Showing posts with label #tamil. Show all posts
Showing posts with label #tamil. Show all posts

Monday, April 8, 2019

அப்பெல்லாம் எப்படி தெரியுமா?

அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்..,  அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து  பெரியவர்கள்  தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.

அப்படி வாய்பேச்சில் கதைகதையாக சொல்பவர்களில்  சொற்பமானவர்களே அதை எழுதி ஆவணப்படுத்துவார்கள். அந்தவகையில் ஒரு புத்தகம் எனது கைக்கு வந்திருக்கிறது. 1960 களில் வளர்ந்த அவர்
தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் சுயசரிதை போல் எழுதியிருக்கிறார். பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
கல்யாணமாம் கல்யாணம் எனும் தலைப்பில் அந்த நாளையத் திருமண ஏற்பாடுகள், கலாட்டாக்கள், சடங்குகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.  அதில் ஆச்சர்யப்படும் பல  விசயங்கள் இருக்கின்றன. புத்தகத்தில் இருந்து...

"..அப்போதெல்லாம் கல்யாணத்துக்கு போகிறோம் என நினைத்தாலே வடை,பாயசம், அப்பளம் கூடிய சாப்பாடுதான் நினைவுக்கு வரும். அப்போது மாப்பிளைக்கு பெண் கிடைப்பது அரிது. அப்படியே பெண் கிடைத்தாலும் ஜாதக பொருத்தம் பார்த்து, பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்குவதற்கு
நடையாய் நடந்து காலும் வீங்கியது , செருப்பும் தேய்ந்தது என்பார்கள்.
பெண் வீட்டார் எப்போதும் முறுக்கோடு இருப்பார்கள்.ஏட்டிக்குப் போட்டியாகவே பேசுவார்கள். மாப்பிளை வீட்டார் பெண்ணுக்கு என்ன நகைபோடுவார்கள் என பேச்சுவார்த்தை நடக்கும். எவ்வளவு பணம் கொடுப்பர் எனக் கேட்பதும் உண்டு.  பேசிப்பேசி பெண் வீட்டாரின் சம்மதம் வாங்குவது பெரும்பாடாக இருக்கும்..."

திருமணத்திற்கு பெண்கள் தேடும் விசயத்தில் நடுவில் கொஞ்சநாள் நிலைமை மாறி இப்போது திரும்பவும் 1960களுக்கு திரும்புகிறோம் என நினைக்கிறேன்.

Wednesday, August 9, 2017

த மேன் இன் ஹைய் கெசில் (The Man in the High Castle,1962) -நாவல்

சுதந்திர இந்தியாவை காங்கிரஸ் ஆளாமல் வேறோரு கட்சி
ஆண்டிருந்தால் இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா?

இல்லை. தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகள் கடந்த அரைநூற்றாண்டுகள் ஆட்சிசெய்யாமல் இருந்திருந்தால் ?
என்பதை யோசனை செய்து பார்த்தது உண்டா ?

அதுபோல  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனியப் படை வென்றிருந்தால் ? அப்படியொரு அதிகப்படியான கற்பனை செய்து  எழுதப்பட்ட புதினம் (நாவல்) "த மேன் இன் ஹைய் கெசில்" (The Man in the High Castle,1962 ). கற்பனை செய்தவர் எழுத்தாளர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) .

கதைப்படி போருக்குபின்னால் வெற்றிபெற்ற  ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி எனும் மூன்று நாடுகள் பெரும்பான்மை உலகை தங்களுக்குள் பிரித்துக்கொள்கின்றன. ஹிட்லர்  உயிருடன் இருக்கிறார். வேண்டாதவர்கள் என நினைக்கப்படுபவர்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள். தப்பிப்பிழைத்த சில யூதர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதுபோல உலகம் முழுவதும் வாழும்  கறுப்பர்கள் அடிமைகளாக மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். அந்த உலகை நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டுகிறது.

பூமியைத் தாண்டி சந்திரன், செவ்வாய், வெள்ளி போன்ற பிற கோள்களும் காலனியாக்கப்பட்டிருக்கிறன. மிக வேகமாக பயணிக்கும் சாகச  விமானங்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என பல  சாத்தியமான விசயங்களை நம்பும்படியாக எழுதியிருக்கிறார்.

முக்கியமாக அமெரிக்கா ஜெர்மன், ஜப்பானியர்களால்
துண்டாக்கப்பட்டு ஆளப்படுகிறது. ஆனால்,  உண்மையில்
போருக்கு பின் ஜெர்மனிதான் மேற்கு,கிழக்கு என பிரிந்து கிடந்தது என்பது நாமறிந்த வரலாறு.

கதைப்படி  ஜெர்மனின் கிழக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு முன்னாள் போர் வீரன் ஜப்பான் ஆளுமையில் இருக்கும் மேற்கு பகுதியில் இருக்கும் ஒருத்தியை சில ரகசிய ஆவணங்களுடன் சந்திக்க பயணிக்கிறான்.

அந்த சந்திப்பு நிகழ்ந்ததா, அந்த ரகசியம் என்ன, அதன் பின் விளைவுகள் என்ன என்பதை நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வாசிக்கமுடியாதவர்கள் பார்த்தும் ரசிக்கலாம். ஆமாம்,
அமெரிக்காவில்  இந்தக் கதை அமெசானால் டிவி சீரியலாகவும் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்  பெற்றிருக்கிறது.  முதல் சீசனின் முதல்பாகம் கூட யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள்.

இதன் ஆசிரியர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் கூட. பல வருதுகளைப் பெற்றவர்.  "பிளேட் ரன்னர்", "மைனாரிட்டி ரிப்போர்ட்" போன்ற பல பெருவெற்றி அடைந்த ஹாலிவுட் படங்கள் இவருடைய நாவல்கள் தான்.

Saturday, May 20, 2017

அமெரிக்காவில் தமிழ்

நண்பர்களுக்கு வணக்கம்.   இந்தத் தகவலை இதற்குமுன்
உங்களுடன் பகிர்ந்துகொண்டதாக நினைவில்லை. அதனால் சொல்லிவிடுகிறேன்.

விசயம் இதுதான். நான் வார இறுதியில்  ஐந்தாறு சிறுவர், சிறுமியர்களுக்கு வீட்டில் முறையாக தமிழ் வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறேன்.

கடந்த ஒருவருடமாகவே நெருக்கமான ஃபிளாரிடா நண்பர்கள்
என்னை வகுப்பெடுக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். நானதான் ஆரம்பத்திலிருந்து எழுத்துப்பணியில் பிசியாக இருப்பதாகச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். அவர்களும் விடுவதாயில்லை. கடைசியில் ஒத்துக் கொண்டேன்.

எனக்கு நேரம் ஒரு காரணமாக இருந்தாலும். உண்மையில்
இதை எடுத்து செய்ய ஆரம்பத்தில் கொஞ்சம் அச்சம் இருந்தது.
காரணம், நம்மை நம்பி வரும் பிள்ளைகளுக்கு முழுமையாக சொல்லித் தரவேண்டுமே எனும் எண்ணம் தான்.

பெற்றோர்களின் தாய்மொழி ஆர்வம் எனக்குப் புரிகிறது. ஆனால்
இதில் பல நடைமுறைச் சிக்கல்கள்.  6 முதல் 10 வயதுள்ள இந்தப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில். வீட்டில் டிவி, பள்ளி, நண்பர்கள் என அவர்கள்  பெரும்பாலும் புழங்கும் மொழி ஆங்கிலம். தமிழில் பேசினால் புரிந்துக் கொள்வார்கள் தான். ஆனால், பதில் சொல்வது ஆங்கிலத்தில்.

