Showing posts with label balachandar. Show all posts
Showing posts with label balachandar. Show all posts

Tuesday, December 23, 2014

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் - ஒரு சாகாப்தம்

 இயக்குனர் சிகரம் பாலசந்தர் காலமான தகவலை நண்பர் "வாட்ஸ் அப்" மூலம் அனுப்பி இருந்தார்.

அந்த தகவலை இணையத்தில் உறுதி செய்தபின்பு இதை எழுதத் தொடங்கினேன். கட்ந்த சில நாட்களாக சில விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.

பாலச்சந்தர் என்று ஒருமுறை மனதுக்குள் சொல்லி பார்த்தபடி அவருடய படங்‌களை ஒருமுறை மனத்திரையில் ஓட விட்டேன்.

பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானது சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி , மனத்தில் உறுதி வேண்டும் போன்ற படங்களின் மூலம் தான்.

அப்போது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், ஆனாலும், அவை என்னுள் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.

அந்த கால கட்டத்தில் அந்த மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துக்களை திரையில் சொல்ல அவருக்கு இருந்த துணிவைக் கண்டு இப்போது வியக்கிறேன்.

பாலசந்தர் என்றால் வித்தியாசம் என்றே மக்கள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் மனத்தில் அழகாய் பதிய செய்வதில் வித்தகர்.

உதாரணமாக மனத்தில் உறுதி  படத்தில் பின்னணியில் பாரதியின் 'மனத்தில்
உறுதி  வேண்டும்' பாடல் ஒலிக்க நாயகி சுஹாசினி குடும்பத்திற்காக உழைப்பது போல காட்சி வரும். அவை ஆண்டுகள் பல கடந்தாலும் மனதில் நீங்காதவை.

அதுபோலவே 'புதுப்புது அர்த்தங்கள்'  படத்தில்  வயதான தம்பதிகளாக வரும்
பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி ஜோடி. பின்பு  பூர்ணம் விஸ்வநாதன் இறந்த பின் வரும் சோக காட்சிகள். அவை கண்ணீரை தழும்ப செய்யக் கூடியவை. இப்படி எத்தனையோ பல.

சமீபத்தில் கூட அவருடைய  'வறுமையின் நிறம் சிகப்பு', 'அவள் ஒரு தொடர்கதை', 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்‌களை தேடி பிடித்து மீண்டும் கொண்டிருந்தேன். 'பார்த்தாலே பரவசம்'  நான் பார்த்த அவருடைய மிக சமீபத்திய படம்.

கதை, வசனம், பாத்திர வடிவமைப்பு என எல்லாவரிலும் தனது தனித்தன்மையை பதித்து விடுவார்.

அவருடைய படத்‌தில் பாடல்களுக்கும் எப்போதும் ஒரு தனி இடமுண்டு.
திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில் பாடல் பெறும் வித்தையை அறிந்தவர்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். தொலைக்காட்சித் தொடர்களில் முதலில் நுழைந்ததது. என பல 'முதல்'களுக்கு சொந்தக்காரர் அவர்.

தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் திரை உலகுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்தவர் எனறால் மிகையில்லை.

உஙகள் மகன் அல்லது மகளுக்கு இன்னும் கால்நூற்றாண்டு தாண்டியும் நீங்கள் துணிவாக இவர் படங்களை பரிந்துரைக்கலாம்.

என்னுடைய தஞ்சை தந்த தங்கம் பாலச்சந்தர் என்பதில் எனக்கு கர்வமே.

தலைமுறைகள் தாண்டி அவருடைய படைப்புகள் தமிழ் திரையுலகின் ஓரு அடையாளமாய் வாழும்.