Sunday, February 23, 2020

உலக கவனம் பெற்ற ஓராங் ஊத்தான் புகைப்படம்

ஓராங் ஊத்தான்/ஒராங்குட்டான் (Orangutan)  குரங்கு ஒருவனுக்கு கைகொடுப்பதுபோல் உள்ள இந்தப் புகைப்படம் உலக கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு முன்  "போர்னியோ" தீவு பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு.  எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.

மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது.  மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான  ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும்  ஒரு ஒராங்குட்டான் குரங்கே.

மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக,  மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம்.  அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த  ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.

இப்படிச் சேற்றில் சிக்கிய  மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து  இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர்  'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'.  'மனிதன் மறந்த கருணையை இன்னமும்  குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள்  குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல  அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.

இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில்  பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?


Sunday, February 16, 2020

இர்மா (அந்தஆறுநாட்கள்) -நூல் வெளியீடு

கடந்த மாதம் (ஜனவரி-18, சனிக்கிழமை) மத்திய ஃபிளாரிடா முத்தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்வில் எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" புதினம் (நாவல்),  திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுடைய சிறப்பான அறிமுகத்துடன்   வெளியிடப்பட்டது.

தாம்பா தமிழ் ஸ்நேகம் தேவா அன்பு வெளியிட, அர்லாண்டா தமிழ்ச்சங்க முன்னோடிகளான மருத்துவர் திரு சம்பத் சண்முகம், வெண்- வீராசாமி பெற்றுக்கொண்டனர்.

வாழ்த்திப் பேசிய மருத்துவர் சம்பத், தனது கல்லூரி நாட்களில் கோவையில் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். அடுத்துப்



பேசிய வெண், அர்லாண்டா தமிழ்ச்சங்க 30 ஆண்டு வரலாற்றில் இது முதல் நூல் வெளியீடு என்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்வை நண்பர் விஜயசெந்தில்  சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

இறுதியாக, நான் அனைவருக்கும் நன்றி சொல்லி பேசினேன். நிகழ்ச்சி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாட்டிக்கொண்டதால் என்னால் சவகாசமாக பேச இயலவில்லை. அதிகபட்சம் 2-3 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன்.
ஆனால், யோசித்து வைத்திருந்த விசயங்களைப் பிசிரில்லாமல் பேசினேன் என்றுதான் நினைக்கிறேன். 

இந்தச் சிறிய விழா பார்வையாளர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் தான், மேடையை விட்டு இறங்கியபின் பலர் தனிப்பட்ட முறையில் சந்தித்து சுய அறிமுகம் செய்து கொண்டு அன்பு பாராட்டிச்  சென்றனர் என கற்பிதம் செய்துகொள்கிறேன்.

இப்படிச் சந்திக்கும் முகம் அறியா தமிழ் நெஞ்சங்களின் கண்களில் கசியும் அன்பு நம்மை மேலும் உற்சாகப்படுத்தி இயங்கச் செய்கிறது.

#இர்மா_அந்தஆறுநாட்கள்

Thursday, February 13, 2020

தமிழ் வலைத்திரட்டி

தமிழில் சமூக வலைதளம் தாண்டிய எழுத்துகளைச் சரியாக முறையில்
திரட்டி ஒருங்கிணைக்கும் தேவை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  அதன் ஒரு முயற்சியாக பிரத்தியோக இணையதளம் ஒன்றை இதற்கென
நிறுவ இருக்கிறோம். 

இதற்காக கடந்த 4-5 மாதங்களாக ஒத்த ஆர்வமுள்ள அன்பர்கள் சிலருடன்
நான் இணைந்து பயணிக்கிறேன். பொதுவாக,  முகநூல் தாண்டிய எழுத்துகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வலைப்பூக்கள் எனும் பிளாக்-களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து,
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள். தென் அமெரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற தெரிந்த பிரபல நாடுகளைத் தாண்டி வியட்நாம், அந்தமான் போன்ற குட்டி குட்டி நாடுகளில் இருந்தெல்லாம் தமிழில் பதிவுகளை எழுதுகிறார்கள். அதுவும் காமோ சோமா என்றில்லாமல் பலர் நல்ல உள்ளடக்கத்தோடு எழுதி 'அடடே' எனச் சொல்ல வைக்கிறார்கள். நான் ஆச்சர்யப்பட்ட இன்னொரு விசயம் பதிவுகளின் நேர்த்தி (எல்லா பதிவுகளும் அல்ல). ஒரு பயணக்குறிப்பாக இருந்தாலும் கூட பொருத்தமான படங்களை, காணொலிகளை மிகச் சரியான இடத்தில் பொருத்தி, பத்தி பிரித்து தேவைப்பட்டால் வண்ண பாண்டுகளைப் பயன்படுத்தி
மிகவும் அழகாக எழுதுகிறார்கள். இப்படி  எழுதுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதும் ஆச்சர்யமில்லை.

