Tuesday, December 1, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-4

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3  முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக.

குறிப்பாக, இந்த கட்டுரையை வாசித்து தொடர்ந்து வாசித்து போனிலும், மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !!!.  யாராவது ஓருத்தர் சொன்னாலும் இப்படிதான், அதை கண்டுகாதிங்க  .. :)

அப்புறம்,  நாம் இதுவரை நியூ ஆர்லியன்ஸ் நகரைப் பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை. இன்னைக்கு அதப் பத்தி பார்க்கலாம்.

நிறைய எழுத முடியாவிட்டாலும் நியூ ஆர்லியன்ஸ் பற்றி சில முக்கியக் குறிப்புகள் இங்கே. 

  1. நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருக்கும் லூசியானா மாகாணத்தின் பழையப் பெயர் புதிய பிரான்ஸ்.
  2. ஆம், முதலில் லூசியானா  பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு நெப்போலியனால் 1803 இல் லூசியானா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது.
  3. ஆரம்ப காலங்களில் சர்க்கரை மற்றும் பருத்தி இதன் பிரதான பயிராக இருந்தது. அவ்வாறு பயிரடப்பட்டவை நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தின் வழியாக மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டது.
  4. அடிமைகள் வர்த்தகத்திலும் இந்த நகரம் மிக முக்கியஇடம் வகித்துள்ளது.
  5. இருபதாம் நூற்றாண்டிலும் ஓரு வர்த்தக நகராகவே நியூ ஆர்லியன்ஸ் தொடர்ந்தது.
  6. 1960களில் சிவில் உரிமைகள் இயக்கத்திலும் இந்த நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது
  7. நியூ ஆர்லியன்ஸ் தனது தனிப்பட்ட கட்டடக்கலை பாணியால் உலக புகழ் பெற்றது.
  8. jazz இசை பாரம்பரியம் இதன் தனித்தன்மை. அதுபோல கடல் உணவுகள் இங்கே ரொம்ப மவுசு
 ஆற்றின் கரைகளில் அல்லது படுகைகளில் தான் நாகரிகம் தோன்றியது என்பது நீங்கள் அறிந்ததே. அப்படி மிசுசிபி ஆற்றின் கரையில் தோன்றிய நகரம்தான் நியூ ஆர்லியன்ஸ்.
இது அமேரிக்காவில் உள்ள மிகப் பழமையான வரலாற்றுப் பிண்ணனி உள்ள நகரங்களில்  இதுவும் ஓன்று.   குறிப்பா சொல்லனும்னா மிசுசிபி மெக்ஸிக்கோ வளைகுடாவில் கலக்கும் இடத்தில் தான் நியூ ஆர்லியன்ஸ் நகர் இருக்கிறது.  ஆற்றின் போக்கை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.



மிசுசிபி என்பதற்கு "கிரேட் ரிவர்" என பூர்விக குடிகளின் மொழியில் பொருள்படும். நியூ ஆர்லியன்ஸில் எவ்வளவோ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது. நேரமின்மையால்,  நான் ஓரு சில இடங்களை மட்டுமே பார்த்தேன்.  அதில் மிசுசிபிஆற்றுப் பயணம் நான் ரசித்த ஓன்று. அதைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

தற்போது அமேரிக்காவில் நீராவியால் இயங்கி புழக்கத்தில் உள்ள ஓரு சில படகுகளில் இதுவும் ஓன்று. இதன் மொத்த பயண நேரம் 2 மணி நேரங்கள். 





பயணத்தின் போது, நியூ ஆர்லியன்ஸ நகர வரலாறு, ஆற்றின் ஓரத்தில் இருக்கும் தொழிற்ச் சாலைகள், மாளிகைகள், கட்டிடங்கள் அதன் புராதான சிறப்புகள் என்றபடி நீள்கிறது. அந்த 2 மணி நேரங்கள் போனது தெரியவில்லை.

மரங்கள் மற்ற பிற உற்பத்தி பொருட்களும் ஆற்றின் ஓரங்களில் இருந்து பார்ஜ் என்ற சிறிய படகுகள் மூழமாக கடற்கரைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்து செல்வது அழகாக இருக்கிறது.

