Sunday, March 13, 2016

'நோ' சொன்ன அந்த நடிகை

சென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம்.

சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந்த நள்ளிரவில் விமானம் சென்னையை  நெருங்க நெருங்க மனதுக்குள் ஏதோ ஏதோ எண்ணங்கள்  வந்து அலைகழிக்கத் தொடங்கின.

சென்னையில் கடும் மழை,  வெள்ளம்  ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் இவற்றை இணையத்தில் பார்த்திருந்த எனக்கு அவை கண் முன்னால் படமாய் ஓடத் தொடங்கியிருந்தது.

குறிப்பாகத் தண்ணீரில் மிதந்து உலகத் தமிழர்களையெல்லாம் கண்ணீரில் நனையவிட்ட சென்னை விமான நிலைய ஓடுதளத்தைப் பார்க்க மனது பரபரத்துக் கொண்டிருந்தது.


ஆனால் எதிபார்த்ததற்கு மாறாக சென்னை விமானநிலையம் பேரழிவின் எந்தவிதச் சுவடுமின்றி வழக்கம் போல் இருந்தது.

விமான நிலையத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களை பார்த்தபடியேச் சென்றேன். அவற்றைப் பூம்புகார் நிறுவனம் மிக நேர்தியாக வடிவமைத்திருக்கிறது. அந்தப் படம் கீழே.


வழக்கத்திற்கு மாறாக குடிபெயர்தல் (Immigration) கூடச் சில நிமிடங்களில் முடிந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் நம் கண்களில் முதலில் பளிச்சென்று படும்படி ஓரு பெரிய பதாகை (Banner) வைத்திருந்தார்கள்.

அதில் "அப்பலோ மருத்துவமனை உங்களை அன்புடன் வரவேற்கிறது" !! என்று எழுதியிருந்தது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனப் புரியாமல் பெட்டிகளை எடுக்க விரைந்தேன்.

ஆனால், பயணிகளின் உடைமைகள் காலதாமதாகதான் வந்து சேர்ந்தது.
ஓரு மணி நேரம்  காத்திருந்து எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வரும் போது சீருடை அணிந்த விமான நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா துபாயிலிருந்து வரும் விமானத்தில் வந்திருப்பதாகச் சொன்னாரகள்.

பெரும்பாலும் பிரபலங்களை உள்ளூர் விமானநிலையத்தில் மிகச் சாதாரணமாகப் பார்த்திருந்த எனக்கு சர்வதேச விமான நிலையத்தில் அதுவும் பின்னிரவு 3 மணிக்கு இந்தச் செய்தி வியப்பாக இருந்தது.  அப்பொழுதுதான் துபாயிலிருந்து வந்த திரை நட்சத்திரங்கள் ஓரு  கும்பலாக அடுத்த பேகேஜ் கரோசல் அருகே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

அவர்களில் சில நடிகர்களை என்னால் எளிதாக  அடையாளம் காண முடிந்தது.  அவர்கள் நடிகர் ஜெயம் ரவி, அருண் விஜயகுமார் போன்றோர். சிறிது நேரத்தில் விமான ஊழியர்கள் ஜெயம் ரவியை சுத்திவளைத்துப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.

நடிகர் ஜெயம் ரவி


துரதிஷ்டவசமாக எனக்கு நடிகைகளை அடையாளம் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஓருவேளை அவர்கள் மேக்கப் இல்லாமல்    இருந்திருக்கலாம் அல்லது நான் காலத்தில் பின்தங்கியிருக்கலாம். படத்தைத் தருகிறேன் முடிந்தால் நீங்களே யாரையேனும் அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். 


பொதுவாக பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அவ்வளவாக எனக்கு ஆர்வமில்லை. நான் முதன் முதலில் அருகில் சென்று பேசி ஆட்டோகிராப் வாங்கிய பிரபலம்  கவிஞர் வைரமுத்து. இப்போது எனது ரசனை உங்களுக்கு புரிந்திருக்குமே.

எனது உடைமைகளை டிராலியில் நான் தள்ளியபடி வெளியே வரும் போதுதான் என் முன்னால் சென்று கொண்டிருந்த அந்த நடிகையை கவனித்தேன்.  சிறிது இடைவெளியில் தானே செல்கிறார் ஓரு புகைப்படம்  எடுக்கலாம் என்ற திடீர் ஆர்வத்தில் 'ஓரு புகைப்படம் எடுக்க உங்களுக்கு ஆட்சேபணை உண்டா ?' என ஆங்கிலத்தில் கேட்டேன். 

அவர்  'இல்லை ' என மறுத்திருந்தால் அதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவர் திரும்பி தமிழில்  சொன்ன பதில் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த பதில் யதார்தமானதா ? இல்லை நழுவும் உத்தியா ?  இல்லை தமிழ் திரையுலகில் நடிகையரில் இன்றைய நிலையைச் சொல்வதா ?  அந்த நடிகை ஓன்றும் ஓரிரு படங்கள் நடித்து பின்பு காணாமல் போனவரில்லை எனக்கு குழப்பமாயிருந்தது.

அதைப் பற்றி அடுத்தப் பதிவில் பேசுவோம். அதுவரை யார் அந்த நடிகை ? என ஊகித்து வையுங்கள். அவர் யார் என நீங்கள் ஊகிக்க இங்கே ஓரு சிறிய குறிப்பு .
அந்த நடிகை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்பு உச்ச நடிகருடன் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர்.

தொடருவோம்..

படங்கள் நன்றி;
PIB- Press Information Bureau 

Tuesday, March 8, 2016

அந்த இளம் பெண் செய்தது சரியா?


    கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை 
மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் சென்னை சென்ற வந்த எனது பயண அனுபவங்கள்.

நான் பயணத்தை ஓத்திப் போடாமல் டிக்கெட்டை ரத்து செய்ததால் பெரிய தொகையை இழக்கும்படியாகிவிட்டது. நான் எதேர்சையாக டிராவல் இன்ஷியூரஸ் எடுத்திருந்ததால் பெரிய இழப்பின்றி தப்பித்தேன். ஆனால் அதை அவர்களிடம் இருந்து வாங்குவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

உலகம் முழுவதும் பயணக் காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களின் பாடு பெரிய திண்டாட்டம் தான் போல. உதாரணத்திற்கு பணம் செலுத்திய உடனே மின்னஞ்சலில் காப்பீட்டை அடுத்த நொடியில் அனுப்பினார்கள். ஆனால் இழப்பீடு என அணுகும் போது மட்டும் அதற்கான பதிலை ஆற அமர யோசித்து இரண்டு வாரம் கழித்து தபாலில் நிராகரிக்கப்பட்டது என்று அனுப்புகிறார்கள்.

நானும் விடாப்பிடியாக பக்கம் பக்கமாக பதில் மேல் பதில் எழுதி ஓருவழியாக அவர்களிடமிருந்து நஷ்டயீட்டை வாங்கிவிட்டேன்.

டிக்கெட்டை இந்த முறை கத்தார் எர்வேயிஸ் எடுத்திருந்தேன். அதனால் பயணத்தின் முதல் விமானம் மியாமியிலிருந்து கதார் நாட்டின் தோஹா வரை பின் அங்கிருந்து சென்னை வரை. 


வழக்கமான கெடுபிடிப் பாதுகாப்புச் சோதனைகள். ஓவ்வொரு முறையும் கெடுபிடிகள் அதிமாகின்றதே தவிர குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மியாமிலிருந்து புறப்பட்ட அந்த முதல் விமானத்தில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. ஓரு டிக்கெட் எடுத்த எனக்கு சேர்ந்தார்போல் மூன்று இருக்கைகள் தந்தார்கள். மிக வசதியாக போயிற்று. கை, காலை நீட்டினேன்.

அதில், எனது குளிர் கண்ணாடியைத் தொலைத்ததைத் தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்வது மாதிரி நடக்கவில்லை. சன் கிளாஸுக்கு குளிர் கண்ணாடி என்பது சரியான மொழிபெயர்ப்பா? தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் சரிசெய்து விடுகிறேன். அதுபோல சைவ உணவுக்கும் பெரிதாக பிரச்சனையில்லை. அதில் ருசியெல்லாம் பார்ப்பது நியாமாயிருக்காது என நினைக்கிறேன். அந்த விமானத்தில் கையிலிருந்த புத்தகங்களை வைத்து சமாளித்துவிட்டேன். அதைப் பற்றி பிறகு விரிவாக எழுதலாம்.

இரண்டாவது விமானத்தில் பெரும்பாலும் தமிழர்கள்தான் எனச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதிலும் ஓன்றிரண்டு வெளிநாட்டுத் தலைகளும் உண்டு.  அந்த விமானத்தில் பல சுவாரஸ்யங்கள்.

குழந்தைகளுடன் இருந்த குடும்பங்களைப் பார்க்க முடிந்தது. சொல்லிவைத்தது போல் எல்லோரும் தங்கள் இருக்கையின் முன்னால் இருந்த தொடுதிரை  (Touch Screen) டிவியில் தமிழ் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  சினிமாக்களில் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அடர் வண்ண உடைகளில் பெரிய மீசை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர். திரையில் தேவர் மகன் போல் பெரிய மீசைவைக்க அண்ணனும் தம்பியும் குத்தகை எடுத்துவிட்டார்களா தெரியவில்லை.

இரண்டு வரிசைகள் தள்ளி உட்கார்ந்திருந்த ஓரு வெளிநாட்டு பெண்மணியிடம் அருகிலிருந்த சுத்த தமிழ் மங்கையொருத்தி ஆங்கிலத்தில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பையும் குதுக்காலத்தையும் அவள் சகத் தமிழ் பயணியிடம் கண்டிப்பாக காட்டமாட்டாள் என்பது என் கணிப்பாயிருந்தது.

கவனித்த இன்னோரு விஷயம், புத்தகவாசிப்பு. ஓருவர் கூட மருந்துக்கு
புத்தகங்களை தொட்டது போல தெரியவில்லை.ம்ம்.. எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த புஷ்டியான கூட அதற்கு விதிவிலக்கில்லை. அவன் தன் பங்குக்கு ஆங்கிலக் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் வயதுக்கு மிஞ்சிய அளவில் இருந்த அவனுக்கு வீட்டில் நல்ல ஊட்டம் போலிருக்கிறது. நான் தெரியாதனமாக அவருடைய அப்பாவிடம் ' என்னங்க பையனுக்கு 4 வயசு இருக்குமா ? ' எனக் கேட்டேன். ' இல்லங்க, 2 தான் '  என்று முறைத்தவர் கடைசிவரை என்பக்கம் திரும்பவே இல்லை. நான் என்னை நொந்து கொண்டேன்.

அந்த இளம்தாய் விஷயத்திற்கு வருகிறேன்.  அவர் பின் சீட்டில் இரண்டு அல்லது மூன்று வயதுடைய சிறுமியுடன் இருந்தார். சிறுமி அம்மாவைப் போல பெரிய கண்களுடன் துறுதுறு வென்று இருந்தாள்.

