Showing posts with label ‬ ‪#‎ஆரூர்பாஸ்கர். Show all posts
Showing posts with label ‬ ‪#‎ஆரூர்பாஸ்கர். Show all posts

Tuesday, June 2, 2020

நீங்கள் கவிதை எழுதுபவரா !?

எழுத்தாளர் அரசன் ஊரில் இருந்து ஒரு கவிதை புத்தகத்தை கொடுத்தனுப்பி இருந்தார். "காதல் தின்றவன்" எனும் தலைப்பிட்ட அந்தக் கவிதைப் புத்தகத்தை சி.கருணாகரசு எனும் அன்பர் எழுதியிருந்தார்.

பூக்களை விற்பவள்,
கூடை நிறைய சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை..

****
நம் பெயரை ஒருசேர
எழுதித் தந்தேன்
காதலுக்கு முகவரியாய் !

என்பது மாதிரியான விடலைக் கவிதைகளை அழகான வண்ணப்
படங்களுடன் அச்சிட்டிருந்தார்கள்.

இதுபோல கவிதைகளை வாசித்தேன், எழுதினேன் என பொதுவில் சொல்லவே பலர் கூச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

ஏனென்றால், இன்றைய தேதியில் கவிதை எழுதுவது என்பது தேசதுரோகம் போன்றொரு பிம்பத்தை அறிவார்ந்த சமூகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அப்படியே யாராவது தப்பித் தவறி கவிதை எழுத நேர்ந்தாலும் அந்தக் கவிதையில் அது இல்லை இது இல்லை என கேலியோடு ஒதுக்கும் மனப்பான்மையே இன்று இருக்கிறது.  

பள்ளியில் இருக்கும் வரை நமது மொழிப்பாடத்தில் கவிதை குறித்தோ கவிதை எழுதுவது குறித்தோ முறையான அறிமுகங்களோ , பயிற்சிகளோ இருந்ததாக நினைவில்லை (மரபில் செய்யுள் எழுதுவது என்பது வேறு). அப்படி இருந்தும் கூட நம்மில் பல சிறந்த கவிஞர்களும், பாடலாசிரியர்களும் உருவாகி வந்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யப்படவேண்டிய விசயமே. 

உண்மையில் ஒரு குறிப்பிட்ட வயதில் கவிதை எழுவது என்பது மிகவும் இயற்கையானது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் தங்கள் உணர்ச்சிகளை கவிதையாக எழுதுவது ஆரோக்கியமானதும் கூட.பல மேலை நாடுகளில் கவிதையின் ஆற்றலை உணர்ந்திருப்பதால் அவர்கள் மிகச்சிறு வயதிலேயே கவிதை எழுதுவதை உற்சாகப்படுத்துகிறார்கள். பிடித்த கவிதையை  மீண்டும் மீண்டும் வாசிப்பது இல்லை மனனம் செய்து இசையோடு வாய்விட்டு ஒப்புவிப்பது என கவிதையின் சுவையை ஊட்டுகிறார்கள். சிறுவயதில் கவிதையை எழுதுவது, எழுதியதைப் பிறரிடம் பகிர்வதையும் உற்சாகப்படுத்துகிறார்கள்.  அந்த வயதில் பலருக்கு தங்கள் சொந்த கவிதைகளை எங்கிருந்து தொடங்குவது என்றுகூட தெரியாது. அதற்கான பயிற்சியையும் சேர்த்தே மொழி வகுப்பில் சொல்லித் தருகிறார்கள்.

