Sunday, September 20, 2015

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த
'சாய்வு நாற்காலி' நாவலை கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கிளாசிக் நாவல் வரிசையில் அறிமுகப்படுத்திய நாவல்களில்  இதுவும் ஓன்று.  1997 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது.

இதை எழுதியவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.   மலையாளப் பின்னணி உடைய இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவருபவர்.

ஓரு வரியில் நாவலின் கதையைச் சொல்வதெனில் வாழ்ந்துக் கெட்ட ஓரு குடும்பத்தின் கதை.  இதைப் படிக்கும் போது ஜல்சாகர் எனும் பெங்காளி படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க  முடியவில்லை.

நீங்கள் ஜல்சாகர் (The Music Room) பார்த்திருப்பீர்களா தெரியவில்லை. புகழ்பெற்ற திரைப்பட மேதை  சத்யஜித் ராய் இயக்கிய பெங்காளி படம் (1958). அதில் வரும் ஜமீந்தார் தனது குடும்பத்தின் வறட்டு கௌரத்துக்காக வீட்டின் கடைசி சொத்தையும் விற்று இசை நிகழ்ச்சி நடத்துவார்.

இந்த நாவலில் முஸ்தபாகண்ணு கதை நாயகன்.  உழைக்காமல் சோம்பேறித் தனமாக பழம் பெருமை பேசியபடி சொத்துகளை விற்றுத் தின்கிறார்.

முஸ்தபாகண்ணுவின் மன ஓட்டத்திலேயே இந்தக் கதை நகர்கிறது. முஸ்தபாகண்ணு சாய்ந்து காலாட்டியபடியே வாசம் செய்யும் சாய்வு நாற்காலியும் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அவருடைய அதபு (ஓழுக்கம்) பிரம்பும் கதையின் முக்கிய பாத்திரங்கள்.

இதைத் தாண்டி  ஓரு  தலைமுறையின் பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு,  குடும்பப் பந்தம் என பல தளங்களில் இந்த கதை பயணிக்கிறது.

கதையில் குடும்பத்தின் இருநூறு ஆண்டு கால வரலாற்றை அஞ்சு தலைமுறை மூலம்  ஆசிரியர் சொல்கிறார்.  இந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி என மட்டும் பார்க்காமல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் தொடரும் மன ஓட்டத்துக்கான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் முழுமையாக வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டிருப்பதால் தங்குதடையின்றி வாசிப்பது கேள்விக்குறியே !.

உதாரணமாகக்  கதையில் முஸ்தபாகண்ணு தனது காலை திடுமெனப் பிடிக்கும் வேலைக்காரனை "நீயாடா, கிறாத்லெப் பெறந்தப் பயலெ" என்கிறார். இதை வாசிக்கும் வாசகன் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது ? எதோ திட்டுகிறார் என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் விவரம் தெரிந்தால் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ள பொருளைத் தேடலாம். கடைசிப் பக்கத்தில் விளக்கம் இருக்கும் விவரத்தை முன்கூட்டியாவது சொல்லித் தொலைத்திருக்கலாம்,  அல்லது மிக எளிமையாக ஓவ்வொரு பக்கத்தின் கீழேயும் விளக்கம் கொடுத்திருக்கலாம். (பதிப்பகத்தார்- கவனிக்க).  நானும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி தேடிப்பார்த்து களைத்தே போய்விட்டேன்.


கடைசியாக, இந்த நாவலை படித்து முடித்தபின்  சோம்பலில் ஓரு விதமான 'மதமத'ப்பை நான் உணர்ந்தேன். அதுவே , இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் படிக்கலாம்.



தலைப்பு :சாய்வு நாற்காலி
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9788189359423
பக்கங்கள்: 344
விலை : ரூ.275

Tuesday, September 1, 2015

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சுனா - ரஜினி வசனத்துக்கு சவால்

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும்.