இதுபோன்ற தளங்களில் நான் கண்ட இன்னோரு சிறப்பு. 'வெரைட்டி' எனும் பல்சுவை. "செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் என்ன ? " "திருநீற்றின் மகிமை" போன்ற ஆன்மிக பிரியர்களுக்கான பதிவுகள். "அருமையான தம் பிரியாணி வீட்டில் செய்வது எப்படி ?" என்பது மாதிரியான சமையல் குறிப்புகள். "ஈழப்போர் - இறுதி நாட்களின் இரகசியங்கள் படங்களோடு" என்பது மாதிரியான வெகுஜன ஊடகங்களில் கிடைக்காத தகவல்கள். கூடவே "பங்குச்சந்தையில் முதலீடு  செய்ய சரியான நேரம் எது ?" என்பது மாதிரியான பல வணிக செய்திகள். அதுபோல,  அரசியல், தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பல பதிவுகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே. "போர்ப்ஸ் பட்டியலில் நடிகை சாய்பல்லவி".  "அஞ்சலியை சுவரொட்டியில் பார்த்தப் பொழுதே பரவசம் தொற்றிக் கொண்டது" (பார்த்தவுடன் !!? :) என்பது மாதிரியான இளமை துள்ளல்களையும் பார்க்க முடிகிறது.  

தளம் குறித்த மேலதிக விவரங்களை விரைவில் பகிர்கிறேன்.






Wednesday, January 29, 2020

2019-இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

2019-இல் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

1, The 4-Hour workweek- Timothy Ferriss
2, How to win friends and influence people - Dale Carnegie
3,வணக்கம் - வலம்புரி ஜான்
4, ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள் -சாரு நிவேதிதா
5, ஒரு கூர்வாளின் நிழலில்  - தமிழினி
6,மழைக்கால இரவு- தமிழினி
7.வாழ்க திராவிடம் - இனமானப் பேராசிரியர் அன்பழகன்
8.கன்னிவாடி - எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்
9.ஒரு பெண் கதை சொல்கிறாள் - கன்னடம் யஸ்வந்த சித்தால
(தமிழில் டி.பி.சித்தலிங்கய்யா)
10.தண்ணீர் - அசோகமித்திரன்
11.ஆறாவடு - சயந்தன்
12.A Soldier's Sketchbook - John Wilson
13.மிளிர்கல் -இரா.முருகவேள்
14.Silk Road - Kathy Ceceri
15.27-யாழ்தேவி - ஆசிரியர்: ஈழவாணி
16.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
17.குறத்தி முடுக்கு- ஜி.நாகராஜன்
18.What I talk When I talk about running - Haruki Murakami
19.Dance Dance Dance- Haruki Murakami
20.நெஞ்செல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால்
21.Emotional Wellness - Osho
22.First They Killed My Father: A Daughter of Cambodia Remembers - Loung Ung
23.Guns across America - Robert J Spitzer
24.Bitcoin Explained (Ultimate Guide to understanding Block chain
and investment in Currencies) - James Hartnett
25.Cryptocurreny for beginners - Michael Scott
26.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
27.How to Write Fiction without The Fuss  - Lucy Mccaramer
28.எம்டன் செல்வரத்தினம் (சென்னையர் கதைகள்)- கிழக்கு பதிப்பகம்
29.Beyond the tiger mom : East-West parenting for the global age - Thiagarajan, Maya
30.நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ? - பேராசிரியர் த.செயராமன்

ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் Duel

ஸ்டீவன் ஸ்பில்பெர்க் உலகம் முழுதும் அறியப்பட்ட ஹாலிவுட் இயக்குநர். ஜூராசிக் பார்க், ஜாஸ் (Jaws) , ஈ.டி. (E.T.), மைனாரிட்டி ரிப்போர்ட், ஏ.ஐ. (A.I.) என பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியர்.  புகழ்பெற்ற இயக்குநர் என்பதைத் தாண்டி அவர் ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளரும் கூட. இரண்டு முறை  ஆஸ்கார் விருது பெற்ற அவருடைய முதல்படமான Duel (1971) -ஐ சமீபத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ('Duel' - தமிழில் 'ஒண்டிக்கு ஒண்டி' என நேரடியாக மொழிபெயர்க்கலாம்)

படம் அதிரடி திரில்லராக இருந்தாலும். படம் பார்த்த எனக்கு ஒரு வித அதிர்ச்சி.  காரணம், ஒத்த செருப்பு போலொரு படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியதைப் போல உணர்ந்தேன். அதாவது, ஸ்பில்பெர்கின் பல பிரமாண்ட படங்களின் வழியாக அவர் குறித்து  என் மனதில்  வேறொரு சித்திரம் இருந்தது.

Duel படத்தின் கதை இதுதான். ஒரு நெடுஞ்சாலையில் நாயகன், தன் காரை ஓட்டிக்கொண்டு செல்கிறான். அவனுக்கு முன்பாக ஒரு டிரக், அவனுக்கு வழி விடாமல் சாலையை மறித்துக்கொண்டு செல்கிறது. காரில் இருக்கும் நாயகன், அடிக்கடி 'ஹாரன்' அடித்துப் பார்க்கிறான். பயனில்லை. தொடர்ந்து நந்தி போல சாலையை மறைத்து போகும் டிரக்கோ அவனுக்கு  வழி கொடுப்பதாக தெரிய இல்லை.

இப்படிப் பிடிவாதமாக வழியை அடைத்தபடி செல்லும் டிரக் மேல் எரிச்சடைந்த நாயகன் ஒருகட்டத்தில் சாமர்த்தியமாக சந்தில் புகுந்து டிரக்கைச் சட்டென முந்தி சென்று விடுகிறான். வந்தது வினை. டிரக்கில் இருக்கும் அந்த முகமறியா மனிதன் நாயகனுக்கு எதிராக, எமனாக திரும்பி விடுகிறான்.

அங்கிருந்து இடைவேளையின்றி காரில் இருக்கும் நாயகனும், முகமறியா டிரக் டிரைவரும் நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும் மூர்க்கமாக தாக்கிக் கொண்டும் படம் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.  இறுதியில் யார் யாரை வென்றார்கள் ? எப்படி? என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் (யூ.டியூயில் கிடைக்கிறது).

இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டியது திரைக்கதை பற்றி. அதாவது,
எந்தவொரு கிளைக் கதைகளும் இல்லாமல் நெடுஞ்சாலையில் இரு வாகனங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு நாயகனை மட்டும் வைத்து திரைக்கதை அமைத்து ஸ்பில்பெர்க் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் முதல்படம். வெளியில் இருந்து பார்த்தால், படம் இரண்டு வாகனங்களுக்கு இடையேயான போட்டி என்பது போல தோன்றினாலும் அது மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் நடக்கும் போராட்டம் என்பதை நம்மால் பட உணர்ந்துகொள்ள முடியும். காலத்தை வென்று நிற்கும் படம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.



Wednesday, January 1, 2020

தமிழ்த்திரையுலகில் இரட்டையர்கள்


தமிழ்த்திரையுலகில்  இரட்டையர்களுக்கு என்று ஓர் இடம் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறது. முன்பு  இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மனோஜ் கியான் எனும்  அந்த வரிசையில் இன்று சபேஷ் - முரளி... அதுபோல பாரம்பரிய சங்கீதத்தில் சூலமங்கலம் சகோதரிகள்,  பாம்பே  சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி. நாட்டுப்புறப் பாடலில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி- அனிதா, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி இணை என அங்கேயும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்தவகையில் திரைப்படத்
தொகுப்பாளர்களாக பி. லெனின்-வி. டி. விஜயன் நினைவுக்கு வருகிறார்கள்.



