Friday, November 25, 2016

அரசியல் பழகு - சமஸ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சமஸின் "அரசியல் பழகு" எனும்
சிறு நூலை வாசித்தேன்.   இது ஆசிரியர் தமிழ் இந்துவிற்காக
2016 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.



இந்தக் கட்டுரைகளை எழுதும் முன் ஆசிரியர் தமிழகத்தின் வெவ்வேறு  பின்புலம் கொண்ட 25,000   கல்லூரி மாணவர்களைச் சந்தித்திருக்கிறார். அதனால் இந்தக் கட்டுரைகள் இன்றையத்
தலைமுறையின் உண்மையான மனஓட்டத்தைப் புரிந்து  கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த இளைஞர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு அரசியல் அறிமுகத்துக்கு அறைகூவல் விட்டு அழைக்கும் வகையிலேயே நூல்  " அரசியல்  பழகு"  எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

சமூக பார்வையற்ற கேளிக்கைகள், "படிக்கும் போது உன் கேரியர் முக்கியம்"  எனச் சொல்லி  வளர்க்கப்படும் மாணவர்கள், "அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கானதல்ல "  எனும் பொதுபுத்தி போன்ற பல சமூக சீர்கேடுகளைக் கண்டித்திருக்கிறார். அந்த  மனப்பான்மை மாற வேண்டும்  என்ற கருத்துடைய "அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்"  என தனது முதல் கட்டுரையைத் தொடங்குகிறார்.

சமூகம், அரசியல் பிரஞை  எதுவுமற்ற சூழல் ஆபத்தானது என்பதைச்சொல்லும் அதே வேளையில் அரசியல் விழிப்புணர்வு ஏன் இன்றைய அவசரத் தேவை என்பதை நாட்டின் இன்றைய சமூக சீர்கேடுகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார். அதற்க்காக  உலக அரங்கில் இந்தியா பற்றிய பல தரவுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைகைக்கிறார்.

அதேபோல,  இந்தியா மிகப் பெரிய ஜனநாயகநாடு, நமது அரசியலைமைப்புச் சட்டம் அனைவருக்குமானது  என்பதை  பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.  தேர்தலில் நம் ஒவ்வொருவருடைய ஒட்டும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதே என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறார்.

ஆனால், இன்றைய தலைமுறைக்கு நல்ல தலைவர்களாக அடையாளம் காட்ட ஆசிரியருக்கு சுதந்திரம் பெற்ற  இந்தியாவில் காந்தி, நேரு,காமராஜ்  என விரல்விட்டு எண்ணும் தலைவர்களே
இருப்பது நாம் வருத்தப்பட வேண்டிய விசயம்.

உண்மையைச் சொல்வதென்றால்,    நாம்  பொதுவாக   அரசியல் பற்றி பொதுவெளியில் (என்னையும் சேர்த்து) பேசுவதில்லை இல்லை அப்படிப் பேசத் தயங்குகிறோம். அந்த தயக்கங்கள் முற்றிலுமாக ஒழிந்து அரசியல் என்பது அடிப்படையில் சகமனிதருக்கும் நமக்குமான உறவு என்பதை உரத்துச் சொல்ல முயலும் நூல். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

இது அரசியல் அறிந்தவர்களுக்காகான நூல் இல்லை எனும் ஆசிரியர் குறிப்புடன் இருக்கும் இந்த நூலின் விலை ரூபாய். 20, பக்கங்கள்-48

படம்- நன்றி இணையம்


அரசியல் பழகு
சமஸ்
துளி வெளியீடு
விலை : ரூ.20

Tuesday, November 22, 2016

சினிமா டைரி-1

எனது தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள்
எழுதிய "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்" நூல் வாசிப்பின் அனுபவங்களை எளிமையாக  அனைவருக்கும் புரியும்படி
பகிரவிரும்பினேன்.

