Saturday, June 24, 2023

வாழ்த்துகள் மாணவர்களே !

சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வடகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.


கடந்தவாரம் பள்ளியில் நடந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டது. அதுபோல, தமிழ் பாடத்தைச் சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்ற மாணவருக்கும் பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

பரிசு பெற்றவர்கள்  ஆதித்யா(முதல் இடம்),  ஆரூத்ரா(2-ஆம் இடம்),  பரணிதரன் (3-ஆம் இடம்).

தமிழில் முதல் இடம் - விசுவநாத்

இதைச் சாதித்துக் காட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளோடு, பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !! 

#சிறகுகள்2023


Monday, June 19, 2023

நீ ஓட்டுவது BMW-காரா?

'ஃபேர்-அன்-லவ்லியின் (fair and lovely) பேரா

நீயும் நானும் வேறா

ஐந்துக்கு பின் ஆறா

நீ ஓட்டுவது பிம்-எம்-டபில்யூ (BMW) காரா ?'

என்பது போன்ற நாலு காமா சோமா பாட்டெழுதி கூட ஒருவர் இன்று  பிரபல பாடலாசிரியராகிவிட முடியும்.  ஆனால், இலக்கியத்தில் 30-ஆண்டுகளுக்கு மேலாக செறிவான நவீன கவிதைகளை  எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவதேவன் போன்றவர்கள் புகழ்பெறுவது என்பது கானல் நீர்தான். அதுவும் வாசிப்பு அரிதாகி வரும் இந்தக் காலத்தில்.

அவரைப் போன்றவர்களுக்கு அரசியலும் சரியாக தெரிவதில்லை.பாவம்.

யார்  அந்த தேவதேவன்? அவருடைய கவிதை ஒன்று சொல்லமுடியுமா? என்பவர்களுக்கு அவருடைய 'ஒரு மரத்தடி நிழல் போதும்'  எனும் கவிதை கீழே...

ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்

வெட்டவெளியில் நீ நின்றால்

என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது


மேலும்

மரத்தடியில் நிற்கையில்தான்

நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல

உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்

 

மரங்களின் தாய்மை

முலை முலையாய் கனிகள் கொடுக்கும்

கிளைகளின் காற்று

வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்

 

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே


          ஒரு மரத்தடி நிழல் தேவை

உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்

போவேன்.

 

Monday, June 12, 2023

சினிமா... சினிமா... சினிமா...

ஒரு காலத்தில் படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி  பலர் பேச்சினுடே குறள், ஓளவை முதுமொழி ஏன்  குறைந்த பட்சம் ஒரு பழமொழியையாவது மேற்கோள் காட்டி பேசுவது என்பது மிகச் சாதாரணம். சிலர் ஏகலைவன்,  கட்டை விரல், கண்ணகி, கர்ணன் என்றெல்லாம் புராண கதைகளை டக்கென சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று அது போன்ற வழக்கங்கள் பெரும்பாலும் ஒழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.  மாறாக, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உரையாடல்கள்  என்பது கொஞ்சம் தட்டையாகி அந்த இடத்தை சினிமா பிடித்துவிட்டதாக நினைக்கிறேன். அதாவது, வயது வித்தியாசமின்றி பேச்சுவழக்கில் ஒரு சினிமா காட்சியையோ அல்லது வசனத்தையோ மேற்கோள் காட்டி பேசாதவர்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இளைய தலைமுறைக்கு சினிமாவைத் தொடாமல் எதையும் பேசவே முடிவதில்லை.  (தமிழ்புத்தகங்கள் !?- மூச்!) அந்த அளவுக்கு சினிமா வாழ்வில் புரையோடிக் கிடக்கிறது. இது முற்றிலும் உண்மை.


சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. அது மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என்ற மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது. மாறாக, திரைப்படம் என்பது இன்று சமூகத்தின் நிகழ்காலத்தைப் பேசும் ஒன்றாக தமிழர் வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாகி இருக்கிறது. அது நல்லதா..கெட்டதா? எனும் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

#சினிமா_சினிமா_சினிமா

Wednesday, May 31, 2023

வீரப்பன் - தீதும் நன்றும்

மிழில் சினிமா, அரசியல் இரண்டும் யூ-டியூபின் இரண்டு கண்கள் என்றால் மூன்றாவது கண் வீரப்பன் விவகாரமாகதான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தினமும் மக்கள் பரபரப்போடு இணையத்தில்  இதைக் கவனிக்கிறார்கள். வீரப்பன் மரணமடைந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்பும் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.


'வீரப்பனாரு'க்கு சமைத்தவர், வீரப்பனைத் தூரத்தில் நின்று பார்த்தவர், கடந்து போன பின் காலடித்தடத்தைப் பார்த்தவர், சந்தேக வழக்கில் சிக்கியவர், வீரப்பனின் ஒன்றுவிட்ட சித்தாப்பாவின் பேரன், அங்காளி, பங்காளி ஊர்க்காரர், உறவுக்காரர், சலவைக்காரர் என சகலமானவர்களையும் காடுகளுக்குள் புகுந்து நேர்காணல் எடுத்து போடுகிறார்கள். அந்த  அளவுக்கு மக்களிடம் வரவேற்பு. 

ஏன், பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைச்சித்திரம்‘வீரப்பன் வாழ்க்கை’ வரலாறாக இருக்கும் போல. நெப்போலியனின் ‘சீவலப்பேரி பாண்டி’ சக்கைபோடு போட்டதை இங்கே நினைத்துப் பாருங்கள். (வீரப்பன் தொடர்பான  40-50 ஆண்டுகால நிகழ்வுகளை  சமூகபார்வையில் அணுகி ஏன் உருப்படியான ஓர் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கக் கூடாது ?).

இதெல்லாம் போதாதென்று, சிலர் வீரப்பன் காட்டு பழங்குடியினருக்கு உதவுகிறோம் பேர்வழி என பணம் வசூலித்து மோசடி செய்வதாகவும் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், வீரப்பன் மறைவுக்கு பின் வெளியாட்கள் பலர் தைரியமாக காடுகளுக்குள் நுழைந்து ஆழ்துளை கிணறு, நீர்முழ்கி மோட்டார் என சகட்டு மேனிக்கு நீரை  உறிஞ்சி இயற்கைக்கு புறம்பான விவசாயம் செய்கிறார்களாம்.

அதுபோல, வீரப்பன் மறைந்து வாழ்ந்த காட்டை மையப்படுத்தி  சுற்றுலா கொண்டுவரும் திட்டம் வேறு சிலருக்கு இருக்கிறதாம். அப்படி, ஏதாவது வந்தால் உல்லாசப் பயணம் என்ற போர்வையில் வெளியாட்கள் உள்ளே புகுந்து இன்னமும் இயற்கை வளத்தை அழிப்பார்கள். பாவம் அங்கே எஞ்சி நிற்கும் உயிரினங்கள்.

இப்படிச் சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர் அழித்த காடுகளின் பரப்பளவு ஒன்பது சதவிகிதம் எனில் மீதமுள்ளதை அழித்துக் கொண்டிருப்பது நாமே.

#தீதும்நன்றும்

படம் நன்றி- இணையம்.