அவர் அந்தச் சிறுமியை மடியில் அழுத்திபிடித்து  தட்டிகொடுத்து தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்; பலனில்லை. அடுத்த முயற்சியாக ஆங்கில ரைமிஸில் தாலாட்டு பாடத் தொடங்கினார். தமிழ்நாட்டிலும் பெரும்பாலான குடும்பங்களின் இன்றைய நிலை இதுதானா? . குழந்தைகளுக்கு தாலட்டையே ஆங்கிலத்தில் பாடத் தொடங்கியபின். அப்புறமென்ன? . ஆங்கில வழிக் கல்வி, ஆங்கிலத்தில் கார்ட்டூன் , படித்தால் ஆங்கில புத்தகங்கள் எனத் தொடராமல் என்னதான் செய்வார்கள்.

அந்த பெண்ணுக்கு குரலும் மிக இனிமையாகத்தான் இருந்தது. ஆனால் சிறுமிதான் கேட்கும் மனநிலையில் இல்லை. நான்கு, ஐந்து பாடல்களை தொடர்ந்து பாடியும் சிறுமி தூங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அந்த தாயும் என்னதான் செய்வார்- பாவம். ஓருகட்டத்தில் பொறுமையிழந்து விட்டு விட்டார். உடனே விட்டால் போதுமென அந்த சிறுமி சீட்டில் எழுந்து நின்று மீண்டும் விளையாடத் துவங்கினாள். அருகில் இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போதும் பக்கத்திலிருந்த அவளுடைய கணவன் எந்தவித அலட்டலுமின்றிக் காதில் ஹெட்போனுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். 

நான்  சும்மா இல்லாமல் கடைசியில் இருக்கையிலிருந்து எழுந்து வரும் போது அந்த பின் சீட் பெண்ணிடம்  'ரொம்ப நல்லா பாட்டு பாடுனிங்க..' என பாராட்டிவிட்டு வந்தேன். அவர் அதை தன் கணவனின் காதருகில் சொல்லி வெட்கத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்...

அதைக் கேட்ட அந்த கணவனின் முகம்போன போக்கை, நீங்கள் பார்திருக்க வேண்டுமே..

தொடருவோம்..

படங்கள் நன்றி;
www.qatarairways.com

Sunday, March 6, 2016

பங்களா கொட்டா - நூல் வெளியீட்டு விழா

அன்றும் இன்றும் காதலர் தினமெல்லாம் எனக்கு மற்றுமொரு நாள் போலத்தான். ஆனால் இந்த வருட காதலர் தினம் முக்கியமாகிவிட்டது. அதற்கு காரணம் எனது புத்தகவெளியிட்டு விழா.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் எனது முதல் புதினம் (நாவல்) "பங்களா கொட்டா" வெளியிடப்பட்டது.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

அந்த அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு:




விழாவினை பற்றி பார்க்கும் முன் நாவலை பற்றிக் கொஞ்சம் -  (பின் அட்டையில் இருந்து) வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. இந்த நாவலின்  கதைக் களம் தஞ்சை மண்.


பங்களா கொட்டாவிற்கு பிரான்சில் வசிக்கும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அற்புதமானதொரு அணிந்துரை தந்துள்ளார்.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன். முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

விழாவில் இருந்து சில துளிகள்:

மாலை 6 மணி என அறிவித்திருந்தாலும், சென்னைப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு 7 மணி அளவில் விழா துவங்கியது.



(மேலே படத்தில் இடமிருந்து டிஸ்கவரி வேடியப்பன், அகநாழிகை பொன் . வாசுதேவன், கவிகோ, ஆரூர் பாஸ்கர், எழுத்தாளர் சிவகுமார், ஆசிரியர் வளர்மதி)

எழுத்தாளர்  க.சீ.சிவகுமார் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்  ‘கன்னிவாடி’ உள்ளிட்ட பல சிறுகதை நூல்களின் ஆசிரியர். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர்.

பாவையர் மாத இதழை தொடர்ந்து வெற்றிகரமாக வெளியிட்டுவரும் ஆசிரியர் வான்மதியும் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்தான்.

கவிக்கோ  ஞானச்செல்வன் அவர்கள் எனது மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பில் தமிழாசிரியர். 'பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!' எனத் தொடர்ந்து பேசியும், ஊடகங்களில் எழுதியும் வருபவர். அவரை பற்றி தனியாக ஓரு பதிவு எழுதுமளவுக்கு பல்லாண்டுகளாக அரும் தமிழ்ப் பணி ஆற்றிவருபவர்.

சிவக்குமார் கதைச் சுருக்கத்தையும் அதன் முக்கிய நிகழ்வுகளையும் தொட்டுக் காட்டினார். எனக்கு சிவக்குமார் நேரடியாக அறிமுகம் இல்லாவிடினும்,  நாவலில் ஓரு ஆன்மா இருப்பதை உணர்ந்தேன் என அவர் குறிப்பிட்டது நல்ல உணர்வாக இருந்தது.

கவிக்கோ அவர்கள் நூலை வெளியிட்டு  அருமையான  மதிப்புரை செய்தார். கவிக்கோ அவர்கள் பாராட்டியது வசிஷ்டர் வாயால் வாழ்த்து பெற்றது போல இருந்தது. அவர் பேச்சினுடே சில பிழைகளையும் சுட்டிக்காட்டினார். திருத்திக் கொள்வோம்.

