Monday, August 13, 2018

சென்னையில் ஜிபிஎஸ்

சென்னை போன்ற பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் கார், பைக் ஓட்டுவது என்பது ஒரு தனிக் கலை. சிறுநகரங்களில் வண்டிகளை ஓட்டிப் பழகியவர்கள் ஆரம்பத்தில் கண்டிப்பாக திணறிதான் போவார்கள்.

குறுகிய சாலைகளில் வகை தொகையின்றி விரையும் வாகனங்கள் ,
கொளுத்தும் வெயிலில் சிக்னல்கள் என நெரிசலான போக்குவரத்தில் ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

அதனால் முன்பெல்லாம் சென்னையை நன்றாக தெரிந்தவர்கள் தான்
டாக்சி, ஆட்டோ டிரைவர்களாக இருந்தார்கள். ஆனால்,  இப்போது
சென்னையில் ஜிபிஎஸின் கை ஓங்கியிருக்கிறது. பலர்
ஜிபிஎஸ் கையில் இருக்கும் தைரியத்தில் நகரில் பலர் டாக்ஸி டிரைவர்களாகி விட்டார்கள். குறிப்பாக ஓலா டிரைவர்கள். ஓலா வண்டி ஓட்ட  தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக வேலைக்கு வந்திருக்கும் டிரைவர்கள் ஜிபிஎஸ்ஐ மட்டுமே நம்பியே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

இவர்களில் பலருக்கு சென்னையின் முக்கிய இடங்கள், பிரபலங்களின் வீடுகள் ஏன் கிழக்கு மேற்கு கூட சரியாக தெரிவதில்லை. ஜிபிஎஸ் இருக்கும் அலட்சியத்தால் புதிதாக வந்திருக்கும் நகரை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை போல. அதனால் லோக்கல் நாலேஜ் எனும் உள்ளூர் ஞானம் அறவே இல்லாமல் திணறுகிறார்கள்.

இந்தியாவின் முகவரிகள் இன்னமும் முற்றிலும் துல்லியமாக ஜியோ கோட் (Geocoding) செய்யப்படவில்லை. (ஜியோ கோடிங் என்பது நம்முடைய இருப்பிட முகவரியை கணினி புரிந்துகொள்ளும் வகையில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளாக (latitude and longitude)  மாற்றுவது). அதனால் இப்போது ஒரு முகவரியை மிகச்சரியாக ஜிபிஎஸ்-ல் கண்டுபிடிப்பது என்பது லாட்டரி அடிப்பது போல் குருட்டு அதிஷ்டம் தான். நம்மூர் முற்றிலுமாக டிஜிட்டாலாகும் போது (It is a transition period) இந்தக் குழப்பங்கள் களையப்படும். அதுவரை நாம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

லேண்ட் மார்க் போன்ற அடையாளங்களை வைத்து போகவேண்டிய இடங்களைக்  கண்டுபிடித்து பழக்கப்பட்ட நம்மில் பலருக்கு இதெல்லாம் புது அனுபவம்.  கூடவே பழைய எண், புதிய எண் குழப்பங்கள் வேறு.  என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும்  சென்னை வரும்போது திருவல்லிக்கேணி காசிவிநாயகா மெஸ்-க்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.  ஆனால்,  என்னை யாராவது தெருவில்  நிறுத்தி  'காசிவிநாயகா மெஸ் அட்ரசைச் சொல்லு' என சட்டையைப் பிடித்தால் திருதிருவென முழிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். சொல்லுங்கள் !? :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Thursday, August 9, 2018

கம்யூனிசம்- ஒரு பார்வை

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்.  ஆனால், கம்யூனிசம் இல்லை
என ஒருமுறை ஆனந்தவிகடனில் மதன் எழுதியதை வாசித்ததாக நினைவு.

அதிலிருந்து கம்யூனிசம் (பொதுவுடைமை) தொடர்பான ஒரு விரிவான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், நூறு பக்கங்களில் மேலெலுந்தவாரியாக கம்யூனிசம் குறித்து பேசும் சிறிய புத்தகம்
தான் கிடைத்தது.