Thursday, May 4, 2023

அபிதா- எழுத்தாளர் லா.சா.ராமாமிருதம்

'அபிதா' என்ற பெயரைப் பார்த்தவுடன் நடிகர் விக்ரம் நடித்த 'சேது' படத்தின் பாதிப்பில் யாரோ எழுதிய புத்தகம் போல என பலர் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால்,  உண்மையில் நடந்ததோ வேறு.  1960-களில் லா.ச.ரா எனப்படும் எழுத்தாளர் லா. ச. ராமாமிர்தம்  எழுதிய அபிதா நாவலின் தாக்கத்திலேயே 'சேது' பட நாயகியின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், அபித குஜலாம்பாள் அம்மன் பெயரின்  நாமகரணத்தைதான் அபிதா-வாக மாற்றி எழுதியதாக லா.சா.ரா தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அது உண்ணாமுலை அம்மனின் இட்டு அழைக்கும் பெயர். அதைத் தான் பாலாவும் தனது படத்தில் செய்திருக்கிறார்.  இதைத்தாண்டி இரண்டுக்கும் வேறு ஒற்றுமையிருப்பதாக தோன்றவில்லை. ( நாகரிகம் அல்லது 'மார்டன்' என்ற பெயரில் தமிழர்களின் பெயர்கள் மாறி வருவதைப்பற்றி தனியாக எழுதவேண்டும்).

ஆனால், சேது படம் போலவே அபிதாவும் ஒரு காதல் கதைத்தான். உள்ளடக்கம் வேறு. லா.சா.ராவின் 'அபிதா' 100 பக்கங்களுக்குள் எழுதப்பட்ட காதல் கவிதை போன்றதொரு சிறிய நூல்.  அதன் வாசிப்பனுபவம்.



செல்வந்தரின் பெண்ணை மணம் புரிந்தாலும் குழந்தையில்லாமலும், மணவாழ்வில் நிம்மதியில்லாமலும். வெற்று வாழ்க்கை வாழும் ஒருவன் தனது கடைசி காலத்தில் மனைவியோடு சொந்த ஊருக்கு வருகிறான்.   
அவனது சொந்த ஊர் கரடிமலை.  அந்த ஊரில் இவன் இல்லாத நாட்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.  குறிப்பாக, அவனுடைய முன்னாள் காதலி சகுந்தலை மரணமடைந்து அவளுடைய குடும்பத்தில் மகள் அபிதா மட்டும் பிழைத்திருக்கிறாள் என்பதை அறிகிறான்.

மகள் அபிதா இளமை பொங்கும் அழகோடிருக்கிறாள். அவளுடைய அழகில் தாய் சகுந்தலையைக் காணும் அவன் அவள் மீது மையல் கொள்வதாக செல்லும் கதை இது.

மகள் இடத்தில் வைத்திருக்கவேண்டிய பெண்ணை பெண்டாள நினைப்பது சரியா ? எனும் தர்கத்தில் இறங்காமல் வாழ்வில் அனைத்தும் சாத்தியம் என எண்ண வைக்கும் இந்த புனைவில் குறிப்பிட்டுச் சொல்ல சில இருக்கத்தான் செய்கின்றன. அது லா.சா.ரா. வின் மொழிநடை. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடை. இன்றைய குமுதம் படிப்பவர்கள் வாசிக்கமுடியாத, நேரடியான மொழிநடையில் இல்லாத, ஆர்வம் கொள்ள செய்யாத ஒரு நடை.

கதைச்சொல்லியின் நனவோடை உத்தியில்  அமைந்த  இந்தக் கதை
பெரும்பாலும் அக உணர்ச்சியின் வெளிப்பாடாக கவித்துவத்தோடு நகர்கிறது.

எ.டு.

"சக்கு (சகுந்தலை) நீ என்றுமே ஒரு இருண்ட கேள்வி ! . அபிதாதான் உன் வெளிச்சமான பதிலோ ?. 
அபிதா, உன் வெளிச்சம் கண் கூசுகிறது."

"யாக குண்டத்திலிருந்து எழுந்த அக்னி தேவன் கையில் ஏந்திய வெள்ளி பாயசக் கிண்ணம் போல, அறை ஒரு விநாடி மின்னலில் பளீரிட்டு, அறையில் முன்னிலும் காரிருள் கவிந்து சூழ்ந்து கொண்டது". என்பது மாதிரியான சின்ன வாக்கிய அமைப்புகள்.

இது அடர்ந்த மொழி என்பதைத் தாண்டி தத்துவ விசாரணைகளை எழுப்புவதாலே  நாவல் இலக்கிய அந்தஸ்து பெறுவதாக நினைக்கிறேன்.