கவிக்கோவின் மாணவன் எனச் சொல்லிக் கொள்வதே பெருமை. அதிலும் அவர் கரங்களால் எனது நூல் வெளியிடப்பட்டது என்பது  'ராஜபாட்டை ' போல. அவருக்கு நன்றிகள் பல.

விழாவின் நிறைவாக எனது ஏற்புரையில்  'அந்த காலம் நன்றாக இருந்தது ' எனும் கவிஞர் மகுடேஸ்வரனின் கவிதையை மேற்கோள் காட்டி, இந்த நாவலின் பின்புலத்தைப் பற்றி பேசினேன்.

விழாவில் கவிகோ, எழுத்தாளர் சிவகுமார் மற்றும் பொன். வாசுதேவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படங்கள் கீழே.





கவிகோ - இந்த எழுத்தாளருக்கு (!)  பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தபோது.


விழாவில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்த அனைவரும் எனது நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள்.

இரண்டு எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்து விழா ஏற்பாடுகளையும் மிகக் குறுகிய நேரத்தில் செய்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு மனமார்ந்தநன்றிக்குறியவர்கள்.

இதுப் போல பல நூல் வெளியீடுகளைத் தொடர்ந்து டிஸ்கவரி புத்தக நிலையத்தில் செய்கிறார்கள். வாய்ப்பு உள்ளவர்கள் முடிந்தால் எட்டிப் பார்க்கலாம். ஏதேனும் ஓரு உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் அல்லது பிரபல கவிஞர்களைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

விழாவிற்கு சென்னையிலிருக்கும் நண்பர்களை  மட்டும் அழைத்திருந்தேன். இலக்கியவிழா என யோசிக்காமல் பெரும்பான்மையானவர்கள் தைரியமாக வந்திருந்து சிறப்பித்தனர். ஓரு இலக்கிய விழாவிற்கு போதுமானதோரு கூட்டமாக இருந்தது. அவர்கள் வாழ்க!.

இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். புத்தகத்தை அமேரிக்காவில் இருந்தும் வாங்கலாம்.

முடிந்தால் இதன் முகநூல் (Facebook) பக்கத்திலும் உங்கள் விருப்பத்தை (LIKE) இடுங்கள்.

பங்களா கொட்டா நாவல் தலையணை அளவு எனப் பயப்படத் தேவையில்லை. மொத்தமாக 128 பக்கங்கள் தான். தொடர்ச்சியாகச் சில மணி நேரங்களில் வாசித்துவிட இயலும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி.

Sunday, February 28, 2016

விசாரணை - விமர்சனம்

சில வாரங்களுக்கு முன் சென்னையில் நான் பார்த்த படம்  விசாரணை.
படத்துக்குள் போகும் முன் என்  கவனத்தைக் கவர்ந்த சில-

வித்யா  தியேட்டர்- தாம்பரம் பஸ்டாண்டில் இருந்து நடக்ககூடிய தூரம்தான். இந்த விஷயம் தெரியாமல் நான் தியேட்டர் விஜயா என ஆட்டோ நண்பரிடம் சொல்ல அவர்  என்னை தாம்பரம் விஜயா மருத்துவமனையில் இறக்கிவிட. கடைசியில் ஓருவழியாக வித்யாவைக் கண்டுபிடித்தோம்.

அது மஞ்சள் சுண்ணாம்பு அடித்த ஓரு பழைய கட்டிடம்.  ஓரு காலத்தில் கண்டிப்பாக கட்அவுட்டுகள், பாலாபிஷேகங்கள், பிளாக் டிக்கெட்டுகள் என நல்ல பரபரப்பாக இருந்திருக்கும். இன்று, பொலிவிழந்து, காற்றுவாங்கியபடி சீண்டுவாரின்றி இருக்கிறது.

படம் போடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்புவரை அங்கே ஜனநடமாட்டமில்லை. கடைசி 10-15 நிமிடங்களில்தான் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது.


முன்பெல்லாம் ஓரு தியேட்டரில் ஓரு படம் ஓடும். மிஞ்சினால் பகல் காட்சியில் இன்னோருபடம் ஓட்டுவார்கள். இப்போழுது 3 காட்சியிலும் 3 வெவ்வேறு படங்களை ஓட்டுகிறார்கள்.  2015ல் மட்டும் 200க்கும் அதிகமான படம் வந்திருக்கிறன. இப்படி, வருடத்துக்கு இத்தனைப் படங்கள் வந்தால் என்னதான் செய்வார்கள் ? சொல்லுங்கள்.

 இரண்டு வகையான டிக்கெட்கள் மட்டுமே தந்தார்கள், முதல் வகுப்பு 100 ரூபாய். பால்கனி 150 ரூபாய். முதல் வகுப்பு முழுமையாக நிரம்பியது. அதிலும் படம் பார்க்க என்பது வயது முதியவர்கள் கூட வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

அப்புறம், படத்துக்கு வரும் ரசிகர்களையும் அவர்களின் உடமைகளையும் சுத்தமாக சோதனை செய்துதான் உள்ளே அனுப்புகிறார்கள். விசாரித்தால் ரசிகர்கள் வெளியிலிருந்து புகை பொருட்கள், மது போன்றவற்றை கொண்டுவருகிறார்களாம். கொடுமைடா சாமி!..

ரசிகர்கள் தங்களுக்குத் தரப்பட்ட டிக்கெட் எண்ணுள்ள சீட்டில்தான் அமர வேண்டுமாம். அதனால் படம் ஆரம்பித்தபின் வந்தவர்கள் இருட்டில் தட்டுத்தடுமாறி இருக்கைகளை தேடி அமர்ந்தனர். உதவிக்கு நிர்வாகத்திலிருந்து யாரும் வந்தமாதிரி தெரியவில்லை. ம்ம்..