இது ஐரோப்பாவில் முதலில்  கம்யூனிசம் எனும் சிந்தனை எப்படி  உருவாகி ஒரு தத்துவமாக நிலைபெற்றது. அது பின் அந்தத் தத்துவம் எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறி இரஸ்யாவில் அரசமைத்தது. பின் அங்கிருந்து எப்படி மற்ற நாடுகளுக்கு பரவியது போன்ற வரலாற்று விசயங்களைப் பேசுகிறது. புத்தகத்தில் இருந்து .....

நாம் கூட்டாக  வீழ்வதில்லை  (we don't collectively  fail) அல்லது ஒன்றுபட்டால்
உண்டுவாழ்வு எனும் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தில் தொடங்கிய அந்த
விதை ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில்
வளர்த்தெடுக்கப்படுகிறது. 

பின்  முதலாளி- பாட்டாளிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி முதலாளிவத்தை ஓழிக்க  காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சால் (Friedrich Engels) ஆகியோரால் மார்க்சியம் முன்மொழியப்படுகிறது. 

அதன்பின் 1917ல்  மக்கள் புரட்சி மூழம் ரஸ்யாவின் ஜார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியினை ஓழித்த லெனின் தலைமையில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாடாக ஒன்றிணைக்கப்பட்ட சோவியத் ஒன்றியம் ( USSR ) உருவாகிறது.

பொதுவுடமை (Communism) சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
போல இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் சமூகவுடைமை (Socialism) ஏற்றுக்கொள்ளப்படுகிறது

இரஸ்யாவில் பொதுவுடமை தத்துவம் அரசமைக்கும் போது பல சீர்த்திருத்தங்கள் முன்மொழியப்படுகின்றன. மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" (Marxism–Leninism) என்று பிரபலமாகிறது

கம்யூனிசம் எனும் கொள்கை நிலைப்பாடு நிர்வாகம், பெருளாதாரம் போன்றவற்றிற்காக பல மாறுதல்களைப் பெறுகிறது. அந்த மாறுதல்களுடன் இரஸ்யாவில் தொடங்கி  சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், சீனா, கியூபா, வட கொரியா என பல நாடுகளுக்கு காட்டுத்தீயாகப் பரவுகிறது.

இப்படி பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அரசமைத்த கம்யூனிச அரசாங்கங்கள் செய்த பல குழறுபடிகளால் மக்கள் செல்வாக்கை இழந்து பலமிழந்துக் கொண்டிருந்தச் சமயத்தில் 1989ன் இறுதியில் கிழக்கு ஜெர்மனியையும் (கம்யூனிஸ்ட்), மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் மக்களால் தகர்த்தெரியப்படுகிறது.

அந்தச் சுவரின் வீழ்ச்சிக்குப் பின் படிபடியாக அதிகாரமிழந்து  1991ல் சோவியத் யூனியன் ("USSR")  சிதறுண்டது நாம் அனைவரும் அறிந்த வரலாறு.

உலக அரசாங்கங்கள்-கம்யூனிசம் சூ வெண்டர் ஹூக் (Sue Vander Hook)
Title-Communism (Exploring World Governments)-Sue Vander Hook
  • ISBN-13: 978-1617147890
  • Publisher: Essential Library (January 1, 2011)

Thursday, August 2, 2018

மை இயர் ஆஃப் மீட்ஸ் (My Year of Meats) - ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki)

 உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழில்களில் பரவலாக நடக்கும் முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்கள் பொதுவாக வெளிப்படையாக பேசப்படுவதில்லை. அது
குறித்து எழுதப்பட்ட புனைவுகளும் குறைவு என்றே நினைக்கிறேன்.

அந்த விதத்தில் நான் சமீபத்தில் படித்த புத்தகம் "மை இயர் ஆஃப் மீட்ஸ்"
(My Year of Meats) "மாமிசத்துடன் எனது ஒரு வருட வாழ்க்கை". எழுதியவர் ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki). முதல் பதிப்பு 1998.  இரண்டு ஜப்பானிய  பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதாக எழுதப்பட்ட கதை. ஒருவர் ஜப்பானில்
வாழும்  இளம்  பெண். அவர் குழந்தையின்மையால் கணவனால் கொடுமைப்படுத்தபட்டு அலைகழிக்கப்படுகிறார். இன்னொருவர்
ஜப்பானிய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த  அமெரிக்க இளம்பெண். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் தனது வேலையில் பல
பிரச்சனைகளையும் சவால்களையும்  எதிர்கொள்கிறார்.
ஒருவருட காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையின் இறுதியில் இரு பெண்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதாக கதை முடிகிறது.

