Saturday, September 21, 2019

பெண்களின் "ஐம்பால்" குறித்து (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -6)

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முந்தைய பதிவு (5) இங்கே

ஞாயிறு அன்று நடந்த காலை நிகழ்ச்சிகளில்  இது கடைசி அமர்வாக இருந்தது.

ஆய்வின் தலைப்பு - "தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை" - சரஸ்வதி விஜயகுமார்

இன்று உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒப்பனைக் கலை ஆயகலைகள் அறுபத்து நான்கில் ஒன்று. அதற்கான தடங்களைத் தமிழ் இலக்கியங்களில் தேடுவதே இந்த ஆய்வின் நோக்கம்.

குறிப்பாக மேக்கப் எனும் ஒப்பனை, உடை, நகை அலங்காரக் குறிப்புகளை மேற்கோள் காட்டி பேசிய ஆசிரியர் தொழில் முறையில் ஓர் ஒப்பனைக் கலைஞர்.
நகைகளைப் பற்றி பேசிய அவர் கழுத்தணி,  கையணி, விரலணி,  தோளணி,மார்பணி, இடையணி, காலணி என அன்று புழக்கத்தில் இருந்த பல அணிகலன்களைச் சுட்டிக்காட்டினார். சங்ககால இலக்கியத்தில் குறிப்புகள் இன்றி இன்றைய பயன்பாட்டில் இருக்கும் அணிகலன்கள் குறித்த கேள்விக்கு மங்கலநாண் எனும் தாலி , மூக்குத்தி என்று பதில் சொன்னார்.

அதுபோல தமிழகத்தில் உதட்டில் நகையணிந்து அலங்கரிக்கும் பழக்கம் குறித்த கேள்விக்கு 'இல்லை' என பதில் அளித்தவர், அது சீனர்களின் பழக்கமாக இருக்கலாம் என்றார்.








கூடவே  முகம், கண், நுதல், உதடு, விரல் நகங்கள், உள்ளங்கை (மருதாணி),
கூந்தல் போன்ற ஒப்பனைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்வில்  "ஐம்பால்" எனும் புதிய சொல் எனக்கு அறிமுகமானது. நாம் பள்ளியில் ஆண்பால், பெண்பால், பலர் பால்,ஒன்றன்பால், பலவின் பால் எனப் பால் இலக்கணம் படித்திருக்கலாம். அதற்கும் பெண்களின் கூந்தலுக்கும் என்ன தொடர்பு எனும் தேடுதலில் இறங்கிய போது  "ஐம்பால்"  என்பது ஐந்துவகையான சிகை அலங்காரம்  என்றும். சிலர் "ஐம்பால்" என்பது கூந்தலின் ஐந்து பண்புகளைச் சொல்கிறது என்றும் வாதிடுவது தெரியவந்தது.

உண்மையில் "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை.." என கலைமகளை வேண்டி உருகினாலும் நமது சமூகத்தில் அனைத்து கலைகளுக்கும்  சம அந்தஸ்து இல்லை என்பதே உண்மை.  குறிப்பாக முடி திருத்துவது, ஒப்பனை போன்ற கலைகளுக்கு. இத்தனைக்கும் கூந்தல் எனும் முடி பற்றி  புராணங்களிலும் இலக்கியங்களிலும்  நம்மிடம் பல குறிப்புகள் குவிந்துகிடக்கின்றன.

அன்று பெண்களின் அழகில் கூந்தலுக்கு மிக முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. மயில் தோகை, கருமேகம், அருவி... என்றெல்லாம்
கூந்தல் புலவர்களால் நறுமணம் மிகுந்த மயக்கம் தரும் ஒன்றாக ஆராதிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவு ஏன் கடந்த சில தலைமுறை வரைக் கூட ஆண்கள் கொண்டயிடுவது (குடுமி) நம்மிடம் மிகச் சாதாரணமாக இருந்தது.  அந்த காலத்தில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரைப் பார்த்து  "பாகவதர் மாதிரி முடிவெட்டணும்.." என பலர் திரிந்தது நமக்குத்
தெரிந்த ஒன்றுதான்.