இவர்களுக்கு தமிழ் சொல்லித்தருவதில் இருக்கும் சிரமங்களை நன்றாக தெரிந்ததால் ஆரம்பத்தில் யோசித்தேன். சோதனை முயற்சியாக 4 வகுப்புகள்  எடுத்து பார்த்துவிட்டுதான் தைரியமாக பெற்றோர்களுக்கு கமிட் செய்தேன். மனைவியும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்.  பிள்ளைகளை எப்படியாவது தமிழ், எழுத, படிக்க, பேச வைத்துவிட வேண்டும்.  கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. செய்துவிடலாம்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு பாடத்தை   அரிச்சுவடியிலிருந்து தொடங்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் கற்றுத்தருவது கொஞ்சம் கடினம் தான். பல சிக்கல்கள்.  ஆனால், வகுப்பு தொடங்கிய இரண்டு மாதத்தில்   பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் தெரிவதாக பெற்றோர் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.   குறிப்பாக மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு கோயம்புத்தூர் பையன் நிஜமாகவே கலக்குகிறான். இதெல்லாம் எனக்கு இது புதிய அனுபவம். பல சுவையான நிகழ்வுகள். நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

இதை, தமிழ் எழுத்தறிவிக்கிறேன். தமிழ்ச்சேவை செய்கிறேன் என்றேல்லாம் சொல்லி  நாம் பெரிதாக குழப்பிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன்.   எனது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்த  ஒரு சிறுமுயற்சி செய்கிறேன் என்ற அளவில் நான் மனதிருப்தி அடைந்துகொள்கிறேன். அதுவே சரியானதாக இருக்கும்.

இப்போதெல்லாம், ஞாயிற்றுக் கிழமை மாலையில் வீடு "ஜேஜே" என களைக்கட்டி விடுகிறது. "வணக்கம். பாஸ்கர் மாமா !",
"வீட்டுப்பாடம் எழுதிட்டேன்" ,  "நன்றி !" என தமிழ் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நல்ல தொடக்கமான உணர்கிறேன்.

என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி இயக்கிக் கொண்டிருக்கும்
அனைவருக்கும்  நன்றி!  வேறு ஆலோசனைகள், உதவிகள் தேவைப்பட்டால் நண்பர்களிடம் கண்டிப்பாக கேட்கிறேன்.

Wednesday, March 1, 2017

அமெரிக்கர்களுக்கு இன்னோரு புதிய தலைவலி

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் ( ஐடி அல்லாத) ஒயிட்காலர் வேலை செய்பவர்களுக்கு  "ரோபாடிக்ஸ்"  ரூபத்தில் புதிதாக இன்னோரு தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது.  காரணம் ? எல்லாம் பணம் படுத்தும்பாடு தான்.

நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பதுமெயின்பிரேம் கனிணி.  அதில்தான்   லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் இருக்கின்றன. பல ஆயிரம் பேர்  பயன்படுத்திகிறார்கள்.    ஆனால், முப்பது வருடம்  அரத பழசுனாது. அதன்  நிரல்களை (program) மேம்படுத்தி புதுப்பிப்பதென்றால் ஐபிஎம் நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் தெண்டம்  அழவேண்டும்.   பெரும் செலவு செய்து புதுப்பிப்பதற்கு பதிலாகதான் "ரோபாடிக்ஸ்" எனும்  புதிய தொழில்  நுட்பத்தை அதனுடன்  ஒத்திசைவாக  பயன்படுத்த இருக்கிறார்கள்.

இந்த ரோபாடிக்ஸ் புரோகிராம்கள் இப்போழுது நாள் முழுவதும் மனிதர்கள் மெயின் பிரேம் கம்யூட்டர்களை வைத்து செய்து கொண்டிருக்கும் வேலையை ஒரு சில நிமிடங்களில்  அசால்டாக செய்து முடித்துவிடும்.  அதனால் கணிசமானவர்கள் இன்னும்  ஒரிரு வருடங்களில் வேலையை இழக்கப்போவது உறுதி.

இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் நன்கு படித்த வோயிட் காலர் வேலைபார்ப்பவர்கள் தான். இருந்தாலும் வேறு வழியில்லை.  ஐடி துறையில் அடிக்கும் இந்த புதிய அலை குப்பை கூளங்களுக்கும், புத்தகத்துக்கும் வித்தியாசமா பார்க்கப்போகிறது ?

இங்கே இருக்கும் அமெரிக்க நண்பர்கள் பலரிடமும் பேசினேன். எல்லோரும் பொதுவாக சொல்லும் ஒரு விசயம். பெருநிறுவனங்கள் தங்கள் செலவினத்தை குறைத்து வருமானத்தைப் பெருக்க
ஏதோ ஒரு  விதத்தில் புதிய தொழில்நுட்பத்தைத் தேடி தேடி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

இனி வரும் நாட்களில்  மனிதர்களின் இடத்தை கம்யூட்டர்கள் முழுமையாக  நிரப்பிவிடுமா ? எனும் விவாதத்துக்குள் நாம்
இப்போதைக்குப் போகத் தேவையில்லை. ஆனால், இயந்திரங்களால் செய்ய முடியாத வேலை என்று ஒன்று  இருந்தால்  அதைத் தேடிக் கொள்வது உசிதம்.

Friday, November 25, 2016

அரசியல் பழகு - சமஸ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சமஸின் "அரசியல் பழகு" எனும்
சிறு நூலை வாசித்தேன்.   இது ஆசிரியர் தமிழ் இந்துவிற்காக
2016 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.



இந்தக் கட்டுரைகளை எழுதும் முன் ஆசிரியர் தமிழகத்தின் வெவ்வேறு  பின்புலம் கொண்ட 25,000   கல்லூரி மாணவர்களைச் சந்தித்திருக்கிறார். அதனால் இந்தக் கட்டுரைகள் இன்றையத்
தலைமுறையின் உண்மையான மனஓட்டத்தைப் புரிந்து  கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த இளைஞர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு அரசியல் அறிமுகத்துக்கு அறைகூவல் விட்டு அழைக்கும் வகையிலேயே நூல்  " அரசியல்  பழகு"  எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

சமூக பார்வையற்ற கேளிக்கைகள், "படிக்கும் போது உன் கேரியர் முக்கியம்"  எனச் சொல்லி  வளர்க்கப்படும் மாணவர்கள், "அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கானதல்ல "  எனும் பொதுபுத்தி போன்ற பல சமூக சீர்கேடுகளைக் கண்டித்திருக்கிறார். அந்த  மனப்பான்மை மாற வேண்டும்  என்ற கருத்துடைய "அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்"  என தனது முதல் கட்டுரையைத் தொடங்குகிறார்.

சமூகம், அரசியல் பிரஞை  எதுவுமற்ற சூழல் ஆபத்தானது என்பதைச்சொல்லும் அதே வேளையில் அரசியல் விழிப்புணர்வு ஏன் இன்றைய அவசரத் தேவை என்பதை நாட்டின் இன்றைய சமூக சீர்கேடுகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார். அதற்க்காக  உலக அரங்கில் இந்தியா பற்றிய பல தரவுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைகைக்கிறார்.

அதேபோல,  இந்தியா மிகப் பெரிய ஜனநாயகநாடு, நமது அரசியலைமைப்புச் சட்டம் அனைவருக்குமானது  என்பதை  பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.  தேர்தலில் நம் ஒவ்வொருவருடைய ஒட்டும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதே என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறார்.

ஆனால், இன்றைய தலைமுறைக்கு நல்ல தலைவர்களாக அடையாளம் காட்ட ஆசிரியருக்கு சுதந்திரம் பெற்ற  இந்தியாவில் காந்தி, நேரு,காமராஜ்  என விரல்விட்டு எண்ணும் தலைவர்களே
இருப்பது நாம் வருத்தப்பட வேண்டிய விசயம்.

உண்மையைச் சொல்வதென்றால்,    நாம்  பொதுவாக   அரசியல் பற்றி பொதுவெளியில் (என்னையும் சேர்த்து) பேசுவதில்லை இல்லை அப்படிப் பேசத் தயங்குகிறோம். அந்த தயக்கங்கள் முற்றிலுமாக ஒழிந்து அரசியல் என்பது அடிப்படையில் சகமனிதருக்கும் நமக்குமான உறவு என்பதை உரத்துச் சொல்ல முயலும் நூல். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

இது அரசியல் அறிந்தவர்களுக்காகான நூல் இல்லை எனும் ஆசிரியர் குறிப்புடன் இருக்கும் இந்த நூலின் விலை ரூபாய். 20, பக்கங்கள்-48

படம்- நன்றி இணையம்


அரசியல் பழகு
சமஸ்
துளி வெளியீடு
விலை : ரூ.20

Sunday, November 13, 2016

பருக்கை - வீரபாண்டியன்

சமீபத்தில்  2015ல்  சாகித்ய அகாதமியின்   'யுவ புரஷ்கார்'  விருது பெற்ற வீரபாண்டியனின்  "பருக்கை" நாவலை (புதினம்)வாசித்தேன்.

தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான "பருக்கை" என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டின் முதலில் பாராட்டுக்குரியவர்.

சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு,  தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு  என  எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.


படிக்க வரும்  அவர்கள்  கையில் காசில்லாததால் படிப்புச் செலவுக்காகவும் நல்ல சாப்பாட்டிற்காகவும் சென்னையில் "கேட்டரிங்" எனும் உணவு பரிமாறும் வேலை செய்கிறார்கள். அங்கே நேரும் அவமானங்கள் , அனுபவங்கள் எனக் கதை விரிகிறது.


கல்யாணவீடுகளில் நாம் எளிதாகக் கடந்தபோகும்  அந்தச் சாமானிய மனிதர்களின் உள்ளக்குமுறலை எந்தவித பாசாங்கமும் இல்லாமல் ஆசிரியர்  பதிவு செய்திருக்கிறார்.  கதையுனுடே இந்த நகரச்சூழலில் அந்த இளைஞர்கள்  எதிர் கொள்ளும்  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், காதல், வர்க்கப்பிரிவினை, பண்பாட்டுச் சிக்கல்கள் எனும் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.
  
கதை பெரும்பாலும் பெரிய வர்ணனைகள் இல்லாமல் இயல்பான உரையாடல்களால் நகருகிறது. இயல்பான அன்றாட பயன்பாட்டிலிருக்கும் சாமானியனின் மொழி கதைக்குப் பலம்.

"ஏய்யா.. உங்களுக்லாம் அறிவில்ல ? வேலை செய்யிறதுக்குதான வந்திங்க.. டைம் ஆச்சில்ல எலயப் போடாம வடைய எடுத்துத்
தின்றிங்க. ...." (பக்கம்-153)

இதில் பட்டினி வயிறோடு பந்தியில் ஒடியாடி உணவு பரிமாறுபவனை ஒரு சகமனிதனாக மதிக்காமல் நோகடிக்கும் சமூகத்தை நமக்குக் காட்டுகிறார்.

".. (நீ ) இங்க  மெட்ராஸுக்கு வந்து படிக்கிறன்னு உங்கப்பன் அங்க ஊருபுல்லா பெருமையடிச்சிட்டுக் கெடக்குறான்.  நீ இன்னானா இங்க டீய வித்துங் கெடக்குற. இதுக்குதான் உங்கொப்பன் உன்ன படிக்க அனுப்ச்சானா ? ..." (பக்கம்-239)

ஒரு கிராமத்து மனிதரின் ஆற்றாமையான உள்ளக் குமுறல் அது.

கதையில் கல்யாண மண்டபங்களின் திரை மறைவு விசயங்கள், கல்யாண வீட்டுச் சமையல், அங்கே சமைப்பவர்கள், பரிமாறுதல் போன்ற விசயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வரும் பல நுண்விவரங்கள் வியக்கவைக்கின்றன.

"சாப்பிடுகிறவர்கள் பாராட்டுகிற மாதிரி சாம்பார் ஊற்றுவது ஓரு சாதனை. அந்தப் பாராட்டுதல் அவர்கள் முகத்திலேயே தெரியும். ஒரு தலை ஆட்டுதலிலோ, ஒரு தேங்ஸ்-லோ, விழிகள் விரிய அவர்கள் தரும் சிறு புன்னகையோலோ.. அது தெரியக்கூடும். ஒரு சுருங்கிய முகம் சாம்பார் ஊற்றியதில் மயங்கி மலர்வதிலோ அது தெரியக்கூடும்......  " (பக்கம்-132)

".. சோறு கட்டியாக இல்லாமல் உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தால் ரசம் ஊற்றுவது சுலபம். ரசத்தை ஒரே இடமாக ஊற்றாமல், சோற்றுக்குள் வட்டமாக ஊற்ற வேண்டும். தோசை ஊற்றும் போது மாவை வட்டமாகத் தேய்ப்பது போல ரசத்தை ஊற்றினால்,.....  " (பக்கம்-133)

ஒடியாடி பரிமாறிக் களைத்து போய் விரும்பிய உணவு தீர்ந்து, பசியெல்லாம் சுத்தமாய் அடங்கி, ஆறியச் சாப்பாட்டைக் கடைசியில் சாப்பிடும் அவலத்தைச் சொல்லும்  இந்தக் கதையில் பசி எனும் உயிர்ப்பு கடைசி வரை தொடர்கிறது. அதுவே எழுத்தாளரின் வெற்றியாக நினைக்கிறேன்.

இளமையில் வறுமை எனும்  துயரம் அனுபவித்தால் தெரியும் என்பதை வாசகர்களுக்குக் கடத்துவதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது கதையில் வரும் எழுத்தாளரின்
ரசிக்கும் படியான சில சொந்தக் கவிதைகள்

"பெண்கள் குனியும் போதெல்லாம்
கும்மாளம் போடாதீர்கள்
உங்கள் மனைவிக்கும்
தண்டுவடம் தாழாமலிருக்காது.. " (பக்கம்-149)

இயல்பான நகைச்சுவைக் கதையில் ஒடுவதும் நல்ல அம்சம். அதுபோல, கதையில் ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது.  குறிப்பாக அரசு விடுதிகளின் சீர்கேடுகள், உடன் படிக்கும் கண் பார்வையற்றவரின் சிரமங்கள் எனப்  பல மெத்தனங்களுக்குச் சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

விருது பெற்ற நாவல் எனும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றங்களும் உண்டு. 

முதல் படைப்பென்பதால் பெரிதாகத் திட்டமிடல் இல்லாமல் எழுதப்பட்டது போலுள்ளது.  உதாரணமாக.  கதைசொல்லியின் நண்பர்களை எந்தவோரு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  கதை நகர்த்தலிலும் அவர்களின் பங்கு பெரிதாக வெளிப்படவில்லை.   நடுவில் வரும்
முழுமை பெறாத  பெண் நண்பியின் கதாபாத்திரம் இப்படிப் பல.

நண்பியிடம் காதலைச் சொல்ல முடியாத தருணத்தில் தனது மனநிலையைக் கதைச்சொல்லி இப்படிப் பதிவுச் செய்கிறார்.

"..அவள் பேசினாலும் 'லவ் பண்றதுலாம் பிடிக்காது ' என்பது மட்டுமே என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. மனைவி இறந்து குழந்தை பிறந்த மனநிலையோடு நின்றேன். (பக்கம்-67)"

ஒர் இளம் பெண்ணுடன்  தனிமையில் இருக்கும் மணமாகாத இளைஞனுக்கு இதுபோன்றதோரு  மனநிலை என்பது செயற்கைத் தனமாக எழுதப்பட்டதாகத் தோன்றியது.

சமீபத்தில் பட்டமேற்படிப்பு முடித்த வீரபாண்டியனின் முதல் படைப்பு இது. அந்த வகையில் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வரும் ஒரு மாணவன் அந்த வாழ்பனுவத்தை ஒரு புனைவாக எழுதுகிறார். அதை ஒரு பதிப்பகம் வெளியிட்டு அந்தப் படைப்பு மத்திய அரசின்  உயரிய விருது பெறுவது என்பதைத் தமிழ் எழுத்துலகில் நல்லதோரு தொடக்கமாக நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பாக நல்ல உத்வேகத்தைத் தரும் நிகழ்வு.