இதுபோல் எழுதப்படும் கவிதைகளுக்கு என்ன மதிப்பு எனும் ஆராய்ச்சியில் 
நாம் இறங்காமல் அவற்றை அந்தந்த இடத்திலேயே நிறுத்தினால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், நம்மூரில் கவிதை எழுதுபவர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளுக்கு இலக்கிய உயரம் கேட்கும் போதுதான் சிக்கலே தொடங்குகிறது. ஒருமுறை பள்ளியில் கவிதை என்றால் என்ன என தமிழாசிரியர் கேட்டபோது, கட்டி உரைப்பது கவிதை, நெஞ்சில் இருப்பது கவிதை என அன்று வகுப்பில் இருந்த 40 பேரும் ஆளுக்கொன்றாக எழுதி வந்திருந்தார்கள் (இப்போதெல்லாம், அப்படிக் கேட்கிறார்களா என்ன ? ).

பொதுவாக கவிதை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.  உணர்ச்சிகளில் பேதம் எதுவுமில்லை.  ஆனால், அதைச் சரியான சொற்களால் 
கடத்துவதில் தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது.  அதில் எதுகை, மோனை, இசை இருக்கவேண்டிய பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
அந்தப் புரிதல் அனைவருக்கும் ஏற்ப்பட்டால் நல்ல கவிதைகள் உருவாகும். 
பலர் பிட் நோட்டிஸ் அடிப்பது போல கவிதைப் புத்தகங்களை அடித்து தூக்கிச் சுமக்கவேண்டிய தேவையும் இருக்காது.

கவிதைகள் நம் வாழ்விற்கு முக்கியம்.  அதற்கு சிறந்த கவிஞர்களை
உருவாக்குவது மிக முக்கியம்.  அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவசியம்.
ஏன், அது இன்றைய அவசரமும் கூட.

Monday, May 25, 2020

தித்திக்கும் வாசிப்பனுபவம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஏப்ரல்-16 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் நேரலை நிகழ்ச்சியில் பேசினேன்.
உரையின் தலைப்பு "தித்திக்கும் வாசிப்பனுபவம்".

இந்தத் தகவல் தொடர்பு காலத்திலும் வாசிப்பு நமக்கு ஏன் அவசியமாகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு பேசினேன்.

பார்த்த அனைவரும்  பயனுள்ள 45 நிமிடங்கள் என்றே சொன்னார்கள். குறிப்பாக, பலர் கேள்வி-பதில் பகுதியைப் விரும்பியதாகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் சொன்னார்கள். நிகழ்வுக்குப் பின் பலர் மின்னஞ்சலும், வாட்ஸ்-அப்-லும் தொடர்பு கொண்டார்கள். கூடவே பல நூறு புதிய நட்பு அழைப்புகள்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் நேரலை ஓரளவு திருப்திகரமாகவே இருந்தது. சில விடுபடல்கள் இருந்தாலும், நான் சொல்லவந்த விசயங்களைச் சொல்லிவிட்டதாக நினைக்கிறேன் . தொடக்கத்தில் சொன்னது போல கருத்துகளை, உணர்வுகளைப் பெரும்பாலும் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு நேரலை என்பது சற்று புது அனுபவமாகவே இருக்கும். ஏன் மேடையில் பேசி பேசிப் பழகியவர்களுக்கே கூட நேரலை என்பது கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும். ஆனால், அதற்காக அச்சப்படத் தேவையில்லை எனும் நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது.