சிவாஜி படத்துக்கு வசனம் எழுத்தாளர் சுஜதான்னு ஞாபகம். ஆனால்
ரஜினியோட இந்த வசனத்தை சவால் விடும் வகையில் ஓருவர் வாழ்ந்தார் அப்படினா ஆச்சர்யமா இருக்குதுல்ல, மேலே படிங்க..

****
தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக
இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை.

அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம்
பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும்.  சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.

இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் ( Mitch Albom).

வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

அதன் சுருக்கம் இங்கே.

பேராசிரியர் மோரி ALS எனும் ஓருவகை நரம்புச்சிதைவு நோயால் பாதிக்கபட்டு சாகக்கிடக்கிறார். Amyotrophic Lateral Sclerosis (ALS) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு சரியான சிகிச்சை என்று எதுவும் இன்றுவரை இல்லை.  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாகப் பேசும் சக்தி, விழுங்குதல் மற்றும் சுவாசித்தல் போன்றவற்றை இழந்து இறுதியில் மரணமடைகிறார்கள். கடந்த ஆண்டு  வைரஸ் போல இணையத்தில் பரவிய 'ஐஸ் பக்கெட் சவால்' வழியாக இந்த ALS பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ALSல் பாதிக்கப்பட்ட மோரிக்கு மருத்துவர்கள் சில மாதங்கள் என நாள் குறிக்கிறார்கள். "வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் அப்படி தேதி குறிக்கப்பட்ட மற்றவர்கள் போல் இல்லாமல், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது மரணம் வழியாக காட்ட இயலும் என தைரியமாக அறிவிக்கிறார். தன்னை மனித புத்தகம் ( Human book) என்றும் அமேரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிப் பேசுகிறார்.

அதை வியப்போடு பார்த்த கோடிக்கணக்கானவர்களில் பேராசிரியரின் முன்னாள் மாணவர் மிட்சும் ஓருவர். அதைப் பார்த்த பிறகு, அதாவது ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது விருப்பத்துக்குகந்த (favourite) பேராசிரியர் மோரியை அவர் வீட்டில் சந்திக்கிறார் மிட்ச். அதுவரை எந்தத் தொடர்புமற்று இருந்தபோதும் மிட்ச்சின் பெயர் சொல்லி அழைக்கிறார் பேராசிரியர்.

அதன் தொடர்ச்சியாக மிட்ச்சிடம் நீண்டகால நண்பராய் பேராசிரியர் உரையாடுகிறார். கல்லூரி நினைவுகளை இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மிட்ச்சுக்கு மோரியின் நட்பு ஆறுதலாய் இருக்கிறது. இங்கிருந்துதான் கதை தொடங்குகிறது.

பேராசிரியரின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிட்ச் பல நூறு மைல்கள் தாண்டி ஓவ்வோரு வாரமும் செவ்வாய்க்கிழமை அவரை வந்து சந்திக்கிறார்.  அதுவே "Tuesdays with Morrie". மோரி என்பது ஹீப்ருவில் "என் ஆசிரியர்"  என்றும் அர்த்தப்படுவதால், "எனது ஆசிரியருடனான செவ்வாய்க் கிழமைகள்" என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம்.

சந்திப்பின்போது ஓவ்வொரு வாரமும் அன்பு, திருமணம், குடும்பம், நட்பு, கலாச்சாரம்,மரணம் என மனித வாழ்வின் பல கூறுகளைக் குறித்து அவர்கள் உரையாடுகிறார்கள். உதாரணமாக, மரணத்தை இயற்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லும் அவர், நமக்கென குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஒரு சுகானுபவம் என்கிறார். அன்பே பூரணம், அதுவே வாழ்வில் நிரந்தரம், என தனது குடும்பத்தைக் கொண்டு வலியுறுத்துகிறார்.