அதாவது ஒத்தத் துறையில் இணைந்து செயல்படுபவர்களைப் நாம் பேசுகிறோம். வைரமுத்து-ஏ.ஆர் ரகுமான் போன்ற வெற்றிக் கூட்டணிகள் என்பது வேறு.ஆனால், எழுத்தில்  இரட்டையர்கள் என்றால் நமக்குச் சட்டென நினைவுக்கு வருபவரகள் சுபா மட்டுமே. நண்பர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என இருவரும் தங்கள் பெயரின் முதல் எழுத்தை எடுத்து சுபா எனும் புனைப் பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவருகிறார்கள்.  மற்றபடி தமிழ் எழுத்துத்துறையில் இரட்டையர்களைச் சிரமப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது

எழுத்து என்பது தனிமையோடு தொடர்புடையதாலோ என்னவோ அது பெரும்பாலும் தனி ஆவர்த்தனமாகவே இருந்திருக்கிறது.   ஆனால்,  ஆங்கிலத்தில் John Lennon & Paul McCartney போல பல இரட்டை பாடல் ஆசிரியர்கள் duo songwriters உலகப்புகழ் பெற்றிருக்கிறார்கள். 

அதுபோல நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் அமெரிக்க ஆசிரியர்களான கேத்லீன் ஓ’நீல் கியர் அவருடைய கணவருடன் இணைந்து முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அதுபோல மார்சியா முல்லர் மற்றும் பில் ப்ரோன்சினி (Marcia Muller and Bill Pronzini) எழுத்துலகில் உலகப்புகழ் பெற்ற இணை.

இங்கே அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றவர்களுடன் இணைந்து எழுதுவதும்  பரவலாக நடக்கும் விசயமே. அதாவது எழுதுவது என்பது ஒரு தனிமையான முயற்சியாக இருந்தாலும் ஒத்தக் கருத்துள்ள இரண்டு ஆளுமைகள் இணையும்போது ஆச்சரியமான கதைகள் சுவாரஸ்யமான நடையில் உருவாக வாய்ப்புள்ளன. அந்த வகையில் பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் பேட்டர்சன் மற்றவர்களுடன் இணைந்து பல படைப்புகளை எழுதித் தள்ளியிருக்கிறார். அவர்   அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் இணைந்து சமீபத்தில் எழுதிய ”அதிபரைக் காணவில்லை” (The President is Missing by Bill Clinton and James Patterson ) வாசகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.  சிறார் புத்தகங்களையும் எழுதியிருக்கும் ஜேம்ஸ் பேட்டர்சன் ஃபிளாரிடாவில் வசிக்கிறார். எனக்கு உள்ளூர்காரரும் கூட. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு மகளுடன் போய் அவருக்குச் சின்ன ஹலோ சொல்லிவிட்டு வந்தோம். 

என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் விரும்பும் ஒரு நல்ல படைப்பைத் தர ஒத்த நடையுள்ள இருவர் இணை ஆசிரியர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இருவேறுபட்டத் தளங்களில் இயங்குபவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி, மேற்குலகில் பிரபலமான எழுத்தாளர்கள் கூட்டுசேர்ந்து புனைவு எழுதுவதை நாம் விட்டு விடுவோம். தமிழில் ஓரளவு பெயர் தெரிந்த எழுத்தாளர்கள் இணைந்து புனைவு ஏன் , நான்கு வரியில் ஒரு கட்டுரையைக் கூட எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை.

நான் இதையெல்லாம் எழுதக் காரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் தனது நண்பர் ராமசேஷன் எனும் கணினிப் பொறியாளருடன்  இணைந்து  ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” எனும் புத்தகத்தைக் கொண்டுவருகிறேன் என எழுதியிருந்தார். இலக்கணத்துக்கும் சாருவுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்பவர்களுக்கும் அவர் தனது தளத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள்.

இப்படிப் பிரபல எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இணையாசிரியராக சேர்ந்து எழுத முன்வந்திருப்பது நல்லதொடக்கம். ஓரளவு புத்தகத்தையும் இணையாசிரியரையும்  சேர்ந்து பிரபலப்படுத்தும். இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்!



Wednesday, December 25, 2019

இர்மா- அந்த ஆறு நாட்கள்

நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! .  கடந்த ஆண்டு எனது  'அந்த ஆறு நாட்கள்'  (புதினம்/நாவல்)  அமெசான் கிண்டிலில்   வெளியானது  
உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு  எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது.  தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம். 

பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம்.  அதுபோல,  நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில்  வாசகர்களின்  ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள்  (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம்.  இது எனக்கு நான்காவது நூல். 

நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய  ‘எழுத்து பிரசுரம் பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.  

அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா... இனி உங்கள் கைகளில்.