அதுபோல ​பெண்களின் கூந்தலுக்கு இயற்​கையில் மணம் உண்டா? இல்​லையா? எனும் சந்தேகம் பாண்டிய மன்ன்னுக்கு வந்ததாகவும் அதைத் தீர்க்கும் வகையில் சிவனே வந்து கவிதை எழுதி தீர்த்ததாக திருவிளையாடல் படத்தில் ஒரு கதைப் பின்னப்பட்டிருக்கும். அதுபோல மகாபாரதத்தில்
அவமானப்படுத்தப்பட்ட பஞ்சாலி அதற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார் என பல குறிப்புகள் நம்மிடம் இருக்கின்றன.

இந்த ஐம்பால் எனும் சொல்லில் பெண் கூந்தலின்  ஐந்து பண்புகள் அடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அவை 1. கருமை, 2. நெடுமை, 3.மொய்ம்மை (அடர்த்தி), 4.மென்மை, 5.அறன்மை (வெள்ளம் வற்றிய ஆற்று மணலில்  செறிவு படிந்திருப்பது போன்ற தோற்றம்) .

சிலர் , ‘ஐ’ வியப்பு ஆகும் என்பது தொல்காப்பியம் தரும் சூத்திரம். அதனால் ஐம்பால் வியப்புக்குரிய கூந்தல் ஒப்பனை என்றும் சிலர் எடுத்துக்கொள்கிறார்கள்.  இப்படி என்றும்  பெண்களில் கூந்தல் என்றாலே ஐயம் தான் போலிருக்கிறது.

மாதொருபாகன் - One Part Woman

தமிழ் வாசகர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் செய்ய தேவையில்லாத புத்தகம் பெருமாள் முருகனின் மாதொருபாகன்.  இதற்குக் கிடைத்த எதிர்மறை விளம்பரமே  இன்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உதவியிருக்கிறது. 

மாதொருபாகனை பிளாக் கேட் எனும் நியூயார்க் நிறுவனம் One Part Woman (ஒன்பார்ட் உமன்) எனும் பெயரில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறது. 2018 அக்டோபரில் வெளியான இந்தப் புத்தகம் உள்ளூர் அமெரிக்க நூலகம் வழியாக சென்ற வாரம்  கைகளுக்கு கிடைத்தது.  அனிருத்தன் வாசுதேவன் எனும் அன்பர் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

கதையைப் பற்றி தேவைக்கு அதிகமாகவே
பலர் பேசிவிட்டதால் அதற்குள் போகத்தேவையில்லை. ஆனால், மொழிபெயர்ப்பு குறித்து கொஞ்சம் பேசலாம். 

நம்மிடம் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை அது தமிழின் மிகப்பெரிய சாபக்கேடு எனும் கருத்தை எழுத்தாளர் சாருநிவேதிதா பலமுறை தனது கட்டுரைகளில் புலம்பியிருக்கிறார். அதில் ஒரளவு உண்மை இல்லாமலும் இல்லை.

தமிழில் சிந்திப்பவர்கள் ஆங்கிலத்தில் (மற்ற மொழியில்) நேரடியாக எழுதினாலும் அது பெரும்பாலும் ஆங்கில வாசகர்களின் வரவேற்ப்பைப் பெற்றுவிடுவதில்லை. காரணம் மொழிவளம். குறிப்பாக மேற்குலக வாசகர்களைக் கவர அவர்களுக்கு அணுக்கமான மொழிநடையுடன் சரியான சொற்பிரயோகங்களையும் கடைபிடிக்கவேண்டியிருக்கிறது.
(இந்தியாவில் ஆங்கில வாசிப்பு பற்றி தனியாக பேசவேண்டும்)