எ.டு. "அன்பிட்டவர்களின் குறைகளே, அவர்களிட்ட அன்பின் விசேச ருசி.
எப்பவுமே பசிக்காகவா சாப்பிடுகிறோம் ? சமைத்ததற்காகவா சாப்பிடுகிறோம் ?",  "வாசனைகளில்தான் உயிர் வாழ்கிறோம்".

அதுமட்டுமல்லாமல் தன்மை நிலையில் கதை எழுத நினைப்பவர்கள்  பயிற்சிக்காக வாசிக்க வேண்டிய நூல். பட்சி, ஜலம், ரகஸ்யம் என்பது போல எண்ணிலடங்காத வடமொழி சொற்கள் கலந்து எழுதப்பட்டிருகிறது. ஏன், ஆங்கிலமும் கலந்துதான்.  "I don't care". "High class picture ஸார்". என்று கூட அன்றே எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்,  சில நல்ல தமிழ் சொற்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நிரை என்பது மந்தை என்ற பொருளில் வந்திருப்பதைக் கவனித்தேன். அதுபோல மின்னல்களின் பொளிசல் என்பது பொளிதல் என்பதன் பேச்சுவழக்கு எனப் புரிந்துகொள்கிறேன் (பிளத்தல்) . 

100 பக்கங்கள் என்றபதால் மிக எளிதாக வாசித்துவிடக் கூடிய நூல் நேரமிருந்தால் பாருங்கள்.


நூல்: அபிதா
ஆசிரியர்: லா.சா.ராமாமிருதம்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: ரூ.100




Sunday, April 23, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (7) - நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது

ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி என்பது தனது படைப்பு பலரைச் சென்று சேர்வது என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக, அந்தப் படைப்பு அவர்களால் எந்த அளவு புரிந்து கொள்ளப்பட்டது என்பதும் மிக முக்கியமாகும்.

அந்த வகையில் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' மிகச்சரியாக உள்வாங்கப்பட்டு ஒரு விரிவான கட்டுரையாக இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த அறிமுகக் கட்டுரையை ஊடகவியளாலர் ப.சரவணவன் அவர்கள் Wow தமிழா தளத்தில் (நூலகம் பகுதி) எழுதியிருக்கிறார். சித்திரைத் திருநாள் பரிசாக ஏற்றுக்கொள்கிறேன். நெஞ்சார்ந்த நன்றி சரவணவன் !!
அந்தக் கட்டுரை கீழே...

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரின் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கும்? அமெரிக்கக் கனவு இனியதா கொடியதா? அமெரிக்காவும் இந்தியாவும் எந்தெந்த வகைகளில் வேறுபடுகின்றன, எந்தெந்த வகைகளில் ஒன்றாக இருக்கின்றன? இந்தியப் பெருநகரங்களின் வாழ்க்கை எந்தளவுக்கு அமெரிக்க வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களை ஒரு நெடுங்கதையின் ஊடாகச் சொல்லும் நாவல், ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங் நாவல்.

அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்க வாழ் பெண்ணுடன் உருவாகும் காதலும் அதை ஒட்டிய நினைவுகளும் இந்தக் கதையின் களம். இதில் அந்தத் தமிழர் அமெரிக்க நிலத்துடன் எப்படி ஒன்றுகிறார், ஒன்ற முடியாமல் தவிக்கிறார், அமெரிக்கப் பெண்ணுடன் அவரது உறவு எப்படி நிகழ்கிறது, அந்த அமெரிக்கப் பெண்ணின் வாழ்க்கையை இவர் எப்படிப் பார்க்கிறார் என்பன போன்ற பரிமாணங்களில் விரிகிறது இந்த நாவல். வழக்கமான ‘Who done it?’ வகை ஒரு கிரைம் த்ரில்லராக ஆகிவிடக்கூடிய கதையை, நிலம், பண்பாட்டுக் கூறுகள், மனிதரின் இயல்புகள் மற்றும் பிறழ்வுகளைக் காட்டும் நெடுங்கதையாக மாற்றி இருக்கிறார் நாவலாசிரியர்.