இதுபோல தனது கடந்த கால அனுபவங்கள், மனதை பாதித்த விடயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக, தான் கோபித்துக் கொண்டு கடைசிவரை பேசாமல் இருந்த, இறந்த ஓரு நண்பரை நினைத்து மிட்ச்சிடம் கண்ணீர் வடிக்கிறார்.

மிட்ச் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பேராசிரியருக்குப் பிடித்த உணவுகளை வாங்கிச் செல்கிறார். அவரால் சாப்பிட இயலாத நிலையிலும் அந்த வழக்கத்தை விடமுடியாமல் தவிப்பது உணர்ச்சிபூர்வமானது.

கூடவே  ஓவ்வொரு வாரமும் பேராசிரியர் உடல்நிலையில் படிப்படியாக ஏற்படும் மோசமான மாறுதல்களை உருக்கமாக மிட்ச் விவரிக்கிறார். இடைவிடாமல் 2 மணி நேர இருமல் போல வேறு கொடுமை இல்லை என்கிறார். கடைசியில் நுரையீரல் அடைப்பால் பேராசிரியர் மரணமடைகிறார். பேராசிரியர் இறக்கும்வரை மொத்தமாகப் பதினான்கு செவ்வாய்கள் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.

இந்தச் சந்திப்புகள் மிட்ச் தனது வாழ்வில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தியதை உணர்கிறார். தன்னைப் போன்ற இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் எல்லா சமகால குழப்பங்களுக்கும் இந்த உரையாடல்கள் விடைதரும் என மிட்ச் நம்புகிறார். இவற்றைத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் சாரம் எளிதானது, அதே சமயத்தில் ஆழமானதும்கூட. இயந்திரத்தனமான உலகில் வாழும் நம்மைப் போன்ற எல்லோரும் எளிதாகப் பொருத்திப் பார்க்கக்கூடியதே.

புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த மேற்கோள்கள் சில.

**அன்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

**அன்பு செலுத்து அல்லது அழிந்து போ.

**இறப்பு ஒரு வாழ்க்கையை மட்டுமே முடிக்கிறது, ஒர் உறவை அல்ல.

**நீங்கள் இறப்பதற்கு முன் உங்களை மன்னியுங்கள். பின்னர் மற்றவர்களை மன்னிக்கலாம்.

**நீங்கள் இறந்தபிறகும்கூட அன்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயத்தில் ஓரு பேராசிரியக்கும் மாணவருக்குமான உறவைத்தாண்டி இரு தலைமுறைக்கான உணர்ச்சிகரமான உறவை  இந்தப் புத்தகம் மிக நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. வாழ்ந்த தலைமுறை வாழும் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய பாடம் அனுபவங்களன்றி வேறேன்ன இருக்க முடியும்?

இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் நல்ல அங்கீகாரம் பெற்று பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடப்புத்தகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவரேனும் இந்தப் புத்தகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது 'Tuesdays with Morrie' எனும் அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. படத்தின் YouTube இணைப்பு இங்கே

https://youtu.be/gGCYD_7taKA

பேராசிரியர்  மோரியின் பேட்டி

https://youtu.be/-LOdPzZW_aQ

நேரம் அனுமதித்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.

தலைப்பு :Tuesdays with Morrie
ISBN: 0-385-48451-8
வெளியீட்டாளர்: Doubleday

***

இந்தக் கட்டுரை ஆம்னி பஸ இணைய இதழிலும் வெளியாகியுள்ளது இணைப்பு:

http://omnibus.sasariri.com/2015/08/tuesdays-with-morrie-mitch-albom.html


Sunday, August 23, 2015

ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்

டினோசர் பொம்மைக்கு விளையாட்டாய் ஆப்பிள் ஊட்டிக் கொண்டிருந்த எனது மூன்று வயது மகள் இந்த கவிதைக்கான தூண்டுதல்.

அதுவே 'ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்' எனும் தலைப்பிட்ட
இந்தக் கவிதையானது.

