Showing posts with label #பங்களாகொட்டா. Show all posts
Showing posts with label #பங்களாகொட்டா. Show all posts

Friday, April 8, 2016

பங்களா கொட்டா - கரந்தை ஜெயக்குமாரின் அறிமுகம்

எனது  "பங்களாகொட்டா " புதினத்தை (நாவல்) என் பதிவுலக நண்பர் கரந்தை ஜெயக்குமார் தனது தளத்தில் கடந்த மாதம் அறிமுகம் செய்துள்ளார். அதை அப்படியே இங்கே பதிப்பித்துள்ளேன். 

நான்கெழுத்து "கரந்தை"க்கு இந்த மூன்றேழுத்து "ஆரூர்" மூன்றேழுத்தில் சொல்லுவது "நன்றி". 
(தேர்தல் சூட்டில் கொஞ்சம் மேடைப் பேச்சில் எழுதிவிட்டேன்).

நீங்கள்  கரந்தை ஜெயக்குமாரின் அறிமுகத்தை தொடரும் முன். நான் முன்பு சொல்ல மறந்த தகவல் ஓன்று . அது அறக்கட்டளைப் பற்றியது. இந்த புத்தகத்தின் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி முழுமையும் தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் சிறகுகள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் (இணைப்பு .





     அது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.

     வேலங்குடி.

     அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.

     இன்றைய திருவாரூர் மாவட்டம்.

     மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.

     மரம், சொடி, கொடிகளைத் தாண்டி, மண்ணோடும் மாடுகளோடும் பிழைப்பவர்கள். அது வயலுக்கு உரமாக சாணமும், சாம்பலும், எருவும் தழையும் கலந்து போட்ட காலம்.

      இயந்திரங்கள் இல்லாத இயற்கையோடு கலந்த விவசாயம். பருவம் தவறாமல் மழையும், பனியும் செய்து விவசாயம் செழித்திருந்த நாட்கள் ….

     நண்பர்களே, நமது பதிவுலக நண்பர், இப்படித்தான் தொடங்குகிறார் கதையை.

     இது இவருக்கு முதல் நாவலாம்.

     நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

    ஒரு தேர்ந்த எழுத்தாளரின், கிராமிய மணம் வீசும் எழுத்து நடை. கிராமத்துத் தெருக்களில், புகுதி படிந்த மண்ணில், நெஞ்சில் ஈரம் மிகுந்த மனிதர்களோடு, தோளில் கைபோட்டபடி, நடைபோடும் ஓர் உணர்வு.

       அமெரிக்க மண்ணில் காலடி பதித்து, வருடங்கள் பலப் பல கடந்துவிட்ட போதிலும், தன் சொந்த மண்ணின் மொழியை, சொந்த கிராமத்து மண்ணின் நறுமனம் வீசும் மொழியை, தன்னுள் உயிர்ப்போடு, அடைகாத்து, இவர் போற்றிப் புரந்து வருவது புரிகிறது.

பங்களா கொட்டா.

    ஒரு மாபெரும் கனவை நனவாக்கிடத் துடித்துத் துடித்து, அதற்காகத் தன் வாழ்க்கையினையே அடகு வைப்பவனின் கதை.

நகமும் சதையுமாய் இருந்த உறவுகள் கூட பங்காளியாகும் போது, கோர்ட் கேசு என அலைந்து கொண்டிருப்பதை தினமும் பார்க்கிறார். எவ்வளவோ குடும்பப் பிரச்சனைகளுக்குப் பொண்ணும், மண்ணுமே அடிநாதமாய் இருப்பதென்பதே நிதர்சனம்.

      இன்றைய வாழ்வியலை, இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஒவ்வொரு ஷெட்யூல்தாரரும் விவசாயம் செய்ய, ஒருவருக்கொருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள தண்ணீர் விட வேண்டியது. ஜல பாகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்கவோ, மறைக்கவோ கூடாது.

       பெரியவரின் உயிர் பிரிந்தபின், உயிர் பெற்ற உயிலின் வாசகங்கள் நம்மை நெகிழச் செய்கின்றன.

    வயலினைப் பிரித்துக் கொடுத்த போதும், வாய்க்கால் வழி வழிந்தோடும் நீரைப் பொதுவில் வைக்கும் பாங்கு நம்மை வியப்படையச் செய்கிறது.