புலம்பெயர்ந்த நாட்டில் ஒற்றைப் பெற்றோராக (Single Parent) இருக்கும் இந்தியத் தமிழ் ஆண் ஒருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இன்னொரு ஒற்றைப் பெற்றோரான பெண் ஜெஸிகா கிங்கும் கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரின் குழந்தைகள், நண்பர்கள் மற்றும் இவர்களுடன் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஆகியோர் இக்கதையின் பிற கதைமாந்தர்கள். இவர்கள் அனைவரும் சமகாலத்தில் வாழ்பவர்கள் என்பதால், இவற்றில் பல கதைமாந்தர்களை நாம் தமிழ்நாட்டில் குறிப்பாகப் பெருநகரங்களில் நம்முடன் வாழும் பலரோடும் பொருத்திப் பார்க்க முடிவது, நம்மைக் கதையுடன் எளிதில் ஒன்றச் செய்கிறது.

குற்றத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், கிரைம் திரில்லர்களைப் போல் கதையின் முடிவை நோக்கிய வெறும் பரபரப்பை உருவாக்குவதாக இந்நாவலின் கதையாடல் இல்லை. கதையில் இருக்கும் கதைமாந்தர் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பின்னணி, காரணம் மற்றும் கதைக்கான பங்களிப்பு இருப்பதால், விறுவிறுப்பான வாசிப்போடு, கதைமாந்தரின் பண்புகளையும் வாழ்வையும் பற்றிய புரிதல் கதையோடு சேர்ந்து வளர்கிறது.

ஜெஸிகா கிங்க்கும் கதை சொல்லியாக வரும் தமிழருக்கும் இடையிலான காதல்மிகு கணங்களில் காதல் கதையின் பண்புகள் முழுமையாக இருக்கின்றன. கதையில் நிகழும் குற்றத்தை ஆராயும் இடங்களில் கிரைம் த்ரில்லர் வகைமையில் கதை நகர்கிறது. கதையின் முடிவில் உணர்ச்சிகரமான, எதிர்பாராத சில நிகழ்வுகள் இந்த இரு வகைமையில் இருந்தும் மாறுபட்டு திகில் ஜானருக்கு மாறி வியப்பளிக்கிறது. இது வாசிப்பில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்க உதவுகிறது.

அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழரின் கதை என்றாலும், பல பாத்திரங்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் அவற்றின் உரையாடல்களை எப்படி எழுதி இருப்பார் என்ற எண்ணம் கதையை வாசிக்கத் தொடங்கியதும் உருவாகிறது. கதை தமிழரின் பார்வையில் நகர்வதால் பல இடங்களில் உரையாடல்களைத் தமிழில் எழுதி இருக்கிறார். சில இடங்களில் ஆங்கில உரையாடல்களைத் தமிழில் அப்படியே எழுதி, அந்த உடையாடலில் அமெரிக்கத் தன்மை கொண்ட விஷயங்கள் குறித்த பொருளை, பின்புலத்தைத் தமிழில் விளக்கி, இந்த மொழிச் சிக்கலை அருமையாகக் கடந்திருக்கிறார் எழுத்தாளர்.


என்னுடைய கடந்தகால கசப்புகளை ஏணிப்படியாக்கி, உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கிறன்னு மட்டும் மட்டும் நீ நினைக்காதே…”, “நிலவொளியில் என் விருட்சத்தில் அமர்ந்து அந்த நீலகண்டப் பறவை விளையாட, இச்சையின் சூட்டில் அன்று இரண்டு வெவ்வேறு நிறங்கள் உருகிப் பொங்கிக் கலந்து வழிந்தோடியது” எனச் சில இடங்களில் கவித்துவம் மிக்க வரிகள் இடம்பெற்று வாசிக்கும் அனுபவத்தை உயர்த்துகின்றன.

பல இடங்களில் காட்சிப் படிமங்கள் நன்றாக விவரிக்கப்பட்டு, அந்தச் சூழலை உணர உதவுகின்றன.

