Saturday, December 1, 2018

நவம்பர் - தேசிய நாவல் எழுதும் மாதம் (NaNoWriMo)

எழுதுவது என்றில்லாமல் பொதுவாக கலை தொடர்பான விசயங்களுக்கு
படைப்பூக்கம் அவசியம். அதுவும் புனைவு எழுதுபவர்களுக்கு அது கூடுதலாக தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். அந்தப் படைப்பூக்கத்துக்கான தூண்டுகோல் எது ?

பெரும்பாலும் இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டவை அல்ல. அவை அவர்களின் வாழ்வோடு
ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவை. அவர்கள் வாழ்வில் தன்னைப் பாதித்த, தான் கடந்து வந்த வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களை, தனது உணர்ச்சிப் போராட்டத்தை அல்லது தான் சந்தித்தவர்களின் மறக்கமுடியாத அனுபவங்களை எழுத்தில் நாடகமாக நடத்திக் காட்டுவார்கள்.

அப்படி ஒரு கதையை எழுதுவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். சிலருக்கு அது ஒரு பயணம் போல. சிலருக்கு அது ஒரு  குறுக்கெழுத்து விளையாட்டு போல. சிலருக்கு எழுத்து இருட்டில் மெழுகுவர்த்தி போல.
சமயங்களில் எழுத்து சிலருக்கு மனக்காயங்களுக்கு மருந்தாகவும், துயரத்துக்கு வடிகாலாகவும் அமைவது உண்டு. அந்த வகையில் நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

தற்போது கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரிந்துகொண்டிருக்கும்
காட்டுத்தீ அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான காட்டுத்தீ. அந்த நெருப்புக்குத் தான் குடிருந்த வீட்டையும் மொத்த கம்யுனிட்டியையும்
இழந்த எழுத்தாளர் மாட் ஃபோர்ப்ஸ். தனது அனுபவத்தை நாவலாக
எழுதத் தொடங்கியிருக்கிறாராம். வாழ்க்கையின் துன்பத்துக்கு  மிகச்சிறந்த பதில் அதன் அழிவுகளில் இருந்து மீண்டுவருவதே. அவர் அந்தத்  துன்பங்களில் இருந்து மீள்வது என்பது தனக்கு எழுதுவது என்கிறார்.

அந்தவகையில் கடந்த ஆண்டு ஃபிளாரிடா மாநிலத்தை உலுக்கிய இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட எனது அனுபவத்தை ஒரு புனைவாக எழுதிமுடித்திருக்கிறேன். உலகமெங்கிலும் நவம்பரை தேசிய நாவல் எழுதும் மாதமாகக் கொண்டாடுகிறார்கள் (NaNoWriMo). அந்த (30-Nov) நவம்பரில் இதை நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

Thursday, November 22, 2018

கஜா புயலில் கால்நடைகள்

ஆடு, மாடு, நாய், பறவை மட்டுமல்லாமல் பொதுவாகவே விலங்குகளுக்கு புயல்,வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

அவை மனிதர்களைப் போல் இல்லாமல் சூழ்நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து அவற்றை முன்கூட்டியே  உணர்ந்து கொள்கின்றன. குறிப்பாக புயல் சமயங்களில் வானிலையில் ஏற்படும் காற்றழுத்த மாறுபாட்டைத் தெரிந்துகொள்கின்றன. அந்தச் சமயங்களில் அவற்றின் போக்கு வழக்கத்திற்கு மாறாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பறவைகள் வித்தியாசமாக ஒலி எழுப்பியபடி அவசர அவசரமாக கூட்டுக்குத் திரும்பவதையும், நாய், மாடு, பூனைகளின் கண்களில் தோன்றும் ஒருவித மிரட்சியையும் கவனித்திருக்கலாம்.

அப்போது நாய்கள் குட்டிபோட்ட பூனைபோல நிலையில்லாமல் உலாத்திக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில நாய்கள்
பயத்தில் வாலை  உள்நோக்கி சுருட்டி வைத்துக் கொண்டிருக்கும். சில வீட்டில் பாதுகாப்பான இடத்தைத் தேடி பதுங்கும். சில வழக்கத்திற்கு மாறாக நம் கால்களைச் சுற்றி சுற்றி வரும்.