       நாவலின் ஒவ்வொரு பக்கமும், தெளிந்த நீரோடை போல், தங்கு தடையின்றி, இயல்பாக, வெகு இயல்பாக நகர்ந்தோடுகிறது.

எதற்காக வாழறோம் என்னும் கேள்வியையே பல பேர் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் எத்தனை பேருக்கு பதில் தெரியும்….. லட்சியமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அது இல்லாமல் மனிதனாகப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லையே.

     இலட்சியத்தோடு வாழும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

     உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும், தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

   இதை எழுதியர் யார் தெரியுமா?

   நமது நண்பர்.

   வலைப் பூவில் வலம் வருபவர்.

நானும் என் முன்னோர்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வாழ்க்கையின் மௌன சாட்சி எங்கள் கிராமம்.

அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக் கொண்டிருக்கிறது.

வெகுவேகமாய் நகரமயமான இலட்சக் கணக்கான இந்திய கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று என்று சொல்லிக் கொள்வதில், எனக்குப் பெருமை ஒனறுமில்லை.

நகரமயமாதல் என்னும் சூறாவளியில் சிக்கி, கிராமங்கள் தன் சுய அடையாளங்களை இழந்து, சிதிலங்களுடன் இன்று உள்ளன.

அங்கே வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் முற்றிலும் அழிந்துவிடும் முன், கொஞ்சமேனும் மிச்சம் இருக்கும், கிராமிய மணம் காற்றில் கரைந்து போகும் முன், அந்த நினைவுகள் நிறமிழந்து போகும்முன், என் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி இந்நூல்.

     இவ்வாறுதான் தன் முதல் நாவலை அறிமுகப் படுத்துகிறார் ஆரூர் பாஸ்கர்.

   சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுதும் அலைந்து, களைத்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குவளை குளிர்ச்சியான மோர் குடித்தால் எப்படியிருக்கும், அப்படி ஒரு மன நிறைவைத் தருகிறது இவரது நூல்.



பங்களா கொட்டா.

படித்துப் பாருங்கள் நண்பர்களே.

       அன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், ஒரு அன்பு வேண்டுகோள்.

      மீதமிருக்கும் கிராமத்து நினைவுகளை எல்லாம், நினைவிருக்கும் பொழுதே, நேரமிருக்கும் பொழுதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாய், வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள்.

அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது.
திரு ஆரூர் வரும் பொழுது
எழுத்துக்களைச் சுமந்த தாட்கள்
புத்தகமாய் பிரசவிக்கட்டும்.
நினைவுப் பெட்டகமாய் மலரட்டும்.


வெளியீடு
அகநாழிகை பதிப்பகம்,
26,ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு -613001.
அலைபேசி 99 94 54 10 10

விற்பனை உரிமை
டீஸ்கவரி பேலஸ்,
கே.கே.நகர் ( மேற்கு) சென்னை-78
தொலைபேசி 044 – 6515 7525, அலைபேசி 99 40 44 66 50

விலை ரூ.130

Sunday, March 6, 2016

பங்களா கொட்டா - நூல் வெளியீட்டு விழா

அன்றும் இன்றும் காதலர் தினமெல்லாம் எனக்கு மற்றுமொரு நாள் போலத்தான். ஆனால் இந்த வருட காதலர் தினம் முக்கியமாகிவிட்டது. அதற்கு காரணம் எனது புத்தகவெளியிட்டு விழா.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் எனது முதல் புதினம் (நாவல்) "பங்களா கொட்டா" வெளியிடப்பட்டது.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

அந்த அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு:




விழாவினை பற்றி பார்க்கும் முன் நாவலை பற்றிக் கொஞ்சம் -  (பின் அட்டையில் இருந்து) வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. இந்த நாவலின்  கதைக் களம் தஞ்சை மண்.


பங்களா கொட்டாவிற்கு பிரான்சில் வசிக்கும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அற்புதமானதொரு அணிந்துரை தந்துள்ளார்.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன். முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

விழாவில் இருந்து சில துளிகள்:

மாலை 6 மணி என அறிவித்திருந்தாலும், சென்னைப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு 7 மணி அளவில் விழா துவங்கியது.