அந்நிய படைப்புகள் அப்படியே ஒரளவு சரியாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டாலும் கிழக்காசிய எழுத்தாளர்களின் மொழி நடை என்பது வேறாகவே இருக்கிறது.  உண்மையில் அந்த நடையே அவர்களை அசல் படைப்பில் இருந்து வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.  அது
மட்டுமல்லாமல் கிழக்காசிய எழுத்தாளர்கள் மேற்குலக வாசர்களைக் கவர அவர்களுக்கு நல்ல எழுத்துநடை தேவை என்பதைத் தாண்டி கலாச்சாரம், கதைக்களம், சிந்தனை என பல தளங்களில் அவர் தங்களது தனித்துவத்தை நிறுவ வேண்டியிருக்கிறது.

அதனாலேயே உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி மேற்கத்திய வாசகர்களைக் கவரவே எழுதுகிறார் எனும் வகையில் அவருடைய எழுத்து too ‘Western’ எனும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பில் வட்டார வழக்கை கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்று. (பக்கம்-146) 'Mapillai, now we can go out for a while, can't we? ' என்ற வரி  'மாப்ள.. நாம போயிட்டு மெதுவா வரலாமில்ல, உனக்கொன்னும் அவசரமில்லயே' என்பதன் மொழிபெயர்ப்பு. இதில் மாப்ள என்பது வாசகர்களின் ஊகத்திற்கு விடப்படும்.  அதுபோல 'ஆனால், அன்றைக்குபோல மோசமான உறவு என்றும் நடந்ததில்லை'.  என்பது ஆங்கிலத்தில் 'The sex they had that night was the worst they had ever' என்றிருக்கிறது.  இது மேலோட்டமாக சரி எனத் தோன்றினாலும் அமெரிக்க வாசகர்களுக்கு இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.

இப்படி மாதொருபாகனின் மொழிபெயர்ப்பு நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போல இல்லாவிட்டாலும் உறுத்தாத எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.


தலைப்பு:One Part Woman
ஆசிரியர்:Perumal Murugan
பக்கங்கள்: 288
வெளியீடு: Grove Press, Black Cat (October 9, 2018)
ISBN: 0802128807
விலை:$10.87

Friday, September 6, 2019

தொல்காப்பியர் காலத்தில் இருந்த அடிமைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -5)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை 7, ஞாயிற்றுக் கிழமை காலையில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வு

2. ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும் - Dr. Mrs.S.Sridas

ஆய்வின் நோக்கம்-  மேலே குறிப்பிடப்பட்டுள்ள அகழாய்வில் இருந்து பண்டைய தமிழர் நாகரிகத்தை  பொருளாதாரம், சமூகம், அரசியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தல்

தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகம் குறித்து அறிய உதவும் மூன்று
முக்கிய தொல்லியல் களங்கள் குறித்து பேசினார்கள்.

1. ஆதிச்சநல்லூர்- இது தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது.

2. பொருந்தல்-  இது கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள சிறிய ஊர்.

3. கீழடி - மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர்கலாச்சாரத்தை வெளிக்கொணர்கிறது. சிகாகோவில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் மையக்கருத்தே
” கீழடி நம் தாய் மடி”  என்பதாகும்.

விழா அரங்கில் கீழடி தொன்மைக்கு வலு சேர்க்கும் வகையில் பல படிங்களையும், ஆவணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். சில புகைப்படங்கள் இங்கே.

அமர்வில் பகிரப்பட்ட சில தகவல்கள் :

வாணிபத்தை உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் எனப் பிரித்து கி.மு 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.


அப்போதைய முக்கியமான துறைமுகங்கள்- முசிறி, கொற்கை,  பட்டினம் (மாமல்லபுரம்), காவிரிப்பூம்பட்டினம். அவற்றுக்கும் மேலை நாடுகளுக்கும் கடல் வழி இருந்த தொடர்புகள்.

பண்டைய புகழ்பெற்ற வணிக நகரங்கள் - காஞ்சி, கடல்மல்லை, அரிக்கமேடு, தகடூர், செங்கம், கொடுமணல்,மதுரை, அழகன்குளம்.




தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் அடிமைகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது கேள்விப்படாத புதிய தகவலாக இருந்தது. அதற்குச் சங்ககால இலக்கியத்தரவுகளும் இருக்கிறதாம்.

இதற்கு ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவரின் மண்டைஓடு வலுசேர்க்கும் என நினைக்கிறேன்.

அதுபோல  ஆதிச்சநல்லூர், பொருந்தல்
அகழ் ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட மக்கிய நெல்
ஆதாரம் இப்போது இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுபோல மண்பாண்டங்களில் உள்ள பிராமி எழுத்துகள் தமிழின் தொன்மையைக் காட்டுகிறது.







மக்கள் வாழ்விடம் பற்றிய புரிதல்கள்









பொருந்தல் குறித்து..








"தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை " - அடுத்த பதிவில் (6)

ஹரிக்கேன் டோரியன்

ஹரிக்கேன் டோரியனுக்கு பிறகு முகநூல் உள்பெட்டிக்கு வந்து அன்போடு நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நாங்கள் குடும்பத்தோடு நலமாக இருக்கிறோம்.  ஆமாம், இந்த ஆண்டு ஃபிளாரிடா தப்பித்தது.

ஆனால், ஹரிக்கேன் டோரியன் (Dorian) அசுரபலத்தோடு அட்லாண்டிக்கின் பஹாமாஸ் தீவைத் தாக்கி இருக்கிறது. கேட்டகிரி- ஐந்து ( >250 கி.மீ)
வேகத்தோடு கரையைக் கடந்த பேய் காற்று  பலத்த உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலாவை நம்பி இருக்கும் அந்தத் தீவிற்க்கு இது பேரிடியாக இருக்கும். மக்கள் உணவு,குடிநீர் போதிய மருத்துவ வசதி இன்றி தவிக்கிறார்களாம்.

அதிஷ்டவசமாக அங்கிருந்து  ஃபிளாரிடாவுக்குள் நுழையாமல் டோரியன்
கடல்வழியாகவே அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையோர மாநிலங்களை நோக்கி  இப்போது நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஹரிக்கேன் நேரடியாக  ஃபிளாரிடாவுக்குள் சூராவளியாக நுழையா விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை  இருந்தது.
கடற்கரையோரங்களில் புயல்காற்றின் வேகத்தையும் எங்களால் உணர

முடிந்தது.  முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்ததால் பெரிய குழப்பமில்லாமல் இருந்தது.

மழையில் நனைந்தபடியே திங்கள் கிழமை குடும்பத்தோடு கடற்கரைக்கு போய் பார்த்தோம்.  இதுவரைப் பார்த்திராத ஆக்ரோசமான சீற்றத்தோடு கடல் அலைகள் பொங்கி உயர்ந்து எழுந்தன.  வெள்ளை வெளேரேன உயர்ந்த அந்த அலைகளின் உயரம் பதினைந்து இருபது அடிக்கு குறைவில்லாமல் இருக்கும்.

புயலால் மின்சாரம் இழந்த 1 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிக்கு கடந்த  இரண்டு நாட்களாக
தொழில்நுட்ப உதவி செய்துகொண்டிருந்தேன். அடுத்த  ஹரிக்கேன் சீசன் வரும் வரை நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறேன். இங்கு ஹரிக்கேன் சீசன் ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை.

படங்கள்- நன்றி இணையம்

Friday, August 30, 2019

திருநெல்வேலி திருடர்கள்

திருநெல்வேலி அருகே முதியவர்கள் இருவர் திருடர்களை  விரட்டயடிக்கும் வீடியோவை பல நண்பர்கள் பகிர்ந்திருந்தனர்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வீரத்தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன என்பதையும் கேள்விப்பட்டேன்.

