டு வயது மகள் அம்முவை கூட்டிப்போக வந்திருந்தாள்.

நேராக முதல் தளத்தில் இருந்த அந்த அறைக்குள்  நுழைந்தாள்.  அங்கே வரிசைக்கு நான்கு வீதம் இரண்டு வரிசையாக டேபிள்கள் போடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு டேபிள்களிலும் இரண்டு சிறுவர்களாக அமர்ந்து அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

செஸ் ஒரு யுத்த தந்திர விளையாட்டு, அவர்களுக்கான ஆடுகளத்தில் தங்கள் தந்திரங்களை கையாண்டு கொண்டிருந்தனர். இங்கே யாரும் பெரும்பாலும் அதிர்ந்து பேசியதாக  நினைவில் இல்லை. கடைசி வரிசையில் அம்முவின் தலை தெரிந்தது.

அனைவரையும் கடந்து அருகில் சென்றபோது தான், அவளுக்கு எதிரே ஆடிக்கொண்டிருந்த சிறுமி அழுது கொண்டிருந்ததை கவனித்தாள்.
அதிர்ந்தபடி அம்முவிடம் கேட்டாள்.

"என்ன பண்ணின அவ ஏன் அழறா ?"

"நான் ஒன்னும் பண்ல, ஏன்னு தெரியாது"

சிறுமியோ பதிலேதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் இப்போது அவளின் பிங்க் நிற சட்டையில்
வழிந்தது.

ஆனாலும், அம்மு ஏதோ சொன்னதால் தான் சிறுமி அழுவதாக முடிவு செய்திருந்தேன்.

அந்த சமயத்தில் அங்கிருந்த செஸ் பயிற்சியாளர் பிங்கியும் என்னுடன் சேர்ந்து நின்று கொண்டார்.

"சாரி சொல்லிட்டு கிளம்பு, நீ விளையாண்டது போதும்"

"நான் ஒன்னும் பண்ல, அப்புறம் ஏன்?"  என்றாள்  அம்மு.

அப்போது அங்கு வந்த ஒரு  வயதான பெண்மணி  குனிந்து சிறுமியின் காதோடு சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய பாட்டியாக இருக்கக் கூடும் என நினைத்தேன்.

நிமிர்ந்து எங்களை பார்த்து பேசிய பாட்டி "அவ அம்மாவை நினைச்சு அழறா" என்றாள்.

அழுகையை நிறுத்தி இருந்த சிறுமி

"என்னோட அம்மா என்ன விட்டுட்டு பிலிப்பைன்ஸ் போயிட்டாங்க"  என்றாள்.

பிங்கிக்கு என்ன நினைதாரோ, ஆனால் எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.

"அம்மா என்ன வேலை செய்றாங்க? " என அன்பாக கேட்டார் பிங்கி

"அங்க டாக்டரா, நோயாளிகளுக்கு உதவி பண்றாங்க"

"எப்ப போனாங்க?"

"போன மாசம்"

இப்போது தொண்டயை செருமியபடி பிங்கி,

"  பெரும்பாலும் வாழ்க்கை சதுரங்கத்தில், எதிராளியின் நகர்த்தலை நாமே முடிவுசெய்து, சொந்த எண்ணங்களில்  உறிஞ்சப்படுகிறோம்.

உண்மையில், எதிராளியே இறுதியாக தங்‌கள் நகர்த்தலை தீர்மானிக்கிறார்கள். 

என்று அனைவரும் கேட்கும்படி அழகாய்ச்  சொல்லி முடித்தார். அவர் குரலில் ஓரு உறுதி இருந்தது.

ஓரு முட்டாள்த்தனமாக நகர்வின் குற்ற உணர்வுடன் அம்முவின் கைபிடித்து வாசலை நோக்கி தொடங்கியிருந்தேன்.

வெளியே வரும்போது, வானம் மூட்டமின்றி தெளிவாக இருந்தது.  பாவம் அம்முதான் இப்போது அழத்தொடங்கிருந்தாள்.