ஆனால், தற்போதைய மல்டி பிலக்‌ஸ் தியேட்டர்கள் போலில்லாமல் உள்ளே நிறைய இட வசதியோடு தாராளமாய் இருந்தது.  அதுபோல பழைய தியேட்டராக இருந்தாலும் டிஜிட்டல் ஓலி தொழில் நுட்பத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

தியேட்டர் புராணம் போதும். படத்தை பற்றி பார்ப்போம். விசாரணை  -தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் படம். நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார்.

இது எழுத்தாளர் சந்திரமோகன் எழுதிய 'லாக்கப்' எனும் உண்மை புதினத்தை தழுவியது. ஆங், தமிழ்ல புதினம்னா நாவல்ங்க. அப்புறம் இதுவோரு யதார்த்த வகை திரைப்படம். அதாங்க கம்பியூட்டர் விளையாட்டு, பரந்து பரந்து சண்டை, பாட்டேல்லாம் கிடையாது.


படத்தில் முதல்பாதி - தமிழ் இளைஞர்கள் நான்கு பேர். ஆந்திரா போலிஸ் அங்கே பிழைக்க வந்த அவர்களை செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. அப்போது ஆந்திரா வரும் ஓரு தமிழக போலிஸ்காரர் ஓருவர் (சமுத்திரகனி) அவர்களை அங்கிருந்துக் காப்பாற்றி தமிழகத்துக்கு அழைத்து வருகிறார்.

இரண்டாம் பாதி- தமிழகம் வரும் நான்கு பேரில் ஓருவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். மீதமுள்ள மூவரும் தமிழக போலிஸீன் கட்டுப்பாட்டில் கடைசில் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் முடிவு.

முதல்பாதி போலிஸ் சித்திரவதை என கொஞ்சம் தொய்வடைவது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் விட்டதை பிடிக்கிறார் இயக்குனர்.

படத்தில் சமுத்திரகனி வரும் சில காட்சிகளில் விசில் பரந்தது. தமிழ்நாட்டில் ரசிகர்களுடன் படம் பார்ப்பது ஓரு அனுபவம் தான். நடிகர் சமுத்திரகனி திரையுலகில் இன்னும் பல சாதனைகள் செய்வார் என எதிர்பார்க்க வைக்கிறார். பார்க்கலாம்.

படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இணையத்தில் இருப்பதால் ரொம்ப எழுதத்தேவையில்லை. குறிப்பாக படம் பார்த்துவிட்டு வரும்போது நாம் எந்தமாதிரியான பாதுகாப்பற்ற ஓரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி நம் மனதை அழுத்துகிறது. அதுதான் படத்தின் வெற்றியா? - தெரியவில்லை. நீதி, தனி மனித உரிமைகள், விசாரணைகள் இவற்றில்  வெளிப்படைத் தன்மை என இந்தியா கடக்க வேண்டிய தூரம் கண்களுக்கே புலப்படவில்லை.

அப்புறம் படம் வெளிவந்ததிலிருந்து பல பாராட்டுகளை பெற்றிருக்கிறது. வெனீஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பிரிவில் விருதுபெற்றிருக்கிறது.  அந்த விருதை எழுத்தாளர் சந்திரமோகன் பெறுவதை படத்தில் கடைசியில் காட்டுகிறார்கள். நல்ல அங்கிகாரம், நல்ல கெளரவம்.

ஆனந்த விகடன் வார இதழ் கூட பல வருடங்களுக்கு பின் இதற்கு நிறைய மதிப்பெண் வழங்கியிருக்கிறதாம். இந்த மிடியாக்களின் மதிப்பெண்கள் மீதேல்லாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை.

ஆனால், இந்தப்படம் தமிழ்திரையில் ஓரு மைல் கல். ஐந்து பாட்டு, மூன்று சண்டை எனும் வட்டத்திலிருந்து வெளியே வந்து நிற்கும் படம். நம்பிக்கையுட்டுகிறது. முக்கியமாக டாக்குமெண்டரி போலில்லாமல் மக்கள் ரசிக்கும் கலைப்படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக பாருங்கள்.!

படம் நன்றி;
http://www.google.com

Tuesday, February 23, 2016

ஞயம் பட வரை - வியாபாரம்?

'ஞயம் பட வரை' - எனும் தலைப்பில் 'ப்ரதிலிபி' இணையதளம் நடத்தும் ஓரு கட்டுரைப் போட்டியை பற்றி  வா.மணிகண்டன் மற்றும் முத்துநிலவன் முதலானோர் கடந்த மாதம் தங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தனர்.  அப்போது தரப்பட்ட தகவல் இதோ.