அதை திரைப்படங்களை வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

**
நாயகனாக ஜெயம் ரவி , எதிர்மறையான வேடத்தில்
அரவிந்த்சாமி நடித்து சமீபத்தில் வெற்றிப் பெற்ற
அதிரடித் திரைப்படம் "தனி ஒருவன்". ஒரு மாறுதலுக்காக நாம் இப்படி யோசிக்கலாம். இதே படத்தை இயக்குநர் ஷங்கர் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜூலீயை நாயகியாக வைத்து
ஒரு படம் எடுத்தால் ? ;) "தனி ஒருவள்" எனத் தலைப்பிடலாமா? கூடாது, அப்படி செய்தால் அது தப்பான தலைப்பாகவே இருக்கும். ஒருவன், ஒருத்தி என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். ஆனால், "ஒருவன் " என்பதுபோல் "ஒருவள் " என்பதும் "ஒருத்தி " என்பதுபோல் " ஒருத்தன்" என்பதும் பிழை.   அதே சமயத்தில் ஒருவனோ, ஒருத்தியோ -இருவரையும் "ஒருவர் " எனச்  சொல்லலாம் தவறில்லை.


** அஜித் நடித்த வெற்றிப் படம் " உன்னை கொடு என்னை தருவேன்" இதை சரியாக எழுதினால் "உன்னைக் கொடு என்னைத் தருவேன் " . திரையில் "க்","த்" விடுத்து எழுதியிருப்பார்கள். இப்படி திரையுலகில் படத் தலைப்பிற்கு தேவையின்றி ஒற்று சேர்ப்பதும் நீக்குவதும் வாடிக்கை. அதற்கு அவர்கள் சொல்லும் இலக்கணமல்லாத காரணங்களுக்கு நாம் போக வேண்டாம். இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" வருவதால் ('உன்னை', 'என்னை') வலி மிகும் என்பது செய்தி.

**

"நாயகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் நம் நெஞ்சில் என்றும் நீங்காத பாடல். அந்தப் பாடலில் எந்த குறையுமில்லை. :) அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்லும் இந்த நேரத்தில்
தீபாவளி பற்றிய ஒரு நல்ல தகவல். சமீப காலங்களில் ஊடகங்களில் தீபாவளி, தீபத்திருநாள், தீபஒளித்திருநாள் என பல சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிலிருக்கும் நுட்பத்தை பார்ப்போம். தீபாவளி=தீபம் + ஆவளி ( தீபங்களின் வரிசை )
தீபத்திருநாள் = தீபங்களின் திருநாள்
தீபஒளித்திருநாள் = தீபங்கள் ஒளிரும் திருநாள்
ஒளிர்ந்தால் தானே தீபம் ? அதனால் "தீபஒளித்திருநாள்" என்பதில் ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்பதை நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.


மேலும் தொடர்வேன்.

Sunday, November 13, 2016

பருக்கை - வீரபாண்டியன்

சமீபத்தில்  2015ல்  சாகித்ய அகாதமியின்   'யுவ புரஷ்கார்'  விருது பெற்ற வீரபாண்டியனின்  "பருக்கை" நாவலை (புதினம்)வாசித்தேன்.

தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான "பருக்கை" என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டின் முதலில் பாராட்டுக்குரியவர்.

சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு,  தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு  என  எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.


படிக்க வரும்  அவர்கள்  கையில் காசில்லாததால் படிப்புச் செலவுக்காகவும் நல்ல சாப்பாட்டிற்காகவும் சென்னையில் "கேட்டரிங்" எனும் உணவு பரிமாறும் வேலை செய்கிறார்கள். அங்கே நேரும் அவமானங்கள் , அனுபவங்கள் எனக் கதை விரிகிறது.


கல்யாணவீடுகளில் நாம் எளிதாகக் கடந்தபோகும்  அந்தச் சாமானிய மனிதர்களின் உள்ளக்குமுறலை எந்தவித பாசாங்கமும் இல்லாமல் ஆசிரியர்  பதிவு செய்திருக்கிறார்.  கதையுனுடே இந்த நகரச்சூழலில் அந்த இளைஞர்கள்  எதிர் கொள்ளும்  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், காதல், வர்க்கப்பிரிவினை, பண்பாட்டுச் சிக்கல்கள் எனும் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.
  