அங்கு நின்று கொண்டிருந்த ஓரு அமேரிக்கப் போர் கப்பலைக்  'கிளுக்'கினேன்.




அது மட்டுமில்லாம, லைவ் JAZZ இசையும் படகில் இசைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அங்கேயே உணவும் கூட சாப்பிடலாம்.

ஓரு காலத்தில்  கொடி கட்டி பறந்த இந்த மாதிரியான நீராவி கப்பல்கள் மற்றும் படகுகள் இப்போது ஓரு காட்சிப் பொருள்தான் என்பதே நிதர்சம். பழையன கழிதலும்...

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் இல்லை ஈடுபாடு (?) இருந்தா  அடுத்த பதிவை படிக்க தவற விட்டுடாதீங்க..    ஆனால், பேய் படம் பார்பதற்கு பயப்படுவரா இருந்தா?  எதுக்கும் pls wait.. :)

பயணங்கள் முடிவதில்லை...

படங்கள் நன்றி :
http://www.steamboatnatchez.com

Sunday, November 22, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-3

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் இரண்டாம் பகுதியில், நியூ ஆர்லியன்ஸை 2005ல் தாக்கிய கத்ரீனா சூறாவளி அதில் மக்கள் பட்ட அவதி குறித்து பார்த்தோம். அதை வாசிக்கத் தவறியவர்கள்  இங்கே வாசிக்கலாம்.

அந்த இக்கட்டான சூழ்நிலையை  கட்டுப்படுத்த யாரை  ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். நியூ ஆர்லியன்ஸ் அனுப்பினார் தெரியுமா ? எனக் கேட்டிருந்தேன்.

அப்படி அனுப்பட்டவர் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் "ரசல் எல் ஹானோரெ" (Russel L. Honoré). இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு பிறந்தவர் ஆம். 1947ல் பிறந்தவர். அவரோட படம் கீழே.


இவர் அமேரிக்க ராணுவத்தில் மிகவும் அனுபவமுள்ளவர் மற்றும் பல உயர்ந்த பதவிகளில் இருந்தவர்.  தென் கொரியாவில் வெள்ள நிவாரணப் பணிகளில் இவருக்கு இருந்த அனுபவத்தாலும், இவருடைய தலைமைத்துவ  பண்புகளாலும் இந்த பணிக்காக  தேர்வு செய்யப்பட்டார்.பதவி ஏற்றபின் புயல்  மற்றும் வெள்ள நிவாரணத்துக்காக ஏறத்தாழ 58,000 தேசிய பாதுகாப்புப் படையினருடன் நியூ ஆர்லியன்ஸ் வந்து இறங்கினார்.


தேவையான படை பலம் இருந்தாலும் இவருக்கு முன்னால் மிகப் பெரிய சவால் ஓன்று இருந்தது.  அது ஏழை மக்களை உள்ளூர்,மாநில, மத்திய அரசாங்கங்கள் கைவிட்டுவிட்டன, அவர்கள் உதாசினப் படுத்தப்படுகிறார்கள் என்பது.

அந்த பிம்பத்தை உடைத்தெடுத்து அந்த மக்களை  அரவணைத்து, நகரையும் இழந்த நற்ப்பெயரையும் மீட்டெடுக்க வேண்டியது என்பது மிகவும் கடினமானதோரு இலக்கே. அந்த வேலையை எப்படி கச்சிதமாக முடித்தார் என்பதே இவரை மிகச்சிறந்த கதாநாயகனாகவும், உயரிய வழி காட்டியாகவும் இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது.

இவருடைய வெளிப்படையான, நம்பகப்பூர்வமான, அதிரடி நடவடிக்கைகள் அந்த இக்கட்டான சூழ்நிலையை  முற்றிலும் மாற்றியது. மிகச்சிறப்பாக அந்த  பணியை தனது குழுவினருடன் செய்து முடித்தார். ஓரு நல்ல லீடருக்கு இதை தாண்டி வேறேன்ன பெருமை வேணும் ? 