கதையில் மனைவியை வெறும்  பிள்ளை பெறும் எந்திரமாக நினைக்கும் படித்த கணவன். அது நடக்காது எனத் தெரிந்தவுடன் அவன் செய்யும் பாலியல் வன்முறைகள் போன்ற விசயங்கள் நேர்த்தியாக வந்திருக்கிறது.  அதுபோல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வழியாக அமெரிக்காவின் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழிலில் நடக்கும்
பல முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்களை அழுத்தமாகவே பேசியிருக்கிறார்.

Diethylstilbestrol (DES)  எனும் செயற்கை எஸ்ட்ரோஜன் கலப்பால் இயற்கையான
மனித ஹார்மோன்கள் கெடுவது. அதன் தொடர்ச்சியாக சிறுபிள்ளைகள் பூப்படைவது போன்றவற்றைத் தொட்டிருக்கிறார்.

எழுதியது பெண் எழுத்தாளர் என்பதால் இரண்டு பெண்களின் மனஓட்டத்தையும் அழகாக படம்பிடித்திருப்பதாக நினைக்கிறேன்.
வாசிக்கையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றினாலும் வாசிக்கலாம். மோசமில்லை. இல்லை என்னைப்போல ஆடியோவாகவும் கேட்கலாம்.

எழுத்தாளர் ரூத் ஓஸ்ஸ்கி சமூகம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உலகளாவிய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கருப்பொருள்களை
மையப்படுத்தி எழுதிவருபவர். எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிடும்
போது நாவல் பேசும் விசயங்கள் பழசாக தெரிந்தாலும் இன்றும்
நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை என்றே நினைக்கிறேன்.

#மை_இயர்_ஆஃப்மீட்ஸ்

Saturday, July 21, 2018

தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம் - மலையாளம்

நான் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதில்லை. அதற்குத்
தமிழில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நான் படம் பார்ப்பதும்  மிக மிகக் குறைவு. இந்தமுறை விமானப் பயணத்தில் இரண்டு படங்களைப் பார்த்தேன். அவை இரண்டுமே மலையாளப் படங்கள்.

முதல்படம்  "தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம்",
(Thondimuthalum Driksakshiyum) இரண்டாவது   "வர்ணத்திள் ஆஷ்ன்கா" (Varnyathil Aashanka). மூழுநீள நகைச்சுவை திரைப்படம். அதைப் பார்க்கலாம்.  மற்றபடி படத்தில் சிறப்பாக ஒன்றுமில்லை.

ஆனால் "தொண்டிமுத்துல டிரிக்ஷாக்ஷியம்" (தமிழில்- "திருட்டுப்பொருளும் சாட்சியும்") படத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல நினைத்தேன். பிறகு இணையத்தில் அந்தப்படத்தைப் பற்றி துழாவியபோதும் அது பல விருதுகளைப் பெற்றிருப்பதாக தெரிகிறது. ஆச்சர்யப்படவில்லை.

கதை இதுதான்.  புதிதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி பஸ்சில் பயணிக்கிறது.  பஸ்சில் எதிர்பாராதவிதமாக அந்த இளம்பெண்ணின்  தங்கச்சங்கிலி  திருடுபோகிறது. அவள் கத்தி கூப்பாடு போடுகிறாள்.  உடனே திருடனை மடக்கிப் பிடித்த பயணிகள்  பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விடுகிறார்கள்.  இப்படி சங்கிலியைப் பறிகொடுத்த ஜோடி போலீஸ் உதவியுடன் அதை  மீட்டார்களா ? என்பதே படத்தின் கதை.

