Showing posts with label #இலக்கணம். Show all posts
Showing posts with label #இலக்கணம். Show all posts

Friday, July 21, 2017

நீங்கள் வெகுளியா ? - அப்போ இதை முதல்ல வாசிங்க

"நாற்றம்" எனும் நல்ல சொல் அதன் இயல்பில் (மணம்) இருந்து திரிந்து கெட்ட வாடை எனும் பொருளில் தற்போது பயன்பாட்டில்
இருக்கிறது.

அதுபோல பயன்பாட்டில் இருக்கும் இன்னோரு சொல் "வெகுளி".
உலக நடப்பு அறியாத, கள்ளம் கபடமற்றவர்களை வெகுளி
எனச் சொல்கிறோம்.  அவன் 'சுத்த வெகுளி பய, அவன குத்தம் சொல்லாத ' என்பதெல்லாம் பேச்சுவழக்கில் மிகச் சாதாரணம்.

ஆனால், உண்மையில் வெகுளி என்பதற்கு கோபம் (சினம்) என்று பொருள்.

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்  இழுக்கா இயன்றது அறம் " என மனப்பாடம் செய்த  குறள் நினைவுக்கு வருகிறதா ?

ஆமாம், பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம் என்கிறது குறள்.

அந்த வகையில் பார்த்தாலும் நம்மில் பல வெகுளிகள் (கோபக்காரர்கள்) இருக்கத்தான் செய்கிறார்கள்.

Monday, May 1, 2017

முகநூலில் அடிக்கடிக் கண்ணில்படும் பிழை

நண்பர்களே,

முகநூலில் அடிக்கடி கண்ணில்படும் ஒரு பிழையைப் பற்றி
தெரிந்துக்கொள்ளுங்கள். முகநூலில் எழுதுபவர்கள் இந்த ஒரு பிழைதானா செய்கிறார்கள் ? என என்னிடம் சண்டைபிடிக்காமல், கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்.

பொதுவாக  "பொருத்து, பொறுத்து""பொருப்பு, பொறுப்பு""பொறுமை", ",பொறுத்தல்", போன்ற சொற்களை சரியாக பயன்படுத்துவதில் பலருக்குக் குழப்பமிருக்கிறது.

முதலில் பொருத்து, பொறுத்து இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்துவிடுவோம். " பொருத்து"  எனும் சொல், ஒன்று சேர். இணைப்பு செய் என்ற பொருள் தரும். "சரியான விடையைப் பொருத்துஎன சின்னவயதில் படித்தது ஞாபகம் வருகிறதா ?  அதாவது கட்டளைச் சொல்.

" என்னைப் பொறுத்தவரை   " என எழுதினால் ? -நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு எனப் பொருள்கொள்ள வேண்டும். "என்னைப் பொருத்தவரை என எழுதினால் ?" அது தவறு. என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) என வந்து பொருளின்றி போகும்.

அடுத்து பொருப்பு, பொறுப்பு எனும் சொற்களைப் பார்த்துவிடுவோம். " பொருப்பு"  எனும் சொல்லுக்கு மலை அல்லது பக்கமலை எனும் பொருள் இருக்கிறதாம். " பொறுப்பு"  - அது நாம் எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்று. அதாவது கட்டாயக் கடமை. " பொறுப்பில்லாம சுத்தாத  தம்பி !" " பொறுப்பாசிரியர் "  இதெல்லாம் நாம் கேட்டிருக்கிறோம் தானே. இல்லையென்றால்  'மனோகரா' படத்தில் வரும் புகழ்பெற்ற வசனமான  'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா' வை நினைத்துக் கொள்ளுங்கள்.

" பொறுத்தல்"  ? - பிழையை மன்னித்தல் இல்லை தாங்கிக் கொள்வது,

" அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  
இகழ்வார்ப் பொறுத்தல் தலை "  - குறள் நினைவுக்கு வருகிறதா ?

அப்போ , " பொறுமை"  ? - இதுவரை இதைப் படித்த உங்களுக்கு இருந்தது.

#கவிக்கோ_இலக்கணம்

Wednesday, December 14, 2016

சினிமா டைரி-3

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது. 

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக. இரண்டாவது பகுதிக்கு இங்கே சொடுக்குக.

சிறந்த திரைக்கதை ஆசிரியரும் நடிகருமான பாக்யராஜின்
மிகப் பெரிய வெற்றிப்படம் "அந்த ஏழு நாட்கள்".
அவர் நடிகை அம்பிகாவுடன், அப்பாவி பாலக்காட்டு மாதவனாக தன் நகைச்சுவை நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த படம். சரி நாம் படத்தலைப்புக்கு வருவோம்.