                                                           (ஜார்ஜ் புஷ் உடன்)

உதாரணமாக, ஓருநாள் துப்பாக்கியை உயர்த்தி பிடித்தபடி தெருவில் நின்ற சிப்பாய்களை அதட்டி,  "நாம் இங்கே போருக்கு வரவில்லை, மக்களை காப்பாற்ற வந்திருக்கிறோம்". என தடித்த குரலில் இவர் ஆணையிடும் ஓரு காட்சி டி.வியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது அவருடைய வெளிப்படையான தன்மைக்கு ஓரு நல்ல சான்று.


தன்னுடைய பணிக்காக பல உயரிய விருதகளையும் பெற்றுள்ளார். அதில் குறிப்பிடத் தகுந்தது Key to the City Award to New Orleans.

ஓய்வு பெற்றபின் தலைமைத்துவ பண்புகள், ஊக்கமூட்டும் உரைகள் அல்லது motivational speech, தன்முனைப்பு தொடர்பான உரைகளை  இவர் வழங்கி வருகிறார்.

நான் நியூ ஆர்லியன்ஸில் கலந்து கொண்ட கருத்தரங்கில் இவர்தான் சிறப்புரை ஆற்றினார். சுமார் 30 நிமிடங்கள் "21ம் நூற்றாண்டில் தலைமைத்துவ பண்புகளின் தயார்நிலை" (The New Normal- Leadership and Preparedness in 21st Century)  எனும் தலைப்பில் பேசியவர் தனது பேச்சால் ஓரு அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதிலிருந்து சில துளிகள்.

1. தொழில்நுட்பம் உலகின் கடைகோடி ஏழைக்கும் சேரக் கூடியதாக இருக்க வேணும்
2. சாத்தியமற்றதை சாத்தியப்படுத்த தொழில்நுட்பத்தை நம்புங்கள்
3. ஆக்கப்பூர்வமான சிந்தனையின் அவசியத்தையும், ஜார்ஜ் வாஷிங்டனையும் மேற்கோள் காட்டினார். 

கான்பிரன்ஸில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றமைக்காக தனது LEADERSHIP - In the New Normal என்ற புத்தகத்தை  எனக்கு பரிசாக தந்த போது எடுத்த படம்.

கழுத்துல எதுக்கோ செயின் போட்ட மாதிரி இருக்கே? ன்னு நீங்க கேக்குறது, எனக்கு காதல விழவே இல்லயே  !!! :)


முதல் பக்கத்தில் எனது  பெயரை எழுதி ஆட்டோகிராப் போட்டார்.



ஆட்டோகிராப் போட்டுட்டு ஓரு ஜோக்க சொல்லிட்டு எப்படி அட்டகாசமா சிரிக்கிறார் பாருங்க. அது என்ன ஜோக்குன்னு தெரிஞ்சுக்க அடுத்தவாரம் வரை வெயிட் பண்ணுவீங்க தானே ? :)

அவரைப் பற்றி மேலும் தகவல் அறிய:
https://en.wikipedia.org/wiki/Russel_L._Honor%C3%A9

பயணங்கள் முடிவதில்லை...

நன்றி:  GOOGLE Images

Saturday, November 14, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-2

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் முதல் பகுதியில் நியூ ஆர்லியன்ஸை 2005ல் தாக்கிய கத்ரீனா சூறாவளி பற்றி கோடிட்டிருந்தேன். அதை வாசிக்கத் தவறியவர்கள்  இங்கே வாசிக்கலாம்.

முன்பே சொன்னது போல , அந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

அமேரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு. உலகில் சர்வ வல்லமையும் மாட்சிமையையும் பொருந்திய நாடு. உலகின் ஓரே போலீஸ்காரன். தொழில்நுட்பத்திலும், படை பலத்திலும் தாதா என்றேல்லாம் கொண்டாடப்படும் நாடு  என்ற வெளித் தோற்றத்தை தகர்க்தேறியச்
செய்தது இந்த கத்ரீனா சூறாவளி எனலாம்.