இது நாய்கள் வீட்டில்  ஊளையிட்டால் மரணத்தின் சகுனம் என்பது போல நம்பிக்கை சார்ந்த விசயமில்லை. மாறாக மனித செவி உணர இயலாத தாழ்ஒலிகளை விலங்குகளால் உணரமுடியும் என்பது அறிவியல் உண்மை.
இங்கே அமெரிக்காவின் ஃபிளாரிடாவில் ஹரிக்கேன் சமயங்களில் சுறாமீன்கள் முன்கூட்டியே ஆழ்கடல் பகுதிகளுக்குத் தஞ்சம் புகுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுபோல ஆபத்து சமயங்களில் விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுவதும், வெள்ள சமயங்களில் மேடான இடங்களுக்கு கூட்டமாகத் தப்பித்துச் செல்வதும் இயற்கையான நிகழ்வுகளே.

சமீபத்திய கஜா புயலில் சிக்கி பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துபோனதைப் பார்த்தோம்.  புயலின்போது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டும் நாம் ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கு என்ன
செய்துவிட்டோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இயற்கைப் பேரிடருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துரிதமாகச் செயல்பட்டு  மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினோமா ?  அப்படி அனுப்பியிருந்தால் அதே அளவு கரிசனத்தை நம்முடைய கால்நடைகளுக்கும் காட்டியிருக்க வேண்டாமா ? 2004இல் வந்த சுனாமி போல எந்தவொரு முன்னறிவுப்புமின்றி ஒரு பேரழிவு
வரும்போது விலங்குகளைத் தவிக்கவிட்டு மனிதர்களாகிய நாம் தப்பிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், முன்னெச்சரிக்கையோடு கஜா போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது ?

எல்லா மாவட்டங்களிலும்  இயற்கைப் பேரிடர்களின் போது மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க இடம் இருப்பது போல விலங்குகளுக்கு
இருக்க வேண்டியது அவசியம் தானே. எல்லா மாவட்டங்களிலும்
இல்லாவிட்டாலும் கால்நடைகள் அதிகமுள்ள கடலோர மாவட்டங்களிலாவது செய்திருக்கலாமே. அதிகம் வேண்டாம் புயலின் கண் (cyclone eye) நேரடியாக தாக்கப் போகிற வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் இதுமாதிரியான முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்திருக்கலாமே.

சரி, நாகை மாவட்டத்தின் நன்னம்பிக்கை முனையான கோடியக்கரையில் வன விலங்கு சரணாலயம் என்ற பெயரில் அடைத்து வைத்திருந்த
காட்டுயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கையாக நாம்  என்ன செய்தோம் ?
கடலில் இருந்து தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் அந்தச் சராணாலயத்தில் மான்கள் உள்ளிட்ட பல ஆயிரம் விலங்குகள் வீசிய புயல்காற்றில் சிக்கி தப்பிக்க வழியின்றி திணறியிருக்குமே. அச்சத்தில் துள்ளி ஓடிய அந்த மான்களின் கூக்குரல் மனிதர்களுக்குக் கேட்டிருக்குமா ?  இல்லை அலறியபடி மரத்துக்கு மரம் தாவி ஓடிய குரங்குகளின் அலறல் தான் கேட்டிருக்குமா ?

வாய்ப்பு இல்லை. விலங்குகளிடமிருந்து இந்த பூமியைக் கவர்ந்த மனிதன் அவற்றைப் பல லட்சம் ஆண்டுகளாக அடிமையாக்கி அல்லவா வைத்திருக்கிறான். அடிமைகளுக்கு இந்த உலகில் குரல் இருக்கிறதா என்ன ?

Monday, November 19, 2018

கஜா- அமெரிக்கவாழ் தமிழ்நண்பர்கள்

கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கவாழ் தமிழ்நண்பர்கள் தன்னார்வமாக ஒரு குழுவாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்தக் குழு புயலால் கடும் சேதமடைந்தவர்களுக்கு உதவும்பொருட்டு நிதி உதவி என்பதைத் தாண்டி களப்பணியாளர்களையும், பயனாளிகளையும் ஒருங்கிணைக்கும் பணியையும் அதற்குத் தேவையான தொழிநுட்ப வசதிகளையும் மிகத் துரிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

நிவாரண உதவி தேவைப்படுபவர்களும் அதற்குத் தன்னார்வமாக உதவி செய்ய நினைப்பவர்களும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக்
கொள்ளலாம். களப்பணியாளர்களை ஒருங்கிணைக்கும் குழு 24X7 செயல்படுகிறது.