நிகழ்ச்சிக்கு எழுதி வைத்து வரிக்கு வரி வாசிப்பது போல இல்லாமல் முன் தயாரிப்பாக சில முக்கிய விசயங்களை மட்டும் குறிப்பாக எடுத்து வைத்திருந்தேன். அலுவலகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருந்ததால் அதையும் முதல் நாள் இரவு மட்டுமே செய்ய முடிந்தது. முக்கியமாக இந்த சந்திப்பில் என்னைப் பற்றி அதிகம் பேசாமல் வாசிப்பைக் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே சமயத்தில், தனிப்பேச்சு 30 நிமிடங்களைத் தாண்டாமல் முக்கியமாக பார்ப்பவர்களைத் தூங்கவைக்காமல் இருக்க வேண்டும் என்பதிலும் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நானே விதித்துக் கொண்டதால் தான் தமிழ் நூல்கள் பற்றி விரிவாக பேச இயலவில்லை. மற்றபடி வேறொன்றும் இல்லை. அதனால் என்ன, இன்னொரு சந்தர்ப்பத்தில் தமிழ் புத்தக வாசிப்பு அனுபவத்தைப் பற்றி தனியாகவே பேசலாம். அதுபோல, என்னுடைய நட்பு வட்டத்திலும் பல மிகச் சிறந்த ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் தனிதனியாக பதிவுகளோ இல்லை நேரலையோ செய்யவேண்டும். அப்படிச் செய்வதென்றால் நான் முதலில் தமிழ் அறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன் ஐயா அவர்களிடமிருந்துதான் தொடங்கவேண்டும். அவர் பல்லாண்டுகள் ம.பொ.சி அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் போன்ற பல பெருமைகளுக்குரியவர்.

நேரலையில் ஓஷோ எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் அப்போது சட்டென நினைவுக்கு வரவில்லை. நேரலை முடிந்தவுடன் சரியாக நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகம் Emotional Wellness: Transforming Fear, Anger, and Jealousy into Creative Energy. அலைபாயும் மனத்தைப் பக்குவப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒருவர் மட்டும் "நீங்கள் பேசும்போது சேரை மட்டும் கொஞ்சம் ஆட்டாமல் பேசுங்களேன்" என்ற ஆலோசனை சொன்னார். ஒரு தோழி இரண்டு மூன்று புத்தகங்கள் ஒருசேர வாசிப்பதன் சாதக பாதகங்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பி இருந்தார்.

இதைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

முழுமையான உரை இங்கே


Thursday, April 23, 2020

மாயக்குதிரை - எழுத்தாளர் தமிழ்நதி (ஆனந்தவிகடன் சிறந்த சிறுகதைத் தொகுப்பு)

ஒரு பதினைந்து பக்கச் சிறுகதை ஒரு வாசகனைத் தனது கால வாழ்வை, அந்த வாழ்வில் தான் சந்தித்த பல  மனிதர்களை, முக்கியத் தருணங்களைத் திரும்பிப் பார்க்க செய்கிறது என்றால்,  அதைவிட ஒரு சிறந்த சிறுகதைக்கு வேறு என்ன சிறப்பு இருந்துவிட முடியும்.

அந்த வகையில், எழுத்தாளர் தமிழ்நதியின் "மாயக்குதிரை" சிறுகதைத் தொகுப்பில் இன்று "கறுப்பன் என்றோரு பூனைக்குட்டி" சிறுகதையைக் கண்டடைந்தேன்.  அபாராம். அதுபோல, தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு கதை "மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லை".

பொதுவாக, தமிழ்நதியின் எழுத்து அன்பைக் குழைத்து நெஞ்சுக்கு நெருக்கமாய் நின்று உறவாடும் எழுத்து. பெண்களின் மனத்தை, அன்றாடங்களின் யதார்த்தங்களை நுட்பமான மொழியில் கடத்தும் ஆற்றல் கொண்ட உணர்வுப் பூர்வமான எழுத்து. அந்த எழுத்தில்  பல நாட்களுக்குப் பிறகு அவருடைய பார்த்தினியம் நாவலில் கண்ட வானதியை இன்று "கறுப்பனில்.." மனோகரியாகக் கண்டேன்.  

நான் " மாயக்குதிரை"  தொகுப்பில் மேலே சொன்ன இரண்டு கதைகளைத் தேடி கண்டடைந்தது போல நீங்களும் உங்களுக்கான கதைகளைக் தேடிக் கண்டடைய வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பிருந்தால்  "மாயக்குதிரை"  வாசித்துப் பாருங்கள்.

நூல்:  மாயக்குதிரை (சிறுகதைகள்)
நூலாசிரியர்: தமிழ்நதி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 150.00

*************