கதை பெரும்பாலும் பெரிய வர்ணனைகள் இல்லாமல் இயல்பான உரையாடல்களால் நகருகிறது. இயல்பான அன்றாட பயன்பாட்டிலிருக்கும் சாமானியனின் மொழி கதைக்குப் பலம்.

"ஏய்யா.. உங்களுக்லாம் அறிவில்ல ? வேலை செய்யிறதுக்குதான வந்திங்க.. டைம் ஆச்சில்ல எலயப் போடாம வடைய எடுத்துத்
தின்றிங்க. ...." (பக்கம்-153)

இதில் பட்டினி வயிறோடு பந்தியில் ஒடியாடி உணவு பரிமாறுபவனை ஒரு சகமனிதனாக மதிக்காமல் நோகடிக்கும் சமூகத்தை நமக்குக் காட்டுகிறார்.

".. (நீ ) இங்க  மெட்ராஸுக்கு வந்து படிக்கிறன்னு உங்கப்பன் அங்க ஊருபுல்லா பெருமையடிச்சிட்டுக் கெடக்குறான்.  நீ இன்னானா இங்க டீய வித்துங் கெடக்குற. இதுக்குதான் உங்கொப்பன் உன்ன படிக்க அனுப்ச்சானா ? ..." (பக்கம்-239)

ஒரு கிராமத்து மனிதரின் ஆற்றாமையான உள்ளக் குமுறல் அது.

கதையில் கல்யாண மண்டபங்களின் திரை மறைவு விசயங்கள், கல்யாண வீட்டுச் சமையல், அங்கே சமைப்பவர்கள், பரிமாறுதல் போன்ற விசயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வரும் பல நுண்விவரங்கள் வியக்கவைக்கின்றன.

"சாப்பிடுகிறவர்கள் பாராட்டுகிற மாதிரி சாம்பார் ஊற்றுவது ஓரு சாதனை. அந்தப் பாராட்டுதல் அவர்கள் முகத்திலேயே தெரியும். ஒரு தலை ஆட்டுதலிலோ, ஒரு தேங்ஸ்-லோ, விழிகள் விரிய அவர்கள் தரும் சிறு புன்னகையோலோ.. அது தெரியக்கூடும். ஒரு சுருங்கிய முகம் சாம்பார் ஊற்றியதில் மயங்கி மலர்வதிலோ அது தெரியக்கூடும்......  " (பக்கம்-132)

".. சோறு கட்டியாக இல்லாமல் உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தால் ரசம் ஊற்றுவது சுலபம். ரசத்தை ஒரே இடமாக ஊற்றாமல், சோற்றுக்குள் வட்டமாக ஊற்ற வேண்டும். தோசை ஊற்றும் போது மாவை வட்டமாகத் தேய்ப்பது போல ரசத்தை ஊற்றினால்,.....  " (பக்கம்-133)

ஒடியாடி பரிமாறிக் களைத்து போய் விரும்பிய உணவு தீர்ந்து, பசியெல்லாம் சுத்தமாய் அடங்கி, ஆறியச் சாப்பாட்டைக் கடைசியில் சாப்பிடும் அவலத்தைச் சொல்லும்  இந்தக் கதையில் பசி எனும் உயிர்ப்பு கடைசி வரை தொடர்கிறது. அதுவே எழுத்தாளரின் வெற்றியாக நினைக்கிறேன்.