அவர்களுடைய இணையதளம் - http://www.gajahelp.valaitamil.com/
விழுப்புணர்வு காணோளி-  https://youtu.be/XR4QkEMz4Xc

Sunday, November 18, 2018

கஜாவுக்குப் பிறகு...

கஜா பேரழிவுக்கு பிறகான பாதிப்பு குறித்த செய்திகள் உள்மாவட்டங்களில் இருந்து மெள்ள வரத்தொடங்கியிருக்கின்றன. புயலுக்கு இதுவரை 45க்கு அதிகமானவர்கள் மரணமடைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்கள் ஊரில் இருந்து வந்திருக்கும் நிழற்படங்களையும், வீடியோக்களையும் என்னால் முழுதாகப் பார்க்க முடியவில்லை. புயலின் கோரதாண்டவத்தால் ஊரே சூரையாடப்பட்டு முற்றிலுமாக உருகுலைந்து கிடக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் வீட்டைச் சுற்றி நின்ற முப்பது, நாற்பது வருட மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து அகாலமாக விழுந்துகிடக்கின்றன.  வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கிளைகள் உடைந்து, மரக்கொப்புகள் விழுந்து, பசுந்தலைகள் கொட்டி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.  வீடியோவில் பறவைகளும், அணில்களும், சில் வண்டுகளும் விடாமல்  தொடர்ந்து அலறி ஏதோ நிகழக்கூடாத அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்வது போல போரோலி எழுப்பும் காட்சிகள் வயிற்றைப் பிசையவைக்கின்றன.


தோட்டத்தில் மா,பலா, வாழை, தென்னை, பாக்கு, தேக்கு, கொய்யா, வேம்பு, நார்த்தை, எழுமிச்சை என பலநூறு மரங்கள் மல்லாந்து தலைசாய்த்து கிடக்கிறன. பாதிரி, ஒட்டு, பங்கனப்பள்ளி, நீலம் என வகைவகையாக காய்த்துக்கொண்டிருந்த மாமரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் வேரோடு சாய்ந்துகிடக்கின்றன.

அதுபோல செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் என குலைதள்ளிய வாழை மரங்கள் நுனி முறிந்து கிடக்கின்றன.
பல்லாண்டுகளாக காய்த்துக்கொண்டிருந்த பலா மரங்கள் சுழல்காற்றில் சிக்கி தலைதிருகி போட்டதுபோல மரணித்துக் கிடக்கின்றன. மரங்களோடு சேர்ந்து மின்கம்பங்களும் விழுந்து கம்பிகள்  அறுந்து கொடிபோல சுற்றிக் கிடைக்கின்றன. அகன்ற கிளைகள் கொண்ட முதிர்ந்த தேக்கு மரங்கள் வேரோடு முறிந்து பாதையில் விழுந்து கிடப்பதால் தோட்டத்தின் உள்ளே முன்னேறி செல்லமுடியாத நிலை.

இப்படி ஊழித் தாண்டவமாமாடிச் சென்றிருக்கும் கஜா இது போல எத்தனையோ லட்ச கிராமமக்களின் வாழ்வாதாரத்தை பறித்துச் சென்றிருக்கிறது.  மண், மரம், பறவை, அணில் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கிராமத்து மனிதர்களின் உயிர்குலையைச் சுத்தமாக அறுத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

தடைபட்டுள்ள மின்சாரம் வந்து, தகவல்தொடர்பு கிடைத்து அவர்களுடைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப கண்டிப்பாக சில மாதங்கள் ஆகலாம்.  அவர்கள் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறார்கள். கஜா விட்டுச் சென்றுள்ள இந்த வடு இனி வரும் பல்லாண்டுகளுக்கு அவர்களின்
நினைவை விட்டு அகலப் போவதில்லை.  நேற்றுவரை மற்றவர்களுக்கு உணவளித்த அந்த வெள்ளந்தி மனிதர்கள் இன்று உதவிக்கு நிவாரண முகாம்களில் கையெந்தும் நிலை.

புயலுக்குப் பின்  சாலைகளில் கிடக்கும் மரங்களை அகற்றும் வேலையை அரசாங்கம் உடனடியாக செய்து தருமே தவிர விளைநிலங்களையும், மரங்களையும், கால்நடைகளையும், வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிற்பவர்களுக்கு  அரசு நிவாரணம் உடனே கிடைத்துவிடும் என நான் நம்பவில்லை.

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற
அத்யாவசியங்கள் உடனடியாக தேவை. பல இடங்களின் விவசாயிகளின்
வீடுகளைச் சுத்தப்படுத்தவும் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தக் கூட ஆட்கள் கிடைக்காது என்பதே உண்மை அப்படியே கிடைத்தாலும் செலவு செய்யமுடியாத சூழல். அதனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நமது உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்பது நமது கடமையும் கூட.


படங்கள். நன்றி - இணையம். (கடைசி படம்)

Monday, November 12, 2018

மறப்போம்... மன்னிப்போம்

துபாயிலிருந்து கிளம்பி நீயூயார்க் விமானநிலையத்தில்  வந்து
இறங்கி பெட்டியைத் தேடினால்  அதிர்ச்சி. செக்கின் செய்த இரண்டு பெட்டிகளில் ஒன்று வந்து சேரவில்லை. விமானத்தில் ஏற்றிய கடைசி பெட்டி 
வெளியே வரும் வரை பொறுத்து பொறுத்துப் பார்த்து காத்திருந்துதான் மிச்சம். கடைசிவரை பெட்டி  வரவில்லை. கூடவே அகோர பசி வேறு. விதியை  நொந்தபடி அங்கே இங்கே என விசாரித்து  ஒருவழியாக காணவில்லை என வாடிக்கையாளர் சேவையில் புகார் தந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வரும்போது நள்ளிரவு 1 மணி.  24 மணி நேரப்பயணக் களைப்பு.
அசதியில் படுக்கையில் விழுந்து காலையில் அலுவலகத்துக்கு கிளம்பலாம் என எழுந்தால் அடுத்த அதிர்ச்சி. பல் துலக்க, சவரம் செய்ய,குளிக்க எனத்
தேவையான எல்லாம் காணாமல் போன பெட்டியில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி ? வீட்டில் இருந்த பழைய பேஸ்டை தேடி எடுத்து பிதுக்கி துவம்சம் செய்து பல் துலக்கினேன். விடுமுறைக்கு பின் அலுவலகம் போவது பெருங்கொடுமை அதுவும் இரண்டுநாள் தாடியோடு போவது ?
காலையில் திறந்தும் திறக்காமலும் இருந்த கடையில் முதல் ஆளாக
நின்று 'அத்தியாவசிய'ங்களை (essentails) வாங்கி ஒருவழியாக வேலைக்குப் போய் சேர்ந்தேன்.

பெட்டி காணாமல் போன மூன்றாவது நாள் கண்டுபிடித்துவிட்டோம்
என வீட்டுக்கு பெட்டியை அனுப்பியிருந்தார்கள். பெட்டியில் இருந்த
பொருட்களை சரிபார்த்த கையோடு 'அத்தியாவசியம்' என முதல்நாள்
வாங்கிய ரசீதைத் தேடி எடுத்தேன்.  உங்களுடைய கவனக்குறைவால் தான் இதெல்லாம் வாங்க நேரிட்டது, கூடவே மனஉலைச்சல் வேறு  எனச் சொல்லி
நஷ்டஈடு கேட்டு அந்த ரசீதை விமானசேவை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன்.

எந்தக் கேள்வியும் கேட்காமல் அதற்கான முழுத்தொகையையும் காசோலையாக அனுப்பியவர்கள் கூடவே ஒரு வருத்தக்கடிதத்தையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். போனால் போகிறார்கள். மறப்போம்.  மன்னிப்போம். :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Sunday, November 11, 2018

மலையாள மேலாளர் வாக்கு

பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு மலையாளி எனக்கு மேலாளராக இருந்தார். அப்போதே அவருக்கு வயது 60 இருக்கும். அடுத்தவர்களை சரியாக எடைபோட்டு வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். அலுவலகத்தில் ஆங்கிலத்திலும், தமிழிழும் சரளமாக பேசினாலும் அடிக்கடி மலையாள பழமொழிகளை அப்படியே மேற்கோள் காட்டுவார்.