**
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது 
கடப்பவர்களையெல்லாம் ஏசிக் கொண்டிருந்தது.

சில சமயங்களில்
மர்மமாய் புன்னகைக்கிறது
அழுகிறது
அர்த்தமற்றவொன்றை
முணுமுணுத்தபடியே இருக்கிறது
வேறொரு சமயத்தில்
தனக்குள் பேசிச் சிரிக்கிறது

அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி 
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
சந்தர்ப்பக் கூடாரத்தில்
நாய் 
பிணைக்கும் கயிற்றில்
கட்டப்பட்டு
சாந்தமாக ஆப்பிள்
கடித்துக் கொண்டிருக்கும்
அந்த டினோசர்

இப்பொழுது
ஏனோ
பதட்டத்தோடு 
அதை
கடந்து செல்லமுயல்கிறேன்.
***

வெளியிட்டவர்கள்:

இன்மை : கவிதைக்கான இணைய மாத இதழ்.
இணைப்பு:
http://www.inmmai.com/2015/07/blog-post_66.html

ஆனந்த விகடன்-சொல்வனம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளது (131வது இதழ்)
இணைப்பு:
http://solvanam.com/?p=40757

கவிதைக்கு செறிவூட்டிய நண்பர் வா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல!

உங்கள் மேலானக் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்.

Sunday, August 16, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

சாஹித்திய  அகாடமி   விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.

இதுவே எனக்கு ஜெயகாந்தனின்  முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே.  ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.

இந்த நாவலில் அறியாத வயதில்  கற்பிலந்த பெண்ணாக கங்கா.  ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான  முரண்பட்ட  போராட்டமே கதை.

அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி என
கங்காவின்  மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடுக்கிச் செல்கிறார். ஓரு பெண்ணின் இதயத்துக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தியை  ஜெயகாந்தன் எங்கிருந்து பெற்றார்  எனத் தெரியவில்லை.

இந்த நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் இப்போது காலாவதியானவை. ஆனால் ஒரு முடிந்து போன காலகட்டத்தின் சுவடாக வரும் தலைமுறையாலும் இந்த நாவல் பேசப்படும் என்பது உறுதி.

நாவலை படித்த கையோடு அதே பெயரில் வெளியான படத்தைப் பார்த்தேன் (1977 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது).  கங்காவாக லக்ஷ்மி நடித்துள்ளார்.
ஆனால் நாவலின் உயரத்தை படம் தொட வில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நாவலின் சாரம் குறையாமல் முழு நிறைவுடைய ஒரு படமாக எடுப்பது எளிதானது அல்ல போல. படத்தின் YouTube இணைப்பு இங்கே.
https://youtu.be/RsijKvLbTQM

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்  பெற்றவர் ஜெயகாந்தன்.  அவரது மற்ற புத்தகங்களையும் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.



வெளியீட்டாளர்மீனாக்ஷி புத்தக நிலையம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பக்கங்கள்: 447

Thursday, July 23, 2015

கேபிள் சங்கரின் பார்வையில் சினிமா வியாபாரம்

சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதிய
சினிமா வியாபாரம்  புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.

எவரும் இந்த  புத்தகத்தை  பரிந்துரைக்காவிடிலும், இணையத்தில்
பலர் எழுதிய விமர்சனங்களின் அடிப்படையில் கடந்த மாதம்
இந்தியாவில் இருந்து தருவித்து வாசித்தேன். நான் வாங்கிய நேரம் பாருங்க 90 ரூபாய் இருந்த புத்தகம் இப்போ 125 ரூபாயாம்.   அடக் கடவுளே!