அ) தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக்கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

இதில் அவர்கள் -(ப்ரதிலிபி) போட்டிக்கான தேர்ந்தேடுக்கும் முறைகளைப் பற்றி எந்த தகவலையும் தரவில்லை. ஆனால் கட்டுரைகளை அவர்களுக்கு சமர்ப்பித்தபின், கடைசி நாளில் எல்லா கட்டுரைகளையும் தங்கள் தளத்தில் வெளியிட்டுவிட்டு, தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஓரு ஈமெயிலை அனுப்பியிருந்தனர். அதில் தரப்பட்ட தகவல் இதோ,


கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்:
நடுவர் குழு – நடுவர்கள் கட்டுரைகளை படித்து அவற்றை மதிப்பீடு செய்வார்கள்.
வாசகர் விருப்பம்:
  • இங்கு இருக்கக்கூடிய உங்களது கட்டுரையின் சுட்டியை முடிந்த வரையில், உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் (பேஸ்புக், ஜிமெயில், மற்றும் இதர வழிகளில்). அப்படிப் பகிரும் நண்பர்களிடத்தில் சுட்டியை சொடுக்கி கட்டுரையின் பக்கத்திற்கு சென்று கட்டுரையை மதிப்பீடு செய்யச் சொல்லுங்கள் (Rating the article).
  • இந்த கட்டுரைகளை எங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்வோம். அவ்வாறு முகநூல் மூலம் வரும் வாசகர்களாலும், எங்கள் தளத்திற்கு வழக்கமாக வரும் வாசகர்களாலும் இந்தக் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
  • எத்தனை வாசகர்கள் உங்கள் கட்டுரையை படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பீடு வழங்குகிறார்கள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முடிவுகள் 28.02.2016 அன்று அறிவிக்கப்படும். அதுவரை வாசகர்கள் உங்கள் மதிப்பீடுகளை வழங்கலாம்.
இதன்படி கட்டுரைகளை எழுதிய ஓருவர் எழுதியதைத் தாண்டி தனது கட்டுரைக்கு மார்கெட்டிங் வேலையையும் செய்ய வேண்டுமாம்.
இப்படி விரிவான  வாசகர் அல்லது நண்பர் வட்டம் உள்ளவர்கள் இது போன்றதோரு கட்டுரைப்போட்டியில் கலந்துதான் வெளிச்சம் பெறவேண்டுமா ? இது போன்றதோரு போட்டியில் கலந்துக் கொள்வதே ஆர்வத்தைத் தாண்டி ஓரு வெளிச்சம் அல்லது கவனம் அல்லது அங்கிகாரம் பெறத்தானே ?
இதை பரிசுகளை தருபவர்கள் தங்கள் தளத்துக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என விட்டுவிடலாம் தான்.  ஆனால் இந்த மார்கெட்டிங் யுத்தியை முன்பே அறிவித்திருந்தால் என்னைப் போன்றவர்கள் கவனமுடன் இருக்கலாம் தானே ?
இதுவரை, எனது கட்டுரைக்கு எந்தவிதமானதோரு மார்கெட்டிங் அல்லது விளம்பரமும் நான் செய்யவில்லை. அதனால் எனக்கு போட்டிமுடிவுகள் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை ஊகிக்கமுடிகிறது. 
ஆனால், போட்டியில் வெற்றிபெற்றவர்களைத் தாண்டி நான் மிகவும் ஆர்வமாயிருப்பது நடைமுறையாக்கல். அதாவது, கட்டுரையாளர்கள் தந்த வழிமுறைகள் அல்லது உத்திகள் யாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை எப்படி, எப்போது, யாரால் முயற்சிக்கப்படும் என்பதே. அவை ஓரு குறுகிய வட்டத்தைத் தாண்டி மிகப்பலரை சென்று சேரவேண்டும் என்பது என் விருப்பம், பார்க்கலாம்..
கட்டுரைப் போட்டிக்கு வந்த எல்லா கட்டுரைகளும் இங்கே
எனது கட்டுரை;

நண்பர்களே !!, கடந்தவாரம் இந்தியாவில் இருந்து திரும்பினேன். அது பற்றி எழுதுவோம்.

Sunday, January 24, 2016

அமேரிக்காவில் பெண்கள் வைத்த பொங்கல்

அமேரிக்காவில் பொங்கல் திருநாள் ஓருவழியாக முடிந்தது. தமிழகத்தில் வழக்கத்திற்கு  மாறாக இந்த வருடம் சலசலப்புகளைத் தாண்டி ஓரு பரபரப்பு.

அந்தப் பரபரப்புக்கு காரணம் ஜல்லிக்கட்டு. தமிழில் ஏறுதழுவல். அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் இதற்கு தடை
வாங்கிவிட்டார்கள். ஆனாலும் தடையை மீறி சில இடங்களில் மாடுகளும் மனிதர்களும் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. :) நல்ல விஷயம்.

சில வருடங்களுக்கு முன் தமிழ் புத்தாண்டை தை  மாதத்தில் கொண்டாடுவோம் என முதல்வர் கலைஞர் அறிவித்தபோது தமிழர்களிடம் ஓரு சலசலப்பு எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அது தமிழகத்தின் இரு பிரதான  கட்சிகளால் அரசியல் ஆக்கப்பட்டது துரதிஷ்டம். இரு சாராரும் தங்களுக்கு துணையாக பல ஆதாரங்களை காட்டி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினர்.  அப்போது பாரதிதாசனின் இந்தக் கவிதை அதிகம் மேற்கோள் காட்டப்பட்டது.

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு ...
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

கடைசியில் எல்லாவற்றையும் தாண்டி மக்களின் நீண்ட நம்பிக்கையே வலிமையானது என்று நிருபணமாகிவிட்டது. அந்த சர்ச்சைக்குள் நாம் போக வேண்டாம்.

அப்புறம் பொங்கல் பற்றி ஊரில் ஓருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். "இப்பேல்லாம் யார் சார் பொங்கல் கொண்டாறா? அவனவன் குக்கர்ல பொங்கல் வக்கிறான்.  ஜன்னல் வழியா சூரியனுக்கு காட்டிட்டு, சோபாவில உட்காந்து டிவி பாக்க ஆரம்பிச்சுடுரானுங்க" என அலுத்துக் கொண்டார். அவர் கவலை அவருக்கு.