அப்படி என்னதான் நடந்தது? , இயற்கை சீற்றங்கள் என்பது இயல்புதானே என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது என்னவோ உண்மைதான்.  இயற்கை இது ஏழை நாடு, பணக்கார நாடு என்று பார்ப்பதில்லை. 

ஆனால் அப்படி எதேனும் இயற்கை சீற்றங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்ட நாடு அல்லது சமூகம் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. நிகழ்வுக்கு பின் அவர்களின் மீட்பு நடவடிக்கைகளின் வேகம் மற்றும் மக்களை காப்பாற்று திறன் போன்றவை அதி முக்கியம். ஆனால்,  துரதிஷ்ட வசமாக அமேரிக்க தேசம் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் கத்ரீனா விஷயத்தில் மிக மோசமான விமர்சனத்துக்கு உள்ளானது.

கத்ரீனா சூறாவளி சம்பந்தமாக அமேரிக்க அரசாங்கம் உலக அரங்கில் அவ்வாறு விமர்சிக்கப்பட்ட முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

Mismanagement எனப்படும் தவறான நிர்வாகம்-  1) சூறாவளிக்கு மக்களையும் நகரங்களையும் சரிவர தயார்படுத்தாதது. 2) சூறாவளிக்கு பின் நிவாரணப் பணிகளில் சுணக்கம் காட்டியது.

ஒரு பருவ மழைக்கே தாங்காமல்  நீரில் மூழ்கும் தமிழக நகரங்களை இங்கே ஓப்பிடாதீர்கள்.
கத்ரீனா சூறாவளி அதையும் தாண்டி, அது செய்த கோரதாண்டவத்தை பார்க்கலாமா.

பல மாநிலங்களைத் தாக்கிய இந்த சூறாவளி வகை ஐந்தைச் (category-5) சார்ந்தது, அதாவது மழை மற்றும் காற்றின் வேகம் 251 km/h. கத்ரீனா போகும் வழியேங்கும் வீடுகள், தொழிற்சாலைகள்,கட்டிடங்கள் என அனைத்தையும் பெயர்த்து எறிந்து எங்கும் வெள்ளக்காடக்கியது. குறைந்தது 1,245 பேர், சூறாவளி மற்றும் அடுத்தடுத்த வந்த வெள்ளத்தால் இறந்தனர்.

அட்லாண்டிக் கடலில் உருவான கத்ரீனவின் பாதையை இங்கே பாருங்கள்.




உதாரணத்திற்கு அடித்த காற்றில் பல வீட்டின் கூரைகள் ஆயிரம் அடிகள் கூட பறந்ததாம், உயரமான கட்டிடங்களின் மாடியில் இருந்த படுக்கைகள் மற்றும் மரச்சாமான்கள் ஐன்னல் வழியாக தூக்கிவீசப்பட்டதாம்.

முக்கியமாக நியூ ஆர்லியன்ஸ் நகரின் எண்பது சதவீதம் (80%) வெள்ளம் புகுந்தது மூழ்கியது.   நகரின் சில முக்கியப் பகுதிகளில் 20 அடி நீரில் மூழ்கியது. இதில் ஏறத்தால 1 லட்சம் பேர் நகரின் வெள்ளத்தில் சிக்கினர்.

எல்லாவற்றிக்கும் மேலாக நகரின் வெள்ளத் தடுப்பு அணைகள் உடைந்து நகரை மேலும் சின்னாபின்னமாக்கியது.  இப்படி அடி மேல் அடி வாங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நியூ ஆர்லியன்ஸ் மக்களின் கதிதான் என்ன?

பலர் தங்கள் வீட்டுக்கு கூரைகளில் ஏறி நின்றுக் கொண்டு உயிர் தப்பினர். அப்படி உயிர் தப்பியவர்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், குடிநீர், உணவு என எந்த உதவியும் இன்றி பல நாட்கள் தவித்தனர். இறந்த உடல்கள் நீரில் மிதந்தன. இதை எல்லாம் ஏற்று செயல்படக்கூடிய FEMA எனும் மத்திய அவசரகால நிர்வாக அமைப்பு இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செயய இயலாமல் திணறியது.