அதுபோல ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதால் இந்தப் படைப்பு எவர் கண்ணிலும் படாமல் போயிருக்கவே வாய்ப்புகள் அதிகம். தமிழ் எழுத்துலகில் அதுதான் நிதர்சனம்.  அதிஷ்டவசமாக   இந்தப் படைப்பு இலக்கிய உலகின்  உயரிய விருதால்  நல்ல கவனம் பெற்றிருக்கிறது. எழுத்தாளர் வீரபாண்டியன் விருது தந்த இந்த வெளிச்சத்தை வரும் காலங்களில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுவரை எந்தத் தமிழ்படைப்பாளியும் தொட்டதாக நினைவில் இல்லாத மாதிரியான ஒரு கதைக்களன்.  இதை கதைக்கட்டமைப்பு, செவ்விதழ் இலக்கியம் என்றேல்லாம் கறாராகச் சீர்தூக்கிப் பார்க்காமல்  சாமானியர்களின் கதைக்கரு என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் நிச்சயம் இது ஒரு புதுமையான படைப்பு.   

வீரபாண்டியனை வாழ்த்தும் அதே நேரத்தில் ஆசிரியர் புகழ்பெறாதவர் என ஒதுக்காமல் அவரின் நூலை வெளியிட்ட பரிசல் புத்தக நிலையத்துக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

பருக்கை 
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 


இந்தக் கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://solvanam.com/?p=47204


Sunday, August 21, 2016

இவர்கள் வாசகர்கள்-3

நண்பர்களே,  

இவர்கள் வாசகர்கள் பகுதியில் ' பங்களா கொட்டா '  அனைத்து தரப்பு வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்கள் முன் வைப்பதையே நான் விரும்புகிறேன். புதினம் பற்றி நண்பர் அரசன் அவர்கள் வாசகர் கூடம் தளத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள் உங்களுக்காக இங்கே. 


இதுபோன்ற வாசக நண்பர்களின் தொடர் உற்சாகமே எழுதுபவர்களை உற்சாகப்படுத்தி   தொடர்ந்து முன்னேடுத்துச் செல்ல உதவும். அந்த வகையில் அரசனின் நடுநிலையான கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரசனுக்கு எனது நன்றிகள் பல.

****
ண்ணையும் அதன் சார் மனிதர்களையும் பற்றிய படைப்புகள் என்றால் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு தட்டாது எனக்கு. அந்த மாதிரியான களத்தினை உள்ளடக்கி வெளிவந்துள்ளது இந்த பங்களா கொட்டா நாவல். புகழ் மிகுதி கொண்ட மனிதர்களைத் தான் இந்த உலகம் படைப்பாளிகள் என்று நம்பிக் கொண்டிருக்கிறது. புதிதாய் வருபவர்களை கண்டுகொள்ளாமல் அவர்களது முயற்சிகளுக்கு செவி சாய்க்காமல் வெற்றி பெற்றவனின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற சம காலத்தில், புதிதாய் ஒரு நபர் புத்தகம் வெளியிட்டு அதை சந்தைப் படுத்துவதில் உள்ள சிரமத்தை சமீபத்தில் உணர்ந்தவன் நான்.




பங்களா கொட்டா மூலம் மண்ணை மோதிப் பிளந்து கொண்டு வந்திருக்கும் புதிய விருட்சம் தான் நண்பர் ஆரூர் பாஸ்கர். படைப்பு வெற்றியடைந்து உலகம் கொண்டாடுதோ இல்லையோ? இம்மாதிரியான முயற்சியினை ஆரத்தழுவி வரவேற்க வேண்டியது சக படைப்பாளிகளின் கடமை. அதற்கான சூழல் தமிழிலக்கிய உலகில் சாத்தியமில்லை. சரி வாருங்கள் பங்களா கொட்டா நாவலைப் பற்றி காண்போம்.

ஒரு கிராமத்திற்கு அடையாளமாக இருக்கும் பரந்து விரிந்த பண்ணை, பண்ணையின் பெரியவர், அவரின் மூன்று வாரிசுகள், மற்றும் பண்ணையினை நம்பி பிழைக்கும் அவ்வூர் மக்கள் சிலர். இவர்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது பங்களா கொட்டா. மேலோட்டமாக பார்த்தால் எளிமையிலும் மிக எளிமையான புனைவைப் போன்று தான் தெரியும். ஆனால் வாசித்தால் மட்டுமே அதன் அடர்த்தியை உணர முடியும். விவசாயத்தினையும், அதனை செய்யும் மாந்தர்களின் மன நிலைக் கூறுகளையும் முடிந்த வரை பதிவு செய்ய முயன்றிருக்கிறார் நண்பர் ஆரூர் பாஸ்கர்.

பண்ணைக்கு மூன்று ஆண் வாரிசுகள். மூத்தவன் நகரத்தில் வழக்கறிஞர் பணி, அவ்வப்போது கிராமத்திற்கு வந்து தலை காட்டிவிட்டு போகும் மனிதர். அடுத்து, ஞானி இவர்தான் தனது படிப்பினை மேலும் தொடர விருப்பமின்றி விவசாயத்தின் மீது தீவிர பற்று கொண்டு, வயசான பண்ணை முதலாளிக்கு துணையாக இருந்துகொண்டு விவசாயம் தடை பட்டு போகாமல் பார்த்துக்கொண்டு வருகிறார். கடைக்குட்டி இராசு அதீத பாசத்தினால் சீர்கெட்டு திரியும் இளம் மைனர். இம்மூவர்களின் நிலப் பங்கீடும், அதன் வழி கிளம்பும் சில சிக்கல்களும், இடையே ஞானியின் காதலும் என்று கலவையான படைப்பு. மற்ற இருவரும் நிலத்தினை பங்கிட்டு காசு பார்க்க துடிக்கையில் ஞானி மட்டும் ஒரு கல்லூரி கட்டி இலவச படிப்பினை வழங்கும் நோக்கில் தனது செயலினை முன்னெடுக்கிறான். கிட்டத்தட்ட ஞானியினை மையப்படுத்தியே கதை நகர்கிறது. விவசாயம் செழித்தோங்கிய மண்ணில் தற்போது நிலவி வரும் வறட்சியில் துவங்கி, வாரிசுகளினால் துண்டாடப்படும் நிலக்கூறுகள் உருவாக்கும் அதிர்வுகள் வரை எளிமையாக பதிவு செய்திருக்கிறார்.

எல்லா இடத்திலும் நல்லார்க்கு உள்ள எதிரிகளைப் போன்று இக்கதையிலும் சில நயவஞ்சக மனிதர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதன் கதகதப்பில் சுகம் தேட முயன்று தோற்றுப் போகிறார்கள், அவர்களின் வஞ்சகத்தன்மையை அழுத்தமாக சொல்ல முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறார் நாவலாசிரியர் திரு ஆரூர் பாஸ்கர். கிராமத்திலே பிறந்து வளர்ந்த என்னால் நிலப் பிரச்சினைகளினால் ஏற்படும் சர்ச்சைகளோடு எளிதில் ஒன்றிப் போக முடிந்தது, ஆனால் தற்போதைய இளம் வாசிப்பாளர்களால் இயலுமா என்பது கேள்விக்குறி, அவர்களுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விலாவாரியாக பதிவு செய்திருக்கலாம்.

எழுத்து என்பது வெறும் நிகழ்வினை கடத்துபவையாக இல்லாமல் அந்நிகழ்வினை மிகுந்த அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பவன் நான், இக்கதையினுள் நிறைய விசயங்களை அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அதை சற்று மேலோட்டமாகவே கடந்து போயிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஞானி கல்லூரி எதற்காக கட்ட வேண்டும் என்று துடிக்கிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறி இருக்கிறார். முக்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க வேண்டிய உருவ/உடல் விவரிப்பினை கிட்டத்தட்ட நாவலில் வரும் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். சில பக்கங்களே வந்து போகும் சாமியாருக்கு கூட தீர்க்கமான பார்வை, நீளமான முடி என்று விவரணை அந்த இடத்தில் தேவையற்றது என் கருத்து.

இன்னொரு மிக முக்கிய பிரச்சினை நிறைய ஒற்றுப் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக "ஒ" விற்கு பதிலாக "ஓ"தான் இருக்கிறது. இப்படியான பிழைகளை கொஞ்சம் தவிர்த்து இருக்க வேண்டும். இன்னொன்று பேச்சு வழக்கில் தொடங்கிய எழுத்து வழக்கில் கரைந்து மீண்டும் பேச்சு வழக்கில் வந்து நிற்கிறது. முதல் படைப்பு அதுவும் வட்டார வழக்கினை மையப்படுத்தி புனையப்பட்டதினால் பெரும் குறையாக தனித்து தெரியவில்லை என்றாலும் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படியான சில குறைகளை கலைந்துவிட்டுப்  பார்த்தால் தனக்கான தனித்துவ அடையாளத்தைப் பெறுகிறது இந்த "பங்களா கொட்டா".      