குறிப்பாக நாட்கள் பற்றி. நாள்+கள் = நாட்கள். இதில்  
நாட்கள் பிழையன்று. ஆனால் பொருள் திரிபுக்கு (நாள்பட்ட கள்) இடம்தருதலால்  நாள்கள் என இயல்புற எழுதலாம்.

அது மட்டுமல்லாமல்,  தமிழில் அலகுகளைக் குறிப்பிடுகையில் பன்மை அவசியமில்லை. 'இரண்டு நாள் கவியரங்கம்', 'மூன்று மாதத் திருவிழா' என்றால் 'நாள்', 'மாதம்' ஆகியவை தானே பன்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடும்.

***
"அபியும் நானும் " நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த படம். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்ட இப்படம் வந்த புதிதில் பெரிதும் பேசப்பட்டது.

சரி தலைப்புக்கு வருவோம். இந்தத் தலைப்பில் "அபியும் நானும்" என்பதில் வரும் "உம்" என்பது இணைப்பை உண்டாக்கும் ஒர் இடைச்சொல். நாம் "உம்" மை நாளாவட்டத்தில் கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
அதை எளிதான சில  வாக்கியங்களின் மூல
ம் பார்த்துவிடலாம்.

"நீங்கள் சொத்துகளை வாங்கவும், விற்கவும் இனி பான் நம்பர் அவசியம்".


இதில் வாங்கவும் விற்கவும்-வாங்குவதற்கும் விற்பதற்கும் என்று பொருள்தரும் இணைப்புச்சொல்லாகவே பயன்பட்டுள்ளது.வரவும்,போகவும் வசதியாக-இதில்பிழையில்லை.

"இந்த இணைப்பைச் சொடுக்கவும் "

என்பது பிழை. இதுபோல நீங்கள் உடனே வரவும்,கடிதம் போடவும்,அனுப்பிவைக்கவும் என்பதுபோல் கட்டளைப்பொருளில் பயன்படுத்துதல் பிழை.


***

சின்னத்திரையில் முடிசூடா மன்னனாக
வலம் வந்துக் கொண்டிருக்கும்
‘மெட்டி ஒலி‘ புகழ் திருமுருகன் இயக்குநராக
அறிமுகமான திரைப்படம் "எம்டன் மகன்". 

அந்தத் தலைப்பில் இருக்கும் "எம்டன்" என்பதை கில்லாடி அல்லது தந்திரக்காரன்
எனும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். "எம்டன்" என்பது தமிழ் வார்த்தையில்லை. அதற்கான பெயர் காரணம் தெரியாதவர்களுக்காக, ‘எம்டன்’ என்பது ஜெர்மனியின் யுத்தக் கப்பல் ஒன்றின் பெயர்.

1914ல் அன்றையச் சென்னையை யாரும் எதிர்பாராத

சமயத்தில் அது குண்டு வீசி தாக்கியது. சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த தாக்குதலில் மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. அதன் தொடர்ச்சியாக நாம் கில்லாடி ஆட்களை எம்டன் எனச் சொல்வது பேச்சுவழக்கானது.

Friday, December 2, 2016

சினிமா டைரி-2

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது.

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக.

            ***
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின்
"நிழல் நிஜமாகிறது" படத்தில் வரும் அருமையான பாடல் "கம்பன் ஏமாந்தான்". நடிகர் கமல் உதட்டசைக்க பாடகர் பாலு ரசித்து "பாவமாக" பாடியிருப்பார். "ஏமாந்தான்" எனும் அந்த வார்த்தையைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? "ஏமாற்றுதல்" நாம் அறிந்தது -வஞ்சித்தல் அல்லது நம்பிக்கையை கெடுத்தல். "ஏமாற்றப்படுதல்" என்பதற்கு ? -"ஏமாற்றப்பட்டான்", "ஏமாறினான்" என எழுதலாம். "ஏமாந்தான்" பிழையான சொல். வேண்டுமானால் அதை பேச்சு வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் "ஏமாந்தான்" சரியான சொல் அல்ல. அதனால் இனிமேல் ஏமாறவேண்டாம். ;)

                 ***
மறைந்த இயக்குநர் பாலுமகேந்ராவின்
இயக்கத்தில் வந்த திரைப்படம் "ராமன் அப்துல்லா".
"உன் மதமா ? என் மதமா ? " எனும் நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றிருந்த படம்.
அது மட்டுமில்லாமல் படம் வந்த புதிதில் அந்தத் தலைப்பிற்காகவே பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தலைப்பை "இராமன் அப்துல்லா" என எழுதுவது சரியாக இருக்கும். ஏனென்றால், தமிழில் 
"ல,ள,ர,ற" போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அப்படி என்றால் ராமனையும்,ராகவியை யும் எப்படி எழுதுவதாம் ?. அவற்றை அ,இ,உ சேர்ந்து எழுதவேண்டும். (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்பது சரி.