இந்த மிக எளிய கதையை எந்தவித சினிமாத்தனங்களும் இல்லாமல்
மலையாளப் படங்களுக்கே உரிய மிக இயல்பான திரைக்கதையில்
அருமையாக சொல்லியிருக்கிறார்கள். நடிகர்களின் தேர்வும் அற்புதமாக வந்திருக்கிறது. கூடவே கேரளாவின் செழிப்பையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் சூரஜ் வெஞ்சஞ்சமுடு
மற்றும்  ஃபஹத் பாசிலுக்கும் (இயக்குநர் பாசிலின் மகன்) மிகச்சிறப்பான
எதிர்காலம் இருப்பதாக கணிக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

#தொண்டிமுத்துலம்_டிரிக்ஷாக்ஷியம்

Sunday, July 15, 2018

SSS - கோவையில் ஓர் அதிசயம்

இந்த முறை கோயம்புத்தூரில் இருக்கும் "சாந்தி சமூக சேவைகள்" (SSS) எனும் அறக்கட்டளை பற்றி தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சிங்காநல்லூரில் அவர்கள் இயங்கும் இடம் நான் தங்கியிருந்த உறவினர் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் தான். ஒரு நாள் மாலை அவருடன் போயிருந்தேன்.

மிகப்பெரிய வளாகம். அங்கேயே  மருத்துவமனை, 24 மணி நேர மருந்துக்கடை (வெளி விலையை விட 20%  குறைவாக)அதனுடன் குருதி வங்கி, மருத்துவ லேப்கள், கண் சிகிச்சை மையம் போன்ற பல மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில்  இருக்கின்றன. அத்தனையும் அனைவருக்கும்  லாப நோக்கின்றி மிக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அங்கே முழு உடல் பரிசோதனையை
1500 ரூபாய்க்கு முடித்துவிடலாம் என உறவினர் சொன்னதாக நினைவு.

அங்கேயே மருத்துவ சேவையோடு உணவு விடுதி (கேண்டீன்) வசதியும் இருக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 9;30 வரை இயங்கும் அந்தக் கேண்டினில் உணவு தரமானதாக, சகாயமான விலையில் கிடைக்கிறது. ஒருவருக்கான முழுச் சாப்பாடு 25 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதே உணவு வெளியே  120 ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கும்.

அதனால் எப்போழுதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இப்படி தினமும்   பல ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறினாலும்
கேண்டினின் பராமரிப்பு அபாரம். மற்ற வணிக நிறுவனங்களை விட
மிக சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள். சர்வதேச தரம்
என தயங்காமல் சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் வளாகத்துக்குள் பெட்ரோல் பங்குடன், பிள்ளைகள் விளையாட காற்றோட்டமான ஒரு  பூங்காவையும் அமைத்திருக்கிறார்கள்.

கோவை போன்ற பெருநகரத்தில் அதுவும் ஒரு முக்கிய இடத்தில் இதுபோலோரு சேவை அனைவருக்கும் கிடைப்பது அதிசயம் மிக அபூர்வம்.

உண்மையில்  இதெல்லாம் அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஒரு அறக்கட்டளை முன்மாதிரியாக  இங்கே செய்து காட்டிக் கொண்டிருக்கிறது.

கோயில்களிலேயே கொள்ளை அடிக்கும் இந்தக் காலத்தில்  "மனிதகுலத்திற்கான சேவை கடவுளுக்கு சேவை " என்ற குறிக்கோளுடன் செயல்படும் இந்த SSS அமைப்பின் நிறுவனருக்கு எனது  வாழ்த்துகளும் மனப்பூர்வமான நன்றிகளும்.

அடுத்த முறை கோவை போகும் போது வாய்ப்பிருந்தால் ஒருமுறை போய் வாருங்கள். தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

அவர்களுடைய இணையமுகவரி -  http://www.shanthisocialservices.org/
படங்கள்- நன்றி இணையம்.

Sunday, July 8, 2018

தமிழ் - நமது அதிகாரம், நமது உரிமை, நமது பெருமை

நண்பர்களுக்கு,

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை-யின் (பெட்னா, Federation of Tamil Sangams of North America) 31வது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலத்தின் ப்ரிஸ்க்கோ நகரில் ‘மரபு, மகளிர், மழலை’  (ஜூன்-29, 30, ஜூலை 1) எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

தமிழ் விழா மலரில்  "தமிழ் - நமது அதிகாரம், உரிமை, பெருமை" எனும் தலைப்பில் வெளியான எனது 
கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன்.  நன்றி!!