ஒருமுறை அறைக்குப் பேச அழைத்திருந்தார். போயிருந்தேன்.
அப்போது புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒரு பையனின் பெயரைச் சொல்லி, அவனுக்கு என்ன வேலை கொடுக்கலாம் ? என ஆலோசனை கேட்டார். நிலுவையில் இருந்த எல்லா வேலைகளையும் சொன்னேன்.  கடைசியில் இதெல்லாம் சரியா வராது என்றவர், தானாகவே உருப்படாத வேலை ஒன்றைச் சொல்லி அதைக் கொடுக்கலாம் என்றார். "அதை புதிதாக வந்தவரால் செய்யமுடியாதுங்க" என விளக்கியபோது.  "எனக்கு அதுதான் வேணும், அவன் அடிக்கடி கேஃப்டேரியா பக்கம்  தேவையில்லாமல் கடலை போட்டுகிட்டு திரியிரான்" என்றவர் சிரித்தபடி 'பட்டிக்கு முழுவன் தேங்கா கொடுத்தது போல இருக்கனும்' என்றார்.

நான் புரியாமல் தலைசொறிந்த போது, அவர்  சிரித்தபடி "மலையாளத்துல அப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்கப்பா. இட்ஸ் Like a dog  gets a whole coconut. give something which they cannot use.. அதாம்பா தொந்தரவு தற்ர நாய்க்கு முழுத்தேங்காய கொடு. அது நம்மல விட்டு போய் கொஞ்ச நேரத்துக்கு  அத போட்டு உருட்டி திரிஞ்ட்டு வரட்டும் " என அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.

இப்போது சமூக ஊடகங்களில் பேசப்படும் பல விசயங்களைப் பார்க்கும்போது அந்த மலையாள மேனேஜரை தான் நினைத்துக்கொள்கிறேன். :)

Tuesday, October 30, 2018

என் பெயர் லோலோ...

ஒருநாள் மதிய உணவுக்குப்பின் லேசாக கண் அசரும் சமயத்தில் வந்த
அந்தப் போனை பதறியடித்து எடுத்துப் பேசினேன். உடைந்த ஆங்கிலத்தில்
ஒரு பெண் குரல். மெக்சிகன் உணவகத்தில் இருந்து பேசுவதாகச் சொன்னாள்.

நடந்தது இதுதான் . கடந்த வாரம் நான் அங்கே போயிருந்த போது
எனது கிரெடிக்கார்டு ரசீதில் ஒரு சின்னக் குளறுபடி செய்துவிட்டார்கள்.  அதாவது அசலான தொகைக்கு பதிலாக இரண்டு மடங்கு எடுத்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அது ருசியும், தரமும் இல்லாத உணவு.  மாத இறுதியில் அது எப்படியோ எத்தேர்சையாக என் கண்ணில் பட, நல்ல சாப்பாட்டுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு எதற்கு? அநியாயம் என நினைத்து அவர்களை  இரண்டு முறை அழைத்து  புகார் சொல்லியிருந்தேன்.

அதற்காக அழைத்தவள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாள். ' பராவாயில்லை, அடுத்து நடக்கவேண்டியதை சொல்லுங்க'  என்றேன்.
' உங்க கிரெடிக் கார்ட் நம்பரைக் கொடுங்க'  என வாங்கி கொண்டவர்கள், பாக்கியை திரும்ப அனுப்பிவிடுவதாக சொன்னார்கள்.

பிறகு  கொஞ்சம் தயக்கத்தோடு, 'நடந்த தவறுக்கு நீங்களும் ஒரு
காரணம்' என்றாள். நான் குழப்பத்தோடும், கடுப்போடும் 'புரியலயே' என்றேன்.  'உங்க போனுக்கு ரசீதின் நகலை அனுப்பியிருக்கேன், பாருங்க 'என்றாள். பார்த்த பிறகு புரிந்தது. 'டிப்' என்ற இடத்திலும், 'மொத்தத் தொகை' என்ற இரண்டு  இடங்களிலும் '$20' என எழுதியிருக்கிறேன்.

வேறு வழியில்லாமல். ' ஓ.. ஓகே... என வழிந்துவிட்டு , இவ்வளவு நல்லா இங்கிலீஸ் பேசும் உங்க பேரு என்ன ?'  எனக் கேட்டு சமாளித்தேன்.

' தேங்யூ ' என வெட்கப் புன்னகை பூத்தவள். ' லோலோ' என்றாள்.

#கஸ்டமர்_கஷ்டங்கள்