Showing posts with label #கஸ்டமர்_கஷ்டங்கள். Show all posts
Showing posts with label #கஸ்டமர்_கஷ்டங்கள். Show all posts

Monday, December 10, 2018

கடவுளின் செயல்(Act of God)

2015ல் நடந்த சம்பவம் இது.  டிசம்பர் விடுமுறையில் இந்தியா
வந்து மூன்று வாரம் இருப்பதாக ஏற்பாடு. விமான டிக்கெட்டும் எடுத்தாகிவிட்டது.  ஆனால், எதிர்பாராத விதமாக சென்னையில்  பயணம் செய்வதற்கு நான்கு ஐந்து நாட்களுக்கு முன் சாதரணமாகப் பெயத் தொடங்கிய மழை பேய் மழையானது. அசாதாரணமான மழை. இரவு, பகல் என விடாமல் தொடர்ந்து பெய்த  கனமழையால் அணை உடைந்து சென்னையின் பல இடங்கள் நீரில் மூழ்கி சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

அன்றிரவு மீனப்பாக்கம் விமானநிலையத்தில் சர்வதேச விமானங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு விமானசேவை ரத்துசெய்யப்படுகிறது. பதைபதைப்புடன்
ஃபிளாரிடாவில் காத்திருந்த நான் விமானசேவை நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டபோது சென்னை செல்லும் விமானங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்படுகின்றன என்றார்கள். சரி, அங்கிருந்து ? அவர்களிடம் பதிலில்லை.
அடுத்த நாள் டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர்கள் இரண்டு வாய்ப்புகள் தந்தார்கள். ஒன்று டிக்கெட்டை இன்னொரு நாளுக்கு மாற்றிக் கொள்வது இல்லை முற்றிலுமாக கேன்சல் செய்துவிடுவது.

துரதிஷ்டவசமாக என்னால் அந்த இன்னொரு நாளை தர இயலாத சூழல். சென்னையில் காரோடிய சாலைகளில் படகு ஓடிக் கொண்டிருக்கும் போது
நான் போய் சென்னையில் இறங்கி யார் வீட்டில் தங்கி...

அதனால் டிக்கெட்டுடன் கையில் இருந்த விமான இன்சுரன்ஸை நம்பி பயணத்தை ரத்துசெய்துவிட்டேன். அடுத்து கேன்சல் செய்த டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்டு இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டபோது தான் வில்லங்கம் வந்து சேர்ந்தது. காலநிலை பிரச்சனைகளால் விமானம் ரத்து செய்யப்பட்டால் நீங்கள் பயணத்தேதியை மாற்றி இருக்கவேண்டுமே தவிர கேன்சல் செய்தது செல்லாது. அதனால் இழப்பீடு இல்லை என கைவிரித்துவிட்டார்கள்.

அவர்களுக்கு சென்னை இந்தியாவில் வடக்கிலா ? தெற்கிலா?  என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கோ மகா எரிச்சல். டிசம்பர் சீசனில் அதிக விலைகொடுத்து வாங்கிய டிக்கெட்டுக்கான பணத்தை வீணாக இழக்க விருப்பமில்லை. இதற்கு பயன்படாத இன்சுரன்ஸ் எதற்குதான் பயன்படும் என நினைத்து ஒரு பெரிய மறுப்புக் கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தேன்.  அதில் இது "அக்ட் ஆஃப் காட் (Act of God)" என ஆங்கிலத்தில் சொல்லும் கடவுளின் செயல். மனிதக்கட்டுப்பாட்டைத் தாண்டிய ஒரு இயற்கை அபாயம்.  நான் துணிந்து சென்னை போயிருந்தாலும் எந்த ஓட்டலும் திறந்திருக்க வாயப்பில்லை. இது வரலாறு காணாத பேரழிவு எனச் சொல்லி அதற்கான பிபிசி, சிஎன்என் போன்ற சர்வதேச ஊடகத் தரவுகளை இணைத்து இதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை எனச் சொல்லி கழுத்தில் துண்டைப் போட்டி இறுக்கினேன்.

ஒருவழியாக ஒரு மாத பரிசிலனைக்கு செய்து பிறகு இழப்பீட்டு பணத்தை
திரும்பத்தருவதாக இமெயில் அனுப்பியிருந்தார்கள். சென்னை வெள்ளம் போன்ற எதிர்பார்க்காத நிகழ்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும்  பயணங்களைத் தடம் புரளச் செய்து விடலாம் என்பதனால்
இப்பொழுதெல்லாம் தவறாமல் நான் பயண இன்சுரன்ஸ் எடுத்துவிடுகிறேன்.

#கஸ்டமர்_கஷ்டங்கள்