அமெரிக்காவில் வசித்தாலும் தனது மண்ணையும், அதனுள் வாழ்ந்து மரித்த/வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களையும் நேசித்து அவர்களின் வாழ்வியல் முறையினை எழுத்தில் பதிவு செய்து வரும் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டியது அவசியம். மனிதர்கள் மறந்தாலும், என்றாவது உங்கள் படைப்புகளை காலம் நினைவு கூறும் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்... பெரு வாழ்த்துக்கள்....

================================================================

ஆசிரியர் வலைதளம் : https://aarurbass.blogspot.in/

பதிப்பகம் : அகநாழிகை

விலை : 130/- 

=================================================================

- அரசன்
http://karaiseraaalai.com/


இணைப்பு
http://vasagarkoodam.blogspot.com/2016/08/pangalaakotta.html

Monday, July 18, 2016

தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகம் - அ. ராமசாமி

பேராசிரியர் அ. ராமசாமி  தமிழ் இலக்கிய உலகில்  தவிர்க்க முடியாத ஆதர்சனங்களில் ஓருவர். பேராசிரியராக, திறனாய்வளராக, விமர்சகராக, நூலாசிரியராக, நாடகவியல் ஆய்கவாளராக இன்னும் பல துறைகளில் பல்லாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருபவர்.

பேராசிரியர் தற்போது அமேரிக்காவிற்கு விடுமுறைக்காக வந்திருக்கிறார்.  (இவருடைய மகன் பாஸ்டனில் இருக்கிறார்)
அவர் இந்த மாத தொடக்கத்தில்  நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 2016ம் ஆண்டு தமிழ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அப்போது  பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது மிக மகிழ்ச்சி. அதற்கு உதவிய நண்பர் ஆல்பிக்கு எனது நன்றிகள்.



நேற்றைய  (ஜூலை, 17, 2016) நிகழ்வுக்கு வருவோம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாதமொருமுறை இலக்கியச் சொற்பொழிவு நிகழ்வை நடத்திவருகிறது.  அந்த நிகழ்வில் பேராசிரியர் அவர்கள் பாஸ்டனிலிருந்து  பல்வழி இணைப்பு வழியாக கலந்துக் கொண்டார்.

தனது பேச்சின் தொடக்கத்தில் தமிழ் விழா 2016 பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்தார்.  பின் "தமிழ் நாடகம் ; அடையாளமும், போக்குகளும்" எனும் தலைப்பில் பேசினார்.  நான் சமீபத்தில் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு இது.  தனது பேச்சில் நூற்றாண்டு பாரம்பரிய தமிழ் நாடக உலகின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றார்.

அவருடைய பேச்சை தனியாக குறிப்புகள் எதுவும் எடுக்கவில்லை.
அதனால் நிகழ்வின் இறுதியில் கேள்வி நேரத்தில் அவர் தந்த பதில்களை நினைவில்  இருந்ததை  மட்டும்  உங்களுக்கு தருகிறேன்.
(எதேனும் விடுபட்டிருந்தால் அது எனது தவறு மட்டுமே.)  இவை தமிழ் பேசும் அனைவரையும் சிந்திக்கவைப்பது.

தமிழ் நாடக உலகின் மூத்தவர் என  சங்கரதாஸ் சுவாமிகள் மட்டும் கொண்டாடப்படும் அதே வேளையில் பாஸ்கர தாஸ் அதிகம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஓட்டிக் கேட்கப்பட்ட கேள்விக்கு. 

அது திட்டமிட்டு செய்யபடும் இருட்டடிப்பு அல்ல. சங்கரதாஸ் அவர்கள் நாடக உலகின்  முன்னோடி என்ற அளவில்  பெரிதும் பேசப்படுவதாகச் சொன்னார்.

தமிழ் சிறுகதைகளை நாடகமாக்குதல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு

தமிழ்நாட்டில் முதன்முதலில் சிறுகதைகளை நாடகமாக்கியதில் தனது பங்கை குறிப்பிட்டார்.  மேலும் ஓருபடி மேலேபோய், கதை என்ன ?, கவிதையையே நாடகமாக்கியிருக்கிறோம் என்றது ஆச்சர்யமே.

காலஞ்சென்ற இயக்குநர் பாலு மகேந்திராவின் கதைநேரம் போன்றதோரு முயற்சிகள் தொடரவேண்டும்.

கர்நாடக சங்கீத சபாக்களில் நாடகங்கள் பற்றி ?

கர்நாடக சங்கீத சபாக்களில் முன்னுரிமை எப்போதும்
இசையென்ற போதிலும்,  அங்கே மற்ற பொருளாதாரக் காரணங்களுக்காக ஈட்டு நிரப்ப தொடங்கப்பட்டவையே  இயல், இசை, நாடகம் எனும் வரிசையில்  பேச்சும், நாடகமும்.

அந்த நாடகங்கள் நடுத்தர மக்களின், குறிப்பாக சென்னையில் வாழும் குறிப்பிட்ட  ஓரு சமூகத்தின் வாழ்க்கையை ஓட்டியே வளர்ந்து வந்ததாகச் சொன்னார்.

இந்த தகவல்  கண்டிப்பாக புதியவர்களுக்கு நல்லதோரு செய்தியாக இருக்கும்.

தமிழ் சூழலில் நாடகத்தின் இன்றைய நிலை ?

மிக முக்கியமானதோருக்குக் கேள்வி.  தனது உரையில் பல இடங்களில் இதை தொட்டுச் சென்றார். அதை குறிப்புகளாகத்
தருகிறேன்.


  • இன்று  வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும்  திரைப்படங்களும், அரசியலுமே பேசுகின்றன. அவையே  பெரும்பான்மை மக்களின் பொழுதுபோக்காக தொடர்ந்து முன்  வைக்கப்படுகிறது.
  • சின்னத்திரையின் தாக்கம்,  நகர்மயமாதல் போன்ற காலச் சூழல்
  • நாடகம் எனும் கலை மக்களின் பெரும் ஆதரவு இல்லாத போதிலும் இந்திய அரசின் உதவியாலும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் நாடகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய நாடக முயற்சிகள் தொடர்கின்றன.


தற்போதைய நிலைக்கு என்ன காரணம் ?

கலை வடிவங்களான கவிதை, நாடகம்,  எழுத்து, மேடைப் பேச்சு,
திரைப்படம்  இவற்றின் மூழம் ஆட்சியைப் பிடித்த அரசியல்
கட்சிகள் அந்த விழுமியங்களை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என ஆதங்கப்பட்டார். கேரள, மகாராஷ்டிர, வங்காள மாநிலங்களை  நல்ல எடுத்துக்காட்டாக சுற்றிக் காட்டினார்.


அடுத்த தலைமுறையில் நாடகத் துறையை வளர்க்க ?

பல கல்லூரிகளில் தொடங்கப்பட்டு, மாணவர்கள் விருப்பிச் சேரும்
ஓரு துறை விசுவல் கம்யூனிகேசன். அந்த  மாணவர்களுக்கு ஓரு குறும்படம் இயக்குவது  என்பது பாடத்திட்டத்தில் இருப்பதால் அவர்கள் நாடகவடிவத்தை  தேடி அணுகும் போக்கு வளர்ந்திருப்பதாகச் சொன்னார். அது  லேசாக
நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

இளைய தலைமுறையிடம்  (மாணவர்களிடம்)  நாடகத்தை கொண்டு செல்வதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான முயற்சியில் தன்னுடைய மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களைச்  சொன்னார்.

இப்போது திரைப்படங்களுக்கும்  இந்த  பின்புலம்  (Stage) தேவை எனும் நிதர்சனம் புரியத் தொடங்கியிருப்பதாக  ஜிகிர்தண்டா திரைப்படத்தை மேற்கோள் காட்டியதாக நினைவு.

கேள்வி நேரத்தில் நான் கேட்க நினைத்த கேள்விக்கு பேராசிரியரே
கடைசியில் பேச்சுனுடே பதில் சொல்லிவிட்டார். ஆங்கிலத்தில் Reading between the Lines  என்று சொல்வதுபோல. அதை நான்
புரிந்து கொள்கிறேன்.

நான் கேட்க நினைத்த கேள்வி "தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகத்தின் நிலை என்னவாக இருக்கும் ? "

அவர் சொன்ன அந்த வரி  " நாடகம் அழியுமோ என்ற கவலை இருக்கிறது "  .

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர். அ.ராமசாமி
அவர்களுக்கு  வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Wednesday, June 1, 2016

எதற்காக எழுதுகிறேன் ?

எதற்காக எழுதுகிறேன்? என்ற தலைப்பில் நண்பர் நட்.பாஸ்கர் அவர்களுக்காக பதாகை இணைய இதழுக்காக எழுதியது. உங்களுக்காக.

'எதற்காக எழுதுகிறேன் ?' என்ற கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான பதில் எந்தவோரு படைப்பாளிக்கும் எளிதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை.

இதுபோல ஏன், எதற்கு, எப்படி எனத்தொடங்கும் கேள்விகளை ஆங்கிலத்தில் ஓபன் என்டட் (Open Questions) கேள்விகள் என்பார்கள். நல்ல ஓபன் என்டட் கேள்விகளை கேட்பது ஓரு கலை என்ற வடிவில் பார்க்கப்படுகிறது. மேலாண்மை துறையில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் இதுவும் ஓன்று.

எளிதாகச் சொல்வதேன்றால் - உங்கள் வீட்டிற்கு நண்பர் ஓருவர் வருகிறார். அவரை வரவேற்று 'டீ இல்ல காப்பி குடிக்கிறீங்களா ?' எனக் கேட்டால் நீங்கள் உங்கள் நண்பருக்கு தேர்வு செய்ய டீ அல்லது காபி எனும் இரண்டு மட்டுமே தருகிறீரகள். அதே சமயத்தில் 'என்ன குடிக்கிறீங்க? ' எனப் பொதுப்படையாகக் கேட்கும் பட்சத்தில். அதற்கான பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். நான் சொல்ல வந்த விஷயம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஓபன் என்டட் கேள்விகள் எதிராளிகளைச் சிந்திக்கத் தூண்டும், அவர்களின் உள்உணர்வுகளையும் அதுனூடான அவர்களின் பார்வையும் நாம் அறிந்துகொள்ள இயலும். இப்படி ஓரு விஷயத்தை அணுகுவது அவர்களுள் பல திறப்புகளை ஏற்படுத்தி உண்மையான 'அவனை அல்லது அவளை' தரிசிக்க இயலும்.

அதுபோல 'நான் ஏன் பிறந்தேன் ? ' என்ற கேள்வியைக்கூட அசட்டுத்தனமாக பார்ப்பது இல்லை அதை உள்ளார்ந்தமாக பார்ப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

இதுமாதிரியான ஓபன் என்டட் கேள்விகளுக்கு பொறுமையான, நீண்ட பதிலை நாம் எதிர்பார்க்கலாம். அந்த பதில்களிருந்து பல கிளைக்கேள்விகள் முளைத்து அந்த உரையாடல் மேலும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. 'எதற்காக எழுதுகிறேன் ? ' என்பதும் அதுபோன்றதே.

எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.


பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.

அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.

துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.

சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.

அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

இதன் திருத்தியவடிவம் பதாகை இதழில் வெளியாகியுள்ளது. இணைப்பு கீழே

https://padhaakai.com/2016/06/01/ww-arur-baskar/

படங்கள்:

நன்றி: http://www.mkanokova.com/



Sunday, May 1, 2016

கவிஞர்களும் களங்களும் - கலைபாரதி

நண்பர்களே, கடந்த முறை இந்தியா சென்றபோது  நண்பர் கலைபாரதியின் "கவிஞர்களும் களங்களும்" எனும் கட்டுரைத் தொகுப்பை எனது பள்ளிதோழரும் கவிஞருமாகிய தமிழ்மணி கொடுத்திருந்தார். கலைபாரதி எனக்கு தமிழ்மணி மூழமாகதான் அறிமுகமானவர்.

கலைபாரதி தமிழாசிரியராக அரசு பணியில் இருக்கிறார். நல்ல தமிழ் உணர்வாளர்,  கடின உழைப்பாளி மட்டுமில்லால் தொடர்ந்து நிறைய வாசிப்பவர். நண்பர் தமிழ்மணிகூட ஓரு தமிழாசிரியர் தான்.

அரசு ஆசிரியர்களைப் பற்றி எவரேனும் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்துகையில்  நான் இவர்களைப் போன்ற நல்ல ஆசிரியரைகளை நினைத்துக் கொள்வேன். இவர்கள் தங்களின் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை தாண்டி மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தையும், சுய சிந்தனையையும் தூண்டும் விதத்தில் கற்பிப்பவர்கள். இதுபோன்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் குறைந்து வருகிறார்கள் என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.

கடந்த வாரம் நூலை வாசித்து முடித்தவுடன் ஓரு நல்ல நண்பருடன் உணர்வுப்பூர்வமாக உரையாடியது போலோரு அனுபவம் எனக்கு.  அதனால் இதற்கு அறிமுகம் எழுதிவிடுவது என நினைத்து இன்று அது நிறைவடைந்திருக்கிறது.

பிரபல எழுத்தாளர்களுக்கு மட்டும் நூல் அறிமுகம் அல்லது விமர்சனம் எழுதும் நல்ல பழக்கத்தை (!) பலர் பெரும்பாலும் கடைப்பிடிக்கிறார்கள்.
அது அந்த எழுத்தாளர்களின் புகழுக்குக் கீழ்  குளிர்காய்வது அல்லது அவர்களின் வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சி என்பது எனது தாழ்மையான கருத்து.   சரி விசயத்துக்கு வருவோம்.

கலைபாரதி அவர்கள் மாதவம்  இதழுக்காக எழுதியவற்றின் தொகுப்பு இது.
சமூக அவலங்களைப் பற்றிய தனது கவலையை ஆற்றாமையோடு பல சமூகக் களங்களில் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

இந்த நூலை ஓரு தீப்பெட்டி எனில், அந்தத்  தீப்பெட்டியில் பெண்ணடிமை, உலகமயமாக்கல், சாதீயம், தீண்டாமை, இன்றைய கல்விமுறை, அழியும் விவசாயம் என்று பல தீக்குச்சிகள் எனச் சொல்லும் அளவுக்கு, கட்டுரைகளில் பொறி இருக்கிறது.



ஓரு மனிதனுக்குள் இத்தனை முகங்களா ? என மலைக்கும்படி   ஓவ்வோரு கட்டுரையிலும் தேர்ந்தேடுத்த பொருத்தமான கவிதைகளுடன் தன் கருத்துகளை நறுக்கு தெறித்தார்போல் முன்வைக்கிறார்.  இவரைப் பொருத்தவரை கவிதை என்பது காலத்தின் விளைச்சல். அது அனுபவத்தின் விளைபொருள் என்கிறார்.

அந்த வகையில் இந்த நூல் சந்தேகமின்றி நல்ல விளைச்சல் தான். உதாரணமாக- தறுதலைப் பசுக்கள் எனும் கட்டுரையில்  (பக்கம்-13)

"புத்தகங்களே
சமர்த்தாக இருங்கள்..
குழத்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்"

என குழந்தைகளுக்காக வாதாட கவிக்கோ அப்துல் ரகுமானை  துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

உரைநடையை இது போன்ற நல்ல கவிதைகளுடன் சேர்ந்து வாசிப்பது ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவது போன்றதோரு நல்ல அனுபவமாயிருக்கிறது.

ஆசிரியரும் ஓரு கவிஞர் என்பதால் இதுபோன்றதோருக் கட்டுரைகள் அவருக்கு கைகூடுகின்றன என்பதில் நமக்கு சந்தேகம் தேவையில்லை.

பெண்ணடிமைத் தனத்தைப் பேசுகையில்  (பக்கம்-28)

"குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தனாக மாறினான்.
நம்பி வந்த
யசோதா
என்ன ஆனாள் ?"