அது சரி, நீங்கள் பாலுமகேந்ராவுக்கு ரசிகரா ? இரசிகரா ? ;)
             ***


"என் ராசாவின் மனசிலே " ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றித்திரைப்படம். நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமான படமும் கூட. அருமையான பாடல்கள். 

அது இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரை முன்னிறுத்தியே படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாக கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டது.


"என் ராசாவின்.. " எனும் அந்தத் தலைப்பை ஒட்டி ஒரு சிறிய தகவல். எனது சட்டை, எனது ஜன்னல் என உடைமைப்பொருட்களை "எனது" எனலாம்.

ஆனால், உறவுப் பெயர்களை என் மகள், என் மகன், என் நண்பன் என்றே குறிப்பிடவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" நினைவுக்கு வருகிறதா ?

          ***

Tuesday, November 22, 2016

சினிமா டைரி-1

எனது தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள்
எழுதிய "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்" நூல் வாசிப்பின் அனுபவங்களை எளிமையாக  அனைவருக்கும் புரியும்படி
பகிரவிரும்பினேன்.

அதை திரைப்படங்களை வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

**
நாயகனாக ஜெயம் ரவி , எதிர்மறையான வேடத்தில்
அரவிந்த்சாமி நடித்து சமீபத்தில் வெற்றிப் பெற்ற
அதிரடித் திரைப்படம் "தனி ஒருவன்". ஒரு மாறுதலுக்காக நாம் இப்படி யோசிக்கலாம். இதே படத்தை இயக்குநர் ஷங்கர் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜூலீயை நாயகியாக வைத்து
ஒரு படம் எடுத்தால் ? ;) "தனி ஒருவள்" எனத் தலைப்பிடலாமா? கூடாது, அப்படி செய்தால் அது தப்பான தலைப்பாகவே இருக்கும். ஒருவன், ஒருத்தி என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். ஆனால், "ஒருவன் " என்பதுபோல் "ஒருவள் " என்பதும் "ஒருத்தி " என்பதுபோல் " ஒருத்தன்" என்பதும் பிழை.   அதே சமயத்தில் ஒருவனோ, ஒருத்தியோ -இருவரையும் "ஒருவர் " எனச்  சொல்லலாம் தவறில்லை.


** அஜித் நடித்த வெற்றிப் படம் " உன்னை கொடு என்னை தருவேன்" இதை சரியாக எழுதினால் "உன்னைக் கொடு என்னைத் தருவேன் " . திரையில் "க்","த்" விடுத்து எழுதியிருப்பார்கள். இப்படி திரையுலகில் படத் தலைப்பிற்கு தேவையின்றி ஒற்று சேர்ப்பதும் நீக்குவதும் வாடிக்கை. அதற்கு அவர்கள் சொல்லும் இலக்கணமல்லாத காரணங்களுக்கு நாம் போக வேண்டாம். இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" வருவதால் ('உன்னை', 'என்னை') வலி மிகும் என்பது செய்தி.

**

"நாயகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் நம் நெஞ்சில் என்றும் நீங்காத பாடல். அந்தப் பாடலில் எந்த குறையுமில்லை. :) அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்லும் இந்த நேரத்தில்
தீபாவளி பற்றிய ஒரு நல்ல தகவல். சமீப காலங்களில் ஊடகங்களில் தீபாவளி, தீபத்திருநாள், தீபஒளித்திருநாள் என பல சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிலிருக்கும் நுட்பத்தை பார்ப்போம். தீபாவளி=தீபம் + ஆவளி ( தீபங்களின் வரிசை )
தீபத்திருநாள் = தீபங்களின் திருநாள்
தீபஒளித்திருநாள் = தீபங்கள் ஒளிரும் திருநாள்
ஒளிர்ந்தால் தானே தீபம் ? அதனால் "தீபஒளித்திருநாள்" என்பதில் ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்பதை நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.


மேலும் தொடர்வேன்.