மேலோட்டமாக காதல் கலந்த கிரைம் திரில்லர் போல் தோன்றினாலும் அதையும் தாண்டிப் பல விஷயங்களைப் பேசுகிறது ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங். மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளால் உருவாகும் மோதல்கள், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் மோதல்கள், மனிதருக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே எற்படும் மோதல்கள், மனிதருக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையே நிகழும் மோதல்கள் ஆகியவை கதையின் ஊடாக அழகாக சொல்லப்பட்டு இருக்கின்றன.

தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் மனித வாழ்வை எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன, இன்றைய பதின்ம வயதினர் தொழில்நுட்பத்தை நுகரும் மற்றும் தொழில்நுட்பத்தால் நுகரப்படும் விதம், மூத்த தலைமுறையினர் அதைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள், இந்தத் தொழில்நுட்பங்கள் வாழ்வில் எற்படுத்தும் நல்ல விளைவுகள் மற்றும் கேடுகள் ஆகியவையும் கதையின் ஊடாகப் பேசப்படுகின்றன.

கோவிட் காலத்தில் மானிட இனம் எதிர்கொண்ட பல சிக்கல்களும் நாவலில் விரிவாக பேசப்படுகின்றன.

கதையின் முக்கியக் கதாப்பாத்திரமான ஜெஸிகா, 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறாள். தனது உடல் குறித்து பெருமை கொண்டவளாக இருக்கிறாள். உரிமைகளைக் குறித்து தெளிவு மிக்கவளாக இருக்கிறாள். அவள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள், அன்றாட வாழ்வின் செயல்களுக்கு முரண்படாமல் இருக்கும் அளவுக்குத் தெளிவானவளாக, மன முதிர்ச்சியும் மன உரமும் கொண்டவளாக இருக்கிறாள். சுற்றுச்சூழலைப் பற்றிய ஆர்வமும் அக்கறையும் அறிவும் கொண்டவளாக இருக்கிறாள். இயற்கை மீதான அவளது அன்பு, நாய் பூனை போன்ற வளர்ப்பு விலங்குகளோடு மட்டுமே குறுகிப் போகாமல், அடுக்கு மாடிகளின் வெளிப்புறக் கண்ணாடிகளில் மோதி இறக்கும் பறவைகள், ஏரியில் காணக்கிடைக்கும் நீர்ப்பறவைகள், சூழலுக்குத் தொடர்பில்லாமல் வேற்று நிலத்தில் இருந்து அழகுக்காக மட்டுமே நட்டு வளர்க்கப்படும் மரங்கள் என்று பரந்த தன்மை கொண்டதாக இருக்கிறது.

ஜெஸிகாவின் சொல்லும் செயலும் நிலைப்படும் ஒரே நேர்க்கோட்டில் தெளிவாக இருக்கின்றன. உறவுகள் குறித்த சில முடிவுகள் தவறாகும்போது அவற்றில் இருந்து விலக அவள் தயங்குவதில்லை. அவளது வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வந்தபோதும் நாம் இப்படிப்பட்ட நபராக இல்லாமல் வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என்று அவள் வருந்துவதில்லை.

தனது உயிருக்கே ஆபத்தாகும் என்ற போதிலும் கொள்கை சார்ந்த தனது முடிவுகளில் இருந்து அவள் மாறவில்லை. எடுத்துக்காட்டாக உயிருக்கே ஆபத்து நேரும் எனும் நிலை வந்தாலும், அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அவள் துப்பாக்கி வைத்துக்கொள்ளாமலே வாழ்கிறாள். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஆணின் மதிப்பீடுகளை அவள் சார்ந்திருப்பதில்லை.