 FEMAதான் திணறியதே தவிர அமெரிக்காவில் இருக்கக் கூடிய தனியார் தொலைக்காட்சிகள் ஹெலிகாப்டர் மூழம் இந்த அவலக்காட்சிகளை படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக்கியது.




அன்றய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். அப்போதைய அமெரிக்க அரசாங்கத்துக்கு இது மிகப் பெரிய நெருக்கடி, அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டிருந்தாலும் ஏதாவது செய்து நிலைமையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர நியூ ஆர்லியன்ஸில் வெள்ளத்தில் சிக்கிய பலர் சிறுபான்மை கறுப்பர்கள், ஜனாதிபதி ஓரு வெள்ளையர். கேட்க வேணுமா?



நிலைமையை கட்டுபடுத்த யாரை  நியூ ஆர்லியன்ஸ் அனுப்பினார் தெரியுமா ? அந்த ஓரு முடிவே அவரையும் மக்களையும் இக்கட்டில் இருந்து காப்பாற்றியது என்று தெரியுமா?

அவரைப் பற்றியும்,  நான்  அவரை நியூ ஆர்லியன்ஸில் சந்தித்து, உரையாடி புகைப்படம் எடுத்த நிகழ்வு பற்றியும் விரைவில் பேசலாம்.

பயணங்கள் முடிவதில்லை...

நன்றி:  GOOGLE Images

Sunday, November 8, 2015

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ?

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ? மேலே படிங்க..

நமது அன்றாட வாழ்வில் எவ்வளவோ நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் சாதாரணமாக கடந்து போகிறோம்.

ஆனால்  எதேனும் ஓரு கருத்தோ அல்லது நிகழ்வோ மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு.  நாம மனசு குறு குறுன்னு இருக்குதுன்னு சொல்லுவோமில்லயா அதுமாதிரி. ஆங்கிலத்தில் urgeன்னு சொல்வது போன்ற  அந்த உள்ளவெறியானது (?) குறு நாவலாகவோ அல்லது நாவலாகவோ கூட வெளிவரும்.

அப்படி நாவல் எழுத நினைப்பவர்களை உற்சாகபடுத்தவும், ஊக்குவிக்கவும்
ஓவ்வோரு நவம்பர் மாதமும் தேசிய நாவல் எழுதும் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலத்தில் National Novel Writing Month. சுருக்கமாக NaNoWriMo -"நா-நோ-ரை-மோ" என்கிறார்கள் ( இப்ப புரிஞ்சுதா? ).  அதே பெயரில் உள்ள nanowrimo.org எனும் தளம்  வழியாக இது சாத்தியமாகிறது. இதன் முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதுதான்.

இதில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் கடினமில்லை.
  • இதற்கேன உள்ள பிரத்தியோக தளத்தில் (http://nanowrimo.org/) பதிவு செய்தபின்,  உங்கள் நாவலை எழுதத் தொடங்குங்கள்.

  • பின்பு அன்றைய நாளில் எழுதிய விவரங்களை அவர்களின் வலை தளத்தில் பதிவு செய்து விடுங்கள். 

  • இப்படி மாத இறுதிக்குள் நீங்கள் 50,000 வார்த்தைகளாவது எழுதியிருக்க வேண்டும். இந்த படைப்புகளில் இருந்து பரிசுக்குரிய நாவலைத் தேர்ந்தேடுக்கிறார்கள்.

பின் குறிப்பு:

இந்த தளம் நீங்கள் எழுதும் நாவலின் தரத்தை விட நீளத்தில் கவனம் செலுத்துகிறது. முன்பே சொன்னது போல முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதாக இருக்கிறது.

அவர்களின்  கணக்குப்படி  ஆசிரியர் எழுதி முடித்தபின் பின்பு விருப்பப்படி நாவலை திருத்தி தரத்தை உயர்த்தலாம் என்கிறார்கள்.  ஏறத்தால இது ஓரு Draft காப்பி எழுதுறது போல.

