Showing posts with label #ஷோபாசக்தி. Show all posts
Showing posts with label #ஷோபாசக்தி. Show all posts

Friday, June 15, 2018

தேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி

எழுத்தாளர் ஷோபா சக்தியின் தேசத்துரோகி  சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.

தொகுப்பில் மொத்தமாக 14 சிறுகதைகள். அகதிகளாக வெளிநாடுகளுக்கு குறிப்பாக பிரான்சின் பாரிசுக்கு புலம் பெயரும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை இந்தச்  சிறுகதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார்.
இதில் பிச்சைக்காரர்கள், விசா ஏஜண்டுகள், ஹோட்டல் அடுப்படியில் பாத்திரம் சுத்தம் செய்பவர்கள்,குடிகாரர்கள் என ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

தொகுப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சமும் இதுவாகதான் இருக்கிறது. அதாவது தமிழ் எழுத்துலகில் இதுவரை  பதிவுசெய்யப்படாத கதைக்களம், கதைமாந்தர்களைத் தேர்வுசெய்தது. கதைமொழி ஈழத்தின் பேச்சுவழக்கு என நினைக்கிறேன். ஆனால்,  எழுத்துநடையில் தொடர்ந்தார்போல ஒரு மெல்லிய பகடி நடை இருப்பதாலோ என்னவோ ஒரிருக் கதைகளைத் தவிர வேறு எதுவும் என் மனதில் நிற்கவில்லை.

சமீபத்தில் அவருடைய பாக்ஸ் கதைப்புத்தகத்தை வாசித்து வியந்த எனக்கு இந்தத் தொகுப்பு ஏமாற்றமே.  என்னைப் பொறுத்தவரை
சிறப்பாக அமைந்தக் கதைகள் தேவதை சொன்ன கதை, பகுத்தறிவு பெற்ற நாள்.





Saturday, June 2, 2018

BOX: கதைப் புத்தகம் (நாவல்) - ஷோபாசக்தி

சமீபத்தில் தமிழில் வாசித்த மிகச் சிறந்த புத்தகம் ஷோபாசக்தியின் BOX: கதைப் புத்தகம் (நாவல்).

எழுத்தாளர்  கதை சொல்லலின் அத்தனை சாத்தியங்களையும் முயன்று பார்த்தது போலொரு அபூர்வ படைப்பு. இதுவே ஷோபாசக்தியின் ஆகச்சிறந்த படைப்பாக இருக்கமுடியும்.

குறுக்கும் நெடுக்குமாக செல்லும் புதிய கதைசொல்லும் யுக்தியில் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை,  சித்திரத்தை வாசகர்களின் முன்வைக்கிறார் ஷோபா.
அதிலிருந்து மீண்டுவரவே எனக்கு சிலநாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.

புத்தகம்  கிண்டிலில் கிடைத்ததால் வார இறுதியில் எந்தவொரு எதிர்பார்ப்புகளும், முன் முடிவுகளும் இல்லாமல் ஈழம் குறித்தானது என்ற புரிதலுடன் மட்டும் நுழைந்து வாசித்து முடித்தேன். கண்டிப்பாக ஏமாறவில்லை. வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.

கதையைப் பற்றியும் அதுபேசும் ஈழஅரசியல் பற்றியெல்லாம் நான் இங்கே
பகிர,விவாதிக்கப்போவது இல்லை. அதுவே அந்தப் படைப்பாளனுக்கு செய்யும் மிகபெரிய மரியாதையாக இருக்கும்.

கடந்த ஒரு மாதமாக பல ஈழ எழுத்துகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இந்தப் புத்தகம் சரளமான நடையோடு, எளிய மொழியில்
அனைவரும் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், நாம் மறந்துபோன கைவிட்ட பல தமிழ் வார்த்தைகளை மீள்அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நான் வாசிக்கையில் குறிப்பெடுத்த தமிழ் வார்த்தைகள் உங்களுக்காக.
( சான்று-சென்னைப் பழ்கலைக்கழக தமிழ்ப்பேரகராதி)

சன்னதம்-கடுங்கோபம்.
வலைஞன்-;மீன்பிடிப்போன் (Fisherman)
முள்ளி- முள்ளுள்ள செடி
வளவு- வீட்டுப்புறம்
பம்பல்- பைம்பல்-களிப்பு, பொலிவு
சப்பளித்தல்-தட்டையாக்குதல்
அரை- இடை
மரை வற்றல் - ஒருவகை மானினத்தின் காய்ந்த இறைச்சி
அமசடக்கம் - அமைதி
சீவியம்-  சீவிதம்,உயிர்வாழ்க்கை
சமர்-போர்
கிடுகு-ஓலைக்கீற்று
குரக்கன்-கேழ்வரகு
கிடாரம்-கொப்பரைவிசேடம் (boiler)
வாவி-நீர்நிலை

Don't judge a book by its cover என ஆங்கிலத்தில் சொல்வது போல புத்தகத்தின் அட்டைப்படத்தை மட்டும் வைத்து எந்த முடிவும் செய்யாமல் கண்டிப்பாக வாசியுங்கள்.