இளமையில் வறுமை எனும்  துயரம் அனுபவித்தால் தெரியும் என்பதை வாசகர்களுக்குக் கடத்துவதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது கதையில் வரும் எழுத்தாளரின்
ரசிக்கும் படியான சில சொந்தக் கவிதைகள்

"பெண்கள் குனியும் போதெல்லாம்
கும்மாளம் போடாதீர்கள்
உங்கள் மனைவிக்கும்
தண்டுவடம் தாழாமலிருக்காது.. " (பக்கம்-149)

இயல்பான நகைச்சுவைக் கதையில் ஒடுவதும் நல்ல அம்சம். அதுபோல, கதையில் ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது.  குறிப்பாக அரசு விடுதிகளின் சீர்கேடுகள், உடன் படிக்கும் கண் பார்வையற்றவரின் சிரமங்கள் எனப்  பல மெத்தனங்களுக்குச் சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

விருது பெற்ற நாவல் எனும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றங்களும் உண்டு. 

முதல் படைப்பென்பதால் பெரிதாகத் திட்டமிடல் இல்லாமல் எழுதப்பட்டது போலுள்ளது.  உதாரணமாக.  கதைசொல்லியின் நண்பர்களை எந்தவோரு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  கதை நகர்த்தலிலும் அவர்களின் பங்கு பெரிதாக வெளிப்படவில்லை.   நடுவில் வரும்
முழுமை பெறாத  பெண் நண்பியின் கதாபாத்திரம் இப்படிப் பல.

நண்பியிடம் காதலைச் சொல்ல முடியாத தருணத்தில் தனது மனநிலையைக் கதைச்சொல்லி இப்படிப் பதிவுச் செய்கிறார்.

"..அவள் பேசினாலும் 'லவ் பண்றதுலாம் பிடிக்காது ' என்பது மட்டுமே என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. மனைவி இறந்து குழந்தை பிறந்த மனநிலையோடு நின்றேன். (பக்கம்-67)"

ஒர் இளம் பெண்ணுடன்  தனிமையில் இருக்கும் மணமாகாத இளைஞனுக்கு இதுபோன்றதோரு  மனநிலை என்பது செயற்கைத் தனமாக எழுதப்பட்டதாகத் தோன்றியது.

சமீபத்தில் பட்டமேற்படிப்பு முடித்த வீரபாண்டியனின் முதல் படைப்பு இது. அந்த வகையில் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வரும் ஒரு மாணவன் அந்த வாழ்பனுவத்தை ஒரு புனைவாக எழுதுகிறார். அதை ஒரு பதிப்பகம் வெளியிட்டு அந்தப் படைப்பு மத்திய அரசின்  உயரிய விருது பெறுவது என்பதைத் தமிழ் எழுத்துலகில் நல்லதோரு தொடக்கமாக நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பாக நல்ல உத்வேகத்தைத் தரும் நிகழ்வு.

அதுபோல ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதால் இந்தப் படைப்பு எவர் கண்ணிலும் படாமல் போயிருக்கவே வாய்ப்புகள் அதிகம். தமிழ் எழுத்துலகில் அதுதான் நிதர்சனம்.  அதிஷ்டவசமாக   இந்தப் படைப்பு இலக்கிய உலகின்  உயரிய விருதால்  நல்ல கவனம் பெற்றிருக்கிறது. எழுத்தாளர் வீரபாண்டியன் விருது தந்த இந்த வெளிச்சத்தை வரும் காலங்களில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுவரை எந்தத் தமிழ்படைப்பாளியும் தொட்டதாக நினைவில் இல்லாத மாதிரியான ஒரு கதைக்களன்.  இதை கதைக்கட்டமைப்பு, செவ்விதழ் இலக்கியம் என்றேல்லாம் கறாராகச் சீர்தூக்கிப் பார்க்காமல்  சாமானியர்களின் கதைக்கரு என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் நிச்சயம் இது ஒரு புதுமையான படைப்பு.   

