Showing posts with label #சினிமா டைரி-3. Show all posts
Showing posts with label #சினிமா டைரி-3. Show all posts

Wednesday, December 14, 2016

சினிமா டைரி-3

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது. 

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக. இரண்டாவது பகுதிக்கு இங்கே சொடுக்குக.

சிறந்த திரைக்கதை ஆசிரியரும் நடிகருமான பாக்யராஜின்
மிகப் பெரிய வெற்றிப்படம் "அந்த ஏழு நாட்கள்".
அவர் நடிகை அம்பிகாவுடன், அப்பாவி பாலக்காட்டு மாதவனாக தன் நகைச்சுவை நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த படம். சரி நாம் படத்தலைப்புக்கு வருவோம்.

குறிப்பாக நாட்கள் பற்றி. நாள்+கள் = நாட்கள். இதில்  
நாட்கள் பிழையன்று. ஆனால் பொருள் திரிபுக்கு (நாள்பட்ட கள்) இடம்தருதலால்  நாள்கள் என இயல்புற எழுதலாம்.

அது மட்டுமல்லாமல்,  தமிழில் அலகுகளைக் குறிப்பிடுகையில் பன்மை அவசியமில்லை. 'இரண்டு நாள் கவியரங்கம்', 'மூன்று மாதத் திருவிழா' என்றால் 'நாள்', 'மாதம்' ஆகியவை தானே பன்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடும்.

***
"அபியும் நானும் " நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த படம். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்ட இப்படம் வந்த புதிதில் பெரிதும் பேசப்பட்டது.

சரி தலைப்புக்கு வருவோம். இந்தத் தலைப்பில் "அபியும் நானும்" என்பதில் வரும் "உம்" என்பது இணைப்பை உண்டாக்கும் ஒர் இடைச்சொல். நாம் "உம்" மை நாளாவட்டத்தில் கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
அதை எளிதான சில  வாக்கியங்களின் மூல
ம் பார்த்துவிடலாம்.

"நீங்கள் சொத்துகளை வாங்கவும், விற்கவும் இனி பான் நம்பர் அவசியம்".


இதில் வாங்கவும் விற்கவும்-வாங்குவதற்கும் விற்பதற்கும் என்று பொருள்தரும் இணைப்புச்சொல்லாகவே பயன்பட்டுள்ளது.வரவும்,போகவும் வசதியாக-இதில்பிழையில்லை.

"இந்த இணைப்பைச் சொடுக்கவும் "

என்பது பிழை. இதுபோல நீங்கள் உடனே வரவும்,கடிதம் போடவும்,அனுப்பிவைக்கவும் என்பதுபோல் கட்டளைப்பொருளில் பயன்படுத்துதல் பிழை.


***

சின்னத்திரையில் முடிசூடா மன்னனாக
வலம் வந்துக் கொண்டிருக்கும்
‘மெட்டி ஒலி‘ புகழ் திருமுருகன் இயக்குநராக
அறிமுகமான திரைப்படம் "எம்டன் மகன்". 

அந்தத் தலைப்பில் இருக்கும் "எம்டன்" என்பதை கில்லாடி அல்லது தந்திரக்காரன்
எனும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். "எம்டன்" என்பது தமிழ் வார்த்தையில்லை. அதற்கான பெயர் காரணம் தெரியாதவர்களுக்காக, ‘எம்டன்’ என்பது ஜெர்மனியின் யுத்தக் கப்பல் ஒன்றின் பெயர்.

1914ல் அன்றையச் சென்னையை யாரும் எதிர்பாராத

சமயத்தில் அது குண்டு வீசி தாக்கியது. சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த தாக்குதலில் மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. அதன் தொடர்ச்சியாக நாம் கில்லாடி ஆட்களை எம்டன் எனச் சொல்வது பேச்சுவழக்கானது.