(மேலே படத்தில் இடமிருந்து டிஸ்கவரி வேடியப்பன், அகநாழிகை பொன் . வாசுதேவன், கவிகோ, ஆரூர் பாஸ்கர், எழுத்தாளர் சிவகுமார், ஆசிரியர் வளர்மதி)

எழுத்தாளர்  க.சீ.சிவகுமார் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்  ‘கன்னிவாடி’ உள்ளிட்ட பல சிறுகதை நூல்களின் ஆசிரியர். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர்.

பாவையர் மாத இதழை தொடர்ந்து வெற்றிகரமாக வெளியிட்டுவரும் ஆசிரியர் வான்மதியும் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்தான்.

கவிக்கோ  ஞானச்செல்வன் அவர்கள் எனது மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பில் தமிழாசிரியர். 'பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!' எனத் தொடர்ந்து பேசியும், ஊடகங்களில் எழுதியும் வருபவர். அவரை பற்றி தனியாக ஓரு பதிவு எழுதுமளவுக்கு பல்லாண்டுகளாக அரும் தமிழ்ப் பணி ஆற்றிவருபவர்.

சிவக்குமார் கதைச் சுருக்கத்தையும் அதன் முக்கிய நிகழ்வுகளையும் தொட்டுக் காட்டினார். எனக்கு சிவக்குமார் நேரடியாக அறிமுகம் இல்லாவிடினும்,  நாவலில் ஓரு ஆன்மா இருப்பதை உணர்ந்தேன் என அவர் குறிப்பிட்டது நல்ல உணர்வாக இருந்தது.

கவிக்கோ அவர்கள் நூலை வெளியிட்டு  அருமையான  மதிப்புரை செய்தார். கவிக்கோ அவர்கள் பாராட்டியது வசிஷ்டர் வாயால் வாழ்த்து பெற்றது போல இருந்தது. அவர் பேச்சினுடே சில பிழைகளையும் சுட்டிக்காட்டினார். திருத்திக் கொள்வோம்.

கவிக்கோவின் மாணவன் எனச் சொல்லிக் கொள்வதே பெருமை. அதிலும் அவர் கரங்களால் எனது நூல் வெளியிடப்பட்டது என்பது  'ராஜபாட்டை ' போல. அவருக்கு நன்றிகள் பல.

விழாவின் நிறைவாக எனது ஏற்புரையில்  'அந்த காலம் நன்றாக இருந்தது ' எனும் கவிஞர் மகுடேஸ்வரனின் கவிதையை மேற்கோள் காட்டி, இந்த நாவலின் பின்புலத்தைப் பற்றி பேசினேன்.

விழாவில் கவிகோ, எழுத்தாளர் சிவகுமார் மற்றும் பொன். வாசுதேவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படங்கள் கீழே.





கவிகோ - இந்த எழுத்தாளருக்கு (!)  பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தபோது.


விழாவில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்த அனைவரும் எனது நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள்.

இரண்டு எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்து விழா ஏற்பாடுகளையும் மிகக் குறுகிய நேரத்தில் செய்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு மனமார்ந்தநன்றிக்குறியவர்கள்.

இதுப் போல பல நூல் வெளியீடுகளைத் தொடர்ந்து டிஸ்கவரி புத்தக நிலையத்தில் செய்கிறார்கள். வாய்ப்பு உள்ளவர்கள் முடிந்தால் எட்டிப் பார்க்கலாம். ஏதேனும் ஓரு உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் அல்லது பிரபல கவிஞர்களைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

விழாவிற்கு சென்னையிலிருக்கும் நண்பர்களை  மட்டும் அழைத்திருந்தேன். இலக்கியவிழா என யோசிக்காமல் பெரும்பான்மையானவர்கள் தைரியமாக வந்திருந்து சிறப்பித்தனர். ஓரு இலக்கிய விழாவிற்கு போதுமானதோரு கூட்டமாக இருந்தது. அவர்கள் வாழ்க!.

இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். புத்தகத்தை அமேரிக்காவில் இருந்தும் வாங்கலாம்.

முடிந்தால் இதன் முகநூல் (Facebook) பக்கத்திலும் உங்கள் விருப்பத்தை (LIKE) இடுங்கள்.

பங்களா கொட்டா நாவல் தலையணை அளவு எனப் பயப்படத் தேவையில்லை. மொத்தமாக 128 பக்கங்கள் தான். தொடர்ச்சியாகச் சில மணி நேரங்களில் வாசித்துவிட இயலும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி.