Sunday, April 12, 2020

கன்னிவாடி - எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்

என்னுடைய முதல் புதினமான(நாவல்)  "பங்களா கொட்டா" நூல் வெளியீட்டின் போது எழுத்தாளர் எனும் அடைமொழியுடன் எனக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன்  அறிமுகப்படுத்திய முதல் மனிதர் க.சீ.சிவக்குமார். 

அன்று
சிவக்குமார் எனது நூலை வெளியிட்டு சிறப்பாக  பேசினாலும்,  விழா களேபரங்களாலும் அவருடைய படைப்புகள் எதையும் வாசித்திராத காரணத்தாலும்  முதல் சந்திப்பில் அவரைப் பற்றிய பெரிய மதிப்பீடுகள் எதுவும் இல்லை. நகைச்சுவையாக பேசக்கூடிய நல்ல மனிதர் என்பதைத் தாண்டி வேறு எதுவும் மனதில் பதியவில்லை. அதற்குப் பிறகு முகநூல் தவிர எங்களுக்குள் சொல்லிக்
கொள்ளும்படியாக பெரிய தொடர்புகளும் எதுவும் எதுவுமில்லை.

ஆனால், பிப்ரவரி 2017இல் அவர் தனது வீட்டுமாடியில் இருந்து தவறி விழுந்து பெங்களூரில் உயிரிழந்த செய்தியை அறிந்தபோது அதிர்ச்சியாக
இருந்தது.  எதிர்பாராத மரணம்.  46 வயது என்பது கண்டிப்பாக சாகும் வயதில்லை. 

அவருடைய கன்னிவாடி சிறுகதைத் தொகுப்பை  (தமிழினி-மூன்றாம் பதிப்பு)  இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  கிராமத்தில் இருந்து பிழைக்க வழியின்றி நகரத்தை நோக்கி தள்ளப்பட்ட வெள்ளந்தியான எளிய மனிதர் பற்றிய சித்திரத்தை வாசிப்பு அழகாக வரைந்து செல்கிறது.  இயல்பான மொழிநடையில் மனதுக்கு நெருக்கமான எழுத்து.

ஒரு பக்கத்தில் சுய எள்ளலோடும் பகடியோடும் நம்மை வாய்விட்டு வெடித்துச் சிரிக்கவைக்கும் மனிதரால் அடுத்துவரும் பக்கங்களில் கண் கலங்கவும் வைக்கக்கூடிய உணர்வுப்பூர்மான எழுத்து. 

ஒரிடத்தில் காலத்தின் நிலையற்ற தன்மையைச் சொல்லும்போது இப்படிச் சொல்கிறார். ...காலம் என்பது பாதத்தின் வடிவமாகவோ அல்லது ஓர் இழைப்புளியின் வடிவமாகவோ இருக்கவேண்டும். இழைப்புளியின் வெளியேற்ற இடுக்கில் நாட்செதில்கள் படலச் சீவல்களாய் காற்றேறிக் கரைகின்றன. ....

எவ்வளவு சத்தியமாக வார்த்தைகள். 
இப்படிக் காலம் கடந்த படைப்புகளைத் தந்துவிடும்  நம்பிக்கையில் தானே ஒவ்வொரு படைப்பாளனும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்
என நினைக்கத் தோன்றுகிறது.
சிவக்குமார் இலக்கியத்தைத் தாண்டி திரைப்படம், நடிப்பு என இன்னமும்  பல உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர் என பக்கத்துக்கு பக்கம் வாசிக்கும் போது தோன்றிக்கொண்டேயிருக்கிறது.

இரண்டாவது படம்- நன்றி இணையம்.





நூல்: கன்னிவாடி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: க. சீ சிவகுமார்
வெளியீடு: தமிழினி

No comments:

Post a Comment