கேபிள் சங்கர் - இணையதள ஏரியாவில் அறிமுகம் தேவையில்லாதவர்.
பல சிறுகதைகள், கட்டுரைகள், திரை விமர்சனஙகள் வழியாக
பரிட்சமானவர்.  மேலும் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதேன்றால் சினிமாவை
தவிர்த்துவிட்டு எழுத இயலாது என்பது  நிதர்சனம். அந்தஅளவுக்கு
சினிமா நம்முடைய பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அப்படிப்பட்ட சினிமா எனும் கலைவடிவம் நடிப்பு, பாடல், நடனம், கதை, தொழில்நுட்பம் எனும் பல கோணஙகளை உடையது.  இந்த புத்தகத்தில் சினிமாவை அதன் வியாபரக் கோணத்தில் அனுகியிருக்கிறார் கேபிள் சங்கர்.

திரைத்துரையில் விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் எனும் தனது அனுபவங்களின் மூலம்  எழுதியிருக்கிறார். புத்தக முன்னுரைக்காக அதிகம் மெனக்கெடாமல் ஆசிரியர் சுயஉரையுடன் முடித்துக் கொண்டுள்ளார்.

இது  'லைட் ரீடிங்' எனும் வகையைச் சார்ந்த புத்தகம். எளிய சரளமான நடை.  ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியதால் சாமானியர்கள் தலை சொறியத் தேவையில்லை.

ஒரு படம் தயாரிக்கப்பட்டபின் திரைக்கு வரும் வரை நடக்கும் பல விடயங்ககளை புத்தகம் விரிவாக விளக்குகிறது.

விவசாயத்தில் விவசாயிகளை விட பெரும்பாலும் இடைத்தரகர்கள் அதிகம் பயனடைவது போல, சினிமாவிலும் தயாரிப்பாளர்களை விட இடைத்தரகர்கள் அதிகம் லாபம் அடைவது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இதேபோல், சினிமா வியாபாரத்தில் உள்ள பல அடுக்குகள் படிக்கும் வாசகர்களைக் கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும்.

ஹாலிவுட்சினிமாவையும் கூட ஆசிரியர் கொஞ்சம் தொட்டிருக்கிறார்.

சினிமா வியாபாரத்தைப் பற்றி எழுதிய ஆசிரியர் தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் பற்றி மூச்சு விடவில்லை.

ஹாலிவுட் தரவுகளை தரும் ஆசிரியர் துரதிருஷ்டவசமாகத்  தமிழ் சினிமா துறை பற்றி விரிவான மற்றும் ஆழமான தரவுகளையும் கொடுக்கவில்லை.

உதாரணமாக. தமிழ் சினிமாவின்  மொத்த வருடாந்த வருவாய் என்ன ? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில்  PERCENTAGE என்ன ? வருடாந்த கேளிக்கை வரி  வருவாய் என்ன ?  போன்ற நிறைய  'என்ன' க்கள்.

இது போலவே புள்ளி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தால்  மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

திரைப்படத் துறைக்குப்   புதியவர்கள் அல்லது  திரைத்துறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நுால்: சினிமா வியாபாரம்
பிரசுரிப்பவர்: மதி நிலையம்.
கிடைக்கும்: Discovery Book Palace

Sunday, July 5, 2015

கமலின் பாபநாசம் - விமர்சனம்

ஜூலை 4ல்   வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொடர்சியான மூன்று நாள் விடுமுறையில் கமலின் பாபநாசம் படம் சென்று பார்த்தோம்.

நான் பெரும்பாலும் திரை விமர்சனஙகள் எழுதுவதில்லை என்பது
என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்ர்களுக்கு தெரிந்து இருக்கும்.

எழுதாதற்கு காரணம் திரைப்படஙகள் அதிகம் பார்பதில்லை என்பது
மட்டுமல்ல, பார்க்கும் ஒன்றிரண்டும் திரையரங்குகளில் அல்ல
என்பதே உண்மை.  திரையரங்கத்துக்குச் சென்று அஙகே தொழில்நுட்பத்துடன் ரசிகர்கலுடன் பார்க்கும் படங்களை மட்டுமே ஒருவரால் முழுமையான விமர்சனத்தை தர இயலும் என்பது எனது கருத்து.