எனக் கேட்கும் போது கவிஞர் பாலபாரதியுடன் சேர்ந்துக் கொள்கிறார்.

"கொலு வைக்கும் வீடுகளில்
ஓரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களைத்
தூக்க முடியாமல் தூக்கிவரும்
அக்கா குழந்தைகள்"

எனச் சுண்டலுக்காகவும், வாழ்தலுக்காகவும் கையேந்தும் குழந்தைகளுக்காகக் கவிஞர். கலாப்ரியாவுடன் விசனப்படுகிறார் (பக்கம்-41).

அழியும் இயற்கை வளங்கள் போன்ற சமூக அவலங்களையும் கண்டு மனம் சினந்து வெகுண்டுள்ளார்.

"நண்டுகள் கபடி ஆடிய
வயல்களில்
வாண்டுகளின் மட்டைப் பந்தாட்டம்"

எனும் தமிழ்மணியின் துளிப்பாவை (பக்கம்-20) வாசிக்கையில் நம் கண்களில் கண்ணீர்த்துளி.

இது கலைபாரதியின் நல்ல அழுத்தமானதொருப் படைப்பு. வாய்ப்பிருந்தால் வாசிக்கவும்.

தலைப்பு :கவிஞர்களும் களங்களும்
எழுத்தாளர்: கலைபாரதி
பதிப்பகம்: பாவணர் பதிப்பகம், போன்- 9842011344
பக்கங்கள்: 80
விலை : ரூ.60

Wednesday, April 20, 2016

தினமலரில் பங்களா கொட்டா

அன்பர்களே,
தினமலர் நாளிதழில் எனது "பங்களா கொட்டா" நாவல் பற்றிய மதிப்புரை வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு இங்கே.
தினமலர் நாளிதழ் மற்றும் அறிமுகம் செய்த அன்பான உள்ளங்களுக்கு எனது நன்றியும் வணக்கங்களும். ‪#‎பங்களா‬கொட்டா #‎bunglawkotta‬

பங்களா கொட்டா
விலைரூ.130
ஆசிரியர் ஆரூர் பாஸ்கர்
வெளியீடுஅகநாழிகை
பகுதிகதைகள்
ISBN எண்-
Rating
    
பிடித்தவை
வாய்ப்பிருந்தால் படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லவும். 

முன்பே குறிப்பிட்டது போல- இந்த நூலின் விற்பனையில் வரும் நிதி முழுமையும் சிறகுகள் கல்வி அறக்கட்டளை வழியாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். 

அமேரிக்காவில் ஆன்லைனில் வாங்க  Paypal வசதி உள்ளது.  ஆர்டர் செய்யும்போது "Note to seller" பகுதியில் உங்கள் முகவரியை தவறாமல் குறிப்பிடவும். அதற்கான இணைப்பு இங்கே.

முடிந்தால் இதன் முகநூல் (Facebook) பக்கத்திலும் உங்கள் விருப்பத்தை (LIKE) இடுங்கள்.

Sunday, April 17, 2016

எங் கதெ - இமையம்

தனது முதல் புதினத்தில் (நாவல்) இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படிப் பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர் இமையம் என எங்கோ படித்த நினைவு.

அவர் தனது முதல் படைப்பான கோவேறு கழுதைகள் (1944)ளுக்குப் பின் தனித்துவத்துடன் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர். அவருடைய  "எங் கதெ" யை சமீபத்தில் வாசித்தேன்.

முதல் நூல் என்பதால் எழுத்தாளர் பற்றிய எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த புத்தகத்தில் இரண்டு அம்சங்கள் குறிப்பாக கவனத்தைக் கவர்ந்தன. ஓன்று அவரின் மொழி நடை. இரண்டாவது அவர் எடுத்துக் கொண்ட கதைக்கரு.

நூலின் பெயரே "எங் கதெ" எனப் பேச்சு வழக்கில் இருந்ததால் அந்த எதிர்பார்ப்புடனே உள்ளே நுழைந்தேன்.  கடலூர் மாவட்ட பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கி.ரா போன்றவர்களின் வழியாக மற்ற பேச்சுவழக்கு நூல்களை வாசித்து பழக்கப்பட்டிருந்தாலும் இந்த மொழிநடை எனக்கு முற்றிலும் புதுமையான வாசிப்பனுபவம்.  இந்தப் பேச்சு நடை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக இருப்பது போல் தோன்றுகிறது.

"கள்ளக் காதலனைக் கொன்ற காதலி கைது". "பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், கல்லைத் தூக்கிபோட்டுக் கொன்ற கள்ளக் காதலன் கைது". இது போன்ற  தலைப்புகள் செய்தித்தாள்களில் அன்றாடம் நாம் எளிதாகக் கடந்து செல்லும் விஷயம். ஆனால் "எங் கதெ" அது மாதிரியான ஓரு நிகழ்வை உற்றுப் பார்க்கிறது. அப்படியானதொரு வாழ்க்கையை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடக்கம் முதல் முடிவு வரை நம்மை பயணிக்கவைக்கிறது.

ஆம். இதன் கதைக்கரு மற்ற நூல்கள் பெரும்பாலும் பேசாத அல்லது பேசத்தயங்கும் விசயமான ஆண் பெண் கள்ள உறவைப் பற்றியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான  “கமலா” என்கிற 28 வயது இளம் விதவை பெண்ணுக்கும் முதல் தலைமுறையாகப் படித்துவிட்டு வேலை தேடும் 33 வயது "விநாயகம்" என்பவருக்கும் ஏற்படுகின்ற உறவை பேசுகிறது.

இந்தக் கதை முழுமையும் சம்பந்தப்பட்ட விநாயகத்தின் மன ஓட்டத்தில் , பார்வையில் சொல்லப்படுகிறது. விநாயகத்தின் மனம் கமலாவை விரும்புவது, அவளுக்காக தன் குடும்பத்தை உதறிவிட்டு  நகரத்துக்கு குடிப்பெயர்வது, பத்தாண்டுகளுக்கு பின் அவர்களின் உறவில் நுழையும் மூன்றாமவன் என விரிவாகக் கதை சொல்லப்படுகிறது.

புதுமையானக் கதை சொல்லல் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஓன்று.

"இது எங் கதெ. பத்து வருசத்துக் கதெ. என் ரத்தம். என் கண்ணீர்." என முதல் வரியே உணர்ச்சிப்பூர்வமாய்த் தொடங்கி வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. - பக்கம்-1

தேவையற்ற இழுவைகளில்லாமல் அடுத்தப் பக்கத்திலேயே கமலாவின் அறிமுகம்.

"நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா. போன் பேசினா, காச விட்டெரிஞ்சா. வந்த மாரியே சரசரன்னு போயிட்டா. அடுத்த நாளு வந்தா. அப்பறம் சனி,ஞாயிறு வரல."

இப்படிப் பேச்சு நடையில் கதை நகர்த்தல் பாய்ச்சலாய் இருக்கிறது. - பக்கம்-2

எழுத்து நடை வேகமாக இருக்கும் அதே சமயத்தில் விநாயகத்தின் மன ஓட்டம் வாசகனுக்கும் தொற்றிக் கொள்கிறது- பக்கம்-75

"பத்து வருசமா அவதான் எனக்குக் காத்து. தண்ணி, சூரியன், சோறு. எனக்கு அப்படித்தான் காலம் ஓடிப் போச்சி. அவ கேக்கல.நானா கொடுத்தன். மனச. அவ சொல்லல. நானா அவ காலுல மண்டியிட்டன்."

அதுபோல கதையினுடே வரும் நிகழ்வுகள்  நாம் குடும்பங்களிலும், சமூகத்திலும் பார்த்து வளர்ந்த எதார்தத்தை சொல்லிச் செல்கிறது.

கமலாவின் மீதான தனது அதீதக்காதலுக்கான நியாயத்தை இதைவிட எளிமையாக சொல்லமுடியுமா தெரியவில்லை- பக்கம்-48.

"பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...

நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.என முடிக்கிறார்.