இப்படி ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தீரத்தோடு போராடி ஜெயித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால், உணர்ச்சி வேகத்தில் அவர்களைப் பாராட்டும் அதே வேளையில் இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால்  இருக்கும் ஆபத்து பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் நிதாமாக பேசுவோம். உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள்  எதிர்பாராமல்  எந்தவொரு அவகாசமும் இல்லாமல் நடப்பவை.  யோசிக்க
போதிய நேரம் கிடையாது. அதனால் பெரும்பான்மையானவர்களுக்கு அந்த பதற்றத்தில் என்ன செய்வது, எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பிடிபடாது. அந்தப் பதற்றத்தையும் குழப்பத்தையும் பயன்படுத்தியே  முன் அனுபவம் உள்ள திருடர்கள்  நினைத்ததை முடித்துக்கொள்வார்கள். அந்தச் சமயங்களில் உடமையாளர்கள் ஒத்துழைக்காமல் தாக்க முற்பட்டாலோ இல்லை பிடிக்க முற்பட்டாலோ அவர்கள்  கொலை கூட செய்யக் தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இப்படி கொஞ்சம் மாற்றி யோசித்து பார்க்கலாமே.  திருட வந்தவர்களுக்கும் உடமையாளர்களுக்கும் நடந்த சண்டையை ஒருமுறை அதில்  ஒருவர்  முதியவரின் பின்னால் வந்து  கழுத்தை பலங்கொண்ட மட்டும் இறுக்குகிறார். மற்றோருவர் பெண்மணியிடம்  ஆக்ரோசமாக அருவாளை வீசுகிறார். இந்தப்போராட்டத்தில் யாரேனும் ஒருவர் படுகாயமடைந்திருந்தால் இல்லை நடக்கக்கூடாதது நடந்திருந்தால் என்ன சொல்லி இருப்போம் ? "எதுக்கு இந்த வேண்டாத வேலை, போனா போகுது காசு தானே, போனா சம்பாரிச்சுகலாமே" என்றுதானே ?. இல்லை திருடனே கொல்லப்பட்டிருந்தால். இன்றைய சூழலே சுத்தமாக மாறி இருந்திருக்குமே ? அந்த வீடியோவை சகஜமாக வெளியாக அனுமதித்திருப்பார்களா ?  இல்லை தற்காப்புக்காக செய்தோம் என உடமையாளர்கள் நிம்மதியாக  வீட்டில் இருந்துவிட முடியுமா  என்ன ? அந்த அளவுக்கு குடிமக்களுக்கு அனுசரணையான சட்டதிட்டங்கள் நம்மிடம் இன்று இருக்கின்றனவா என்ன ?

அதனால், உடமைகள் முக்கியம்தான் அதைவிட பாதுகாப்பு அதிமுக்கியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தற்காப்பு  எனும் பெயரில் யாரும்   சாகச செயலில் இறங்காமல் இருப்பதே நல்லது.

அரசு வீரத்தம்பதியினருக்கு விருது வழங்கும் அதே வேகத்தை ஏன் அதைவிட கூடுதல் வேகத்தை இதுபோன்ற சமூகவிரோதிகளைப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதில் காட்டவேண்டும்.  இதுபோல நேற்று சென்னையில் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைத் 
பறித்து சென்றவனைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். காரணம் கேட்டால் "காதலியின் பரிட்சைக்கு பணம் காட்ட காசில்லை" என்றானாம்.
அது எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை.  ஆனால், பெருகிவரும் வழிப்பறி,  திருட்டு கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுக்கு குடி, போதை, சமூக ஏற்றத் தாழ்வு, வேலைவாய்ப்பின்மை என பலகாரணங்களைச் சொல்கிறார்கள் . உண்மை காரணங்களைக் கண்டுபிடித்து சீர் செய்யவேண்டியது அரசின் கடமை.