எந்த ஒரு வெளீக் குழப்பமின்றீ திறந்த மனதுடன் படம் பார்க்கும்
ரசிகர்கள் இன்றுஅரிதாகி இருக்கிறார்கள் என்பது உண்மை. Open Minded என்று ஆங்கிலத்தில் சொல்வது போல,

புதிதாக வரும் திரைபடத்தை பார்ப்பதற்க்கு முன்பே  சமூக வலைதலங்கள், தொலைகாட்சி,பத்திரிகைகள் என  எங்கு பார்த்தாலும் படத்தைப் பற்றீ பேசிப் பேசி  ரசிகனை ஒரு குழப்பதுடனே திரையரங்கத்துக்கு அனுப்புகிறார்கள். ரசிகர்களூம் எதோ ஒரு  எதிர்பார்ப்புடனேயே படம் பார்க்கச் செல்கிறார்கள்.

அப்படி செல்லும் ரசிகர்களீன் எதிர்பார்ப்பை எத்தனைப் படங்கள்  சரியாக பூர்த்தி செய்கின்றன என்பதை உங்களீன் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

நான் படத்தை பார்க்கும் வரை பாபநாசம் பற்றீ பேட்டிகள், அறீமுகஙகள், குறீப்புகள்  மற்றம் விமர்சனத்தையும் பார்க்கவில்லை.

கமல் மற்றும் கவுதமி நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெற்றி கதை என்பதைத் தவிர எந்த ஒரு முன் அறிமுகமும் இல்லை.

பாபநாசம்-   எதிர்பாராத விதமாக இக்கட்டில் சிக்கிய ஒரு குடும்பத்தின் கதை.
அந்த சிக்கிய குடும்பத்தை குடும்ப தலைவராக கமல் எப்படி
காப்பாற்றுகிறார் என்பதை அருமையான திரைக்கதையில் சொல்லியிருகிறார்
இயக்குனர் ஜீத்து ஜோசப்.

சுயம்புலிங்கமாக கமல். அவர் மனைவி மற்றும் இரு மகள்களிடம் பாசத்தை பொழிவதாகட்டும், இல்லை அப்பாவியாக  சினிமா பைத்தியமாக சுற்றுவதாகட்டும் கமலின் பாத்திரப்படைப்பு வாவ் !,

தன் கதைக்கு தேவையான படி கமலை மிக அருமையாக நடிக்க வைத்தது
இயக்குனரின் அபார திறமை. மலையாளத் திரைப்பட இயக்குநர் ஃபாசில் வரிசையில் இன்னொருவர் நமக்கு.

தொடக்கத்தில் கமல் மற்றும் அவரது குடும்பத்தின் அறிமுகம் என தொடரும் காட்சிகளில் சிறு தொய்வு தெரிகிறது. அடுத்தபாதியில் விட்டதை பிடித்து விடுகிறார் இயக்குனர்.

இது ஒரு திரிலர் என்பதை படத்தைப் பார்க்கும் வரை தெரியவில்லை. அடுத்து என்ன என்ன என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் .
இசையில் ஜிப்ரானும் அதற்கு மிக அழகாக உதவியுள்ளார். மொத்தம் இரண்டு பாடல்கள், எழுதியவர் நா. முத்துக்குமார்.

நட்சத்திரத் தேர்வும் மிக கச்சிதம், எல்லா பாத்திரஙகலும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது பொருந்தும்.

மற்றும் மலையாளத்தில் கையாளப்படும் சில நுட்பங்கள் தமிழுக்கு கொஞசம் புதிசு. உதாரணத்துக்கு மனைவி கவுதமியை கமல் தேடி ஒவ்வோரு அறையாக செல்வது ரசிக்கும் படி படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் திருநெல்வேலி தமிழ் பேசி நடிக்கிறார் கமல், மாதவனின் டும்டும் டும் படத்திற்க்கு பின் ரசித்த இரண்டாவது வட்டார வழக்கு படம்.