இது ஓரு சமூக ஊடகம் என்பதால் கலந்து கொள்ளும் அனைவரும் தங்கள் சமீபத்திய நிலையை அல்லது Statusஐ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மத்தவங்க எழுதுறத பாத்து நீங்களும் ஆர்வமாக போட்டி போட்டு எழுதுவீங்க தானே ?

அப்புறம், இன்று நேற்றல்ல கடந்த பதினாறு ஆண்டுகளாக  நாவல் எழுதும் மாதம் நடைபெற்று வருகிறது.   2010ல் நடந்த நிகழ்வு மூலம் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 200,000 பேர், மொத்தம் எழுதிய சொற்கள்   பில்லியன் 2.8. அடேயப்பா..

தமிழ் நாவல்களும் இதில் சாத்தியமான்னு தெரியல. ஆனால், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சுஜாதா குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த சமயத்தில் இது மாதிரி ஓரு நாவல் மற்றும் சிறுகதை எழுதும் போட்டி நடத்தியது நினைவுக்கு வருகிறது.

பொறுப்பு துறப்பு:

கசலீனா... அப்படின்னு சமீபத்தில் வந்த ரஜினிபட துள்ளல் பாட்டு மாதிரி,  'நா-நோ-ரை-மோ ' ன்னா ஏதோ புதுப்பட பாடல்ன்னு நீங்க நினைச்சிருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லங்க..

Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...

Monday, October 19, 2015

புதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக

அக்டோபர் 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை
வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015,  நான்காம் ஆண்டுத் திருவிழா இனிதே முடிந்தது. என்னைப்போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு நேரடி ஓளிபரப்பு வழங்கியது கூடுதல் மகிழ்ச்சி.  வாழ்த்துக்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை எனும் மனக்குறையைப் போக்கும் வகையில், கலந்துக் கொண்ட அனைவரும் சிலாகித்து எழுதிய பல பதிவுகளையும் பார்த்தேன்.

நம்ம வீட்ல ஓரு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிணாலே நாம
ஆடிப் போயிடுறோம். இது போல நிகழ்ச்சியை ஓருங்கிணைக்கப் பல கைகள் வேணும். நா.முத்துநிலவன், வலைச்சித்தர் மற்றும் விழாக் குழுவினர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

நிகழ்ச்சியில் எஸ்.ராவின் சிறப்புரை அருமை.  அவர் பகிர்ந்த எல்லா
தகவல்கள் முற்றிலும் உண்மை.  அவருடைய பல கருத்துகள்
நம் போன்ற பதிவர்களின்  மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

அவர் உரையிலிருந்து சில துளிகள்:


பொதுவாக பதிவர்கள் பெரும்பாலும் சினிமா தகவல்களில்
கவனம் செலுத்துகிறார்கள். ஆனால்  அதைத் தாண்டி
ஆய்வுக்கட்டுரைகள், தமிழர் பண்பாடு, ஓவியம், சிற்பக்கலை, வரலாறு,
கட்டிடக்கலை  போன்ற துறைசார் தகவல்களையும் பகிர வேண்டினார்.
இதுல பிரச்சனை என்னன்னா Readership கம்மி என்பதுதான் உண்மை.

பதிவர்கள் தங்கள் பதிவை தனித்துவமாக எழுதுவதின் சிறப்பை எடுத்துரைத்தார். அதுபோல புதிய சிந்தனையின் முக்கியத்துவத்தை ஓரு சாப்ளின் கதை மூழம் அழகாக  விளக்கினார்.

நமது மரபுசார்  அறிவை புரிந்து பகிர்வதின் முக்கியத்துவத்தையும்
எடுத்துரைத்தார். நம்மில் எத்தனை பதிவுகள் இதை ஓட்டியது எனத்தெரியவில்லை. பதிவர்கள் கையேடு இந்த குறைகளை களையும் என நம்புகிறேன்.