வீரபாண்டியனை வாழ்த்தும் அதே நேரத்தில் ஆசிரியர் புகழ்பெறாதவர் என ஒதுக்காமல் அவரின் நூலை வெளியிட்ட பரிசல் புத்தக நிலையத்துக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

பருக்கை 
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 


இந்தக் கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://solvanam.com/?p=47204


Sunday, October 30, 2016

அலமாரியில் ஆரூர் பாஸ்கர்

நண்பர்களே,

எஸ்.ராவின் சஞ்சாரம் புதினம் பற்றிய எனது கட்டுரையை  கிழக்குப் பதிப்பகத்தின் "அலமாரி மாத இதழ்" தனது அக்டோபர் இதழில்
வெளியிட்டுள்ளது.

நன்றி - கிழக்கு.







Tuesday, October 4, 2016

எழுத்தாளர் சுஜாதா - 14 வருட அதிசயம்

எழுத்தாளர் சுஜாதா மிகைப்படுத்தலின்றி அதீத உணர்ச்சிவசப்படாமல் எழுதக்கூடியவர். அதை உறுதி செய்வதுபோல் இருந்தது நான் சமீபத்தில் வாசித்த அவருடைய  ''நிலா நிழல்'' நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரை.  அந்த 14 வருட அதிசயத்தை  நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுஜாதா ''நிலா நிழல்'' யை   தினமணிக் கதிரில் தொடர்கதையாக 1988ல் எழுதுகிறார். அந்த சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக
அதில் ஓரு அத்தியாயம் வெளியாகாமல் விடுபட்டுபோகிறது. அதை சுஜாதா உட்பட யாரும் கவனிக்கவேயில்லை. அந்தக் கதையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் இரண்டாம் பதிப்பாக வெளியிடும்போது கவனித்து சுஜாதாவிடம் சொல்ல. சுஜாதா 14 வருசங்கள் கழித்து அந்த விடுபட்ட அத்தியாயத்தை எழுதித் தருகிறார். நிலா நிழல் லின் இரண்டாம் பதிப்பில் இதை சிலாகித்து எழுதிய சுஜாதாவின் முன்னுரை இங்கே.

"உலகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் பதினான்கு வருஷம் கழித்து எழுதப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன்.
எழுதும்போது மனதின் அடித்தளத்தில் தேங்கியிருந்த கதைக்கருவின் வடிவம் மறு உயிர் பெற்றது எழுத்து பிசினஸ்ஸில்
உள்ள விந்தைகளில் ஒன்று. "



இந்த நிகழ்வை கண்டிப்பாக வேறேந்த எழுத்தாளராக இருந்தாலும்
உணர்ச்சிப்பூர்வமாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருப்பார்கள் என்பது எனது அனுமானம்.

ஒரு அத்தியாயம் தொலைந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது முதல் அதிசயம். அதைத் தாண்டி,  சுஜாதா கதை எழுதியது 1988, பின் 2002ல் அதாவது  14 வருடங்களுக்கு பின் விடுபட்ட அந்த அத்தியாயத்தை எழுதுகிறார். நான் 14 வருடங்களுக்கு பிறகு 2016ல் அதை கவனித்து எழுதுகிறேன்.  இந்த நிகழ்வு 14 வருட அதிசயம் தானே  ? ;)



புகைப்படங்கள் நன்றி:
www.google.com



Sunday, September 25, 2016

இவர்கள் வாசகர்கள்-4

நண்பர்களே,  எனது இரண்டாவது புதினம் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை கேட்கிறது.  போன வாரம்
ஒரு வழியாக  எழுத்துப்பணி நிறைவடைந்து இந்த வாரம்
பிழைத்திருத்தத்தில் இருக்கிறேன். முழுதாக முடிந்ததும் சொல்கிறேன்.

"இவர்கள் வாசகர்கள்" பகுதியில்  "பங்களா கொட்டா" புதினம்
பற்றி  குமுதம் புகழ் நண்பர் சுரேஷ் கண்ணன் அவரகளின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.  நான் முன்பே சொன்னது போல வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்களின் முன் வைக்கிறேன்.