உதாரணமாக தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சமூகவிரோத வழக்குகள் எத்தனை. அது முந்தைய பத்தாண்டுகளைவிட எத்தனை மடங்கு அதிகம் போன்ற உண்மை  தரவுகளை வெளிப்படையாக
தவறில்லாமல் வெளியிடவேண்டும். அதை நீண்டகால நோக்கில்  களைய என்ன வழி என்பதையும் யோசிக்கவேண்டும். அதை விடுத்து வெகுஜன மக்களைத் கையில் தடி எடுக்கச் சொன்னால் அது காலப் போக்கில் பல புதிய பிரச்சனைகளுக்கு  வழிவகுத்துவிடும். அது  அனுமனின் வாலில் வைத்த தீ போல மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

Wednesday, August 21, 2019

மதுரையில் ஓடிய கடல் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -4)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை-7 ஞாயிற்றுக் கிழமை 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்
இறுதி நாளாக இருந்தாலும். ஒரு விதத்தில் பிரகாசமான நாளாக இருந்தது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அமெரிக்கப் பேரவை விழா, சிகாகோ தமிழ்ச்சங்க பொன்விழா, தொழிற் முனைவோர் கூட்டமைப்பு
என கோலகலமாக அரங்கங்களில் களைகட்டியிருந்த மக்கள் கூட்டம்
அன்று குறைந்து தமிழ் அறிஞர்களுக்கு பூரணமாக வழிவிட்டிருந்தது.

அதுபோல மற்ற நாட்களைப் போல உணவுக்காக நீண்ட வரிசையில்
காத்திருக்க வேண்டிய நெருக்கடியும் அன்று இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக காலை உணவு நேரம்
தமிழகத்தில் இருந்து வந்த பல விருந்தினர்களுடன் நெருக்கடி இன்றி
உரையாட வாய்ப்பாக இருந்தது. பேராசிரியர் ஞானசம்பந்தம், மருத்தவர் சிவராமன், எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான லேனா தமிழ்வாணன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் சல்மா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரன் பலரைச் சந்தித்து உரையாட முடிந்தது.

காலை அமர்வுகள் 8:30 மணி முதல் 11:45 மணி வரை ஏற்பாடாகி இருந்தன. அந்த அமர்வுகளில் மொத்தமாக 17 ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.  இணை அமர்வு எனும் நேர நெருக்கடி இருந்ததால் முன்பே திட்டமிட்டு விருப்பமான சில  ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஆய்வரங்குகள் அடுத்தடுத்து இருந்ததால் பார்வையாளர்கள் தயக்கமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளுக்குச் சென்று விருப்பமானவற்றைத் தேர்தேடுத்தார்கள். காலையில் நான் கலந்து கொண்ட ஆய்வரங்கங்கள் புகைப்படங்களுடன்..

1. "Unfurling the mysteries behind ancient port city Poompuhar and understanding the socio-cultural evolution of the Tamils" -  Dr. SM. Ramasamy / Dr. Saravanvel

ஆய்வின் நோக்கம்-  பண்டைய துறைமுக நகரமான பூம்பூகாருக்குப் பின் உள்ள மர்மங்களை அவிழ்த்து, தமிழர்களின் சமூக-கலாச்சார பரிணாமத்தைப் புரிந்துகொள்வது.

முதலில் கடல்கோள் (கடல் நீர்மட்ட உயர்வு) நிகழ்வால் இன்றுவரை  பூம்புகாரின் உண்மையான வயதைக் கணக்கிடுவது மர்மமாகவே தொடர்வதாக சொன்னவர்கள்.
பிறகு பழைய புகார் இன்றைய பூம்புகாரில் இருந்து  தள்ளி 30 கீ.மீ தூரத்தில்
கடலுக்குள் இருப்பதாக பல தரவுகளை முன்வைத்தனர். பிறகு பூம்புகார் குறித்த இலக்கியச் சான்றுகளைத் தாண்டி அறிவியல் பூர்வமான
சான்றுகளைத் தேடி கடலுக்கடியில் திட்டமிடப்பட்டுள்ள, நடைபெறும்  ஆராய்ச்சி பற்றியும் விளக்கினார்கள். அதுபோல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்டைய மதுரையில் கடல் ஓடியது. ஒரு காலத்தில் காவேரி சென்னை வரைப் பாய்ந்தது என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிட்டார்கள்.