-ஆரூர் பாஸ்கர்.
ஜூலை, 8 , 2018

1.

2.
3.

5.

Tuesday, July 3, 2018

தமிழ்நாடு - ஒன்னுக்கும் உதவாத ஊரா ?

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ...

****
கிடைத்த 20 நாள் விடுமுறையில் தமிழ்நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக பயணித்துவிட்டு ஃபிளாரிடா திரும்பியிருக்கிறேன்.

குடும்பத்தோடு இரயில், கார், பஸ் என முற்றிலுமாக  தரைவழி பயணம்.
முக்கியமாக  ஊர் சுற்றிப்பார்ப்பது அப்படியே வழியில் முடிந்தால்
உறவினர்களையும்,  நண்பர்களையும் சந்திப்பது முக்கிய நோக்கமாக இருந்தது.

பயணம் மொத்தமாக  எட்டு நாள்கள். சராசரியாக ஒவ்வொரு ஊரிலும்  ஒர் இரவு தங்கியிருக்கிறோம்.

முதலில் சென்னையிலிருந்து கிளம்பி தென்கோடியான கன்னியாக்குமரியைத் தொட்டு அங்கிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி, தென்காசி வழியாக உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூரைச் சுற்றிவிட்டு  பிறகு கடைசியாக சொந்த ஊரான திருவாரூர் போய் சேர்ந்தோம்.

தனிப்பட்ட முறையில் இந்தப் பயணம் தமிழ்நாட்டின் மாறுபட்ட நில அமைப்புகளையும் மனிதர்களையும், சூழலையும் ஒரு பருந்து பார்வையில் அறிந்துகொள்ள எனக்கு நல்லதொரு இருந்தது.

நாங்கள் போயிருந்தது ஜூன் மாதத்தின் தொடக்கம் என்பதால் தென் மேற்கு பருவமழை தொடங்கியிருந்த அருமையான நேரம். நாஞ்சில் நாடு -

எப்போதும் பொழியத் தயாராக மழை நீரைச் சுமந்தபடித்  திரிந்து கொண்டிருக்கும் மேகங்களுடன் ரம்யமாக இருந்தது.   குற்றாலம் -
மனதைக் குளிர வைக்கும் தென்றல் காற்றுடன் சாரல் மழை பொழிந்து
திகைப்பூட்டியது.                              கொங்கு நாடு - குளிர்ச்சியான மலைகள்,  தென்னந்தோப்புகள் என இயற்கை எழில் கொஞ்சியதால்  தமிழகத்தை ஒரு செழிப்பான மாநிலமாக உணர்ந்தேன்.

அந்த வகையில்  இது  முன்பு எப்போதும் இல்லாத இல்லாத ஒரு மாறுபட்ட பயணமாக இருந்தது. தமிழ்நாட்டின் எனது  சமீபத்திய பயணங்களில்  இதை முக்கியமாக நினைக்கிறேன். உண்மையில் "என்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?" எனும் திரைப்பாடலை ஆழமாக மனப்பூர்வமாக உணர்ந்தத் தருணங்கள் அவை.
நான் ஒரு செழுமையான தேசத்தின் பிரதிநிதி என்றும் பெருமை கொண்ட நாட்கள் அவை.

அதே சமயத்தில் காவிரி பாயும் டெல்டா பகுதி பாலைவனமாக வறண்டு கிடைக்கிறது. அதைப் பற்றியும் தமிழகத்தில் இன்றையக் கல்வி  வேலைவாய்ப்பு போன்ற மற்ற சில விசயங்களையும் நாம் தனியாகப் பேசவேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு விசயம், 'சுத்த வேஸ்ட்,  ஒன்னுக்கும் உதவாத ஊரு ' என்றெல்லாம் தமிழ்நாட்டைச் சபிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறையேனும் மாநிலத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு பேசுட்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.

#தமிழ்நாடு2018