புகழ் பெற்ற  புத்தகங்களுக்கே தமிழில் விமர்சனங்கள்
இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.  இது நிதர்சனம். பதிவர்கள் இதை செய்வது கடினமல்ல என்றே நான் நினைக்கிறேன்.

குழந்தைகள் இலக்கியங்கள் அவர்களுக்கான கதைகள் மற்றும்
அறிவுசார்ந்த தகவல்கள் தமிழில் இல்லை என்ற குறையை
களைய முயற்சிக்க சில வழிமுறைகளையும் பகிர்ந்தார்.பதிவர்கள் இதையும்  கவனிங்க.

அதுபோல தன் பேச்சினுடே அறிவு திருட்டை கண்டித்தார். இதைப் படிக்கும் பதிவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஓன்று.  Courtesy அல்லது நன்றி-ன்னு நிஜ படைப்பாளி பெயர போடுங்கப்பா.

தன் வலைத்தளத்தைச் சுமார் 6 ஆயிரம் பேர் தினமும் வாசிப்பதாகவும், இதுவரை 87 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது எனும் கூடுதல் தகவலையும்  பகிர்ந்தார். வாழ்த்துக்கள் சார்.

இறுதியில் பதிவர்களின் இன்றைய மனநிலையை தெளிவாகச் சொன்னார். நான் ரொம்ப ரசித்தது இது.

1.  தனக்கென வாசகர் வட்டமோ, அங்கீகாரமோ இல்லாதது அல்லது உருவாகாதது.  - இதைப் பதிவர்கள் தனது தனித்துவமாக எழுத்தின் வழியாக வெற்றிகாண இயலும் என்றார். 

2. பொருளாதார ரீதியாக எந்த ஓரு அங்கீகாரமும் இல்லாதது.  இந்த சூழ்நிலை வரும் நாட்களில் மாறும் என நம்பிக்கை அளித்தார்.  - காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.

எனக்குத் தெரிந்தே எத்தனையோ பேர் சில வருடங்களில் அல்லது மாதங்களில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள்.

சுய உந்துதல் மற்றும் ஆர்வம் மட்டுமே ஓருவரை பதிவர் உலகத்தில் தாக்குபிடிக்க  வைக்கும் என்பது நிதர்சனம்.

எனவே எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நம்பிக்'கை' யுடன் தொடர்ந்து எழுதுங்கள் நட்புகளே!.

எஸ்.ரா வின் சிறப்புரை-  https://youtu.be/BSZJx91rFWs (Reference)

Wednesday, September 30, 2015

தமிழர் (பண்)பாடு - வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை

மக்களே, "வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டைக்கு" கடைசி நாள் என்பதால் துரிதமாய் 30 நிமிடங்களில் எழுதியது.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 
அதற்கான உறுதி மொழி:

1) படைப்பு எனது சொந்தப் படைப்பே. 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”. 

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“.


தமிழர் (பண்)பாடு
--

பண்பாடு நம் பண்பாடு
பார் போற்றும்- தமிழ் பண்பாடு,
கொண்டது நம் தென்னாடு

(பண்) பாடு நீ (பண்)பாடு
பாண்டிய,சேர, சோழன்
தாண்டியது நம் பண்பாடு

தாய்மொழி போற்றும்
பண்பாடு
அது தமிழ்ச்சங்கம் வளர்த்த
பண்பாடு

வந்தாரை வாழ வைக்கும்
பண்பாடு - அது
உலகம் அறிந்த கண்கூடு

அன்பில் சிறந்த பண்பாடு
அது பெண்ணை போற்றும்  பண்பாடு
வீரத்தில் சிறந்த பண்பாடு
விருந்தோம்பல் விரும்பும் பண்பாடு

வாழ இலக்கணம் சொன்ன
இணையில்லா பண்பாடு.


பண்பாட்டு எதிரிகளை 
கண்டால், நீ 
விடாது பந்தாடு

எட்டு திக்கும் சென்ற நீர்
எட்டு திக்கும் எட்ட
பாடு,  தமிழ் (பண்)பாடு
என்றும் தமிழர் பண்பாடு. 


-ஆரூர் பாஸ்கர்