முக்கியமாக பூம்பூகாரைக் கண்டடைவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பூகோள மாற்றங்களை மிகச் சரியாக கணிப்பது அவசியம் எனும் கருத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் தமிழர்களின் அடையாளம் சிலப்பதிகாரம், பத்தினி தெய்வம் கண்ணகி என்றெல்லாம் பெருமை கொள்ளும் நாம் இதுவரை ஏனோ முறையான அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளை (for physical evidence) மேற்கொள்ளாமல் இருப்பதை நினைத்து நாம் ஆதங்கப்படுவதைத் தவிர வேறுவழி இல்லை.







ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சாற்றுகள் குறித்து அடுத்த பதிவில்...

Tuesday, August 13, 2019

அமெரிக்கத் தமிழ் பண்பலையில் நேர்காணல்

அமெரிக்கத் தமிழ் பண்பலையின் (US Tamil FM ) வானோலிக்கு தந்த நேர்காணல் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பேசுவது இன்னொரு கலை.   இரண்டுக்கும் முறையாக பயிற்சி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எழுத்தும் பேச்சும் இரண்டும் இரு வேறு உலகங்களாக இருக்கின்றன.
எழுத்தில், சிந்தித்து பல மணிநேரங்கள் மெனக்கெட்டு மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிய கட்டுரையைப் பேச்சில் எளிதாக 5 நிமிடங்களில் கேட்பவர்களுக்கு கடத்திவிட முடிகிறது.   எழுத்தில் சொற்களின் தேர்வு, நடை என்றால் பேச்சில் குரலும், போதிய இடைவெளி விடுவதும் சேர்ந்து கொள்கிறது. ஆனால், எழுத்தில் இருக்கும் கட்டட்ற சுதந்திரம் பேச்சில் இல்லை. குறிப்பாக பதற்றம். சொல்லவந்த விசயம் சரியாக சொல்லப்பட்டதா கேட்பவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்பட்டதா என எழும் அந்த சந்தேகம் இயல்பானதே.

பேச்சில் இருந்துதான் எழுத்து தோன்றியிருக்க வாய்ப்பிருந்தாலும் எழுத்தில் கேலோச்சிய ஒரு சில எழுத்தாளர்களே மேடைப் பேச்சிலும்  பரிமளித்திருக்கிறார்கள். ஜெயகாந்தன், சுஜாதா பேசிக் கேட்டவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அதற்கு மொழி கூட ஒருவித தடையாக இருந்திருக்கலாம். கொஞ்சம்  இதில் உள்ளே நுழைந்து பார்த்தால் எழுதுவதும் பேசுவதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருவதாக சொல்கிறார்கள். ஒரு ஆய்வில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட சிலரிடம் ஒருவன் ஓடும் படத்தைக் காட்டியபோது "அவன் ஓடுகிறான்" எனச் சரியாக சொன்னவர்கள் எழுதும் போது "அவன் ஓடுகிறது" என தவறாக எழுதினார்களாம்.

நாம் விசயத்துக்கு  வருவோம். வானொலி நிகழ்ச்சி கேள்வி பதில் என்பதனால்  மேடைப் பேச்சு போல் பெரிய முன் தயாரிப்புகள் எதும் தேவைப்படவில்லை. பதில் இயல்பாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் யோசித்து வைத்திருந்தேன். மற்றபடி எதிர்முனையில் இருந்த தொகுப்பாளர் மனோ எஃப்எம் பாணியில் சரளமாக பேசினார். நான் சிக்கலில்லாத எளிய பதிலை யோசித்து பேசியதாகவே நினைக்கிறேன். நீங்களே கேளுங்கள்.

நேர்காணல் ஒலிப்பதிவின் இணைப்பு:


(https://youtu.be/ZLSp0mR9OBA)
நன்றி  R.J.மனோ