வாசகர்களின் பரந்துபட்ட கருத்துகளால்,  நான் ஒரு படைப்பாளியாக நிறைய கற்றுக் கொள்கிறேன் என சொல்லிக் கொள்வதில் மிகையோன்றுமில்லை.

***********

நண்பர் ஆரூர் பாஸ்கர், அவருடைய நாவலான 'பங்களா கொட்டா'வை அனுப்பித் தந்தார்.
அது பற்றிய விமர்சனக் குறிப்பு, புத்தக மதிப்புரைகளுக்கென வெளிவரும் பிரத்யேக மாத இதழான 'அலமாரி'யில் வெளிவந்துள்ளது.
நண்பருக்கு வாழ்த்துகள்.

அலமாரி  (கிழக்கு பதிப்பகம்)





பங்களா கொட்டா வை வாசித்து கருத்துகளைச் சொன்ன சுரேஷ் கண்ணனுக்கு எனது நன்றிகள்!!

Friday, September 16, 2016

துயரங்களின் பின்வாசல் - கவிஞர் உமா மோகன்

ஜூலையில்  கவிஞர் உமா மோகனின் "துயரங்களின் பின்வாசல்"
கவிதைத் தொகுப்பு இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறி என் முன்வாசல் வழியாக வந்தது.

நூலின்  எனும் தலைப்பை பார்த்தவுடன் ஓருகேள்வி
எனது மனத்தை துளைக்கத்தொடங்கியது.   துயரத்தின் பின்வாசல் எப்படியானது ? நல்லதா ? கெட்டதா ?  என்பது பற்றியது.  எங்கள் ஊர் பக்கம் எந்த நல்லவிசயம் செய்தாலும் வாசல் பக்கமாக  செய்ய வேண்டும் என்பார்கள்.  அதாவது யாருக்காவது  நெல்லோ, பணமோ, கூலியோ எது
கொடுப்பதாக இருந்தாலும் அது  முன் வாசலில் வழியாகதான்.   அது நல்ல சுபமான  காரியங்களுக்கு. துயரத்துக்கு ? துயர வீட்டை கடந்து பின்வாசல் வழி வெளியேறிச் செல்வது சுபமாகதான் இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையில் நூலின் உள்ளே நுழைந்து வெளியேறி சரியெனத் தெளிந்தேன்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் ஓரு கவி சாதாரணமானவன் அல்ல.

அவன் இந்த உலகை  தன் புறக்கண்ணால் பார்த்து எளிதில் கடந்துபோகக்கூடியவனில்லை. அவன்  இந்த உலகை அகக்கண்ணால் கண்டு அதை உயிரின் உள்கடத்தி அந்த அனுபவத்தை கவிதையாய் வடித்துத் தருபவன் என்பதை உமா மோகனின் துயரங்களின் பின்வாசல் கவிதைத் தொகுப்பில் அறியமுடிகிறது.

எந்தவோரு நிகழ்வையும் புறவயமாக கடந்துசெல்லாமல் தன் மனதின்
தவிப்புகளை   அழகான கவிதைகளாக்கியிருக்கிறார். அந்தக் கவிதைகளின்  நுட்பத்தை கண்டு வியந்தேன். உதாரணமாக இதைச் சொல்லிவிடுகிறேனே. கவிஞரின் பூங்கொத்து கவிதையை பாருங்கள்

பூங்கொத்து அழகாகத்தான் இருக்கிறது...
முன்னறியா நிறங்களில்
வித்யாசத் தோற்றங்களோடு
..
விலை கேட்டதும் 
நாளை வாடிவிடுமே எனத்தான்
தோன்றுகிறது
 ..

பூங்கொத்தின் விலை கேட்டாலே அது வாடிவிடுமே என நினைக்கும்
அந்த மென்மையான மனநிலை ஓரு ஆச்சர்யம்.  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை  அல்லவா கவிஞர்
நினைவுபடுத்திவிட்டார்.