இடி மழையுடம் வரும் காட்சிகள், யார் ஒளிப்பதிவாளர் எனக் கேட்க வைக்கின்றன. முழு திருப்தியாக சமிப காலங்களீல் ரசித்த படம் இது.

இவ்வளவு திறமையான இயக்குனர், நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைர்களூம் இத்தனை நாள் எங்கிருந்தார்கள் என்பதே.படம் பார்த்துவிட்டு வெளீயே வரும் போது என் யோசனையாக இருந்தது.

பாபநாசம் - அமெரிக்க  தமிழ்திரை ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டம் என
நினைக்கிறேன்.

Sunday, June 14, 2015

வாழ்த்துக்கள் மாணவிகளே !!!

கடந்த 2014ம் ஆண்டு  டிசம்பரில் தொடங்கப்பட்ட சிறகுகள் அறக்கட்டளை வழியாக எங்களது இரண்டாவது பங்களிப்பை கடந்த வாரம் செய்துள்ளோம்.


கடந்த ஜனவரியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை  அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நூலக விரிவாக்கத்துக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்கியது உங்களூக்கு நினைவிருக்கலாம்.

தற்போது புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தோம்.
கிராமபுரத்தில் இருந்து வரும் ஏழ்மையான மற்றும் சாதாரணமான மாணவர்கள் பலர் படிக்கும் பள்ளி இது. சமீபத்தில்தான் உயர்நிலைப் பள்ளியாக  விரிவாக்கமடைந்துள்ளது. இந்தப் பள்ளியை தேர்வு செய்ய மற்றோரு முக்கியக் காரணம், இந்தப் பள்ளி நான் படித்து வளர்ந்த கிராமத்திற்கு அருகில் இருப்பதுதான்.

முன்பே சொன்னது போல் சிறகுகளின் தலையாய  இலக்கு திருவாரூர் வட்டாரத்தில் உள்ள வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது. இது நாம் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுப்பதற்கான மற்றொரு வழியாகவே நான் நினைக்கிறேன். ஆங்கிலத்தில் giving back to society என சொல்லுவார்களே அது போல.

இபோது கடந்த மாதம் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு வகுப்புத் தேர்வு முடிவுகள பார்க்கலாம். தமிழக அளவில் இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர், 93.4 சதவீத வெற்றி.  திருவாரூர் மாவட்டம் 83.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சதவீகிதத்தில் தமிழத்தை ஒப்பிட்டும் போது திருவாரூர் மாவட்டம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் அதிகம். கற்றலிலும் கற்பித்தலிலும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். உரியவர்கள் இதைச் செய்வார்கள் என  நம்பிக்கை கொள்வோம்.

இப்பள்ளியில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில்  பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
மாணவ மற்றும் மாணவியருக்கு சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில்
பரிசுகள்  வழங்கப்பட்டன.

பரிசு விவரங்கள்:

முதல் மதிப்பெண்:
பி. ஐஸ்வர்யா  (P. Aiswaraya)

இரண்டாவது மதிப்பெண்:
என். வர்ஷா (N. Varsha)

மூன்றாவது மதிப்பெண்:
எஸ். அஜித்குமார்( S.Ajithkumar)

முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
பரிசாகத் தலா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசாகத் தமிழ்பாடத்தில் முதல்  மதிப்பெண் பெற்ற மாணவி
ஆயிஷா ரெஹெனா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறு பரிசு பெற்றார்.

இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதோனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.

பள்ளியில் ஜுன் எட்டாம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
முதன்மைக் கல்வி அலுவலர்  கலந்து கொண்டு  மாணவர்களை
பாராட்டி இந்த பரிசுகளை வழங்கினார். மேலும் பரிசுபெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர்.

பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும்  சிறகுகள் அறக்கட்டளை சார்பில்
மனதார வாழ்த்துகிறோம்.

அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..

நிகழ்வில் இருந்து ஒரு புகைப்படம்