கமலாவும் தன் பங்கிற்கு தன் அப்பா, அம்மா மற்றும் முன்னாள் கணவரை கட்சி பைத்தியங்கள் என்கிறார். அவர்கள் கட்சி பேப்பரை மட்டும் படிக்கிறார்கள், கட்சிக்காக கைகாசை செலவுசெய்கிறார்கள். தேர்தல் வேலை செய்கிறார்கள். கட்சிக்கல்யாணம் செய்வதுக் கொள்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்களை மெட்ரிகுலேசன் பள்ளியை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

இப்படி வாழும் போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏதோ ஓரு கட்சிக்காக உழைத்து உழைத்து தன்னலமின்றி தன்னையும்  தன் வாழ்க்கையையும்  கட்சிக்காக அர்பணிப்பவர்களுக்கு கடைசியில் கிடைப்பது போகும்போது பிணத்தின் மீது போர்த்தப்படும் கட்சிக்கொடி மட்டுமே என்கிற எதார்த்தம் முகத்தில் அறைவது போல சொல்லப்படுகிறது.

நகர்மயமாதலிலும், உலகமயமாதலிலும் காணாமல் போன சிவன் கோயில்கள் அதை ஓட்டிய அக்ஹாரங்கள் பற்றிய குறிப்பு. அங்கிருந்த அடுத்த தலைமுறை அய்யர்கள் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துச் சென்றுவிட்டார்கள் என்பதையும் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறார் (பக்கம் 90).

இந்தக் கதையில் பல வாய்ப்புகள் இருந்தும் வரம்பு மீறப்படவில்லை.  கதை முறை தவறி நடக்கும் மகனை தடுக்க வழியின்றி தவிக்கும் குடும்பம், வேலை சூழலில் இளம் விதவைகளைப் பார்க்கும் கண்ணோட்டம், கிராமத்திலிருந்து வேலைக்காகவும், பிழைப்புக்காகவும் நகரத்திற்கு இடம்பெயரும் மனங்கள் எனப் பல தளங்களில் பயணிக்கிறது.  அது போல, பெண் படித்துப் பதவியில் இருந்தாலும், மன ரீதியாக, உடல் ரீதியாக ஆணின் உடமையாக்கப்படுகிறாள் என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்கிறது "எங் கதெ".

ஆனால், இவ்வளவு நடக்கும்போதும் கமலா மௌனம் காக்கிறாள். இப்படித் தடம்மாறும் கமலாவின் மன ஓட்டம் என்னவாக இருக்கும் என வாசகர்களால் கொஞ்சமும் அறிந்துகொள்ள முடியவில்லை.

 ஆண் பெண் உறவு , கணவன்-மனைவி எனும் பந்தத்தில் நுழையாத பட்சத்தில் ஏற்படும் வாழ்வியல் சிக்கலாகவே நான் இந்தக் கதையை அணுகுகிறேன்.

முடிவில் மனைவியைப் போல் கமலாவை பாவித்து வாழும் விநாயகத்தின் வாழ்வில் மூன்றாமவன் நுழைகையில் அவனுடைய கோபம், குரோதத்தின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது "எங் கதெ" யின் முடிவு.

எளிமையானவர்களின் கதையைச் சொல்லும் அழுத்தமானதொருப் படைப்பு. வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

தலைப்பு :எங் கதெ
எழுத்தாளர்: இமையம்
பதிப்பகம்: க்ரியா
ISBN : 978-93-82394-15-0
பக்கங்கள்: 112
விலை : ரூ.125

குறிப்பு :  இந்த அறிமுகம் ஆம்னி பஸ் தளத்தில் சில திருத்தங்களுடன் வெளியாகியிருக்கிறது.
http://omnibus.sasariri.com/2016/04/blog-post.html

Tuesday, February 23, 2016

ஞயம் பட வரை - வியாபாரம்?

'ஞயம் பட வரை' - எனும் தலைப்பில் 'ப்ரதிலிபி' இணையதளம் நடத்தும் ஓரு கட்டுரைப் போட்டியை பற்றி  வா.மணிகண்டன் மற்றும் முத்துநிலவன் முதலானோர் கடந்த மாதம் தங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தனர்.  அப்போது தரப்பட்ட தகவல் இதோ.

அ) தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக்கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

இதில் அவர்கள் -(ப்ரதிலிபி) போட்டிக்கான தேர்ந்தேடுக்கும் முறைகளைப் பற்றி எந்த தகவலையும் தரவில்லை. ஆனால் கட்டுரைகளை அவர்களுக்கு சமர்ப்பித்தபின், கடைசி நாளில் எல்லா கட்டுரைகளையும் தங்கள் தளத்தில் வெளியிட்டுவிட்டு, தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஓரு ஈமெயிலை அனுப்பியிருந்தனர். அதில் தரப்பட்ட தகவல் இதோ,


கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்:
நடுவர் குழு – நடுவர்கள் கட்டுரைகளை படித்து அவற்றை மதிப்பீடு செய்வார்கள்.
வாசகர் விருப்பம்:
  • இங்கு இருக்கக்கூடிய உங்களது கட்டுரையின் சுட்டியை முடிந்த வரையில், உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் (பேஸ்புக், ஜிமெயில், மற்றும் இதர வழிகளில்). அப்படிப் பகிரும் நண்பர்களிடத்தில் சுட்டியை சொடுக்கி கட்டுரையின் பக்கத்திற்கு சென்று கட்டுரையை மதிப்பீடு செய்யச் சொல்லுங்கள் (Rating the article).
  • இந்த கட்டுரைகளை எங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்வோம். அவ்வாறு முகநூல் மூலம் வரும் வாசகர்களாலும், எங்கள் தளத்திற்கு வழக்கமாக வரும் வாசகர்களாலும் இந்தக் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
  • எத்தனை வாசகர்கள் உங்கள் கட்டுரையை படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பீடு வழங்குகிறார்கள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முடிவுகள் 28.02.2016 அன்று அறிவிக்கப்படும். அதுவரை வாசகர்கள் உங்கள் மதிப்பீடுகளை வழங்கலாம்.
இதன்படி கட்டுரைகளை எழுதிய ஓருவர் எழுதியதைத் தாண்டி தனது கட்டுரைக்கு மார்கெட்டிங் வேலையையும் செய்ய வேண்டுமாம்.
இப்படி விரிவான  வாசகர் அல்லது நண்பர் வட்டம் உள்ளவர்கள் இது போன்றதோரு கட்டுரைப்போட்டியில் கலந்துதான் வெளிச்சம் பெறவேண்டுமா ? இது போன்றதோரு போட்டியில் கலந்துக் கொள்வதே ஆர்வத்தைத் தாண்டி ஓரு வெளிச்சம் அல்லது கவனம் அல்லது அங்கிகாரம் பெறத்தானே ?
இதை பரிசுகளை தருபவர்கள் தங்கள் தளத்துக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என விட்டுவிடலாம் தான்.  ஆனால் இந்த மார்கெட்டிங் யுத்தியை முன்பே அறிவித்திருந்தால் என்னைப் போன்றவர்கள் கவனமுடன் இருக்கலாம் தானே ?
இதுவரை, எனது கட்டுரைக்கு எந்தவிதமானதோரு மார்கெட்டிங் அல்லது விளம்பரமும் நான் செய்யவில்லை. அதனால் எனக்கு போட்டிமுடிவுகள் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை ஊகிக்கமுடிகிறது. 
ஆனால், போட்டியில் வெற்றிபெற்றவர்களைத் தாண்டி நான் மிகவும் ஆர்வமாயிருப்பது நடைமுறையாக்கல். அதாவது, கட்டுரையாளர்கள் தந்த வழிமுறைகள் அல்லது உத்திகள் யாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை எப்படி, எப்போது, யாரால் முயற்சிக்கப்படும் என்பதே. அவை ஓரு குறுகிய வட்டத்தைத் தாண்டி மிகப்பலரை சென்று சேரவேண்டும் என்பது என் விருப்பம், பார்க்கலாம்..
கட்டுரைப் போட்டிக்கு வந்த எல்லா கட்டுரைகளும் இங்கே
எனது கட்டுரை;

நண்பர்களே !!, கடந்தவாரம் இந்தியாவில் இருந்து திரும்பினேன். அது பற்றி எழுதுவோம்.