கவிஞரால் இந்த அவசர யுகத்தில் அந்த சின்ன  மகிழம்பூக்களை நினைக்க முடிகிறது.  அதைப் பற்றி  அவரால் உருகியபடி  கவிதையும் எழுதமுடிகிறது.


அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்துக் கொண்டு
நடத்தல் சாத்தியமில்லை.. - பக்கம்-18

அந்த மகிழம்பூவிலிருந்து "உங்கள் மழையும் எங்கள் மழையும் ஓன்றல்ல " எனும் கவிதையில் விவசாயக் குடும்பத்தின் அவலத்தை சொல்வது வரை 
பல கவிதைகளில் இவர் இந்த மண்ணை,  மக்களை மழையை,  இயற்கையை நேசிக்கும் மென்மனது கவிஞராய் மிளிர்கிறார்.



தனது முன்னுரையில் கவிஞர் அ. வெண்ணிலா சொன்னது போல உமா மோகன் தன் கவிதைகளின் மூழம் துயரத்தின் பின் வாசல் வழி அனைவரும் வெளியேறினார்களா ? எனும் தவிப்புடன் பதைபதைக்கிறார்.

அது போல,  மாய்ந்து மாயந்து   விலை மதிப்பான வைரம் வாங்கும் சமூகம், "வைரம்" எனும் பெயரை பழசு என குழந்தைகளுக்கு வைக்க மறுக்கும்
முரணான மடமையை கவிஞர்  ஏக்கத்தோடு பதிவு செய்கிறார்.

பார்ப்பதே களைப்பு உனக்கு
பறத்தலின்  
சுகம் அறியாய்
அலங்காரத்துக்கேனும்
சிறகு விரித்துப் பார்.  -51

என்பதில் அவர் சகமனிதர்களிடம் வைத்திருக்கும்  அந்த வாஜ்ஜை தெரிகிறது.

குறிப்பெழுதி வைக்காமலே
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத்
தெரியுமளவு
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் - பக்கம்-34

எதைக் கண்டும்
காறித்துப்புமளவு எச்சில்
சுரப்பதில்லை இப்பொதெல்லாம்..பக்கம் -56

எனும் போது அவர் தன் ஆற்றாமையை சொல்கிறார்.


ஓரு கவிதை தொகுப்பை ஓவ்வோருவரும் தங்களுக்கு பிடித்த வகையில் மனதுக்குள் கற்பனை செய்துக் கொள்கிறார்கள்.சிலருக்கு மலர்த் தோட்டம்,
கரும்புத் தோட்டம், நீரோடை  இப்படி பல.  எனது முதல் தொகுப்பான
"என் ஜன்னல் வழிப் பார்வையில்" க்கு  முன்னுரை எழுதிய நிரஞ்ஜன் பாரதி கூட வீட்டின் சமையலறையிலிருந்து வரும் சர்க்கரைப் பொங்கல் போல மணம் வீசுவதாக வாழ்த்தியிருந்தார். அது அவர்களின் மனநிலையை பொறுத்தது என்பேன். இந்த தொகுப்பில் பல கவிதைகள் எனக்கு இனிப்புத்துண்டு.

 நாம்  சமயங்களில் சில இனிப்புகளை சாப்பிடும் போது அதன் முதல்
கடியின் சுவையிலேயே  அதிசயித்து திகைத்து நின்றுவிடுவோம். அந்த ஓரு துண்டின் சுவையிலேயே லயித்து, திளைத்து நம்மை மறந்து பேரானந்தம் அடைவோம்.  குறிப்பாக  துயரங்களின் பின்வாசல் எனும் இந்தக்  கவிதையை படித்த போது அந்த அனுபவம் எனக்கு.

மையோ மரகதமோ அய்யோ வும்
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஓன்றாகுமா .. பக்கம் -91

மேலும் சிறக்க வாழ்த்துகள் உமா மோகன்.

நூல்  : துயரங்களின் பின்வாசல்
ஆசிரியர் :  உமா மோகன்
வெளியீடு : வெர்சோ பேஜஸ்
விலை : 80