Showing posts with label #கபாலி. Show all posts
Showing posts with label #கபாலி. Show all posts

Saturday, July 23, 2016

அமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்

நண்பர்களே,

'கபாலி' யை  இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன்.  தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம்.

இன்று  அமேரிக்காவில்  கபாலி வெளியான மூன்றாவது நாள். ஆனாலும் கட்டணம் சாதாரண படங்களை போலின்றி இரண்டு மடங்கு வசூலித்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.

அமேரிக்காவில்  சிலர்  படம் பார்க்க நூற்றுக்கணக்கான மைல்கள் டிரைவ் செய்வதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால்
பொதுவாக நான் அது போன்றதோரு வேலைகள் பிடிக்காததால்
அப்படிச் செய்வதில்லை.

நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கபாலி சுமார் 30 நிமிட டிரைவில்
திரையிடப்பட்டதால்தான்  சென்றேன். அதுமட்டுமில்லாமல் மலேசிய கதைக்களத்தை எப்படி திரையில் கையாண்டிருக்கிறார்கள் எனும் ஆர்வதிலும் சென்றிருந்தேன். என்னுடைய அடுத்த நாவல் மலேசிய கதைக்களம் என்பது  இங்கே கூடுதல் தகவல். :)

இனி,  படத்தைப் பற்றி எனது அனுபவங்களைப் பார்கலாம்.
என்னுடைய கருத்தை நீங்கள் வாசிக்கும் முன்  ஓரு விஷயம். இதுவரை கபாலி பற்றி எந்த ஓரு விமர்சனத்தையும் நான் வாசிக்க வில்லை. இவை எனது சொந்த கருத்து மட்டுமே. மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன்.

முதலில் படத்தின் கதையை பற்றி பார்போம்.  இதை
ஓரு
மலேசிய தாதாவின் பழிவாங்கும்  கதை என்பதா ?,
இறந்துபோனதாக நினைத்த மனைவியையும், மகளையும் 25 வருடங்களுக்கு பின் சந்திக்கும்
ஓரு மனிதனுடையதா ?,  இல்லை
மலேசிய இன வர்கப்பிரிவினையை எதிர்த்துப் போராட்டுபவனின் கதையா  ?என்றால்,  இது மேலே சொன்ன எல்லாமும் சேர்ந்த கதை எனலாம். ஆனால் மேலேச் சொன்ன எந்தவொரு விசயமும் ஆழமாக சொல்லப்படவில்லை என்பது எனது அபிப்ராயம்.  இருந்தாலும், ரஜினி எனும் ஓரு மிகப்பெரிய சக்தியை வைத்து எல்லாதரப்பையும் திருப்தி படுத்துவது போல படமெடுப்பது
அவ்வளவு எளிதல்ல என்பதேன்னவோ உண்மை.

குறிப்பாக ,ரஜினியின்  முந்தைய படங்களின் சாயல் வரக்கூடாது.
அதுபோல  கமலின் நாயகன் படம் போல வரக்கூடாது என இயக்குநர் மேனக்கெட்டிருப்பார் போல இருக்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால், அந்த படங்கள் வெற்றி அடைந்த சூட்சுமத்தை கண்டேடுத்து கபாலியில் பயன்படுத்தியிருக்கலாம்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஓருவர் மலேயில் பக்கம் பக்கமாக பேசி வெறுப்பேற்றினார். அதுபோல, கொஞ்சம் வன்முறையை குறைத்திருக்கலாம். 1980 களில் நடக்கும்  நிகழ்வுகளில் உடை தேர்வு அற்புதம். ஆனால் , சில  காட்சி அமைப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறைகள் கண்ணுக்கு தெரிகிறது.

அது போல சிலகாட்சிகள் இழுவை, உதாரணமாக மனைவியை தேடி மலேசியாவிலிருந்து சென்னை, புதுவை எனச் சுற்றுவது. ரஜினிக்கு இவையெல்லாம் வெகு சாதரணமாக இருக்கிறது.
மலேசிய படம் எனும் முத்திரை வரக்கூடாது என தமிழ்நாட்டுக் காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.

இனி நல்ல விசயங்களை பார்கலாம். ரஜினியின் நடிப்பு அபாரம்.
உணர்ச்சி பூர்வமான நடிப்பு. கண்களாலே பேசி மனிதர் அசத்துக்கிறார். அதுவும் 25 வருடத்திற்கு பிறகு மனைவி, மகளை பார்க்கும் காட்சி.   படம் முழுமையும் அப்படி தொடராதா என
ஏங்கத் தூண்டுகிறார்.

ரஜினி, நாசர் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் படத்தில் இல்லை. இருப்பினும் ரஜினியுடன், தோள் கொடுத்து படத்தில் பலமூட்டியிருப்பவர்கள் அவரது மகள்களாக நடித்த இரண்டு பெண்களும் குறிப்பாக ரஜினி தத்தேடுக்கப் போவதாக சொல்லுபவர் அற்புதம். ரஜினியின் மனைவியாக வருபவர் (ராதிகா ஆப்தே) நடிகை செளந்தர்யாவை நினைவுபடுத்துகிறார். அதுபோல  ரஜினியின் நண்பராக வரும் அமீர் எனும் கதாபாத்திரம் கச்சிதம்.

பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன, படம் பார்த்து முடியும் வரை. பிண்ணனி இசை படத்திற்கு கண்டிப்பாக நல்லபலம்.   சில இடங்களில் கண்ணீரை வர வைக்கிறார். படத்தில் நகைச்சுவை இல்லை எனும் குறை எல்லாம் கண்டிப்பாகத் தோன்றவில்லை.
அது போல  ரஜினியை ஓரு நல்ல  நடிகராக இயக்குநர் மறுகண்டெடுப்பு செய்திருக்கிறார். அந்த வகையில் பாராட்டுக்குரியவர்.

ரஜினி ஓரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி. இதை ஓரு திரைப்படமாக பார்க்கும் போது சொல்லவந்த கருத்தை இன்னமும் வலுவாக சொல்லியிருக்கலாமே எனத் தோன்றுகிறது.
மலேசிய தமிழர்களின்/தோட்டத் தொழிலாளர்களின் கதையை திரையில் இன்னும் யாராலும் முழுமையாக, ஆழமாகச் சொல்லவில்லை. கபாலியும் விதிவிலக்கல்ல.  லேசாக தொட்டிருக்கிறார். அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.

மலேசிய தமிழர்கள் மட்டுமே  தங்களை, தங்களின் வாழ்வை திரையில் பார்த்து, உணர்ந்து இதற்கான பதிலை சொல்லவேண்டும்.