உலகமயமான இந்த நாட்களில் இது மாதிரியான விழாக்கள் மட்டுமே மக்கள் தங்கள் சொந்த மண்ணின் அடையாளங்களை சில நொடிகளேனும் சிந்திக்க வைக்கின்றன என்பது என் கருத்து. 

நான் சொல்ல வந்த விஷயம் அதுதான் அமேரிக்காவில் கடந்த சனிக்கிழமை (மாட்டுப் பொங்கலன்று)  பொங்கல் கொண்டாடினோம். மேலே அந்த நண்பர் சொன்னதுப் போலில்லாமல் கொஞ்சம் பாரம்பரியத்துடன்.

இந்த வருடப் பொங்கலுக்கு நண்பர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார்.  நண்பர் இந்த வருடம் புதுவீடு வாங்கிருக்கிறார். அது தனி வீடு,  இரண்டு கார் பார்கிங் வசதி, ஐந்து படுக்கையறைகள், நீச்சல் குளத்துடன்.  சூரியனை பார்த்து பொங்கல் விட கண்டிப்பாக தாராளமான இடம். எங்களைப் போல மேலும் ஐந்து தமிழ் நண்பர்களும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

பொங்கலை பாரம்பரியமாக கொண்டாட  தேங்காய்,மஞ்சள், பூக்கள், கரும்பு, பழம் என அனைத்தையும் தேடி வாங்கி வைத்திருந்தார்கள். அப்புறம், புதுப் பானையில் முறைப்படி திறந்த வெளியில் கிழக்கே சூரியனைப் பார்த்து பொங்கல் எனக் களை கட்டியிருந்தது.  விறகு அடுப்புக்கு பதிலாக கேஸ் அடுப்பு மற்றபடி எல்லாம் பாரம்பரியப்படி. வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கூடக் கட்டினார்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

வழக்கம் போல ஆணகள் அரட்டையடிக்க, பெண்கள் எல்லா வேலைகளையும் வலிய இழுத்துப்போட்டுச் செய்தனர். நாம செய்றோம்னா யாரு கேக்குறாங்க சொல்லுங்க?  :) இங்க ஓரு பானையில எத்தனை பேரு பொங்கல் விட்டுருக்காங்கனு பாருங்க


இப்பவும் நம்ம பத்திரிக்கைகளில் 'நட்சத்திரப் பொங்கல்'ன்னு நடிகைகள் பொங்கல் வைப்பது போல படம் போடுறாங்கலா?  :)


அன்று சிறுவர்களும்,சிறுமிகளும் ஆனந்தமாய் அங்குமிங்கும் வீட்டில் ஓடியாடி விளையாடி,  வீடு ஓரே கலகலப்பாக இருந்தது. அதிலும் பொங்கல் பொங்கி வழியும் போது "பொங்கலோ..பொங்கலோ" என அவர்கள் மகிழ்ச்சியாக குரலெலுப்பியது ஹைலைட்.

அப்புறம், பொங்கல் என்றால் கடித்து சுவைக்கும் திருநாள் இல்லையா?.  அதனால் அதையும் விடல. ரொம்ப வருசத்துக்கு பின்  கரும்பு தின்னதுகூட அருமைதான். 



பழைய ஞாபகங்கள்...
  
நான் தமிழ்நாட்டில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி ஓரு மாமாங்கத்துக்கு மேலாகிவிட்டது.  ஆனால் இந்த வருடம்  நண்பர் ராஜேஷு மற்றும் தமிழ்ச்செல்வி  புண்ணியத்தால் மற்ற தமிழ் குடும்பங்களுடன் பொங்கல் நல்ல ஓரு நிகழ்வாயிருந்தது.

ஓரு சிறு இடைவேளை:
          நண்பர்களே, எனது இந்தியப் பயணத்திற்கு  பின் மூன்று வாரங்களில் சந்திப்போம்.

Images:
நன்றி
pixshark.com
www.dinamalarnellai.com

Sunday, January 17, 2016

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சந்தேகத்துக்கிடமின்றி சுஜாதா எனக்கு பள்ளி நாட்களில் இருந்து ஆதர்சன நாயகன்.

மாலைமதி, குமுதம் போன்ற வெகுஜன ஊடகத்தில் 'யார் இவர்?' வித்தியாசமாய் இருக்கிறதே என திரும்பிப் பார்க்கச் செய்தவர். சமீபத்தில் அவருடைய 'கற்றதும் பெற்றதும்' வாசித்தேன்.

ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதியதை தொகுத்து வெளியிட்டுள்ளனர். நான் பெரிய ஆ.வி. பிரியனாக இல்லாததால் அனைத்தும் புதிதாகவே இருந்தன. இப்பவும் ஆனந்த விகடன் "ஆ.வி." தானா இல்ல "AV" ஆயிட்டா?  தமிழ்நாட்டில் இருந்து யாராவது சொல்லலாம். இதில் உள்ள கட்டுரைகளை நிறைய ஜானர்களில் எழுதியிருக்கிறார். அறிவியல், சிறுகதை, நாட்டு நடப்பு, அனுபவங்கள், கவிதை இப்படி பல.

