Showing posts with label #வலம்புரிஜான். Show all posts
Showing posts with label #வலம்புரிஜான். Show all posts

Wednesday, February 20, 2019

வணக்கம் - வலம்புரிஜான்

வலம்புரிஜான் நக்கீரன் இதழில்  தொடராக  எழுதிய "வணக்கம்" கட்டுரைத் தொகுப்பு  (நக்கீரன் வெளியீடு) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வலம்புரிஜான் பற்றிய பெரிய முன் அறிமுகங்கள் எதுவும் இல்லாவிட்டாலும்
இந்த வாசிப்பின் வழியாக அவரைப் பற்றியும் அவர் காலத்திய தமிழக அரசியல் பற்றியும் ஒரு மேல் எழுந்தவாரியான ஒரு சித்திரத்தைப் பெறமுடிகிறது.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தாய் வார இதழின் ஆசிரியராக இருந்த
ஜான் தொழில் முறையில் ஒரு திறமையான ஊடகவியளார் என்பதைத் தாண்டி ஓர் எழுத்தாளர், வழக்கறிஞர், பேச்சாளர், மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகத் தன்மையோடு செயல்பட்டிருக்கிறார். இளமைகாலத்தில்  திமுகவில் தனது பொதுவாழ்வைத் தொடங்கிய அவர் எம்.ஜி.ஆரால் அதிமுக பக்கம் கரை சேர்ந்திருக்கிறார் எனத் தெரிகிறது.

ஒரு விதத்தில் இந்தக் கட்டுரைகள் வலம்புரி ஜானின் அரசியல் பயணத்தைச் சொல்லுவதாக இருந்தாலும் அவை அப்போது முதல்வராக இருந்த (1991-96) ஜெயை தர்மசங்கடப்படுத்துவதற்காக எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

போகிற போக்கில் எம்ஜிஆர் தொடங்கி, ஜெ, கலைஞர், ஆர்.எம்.வீரப்பன், வைகோ, திருநாவுக்கரசு என குறிப்பிடத் தகுந்த பல தமிழக ஆளுமைகளுடன் தனது அரசியல்  அனுபவங்களை ஓளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார். கட்டுரைகளில் தொடர்ச்சியாக  தன்னை  எம்.ஜிஆரின் தீவிர விசுவாசியாக நிலைநிறுத்தும் வலம்புரி ஜான் பக்கத்துக்குப் பக்கம் ஜெ.யை கரித்துக் கொட்டியிருகிறார். இப்படி ஒரு முதல்வரைப் பற்றி இந்த அளவு அந்தரங்கங்களையும் குற்றச்சாட்டுகளையும் அப்போது அவரால்  பகிங்கரமாக துணிச்சலாக பகிரமுடிந்தது ஆச்சர்யமே. அதே சமயத்தால் அதற்காக தானும் தனது குடும்பத்தினரும் தொடர்ந்து மிரட்டல்கள்,
நடவடிக்கைகளைச் சந்தித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓர் இடத்தில் இப்படிக்  குறிப்பிடுகிறார்." ...எம்.ஜி.ஆரின் பலவீனம் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பலவீனம் சசிகலா. சசிகலாவின் பலவீனம் பணம்.பணம்.பணம். ஆகவே தமிழ்நாடு கொள்ளைப் போகலாமே தவிர
வெள்ளையாகி விடாது (விதவையாகிவிடாது). 

எம்.ஜி.ஆர் ஜெ.வை அரசியலுக்கு அழைத்து வந்து தமிழ்நாட்டை தவிக்கவிட்டதுபோல அல்லாமல், ஜெ பணம் பண்ணிக்கொள். பதவியில் கண் வைத்துவிடாதே என்கிற பாணியில் சசிக்கலாவிடம் நடந்துகொள்கிறார். ஆனாலும்,  எம்.ஜி.ஆர் செய்ததை நான் செய்து விடமுடியாதா  ?என்கிற ஜெ.யின் அதே துணிச்சல் ஜெ செய்வதை நான் செய்து விட முடியாதா ? என சசிகலாவிற்கும் வந்துவிட்டது..."

இப்படி அன்றைய அரசியலின் உள்ளடி வேலைகள், காழ்ப்புணர்ச்சி என பலவற்றைப் பேசும் இந்தக் கட்டுரைகள் அரசியலில் சோபிக்கமுடியாமல் தோல்வியுற்ற ஒருவரின் புலம்பல்கள் என எளிதாக ஓதுக்கிடவிடத் தோன்றவில்லை. மாறாக அடுத்தத் தலைமுறைக்கான அரசியல் பாடமாக நினைக்கிறேன். இந்தக் குறிப்புகளின் வழியாக வலம்புரிஜானின் வார்த்தை விளையாட்டுகளையும் நகைச்சுவையுடன் ரசிக்க முடிகிறது.

"..
நான் வயிற்று மைதானத்தில் அவரைப் போலவே ஆடு,மாடுகளைப் புதைக்கிறவன் என்பதை எம்.ஜி.ஆர் அப்படிச் சுட்டிக்காட்டினார்..."

"..
புத்திசாலிகளுக்குள் ஒரு போட்டி வைத்தால் எந்த சூழ்நிலையிலும் நடராஜன் முதல் பரிசுக்குத் தகுதியானவர். அவர் நான் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இல்லை என்கிற கொள்ளிவாய்ப் பொய்யை ஊர் முழுக்க பற்றவைத்தார் ..."

அதுபோல எழுத்தில் மேற்கோள்களுக்குத் தமிழ் இலக்கியங்களைத் தாண்டி பைபிளையும்,  சர்வதேச இலக்கியத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

"..
மத்தியானம் மீண்டும் ஜெ.  அவைக்கு வந்தார். வந்ததும் என்னை முறைத்தார்.  முறைத்தார் என்றால் அப்படி ஒரு முறைப்பு. உங்கள் கோபத்தில் சூரியன் அஸ்தமிக்காதிருக்கட்டும் என்று பைபிளில் ஒரு வரி வரும் அதுதான் அந்த நேரத்தில் என் நினைவில் நிழலாடியது. ..."

ஐந்து முறை தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்த அதிகார பூர்வமான முழுமையான முறையான சுயவரலாறு (autobiography) என்று ஒன்று தமிழில்  இருக்கிறதா எனத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதில் அவருடைய பொது பிம்பத்தின் காரணமாக பல விசயங்கள் விடுபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், வலம்புரி ஜான் தனது அனுபவத்தின் வாயிலாக எழுதிய இந்தநூல் ஜெ. குறித்தான வரலாற்றிற்கு ஓரளவேனும் உண்மையைச் சேர்க்கும் என நம்பலாம்.

நூல்: வணக்கம்
ஆசிரியர்: வலம்புரிஜான்
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்
ஐந்தாம் பதிப்பு:  2017 , விலை:  225