அவள் மிகவும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழத் தேவையானவற்றை மட்டுமே செய்யும் Schemer அல்ல. மனம் போன போக்கில் இலக்கற்று வாழ்பவள். எந்தச் சூழலிலும் தனது பொறுப்பை உணர்ந்து, தன்னை அறிந்து செயல்படுபவளாக அதில் தயக்கமோ பயமோ கூச்சமோ அற்றவளாக இருக்கிறாள். சவாலான சூழல்களைத் துணிவுடன் எதிர்கொள்கிறாள். வெற்றிகளை நிதானதோடு அணுகும் பக்குவமான மனமும் தோல்விகளை அஞ்சாமல் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவளாக இருக்கிறாள். அவ்வகையில் ஜெஸிகா, இந்த 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதி.

நாவலின் குறிப்பிடத்தக்க இரண்டாவது சிறப்பு, கதை சொல்லிக்கும் ஜெஸிகாவுக்கும் இடையில் முகிழ்க்கும் காதல். எற்கனவே விவாகரத்து பெற்ற ஆணுக்கும் பெண்ணும் இடையில் உருவாகும் இந்தக் காதல், வெறும் உணர்ச்சிப் பொங்கல்களால் ஆனது அல்ல. தனிப் பெற்றோராக (Single parent) இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் இந்தக் காதல் மிகவும் நளினமானதாக, இயல்பானதாக, மெல்ல நிகழ்வதாக உள்ளது. இந்தக் காதல் ஒருவரை ஒருவர் சுரண்டுவதாக இல்லை, அதனால் சுரண்டலின் பொருட்டு உருவாகும் குற்ற உணர்ச்சிகள் இந்தக் காதலில் இல்லை. வெறும் சொல்லால், எண்ணங்களால், இலக்குகளால், கனவுகளால் ஆனது அல்ல இந்தக் காதல், ஆணும் பெண்ணும் இணைந்து செய்யும் செயல்களால் ஆனது. அவ்வகையில், மிகவும் மனமுதிர்ச்சி பெற்ற இருவரின் காதலாக இந்தக் காதல் இருக்கிறது. அந்தக் காதலை உடல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த விவரணைகளால் நிரப்பாமல், காதல் மிகும் கணங்களைக் கவித்துவமாக எழுதிக் காட்டி இருப்பது எழுத்தாளரின் சொல்முறையின் சிறப்பு.

நாவலின் தொடக்கத்தில் பரந்த வெளியில் எங்கோ ஓர் நீலப் புள்ளியாகத் தெரியும் ஜெஸிகா, கதையின் போக்கில் நெருங்கி நெருங்கி நீலப் பறவையாகி பிரம்மாண்டம் கொண்டு, ஒவ்வொரு கதாப்பத்திரத்தின் மீதும் வெளிர் நீல ஒளியாகப் படர்கிறாள். நாவலை வாசிக்கும் நம் மீதும் அந்த நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது.

ஜெசி (எ) ஜெஸிகா கிங்
ஆசிரியர்: ஆரூர் பாஸ்கர்
விலை: ₹330
வெளியீடு: எழுத்து பிரசுரம்

ஆன்லைனில் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இந்தக் கட்டுரையின் சுட்டி Link

Sunday, April 2, 2023

வனநாயகன் குறித்து-28 (இகோ-டெரரிசத்தையெல்லாம் தொட்டிருக்கிறார்)

அமெரிக்க வாழ் மருத்துவர் மோகன் அவர்களுடைய வாசிப்பனுபவம். 

வணக்கம், தங்களுடைய வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசித்தேன். இரசித்தேன். சைபர் செக்கியூரிட்டி, இன்டெர்நெட், இகோ-டெரரிசத்தையெல்லாம் (Eco-terrorism) தொட்டு எழுதியது சிறப்பு. வாழ்த்துகள் !! 


(மருத்துவர் படத்தில் வலதுபுறத்தில் இரண்டாவதாக நிற்கிறார். நன்றி !)


*நாவல்*      -வனநாயகன்.       மலேசியநாட்கள்

*ஆசிரியர்* -   ஆரூர்பாஸ்கர் 
*பதிப்பகம்*  - கிழக்குப்பதிப்பகம். 
*விலை*   -ரூ. 275.

புத்தகத்தை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/