சுஜாதாவின் கவிதை ஆர்வம் எனக்குத் தெரியாத ஓன்று. இந்த புத்தகத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல கவிதைகள்  ரசிக்கும் படி இருந்தன.  பல கட்டுரைகளில் புதிய கவிஞர்களையும், கவிதைகளையும் ஆதர்சனமாக கொண்டாடியிருக்கிறார். அவர் இருக்கும் போதே என் பங்குங்கு கொஞ்சம் கவிதைகளை எழுதி அவருக்கு அனுப்பிப் பயமுறுத்தி இருக்கலாமோ ? நல்லவேலை அவர் பிழைத்தார் !  :) அப்போதே வைரமுத்துவின் மகன் கபிலனின் கவிதை ஓன்றை விமர்சித்து அறிவுரைத் தந்துள்ளார் என்பது சிறப்பு.

அப்புறம் நான் படித்து வியந்த  இன்னோரு  விஷயம் அவரின் நகைச்சுவை உணர்வு. குறிப்பாக அவருடைய டகோடா ரக விமானங்களைச் செலுத்திய அனுபவங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவரைப் போல நகைச்சுவை என்ற நல்ல உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கொடுத்து வைத்தவர்தான்.

அதே சமயத்தில்,  தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைவு என சில இடங்களில் பதிந்துள்ளார். உண்மை. நாம கொஞ்சம் சீரியஸ் டைப் தான். விளையாட்டுன்னு நினைச்சு சொல்றத சிலர் சீரியசா எடுத்துகிட்டு அருவாளோட வந்து நிப்பாங்க.

மற்றபடி பெரிதான புகார்கள் எதுவும் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானதால் சில அறிவியல் விஷயங்கள் காலாவதியாகிவிட்டன. இது புத்தகத்தின் குறையே தவிர அவருடையதல்ல. 


இந்தப் புத்தகத்தைத் தாண்டி சுஜாதா பற்றி என் மனதைக் கவர்ந்த சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சுஜாதா  தன்னுடைய வயதான காலத்திலும் மிக இளமையாக சிந்தித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். நாற்பது வருடங்கள் ஓருவரால் தமிழில் இளமைக் குறையாமல் எழுத முடிந்தது ஆச்சர்யம்தான். கவிஞர் வாலியை இங்கே கண்டிப்பாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அது போல தன்னுடைய விசுவல் எழுத்து அல்லது காட்சிப்படுத்தும் தன்மையை ஆங்கிலத்தில் இருந்து கற்று, தமிழில் (1960-70s) முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.  உங்களுக்கு இதில் மறுப்பு இருந்தால் சொல்லுங்க.

ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய short & sweet என்பதை கட்சிதமாக மிகவும் அழகாக, சமயங்களில் கவித்துவமாகவும் பயன்படுத்தக்கூடியவர். 

நான் சமிபத்தில் படித்த அவருடைய ஓரு நாவலில் இருந்து. கதாநாயகனை அறிமுகம் செய்ய பக்கம் பக்கமாக வருணனை இல்லை. சுருக்கமாக நான்கு, ஐந்து வரிகள் தான். அதில் ஓரு வரி  **கழுத்தில் கேமரா மாலை **. மற்றோரு இடத்தில் ** ரயில் 'ழே' என்று கூவிவிட்டு சென்றது...**. இப்படிப் பல.

தமிழைத் தாண்டி பல ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து அதன் நுணுக்கங்களைத் தன் எழுத்தில் முயன்றிருக்கிறார்.  குறிப்பாக சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன்.  அவருடைய 'சிறு சிறுகதைகள்' புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் இங்கே. சிறு சிறுகதைகள்

சுஜாதா பெரிதும் சிலாகிக்கப்படுவது அவரின் அறிவியல் எழுத்துக்காக. மேல் மட்டமான ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தாண்டி விரிவான மற்றும் அடர்த்தியான பல புத்தங்களைப் படித்திருக்கிறார். அதே நேரத்தில், எழுதும் போது அனைவருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இதற்கு அவருடைய பொறியியல் பின்புலம் இதற்கு மிக உதவியாக இருந்திருக்கிறது. இது அவருடைய மற்ற எந்த சமகால எழுத்தாளர்களுக்கு இல்லாத ஓரு தனிச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் சுஜாதா விட்டுச்சென்ற இடம் இன்றுவரை நிரப்படாமல் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம்.

அதுபோல சமீபத்தில் 'ஆழ்வார்கள் ஓரு எளிய அறிமுகம்' எனும் புத்தகத்தை வாசித்த போது அவருடைய சங்க இலக்கிய நாட்டம் புரிந்தது. சங்க இலக்கியத்தில் பசலை நோய், ஆண்டாள் கண்ணனிடம் உருகினாள் எனப் படித்தவர்தான், தன் நாவலில் வசந்த் சைட் அடித்தான் என மார்டனாக எழுதினார்.


எந்தவோரு விஷயத்தையும் ஓரு நடுத்தர குடும்பத்தின் கண்ணோட்டத்தில் அல்லது மன ஓட்டத்தில் பார்த்து எழுதியிருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் எல்லா வகையான வாசகர்களையும் கவருமா?. அப்படிக் கேட்பதே தேவையில்லாதது. ஏனேன்றால், இப்போதுக்கூட புத்தக்க்கண்காட்சிகளில் சுஜாதாதான் பெஸ்ட் செல்லராம். ஜெயகாந்தன் எளிய மனிதர்களின் ஆதர்சன எழுத்தாளன் என்றால் சுஜாதா வேறு ரகம். அவ்வளவே.

சுஜாதாவைப் வாசிப்பது ஓரு சுகானுபவம்.  என்னைப் பொருத்தவரை அவர் 'ஆல் டைம் பெஸ்ட் எண்டர்டெயினர்'. வாய்ப்பிருந்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள்.


நுால்: கற்றதும் பெற்றதும்
ஆசிரியர்  சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 296

பதிப்பகம்