Showing posts with label #நகைச்சுவை. Show all posts
Showing posts with label #நகைச்சுவை. Show all posts

Friday, March 1, 2019

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் ?

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் என்றெல்லாம் பொதுவாக சொன்னாலும் நமது சமூகம் நகைச்சுவை விசயத்தில் கொஞ்சம் பலவீனமானது என்றே நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக சென்னை போன்ற அழுத்தமிகுந்த, பரபரப்பான பெருநகரங்களில் நகைச்சுவை என்பது காற்றில் கூட இல்லை என்பதைக்  கவனித்திருக்கிறேன்.

மற்ற இடங்களில் எப்படியோ நகரங்களின் கடைகள், ரயில் நிலையங்கள் போன்ற முன் பின் அறிமுகமில்லாதவர்களைச் சந்திக்கும் பொது இடங்களில் சிரிப்பு என்பதை மருந்துக்குக் கூட பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் இறுக்கமான முகங்களே. சமயங்களில் நகைச்சுவை உணர்வற்ற இருண்டகாலத்தில் வாழ்கிறோமோ என்றுகூட நினைப்பதுண்டு.

அப்படியே அரிதாக யாரேனும் தப்பித்தவறி நகைச்சுவையாக பேசினாலும் அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்களே இங்கு அதிகம்.
இங்கே நகைச்சுவை எனச் சொல்வது வடிவேலு போல ஏற்ற இறக்கத்துடன் பேசி சிரிக்க வைக்கும் முயற்சியை அல்ல. மாறாக இயல்பான உரைநடையில் வாய்ப்பும் சூழலும் கிடைத்தால் மெல்லிய பகடியோடு பேசுவது தவறில்லை. உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை அப்படி வேறு யாரேனும் பேசினால், பதிலுக்கு சிரிக்காவிட்டாலும் கண்டிப்பாக முறைக்காதீர்கள். சரி நாம் என்ன செய்யலாம் எனக் கேட்பது காதில் விழுகிறது. :)

அடுத்த முறை பேருந்தில் "2 ரூபாய் சில்லறை இல்ல , 5 ரூபாய இருக்கு சார்" எனும் நடத்துனரிடம் சிரித்தபடி "அது எனக்கு பிரச்சனை இல்லை, குடுத்தா நான் வாங்கிக்க ரெடி" எனச் சொல்லி சூழலைக் கலகலப்பூட்ட முயற்சி செய்யலாம்.

இல்லை ஒரு நகைக்கடைக்கு போனால்,  "மேடம் நீங்க எத்தனை சவரன்ல நெக்லஸ் பாக்குறீங்க எனும் விற்பனைப் பிரதிநிதியிடம், 10 பவுன்ல பாக்க ஆசைதான், ஆனால் இப்ப 3 பவுன்லேயே காட்டுங்க பார்ப்போம்" என சிரித்தபடி சொல்லிப் பாருங்கள். அவரும் பதிலுக்கு சிரித்தபடி உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் உங்களுக்கு நகைகளை எடுத்துக்காட்ட வாய்ப்புள்ளது.


இப்படி பொது இடங்களில் நகைச்சுவையாக பேசுபவர்களைப் பற்றிய நமது மதிப்பீடுகளும் வேறாக இருப்பது துரதிஷ்டமே.